புதன், 17 டிசம்பர், 2025

கண்ணைக் காக்கும் சொட்டு

                    கண்ணைக் காக்கும் - சொட்டு 

 



இந்த கண்ணுக்கு போடற சொட்டு மருந்தை யாரையாவது கூப்பிட்டு என் பையனுக்கு இரண்டு சொட்டு போடச் சொல்லுங்க. முரட்டுத்தனமா சொட்டுமருந்து போட்டா கண்ணில் குப்பி பட்டு செப்டிக் ஆயிடும். இதில் ஓட்டை போடறதுக்கு பின்னை எடுத்து போடும்போது துரு பிடிச்சிருக்கான்னு பார்த்து போடச் சொல்லுங்க. இல்லைன்னா அதனால் வேற பிரச்சினை வந்துடும்குப்பியைத் திறந்து என் பையனுக்கு போட்டு விடுங்க.” ‘ஒத்த செருப்பு’ படத்தில் பார்த்திபன் காவல்நிலையத்தில் பேசும் காட்சிதான் இது. 

இது உண்மைதான். பல சமயங்களில் குப்பியைப் பிரித்த பிறகு மருந்து வெளியே வராது. அப்போதெல்லாம் குப்பியில் ஓட்டை போடுவதற்கு கையில் கிடைக்கும் ஊசி போன்ற ஏதாவது பொருளை எடுத்து குத்த வேண்டி இருக்கும். மருந்து சுத்தத்தை பற்றி தெரியாமல் பலரும் இப்படி கையில் கிடைத்ததை, எடுத்து குத்தி ஓட்டை போட்டுத் திறப்பார்கள். இதனால் மருந்தின் தரம் கேள்விக்குறியாகிறது.

மருந்துக்குப்பியைத் திறப்பதற்கு எளிய வழிகுப்பியின் மூடியைப் பிரித்தபிறகு மூடியை அழுத்தமாகத் திருகி அதன்பின் மூடியைத் திறந்து போட்டால் சொட்டுமருந்து எளிதாக வரும். சில வகை மருந்து - குறிப்பாக ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து பால்போன்று இருக்கும். அதுபோன்ற மருந்தினை, கண்ணில் போட்ட பிறகு அதன் எச்சங்கள் தயிர்திரிந்தது போன்று சிறிது கண்ணிமை ஓரத்தில் தங்கி இருக்கலாம். பார்ப்பதற்கு கண்பீளை மாதிரி தோன்றும். பயம் வேண்டாம்.

 

அடுத்தடுத்த சொட்டு மருந்து உடனுக்குடன் வேண்டாம்.

 

இரயில் புறப்படுவதற்குள் கண்ணில் சொட்டுமருந்து போட்டு விடவேண்டும் என்ற அவசரம் அந்த பெரியவருக்கு. அவசர அவசரமாக சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தார். சொட்டு மருந்து கண்ணுக்குள்ளேயே விழவில்லை. விழுந்தது என்னமோ கீழ் இமையோரத்தில். அடுத்து டபக்கென்று இன்னொரு சொட்டுமருந்தையும் போட்டார். அதுவும் அப்படித்தானே விழும். சொட்டுமருந்தை எப்படிப்போட்டால் என்னஅவரைப் பொறுத்த வரை கண்ணுக்கு சொட்டுமருந்து போட வேண்டும். அவ்வளவுதான்! 

அந்த சொட்டுமருந்து கிளாக்கோமாவுக்கானது. அதாவது கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்குரியது. மருந்து கண்ணுக்குள் செல்லவேயில்லை. பின் எப்படி அது வேலை செய்யும். மேலும் ஒரு மருந்தை போட்டவுடனேயே அடுத்த சொட்டு மருந்தினை போட்டால் அது எப்படி கண்ணுக்குள் செல்லும். சிறிது நேர இடைவெளியாவது வேண்டாமா.

ஒன்றுக்குமேல் சொட்டுமருந்து போட வேண்டியிருந்தால் ஒரு மருந்தைப் போட்டபிறகு இரண்டு - மூன்று நிமிடங்களுக்கு பிறகுதான் அடுத்த சொட்டுமருந்தினைப் போட வேண்டும். மருந்தைப் போட்டபிறகு கண்ணை சில விநாடிகள் மூடி இருப்பது நல்லது. மருந்தை கண்ணில் போடும்போது வேகமாக கண்ணிமைகளை இறுக்கி மூடக்கூடாது. அப்படி உடனே கண்ணிமைகளை இறுக்கி மூடினால் - கண்ணில் போட்ட மருந்தில் பெரும்பாலானவை வெளியேறிவிடும். மருந்துபோட்டும் பயனில்லை.

கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் ஏறக்குறைய ஒருமாதம்போல் கண்ணில் சொட்டு மருந்துபோட வேண்டி இருக்கும். மருத்துவமனையில் எத்தனை தடவை, எப்படி போட வேண்டும் என்று தெளிவாக சொல்லி அனுப்புவார்கள்.  

மறு பரிசோதனைக்கு வரும்போது அறுவைசிகிச்சை செய்த கண் தெளிவாக இருக்கும். எந்தவித தொற்றும் பெரும்பாலும் இருக்காது. இருக்கக்கூடாது. மறுசோதனைக்கு வரும்போது சிலருக்கு கண்ணில் சிகப்புடன் பீளை சேர்ந்து இருக்கலாம். அவர்களிடம் மருந்து நீங்களாகவே போட்டீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வார்கள். வீட்டில் மருந்து போட்டுவிட யாருமில்லை என்று சொல்வார்கள். இல்லையென்றால் நானாக போட்டுக்கொள்வதுதான் பழக்கம் என்று சொல்வார்கள், இப்படி அவர்களாகவே சொட்டு மருந்தினை போட்டுக் கொள்ளும்போது கண்ணுக்குள் சரியாக போகாததால் நலமாவதில் பிரச்சினை ஏற்படும். 

கண்நீர் அழுத்த உயர்வு (கிளாக்கோமா), உலர் கண் போன்ற சிலவகை கண் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்துபோட வேண்டியது சிலரது வாழ்வில் தவிர்க்க முடியாதது. அவர்கள் மருந்து போடும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குப்பியினுள் மருந்து எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க முடியாதது போல்தான் குப்பிகள் இருக்கின்றன. உள்ளே இருக்கும் மருந்தை வெளியில் இருந்து பார்த்தால், தெரிவதற்கு ஏற்ப குப்பி கண்ணாடிபோல் ஒளி ஊடுருவுந்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இதனால் என்ன பயன் என்றால் சில வகை சொட்டுமருந்துகளின் விலை அதிகமாக இருக்கின்றன. சொட்டு மருந்து போடும்போது வீணாகாமல் கவனமாக போட இது உதவும். சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சொட்டுமருந்து இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

 

சொட்டுமருந்து போடப்போகிறீர்களா...

  • கண்ணின் கீழ் இமையை லேசாக கீழே இழுத்து, கண்ணின் கருவிழியில்படாமல் அதற்கு கீழே உள்ள வெள்ளைப்பகுதியில் இரண்டு சொட்டு போட வேண்டும். 
  • மருந்தினை யார் போடப்போகிறார்களோ அவர்களுக்கு விளக்கமாக சொல்லிப் போடச் சொல்ல வேண்டும். படுத்துக்கொண்டோசாய்ந்து உட்கார்ந்துகொண்டோ மருந்து போட்டுக்கொள்ளலாம்.  
  • சொட்டு மருந்தின் துவாரப் பகுதியினை கையால் தொடக்கூடாது. சொட்டுமருந்தின் தரம் கெட்டுப்போய்விடலாம்.
  • சில சொட்டு மருந்துகள் பால் மாதிரி இருக்கும். அது போன்ற மருந்தினை போடுவதற்கு முன் குப்பியை ஒருமுறை குலுக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். 
  • கண்பிரச்சினை சரியான பிறகுசொட்டு மருந்து மீதம் இருந்தால் தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். காசுபோட்டு வாங்கியது எப்படி தூக்கி எறிவது என்ற நினைப்பு வேண்டாம். இல்லையென்றால் வீட்டில் வேறு ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும்போது அதை எடுத்து பயன்படுத்தத் தூண்டும்.
  • இன்னொருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்தினை எக்காரணம் கொண்டும் வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. அவசரத்துக்கு போட்டுக்கொண்டு அப்புறமாக மருத்துவரிடம் செல்லலாம் என்ற நினைப்பும் வேண்டாம். காரணம் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. பிரச்சினையை அறிந்து அதற்கேற்ற மருந்தினை பயன்படுத்துவதுதான் சரியான அணுகுமுறை. பார்வைக்கும் பாதுகாப்பு.
  • சொட்டுமருந்துக் குப்பியைத் திறந்த ஒருமாதத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த குப்பிமருந்தினை பயன்படுத்தக்கூடாது. அதன் பின் தேவையிருந்தால் புதிதாக ஒன்று வாங்கிக் கொள்ளலாம். 

 

கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீங்களாகவே மருந்துக்கடையில்போய் பிரச்சினையைச் சொல்லி மருந்து வாங்கிப் போடுதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. அப்போதும் மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்துக்கடையில் இருந்து, மருந்து வாங்கி இருக்கிறோமா என்று மருத்துவரிடம் சரிபார்த்த பிற்கு பயன்படுத்துவதுதான் கண்களுக்கு பாதுகாப்பானது.

---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

ஆதலினால் கண்ணில் கவனம் கொள்வீர்!

       ஆதலினால் கண்ணில் கவனம் கொள்வீர்!

 

மஞ்சட்காமாலைக்கு சில இடங்களில் மூலிகை மருந்து கொடுப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மதுரைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் ஒன்றில் கண்நோய்களுக்கு கண்ணில் சொட்டு மருந்து போடுகிறார்களாம். கூட்டம் கூட்டமாய் மக்கள் வருகிறார்களாம்.  

தொடர்புடைய காணொலிகளும் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகங்களிலும் செய்தி வந்தது. 

15 ஆண்டுகளாக இந்த மூலிகைச்சாறு சொட்டுமருந்தை ஊற்றி வருவதாக அந்த வைத்தியர் காணொலியில் சொல்கிறார். 

காணொலியில், பேட்டி கண்டவர் மீண்டும் மீண்டும் கேட்கும்போதெல்லாம், அந்த வைத்தியரும் அழுத்தம் திருத்தமாக தெளிவாகவே சொல்கிறார். இங்கு மூலிகை சொட்டுமருந்தினை கண்ணில்போடுவது விஷக்கடிதோல்வியாதிக்காகத்தான். ஆனால் மக்களாகவே மஞ்சள்காமாலைமூலம்சர்க்கரை போன்ற பல்வேறு நோய்கள் உட்பட கண்நோய்களும் சரியாவதாக சொல்லிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு நான் பொறுப்பு இல்லை என்ற ரீதியில்தான் வைத்தியர் தெளிவாகவே சொல்கிறார்.



மொத்தத்தில் அவர்களாகத்தான் சர்வயோக நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள்.

ஆக, அவர்கள் கண்ணில் போடும் மூலிகைமருந்தும் கண் நோய்களுக்கானது அல்ல. ஆனால் வியப்பு என்னவென்றால் யாரோ சொன்னார்கள், கண் நோய்களுக்கானது என்று கூட்டம் கூட்டமாய் செல்வதுதான்.

பேட்டி கண்டவர், கண்ணில் மருந்துபோட்டுக் கொண்டவர்களையும் விடவில்லை. விஷக்கடிக்கும்தோல்வியாதிக்குமானதுதானே இந்த மருந்து என்று வைத்தியர் சொல்கிறாரேஆனால் நீங்கள் கண்ணுக்காக போட்டுக் கொண்டதாக சொல்கிறீர்களே’, என்று கேட்கிறார். அதற்கு அவர்கள்இல்லை.எல்லோரும் போட்டுக்கொள்கிறார்கள். கண்ணில் பிரச்சினை வராமல் நல்லா இருக்கு என்று, சொட்டுமருந்து போட்டுக்கொண்டு வந்தவர்கள் சொன்னதால்,நாங்களும் வந்தோம் என்கிறார்கள். ஆக என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இதை வந்தவர்களில் சிலரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

இப்போது அந்த இடத்தில் புதிது புதிதாக டீக்கடை ஹோட்டல்கள் எல்லாம் கூட வந்துவிட்டன.  அந்த அளவுக்கு அலைமோதும் கூட்டம்.

 

மருத்துவ கவனம்?

 

ஒருமுறை எங்கள் கிராம சுகாதார நிலையத்துக்கு வந்த மருத்துவ பயனாளி ஒருவர், சொட்டு மருந்து பாட்டில் ஒன்றைக் காண்பித்துசார்இந்த மருந்தை நேத்து இங்க கிராமத்தில வித்தாங்க. டெல்லியில் இருந்து வந்திருந்தாங்க. நீங்க கண்புரைக்கு, ஆப்ரேசன் செய்யணும்னு சொன்னீங்க. ஆனால் இந்த சொட்டு மருந்தைப்போட்டா புரை சரியாகிடும். ஆப்ரேசன் வேண்டாம்னு சொன்னாங்க’ என்று பாட்டிலைக் காண்பித்தார். 

அதில் பெரும்பகுதி ஹிந்தியில்தான் எழுதியிருந்தது. படிக்காதவர்களும் எளிதில் தெரிந்து கொள்வதற்காக கண் படம் ஒன்று இருந்தது.  நல்ல வேளை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆங்கிலத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்று இருந்தது.

தேசிய பார்வையிழப்புத் தடுப்புத்திட்டத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால்அப்படி ஒரு மருந்து வர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகத் தெரியும். கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோடி கோடியாக செலவு செய்கிறது அரசு. இப்படி இருக்க, இப்படி ஒரு சொட்டு மருந்தாஅதுவும் அரசின் அங்கீகாரத்தின் பெயரில். வாய்ப்பே இல்லை.

மருந்தினை போடவேண்டாம் என்று அவரிடம் சொல்லிவிட்டுஅந்த மருந்து விற்பவர் மீண்டும்வந்தால், இங்கே மருத்துவமனையில் தேசிய பார்வையிழப்புத் தடுப்புத் திட்டத்தின்  ( National Programme for Control of Blindness ) கீழ் பணிசெய்துவரும் ஒருவர், அவரை உடனே பார்க்க விரும்புவதாக சொல்லச் சொன்னேன்.

அவ்வளவுதான்அதற்குப்பிறகு அந்த ஆசாமி இருப்பாரா என்ன!.  கண்ணில் தட்டுப்படவேயில்லை. 

 

தரவுகள் வேண்டுமே!



 

30 ஆண்டுகளுக்கு முன் பிரபல வார இதழ் ஒன்றில்சித்த மருத்துவர் ஒருவர் தொடர் எழுதி வந்தார். அதில் ஒருமுறை கண்மருத்துவம் பற்றி எழுதும்போது கண்ணில் ஏற்படும் கிளாக்கோமா என்ற கண்நீர் அழுத்த உயர்வுக்கு அருகம்புல் சாறு குடித்தால், கிளாக்கோமா சரியாகிவிடும். மருந்தெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருந்தார். அதோடு மட்டுமல்லமால் பார்வைகுறைவுக்கு கண்ணாடி போட்டு கண்ணின் ஜீவனைப் போக்கிக்கொள்கிறார்கள் என்றும் கண்ணாடி போடுவதால், நாளடைவில் கண் ஒளி இழந்து, பார்வை இழந்துபோய்விடுகிறது என்றும் சொல்லி இருந்தார். மேலும் காரட் சாப்பிட்டு வந்தாலே போதும்,கண்ணில் ஒளி வந்துவிடும் என்பதும் கண்ணாடி போடுவது மூட நம்பிக்கை என்பதும் அவரது கருத்தாக இருந்தது.

கண்நீர் அழுத்த உயர்வினால் பார்வை நரம்புகள் நசிந்துவிடும். அதனால் பார்வையும் கடுமையாக பாதிக்கப்படும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான தொடர் சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமான பார்வையிழப்பு உறுதியாக ஏற்பட்டுவிடும். அழுத்தத்தை கட்டுப்படுத்த சொட்டு மருந்துதேவைப்பட்டால் லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும். இதில் முக்கியமான செய்தி,  இதனை தொடக்க நிலையில் கண்டறிய வேண்டியது முக்கியம் என்பதுதான்.

இதேபோல் பார்வைகுறைவுக்கு கண்ணாடி இன்றளவும் சிறந்த தீர்வு. எளிமையானதும் விலை குறைவானதும் கூட. காரட் கண்ணுக்கு நல்லதுதான். அதில் வைட்டமின் ’ சத்து இருக்கிறது. மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் இதற்கும் தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பார்வைகுறைபாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. 

ஒருவேளை காரட் சாப்பிடுவதன் மூலம் கண்ணாடி போடத் தேவையில்லை என்றால், அது குறித்து யார் ஆராய்ச்சி செய்தார்கள் அதன் முழு விபரம் என்ன என்பதையும்அருகம்புல்லில் ஒருவேளை கண்நீர் அழுத்த உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குமேயானால் அதைக் கொண்டு எப்படி குணப்படுத்தினார்எத்துணைபேர் பயன் அடைந்தார்கள்கண்டுபிடிப்பதற்கு எந்த உத்தியை உபகரணத்தைப் பயன்படுத்தினார்பயனாளிகளின் தரவுகள் அனைத்தையும் வெளியிடும்படிகண்மருத்துவர்கள் விளக்கமாக கேட்டிருந்தார்கள். 

கண்மருத்துவர்கள் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கி எழுதிய கடிதங்கள்தான் வார இதழில் வெளியானது. ஆனால் உரியவரிடமிருந்து கடைசிவரை பதில் இல்லை. மெளனம்தான்.

சிக்குன்குன்யாவினையும்டெங்குவையும் கட்டுப்படுத்தியதில் நிலவேம்புவின் பங்கு அளப்பரியது. ஏன் கரோனா காலத்திலும்தான். நிலவேம்புவில் உள்ள மருத்துவக்கூறுகள், அதன் செயல்திறன் பற்றி ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர் கு.சிவராமனும் தெரிவித்துள்ளார்.  சித்த மருத்துவம் மகத்தானது. ஆனால் அதே சமயம், தரவுகளின் அடிப்படையிலேயே, நாம் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

சொட்டுமருந்து தயாரிப்பு

 

மருந்து தயாரிப்பு ஒன்றும் எளிதான செயல் அல்ல. மருந்தின் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டு எந்த பிரச்சினைக்கு அது கொடுக்கப்படுகிறது என்பதை பல கட்ட ஆய்வுகள் மூலம் உறுதி செய்துஅதன் பிறகு ஆய்விற்கு உரிய அங்கீகாரமும் பெற வேண்டும்.



பின் அது மருந்தாக தயாரிக்கப்படும்போது தரமான ஆய்வுக்கூடத்தில் அனைத்து தரக்கட்டுப்பாடுகளுடன் சுத்தமாக தயாரிக்கப்படுவதுபோலவே, சுத்தமாக பாட்டிலில் அடைக்கப்பட்டு உரிய அனுமதியுடன் விற்பனைக்கு வருகிறது.

அப்படி வரும் அந்த மருந்தினையும் மருந்துகுப்பியைத் திறந்த ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இல்லையேல் அதுவும் தகுதியற்று, காலாவதியாகிவிடும். இதேபோல் பாட்டிலின் நுனிப் பகுதியையும் கையால் தொடக்கூடாது என்பதும் குறிக்கப்பட்டிருக்கும். 

 

வாழ்நாள் முழுவதற்கும் பார்வை. 

 

இப்படி அனைத்து பரிசோதனைகளையும், தரக்கட்டுப்பாடுகளையும் கடந்து வெளிவரும் மருந்துகளே சில சமயங்களில் பிரச்சினையாவதைப் பார்க்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்புகூட உலர் கண்ணுக்கு பயன்படுத்தப்படும் சொட்டுமருந்து ஒன்று, பார்வையை கடுமையாக பாதிப்பதாக சொல்லி வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டதை இங்கு நினைவுகூறுதல் நல்லது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் மக்கள், கோழிரத்தம்நந்தியாவட்டைச்சாறுவிளக்கெண்ணெய் போன்றவற்றை கண்ணில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் போட்டு வந்தார்கள். அதனால் பலருக்கும் பார்வைபாதிப்புபார்வையிழப்பு ஏற்பட்டதெல்லாம் பழைய கதை. தேசிய பார்வையிழப்புத் தடுப்புத்திட்டத்தின் சீரிய பணியால் அந்த பழக்கமெல்லாம்நடைமுறையில் இல்லாத நிலை ஏற்பட்டு, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பு ( Avoidable Blindness) தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

ஒரு தொலைக்காட்சிப்பெட்டியோஒரு கைப்பேசியோதுணிமணியோ பார்த்து பார்த்து, கேட்டு கேட்டுதான் வாங்குகிறோம். ஆனால் எதற்கென்றே தெரியாமல் இப்படி கண்ணில் சொட்டுமருந்தினை போட்டுக் கொள்வதை என்னவென்று சொல்வதுஎந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாதவரை பிரச்சினையில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானா?  

கண் ஒரு நுட்பமான உறுப்பு. ஒரு சிறு பிரச்சினைகூட பார்வையிழப்புக்கு வகுத்துவிடும். அதன்பின் எந்தவித மருத்துவத்தாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையும் ஏற்படலாம்.  வாழ்நாள் முழுவதற்கும் பார்வை தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது. 

நண்பர்களே, ‘ஆதலினால், கண்ணில் கவனம் கொள்வீர் !’.

---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை