கம்பியூட்டரோடு தலைவலியா?
அது ஒரு மோசமான வானொலி விளம்பரம். ‘காலையில் இருந்து கம்பியூட்டரைப் பார்த்து பார்த்து ஒரே தலைவலி’ என்று ஒருவர் சொல்ல அதற்கு அவருடைய நண்பர் குறிப்பிட்ட ஒரு கண்மருத்துவமனைக்குப் போய் கண்ணை சோதித்து கண்ணாடி போட்டுக்கொள்ளச் சொல்கிறார். அப்படிச் செய்தால் தலைவலி சரியாகிவிடுமாம். இதைவிட மோசமான விளம்பரம் எதுவும் இருக்க முடியாது.
கண்மருத்துவமனைக்கு கூட்டம் சேர்ப்பதற்கான விளம்பரம் அது. அப்படி அந்த விளம்பரத்தில் என்ன பிரச்சினை? பார்க்கலாம்.
அவரவர் செய்யும், வேலையின் தன்மைக்கு ஏற்ப சிலவகை பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. நின்று கொண்டே வேலை செய்பவர்கள், வெப்பமான சூழலில் வேலை செய்பவர்கள், பட்டாசு தயாரிப்பு போன்று வேதிப்பொருட்களை கையாள்பவர்கள், பஞ்சாலையில் வேலை செய்பவர்கள் – என்று ஒவ்வொருவருக்கும் அவரவர் பணிசார்ந்து தனிப்பட்ட பிரச்சினைகள் உண்டு. கம்பியூட்டரில் வேலை செய்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களுக்கும் பல விதமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
கம்பியூட்டரில் வேலை செய்பவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி என்னவென்றால், இப்பிரச்சினைகளை புரிந்துகொண்டால் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதுதான். பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்.
கம்பியூட்டரால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்
கழுத்துவலி
அருணாவுக்கு எந்நேரமும் கம்பியூட்டரில்தான் வேலை. வேலை என்றால் கடுமையான வேலை. எந்நேரமும் லாப்டாப்பும் கையுமாகத்தான் இருப்பார். அவருடைய பணிப்பொறுப்பு அப்படி. எந்நேரம் சாப்பிடுகிறார், தூங்கி எழுந்திருக்கிறார் என்பதே தெரியாது. சில நாட்களாகவே கழுத்தில் கடுமையான வலி. திடீரென இரண்டு நாட்களாக லேசான தலைசுற்றல். மருத்துவர் பார்த்துவிட்டு, ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் ஓய்வின்றி தொடர்ந்து கம்பியூட்டரில் வேலை செய்வதால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துவிட்டார்.
கண்ணில் பிரச்சினை
சுந்தருக்கு, வரவர பார்வை மங்கலாகத் தெரிவதுபோல் இருந்தது. சிலசமயம் கண்எரிச்சல், கண்கூச்சம், சிகப்பு வேறு. வேலையில் ஈடுபாடே இல்லை. அதோடு தலைவலி வேறு. பாராசிட்டமால் போட்டும் பார்த்துவிட்டார். சரியாகவில்லை. லாப்டாப்பைத் திறந்தவுடனேயே மூடிவைத்துவிட வேண்டும் என்ற நினைப்புதான் வந்தது.
இதேபோல வங்கியில் பணிபுரியும் அந்த அதிகாரிக்கும் சில நாட்களாகவே கம்பியூட்டரைப் பார்க்க முடியவில்லை. மானிட்டர் மங்கலாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. கண்ணில் ஒருவித அசெளகரியம் வேறு. விடுப்பு போட்டு வீட்டில் நன்றாக தூங்கியும் பார்த்துவிட்டார். தூங்கி எழுந்த பிறகும் பார்வை மங்கலாகத்தான் இருந்தது. ஒன்றும் சரியாகவில்லை. இவையெல்லாமே ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்தான். கம்பியூட்டரில் வேலைசெய்யும் பலரும் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தாம் இவை. மணிக்கணக்கில் தொடர்ந்து கம்பியூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வதால்தான் இதுபோன்ற பிரச்சினைகள்.
கம்பியூட்டர் பார்வை சிக்கல்
சிந்தித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் வேலை பார்ப்பவர்கள், நாள் முழுவதும் அதனுடன் மல்லுக்கட்டித்தான் ஆக வேண்டும். அவர்களுடைய வேலை, அந்த கம்பியூட்டருடன் சுருங்கிவிட்டது.
பிற வேலை செய்பவர்களுக்கும் கம்பியூட்டரில் வேலை செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. பிற வேலை செய்பவர்கள் வேலை செய்யும்போது position- ஐ மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கம்பியூட்டரில் வேலை செய்பவர்கள் நிலை அப்படி கிடையாது. கம்பியூட்டரை ஒருஅடி தொலைவிலேயே தொடர்ந்து பார்க்கவேண்டிய கட்டாயம்.
பொதுவாக நாம் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 16 முதல் 20 தடவை கண்களை சிமிட்டுகிறோம். அதாவது இமைக்கிறோம். கண்கள் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு இந்த கண் இமைத்தல் மிக அவசியமாகிறது. ஆனால் நாம் கம்பியூட்டரில் வேலை செய்யும்போது - வேலையில் ஒன்றிப்போய் மானிட்டரையே வைத்த கண் வாங்காமல் பார்த்து வேலை செய்யும்போது இந்த கண் இமைத்தல்- சிமிட்டல் 4 ஆக குறைந்துபோய்விடுகிறது. இதனால் கண் விரைவில் உலர்ந்துபோய்விடுகிறது.
கம்பியூட்டரை தொடர்ந்து பார்க்கும்போது நம் கண்ணின்- விழிக்கோளங்களின் இயக்கங்களும், குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிப் போய்விடுகிறது. மானிட்டரை பக்கத்திலேயே எந்தவித மாற்றமின்றி தொடர்ந்து பார்ப்பதால், கண் விரைவில் களைத்தும் போய்விடுகிறது. இதனால் கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், கண் சிகப்பு, கண்ணில் வலி, அசௌகரியம், பார்வை மங்கல், தலைவலி, வேலையில் ஆர்வமின்மை போன்ற பல துயரங்கள் ஏற்படுகின்றன.
அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சமாளிப்பது?
முன்னரே சொன்னதுபோல் இந்தப் பிரச்சினைகளுக்கு மருத்துவமே தேவையில்லை. பிரச்சினையை புரிந்துகொண்டாலே போதும். பணிபுரியும் இடத்தில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்வதன் மூலம் பாதிப்பினைத் தவிர்க்கலாம். உட்காரும் நாற்காலியிலிருந்து கம்பியூட்டர் மேஜை அமைப்பு, விளக்கு உட்பட ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்காராதபோது கழுத்துவலி ஏற்படலாம். நாற்காலியின் பின்புறம் முதுகுக்கு வளைந்துகொடுக்கும் வசதி கொண்டதாக இருந்தால் நல்லது. மேஜையில் மவுசும், கீ போர்டும் கைக்கு வசதியாக, வேலை செய்வதற்கு ஏற்றார்போல இருக்கவேண்டும். காலை நீட்டி வசதியாக உட்கார்ந்தால் கால்வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். காலில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க மேஜைக்கு அடியில் கால் வைப்பதற்கென்று சாய்வான பலகை வைக்கலாம்.
மானிட்டர் எப்படி இருக்க வேண்டும் ?
பேப்பர் அல்லது புத்தகம் வாசிப்பதை நினைத்துக்கொள்ளுங்கள். மார்புக்கு நேராக சமமாகவோ அல்லது சற்று தாழ்த்திதானே பிடித்துப் படிப்போம். மானிட்டரையும் அப்படித்தான், கண்ணின் கிடைமட்டத்தைவிட சற்றே கீழே சாய்வாக பார்ப்பதற்கு ஏற்றாற்போல அமைக்கவேண்டும். இப்படி சாய்வாக இருப்பதுதான் பலருக்கும் வசதியாக இருக்கிறது. அண்ணாந்து பார்ப்பதுபோல் இருக்கவேண்டாம்.
அறையில் உள்ள மின்விளக்கு உட்கார்ந்திருப்பவரின் பின்புறமோ அல்லது பக்கவாட்டிலோ இருக்கலாம். முன்புறம் கண்ணில் நேரடியாக விழுவதுபோல் வேண்டாம். கம்பியூட்டரில் எப்போது என்டரைத் தட்டுகிறோமோ அப்போதெல்லாம் நாமாக கண்களை சில விநாடிகள் இமைத்துவிட்டு பின் கண்களை மானிட்டரில் இருந்து விலக்கி அறையின் கதவு அல்லது சன்னல் வழியாக சில விநாடிகள் தூரத்தில் உள்ள பொருளை சில விநாடிகள் பார்த்துவிட்டு பின் மீண்டும் வேலையைத் தொடரலாம். இதை இன்னும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள 20:20:20 என்ற பார்முலாவை நினைத்துக் கொள்ளலாம்.
அது என்ன 20 :20: 20 பார்முலா
அதாவது 20 நிமிடத்துக்கு ஒரு முறை, கண்களுக்கு 20 விநாடிகள் ஒய்வு கொடுத்துவிட்டு 20 அடி தொலைவில் உள்ள பொருளை சில விநாடிகள் பார்த்துவிட்டு - கண்களை ஐந்தாறு முறை இமைத்துவிட்டு பின் மீண்டும் வேலையைத் தொடர்வது. இது பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் இதை தொடர்ந்து ஒருவர் பின்பற்றினால், எந்தப் பிரச்சினையும் இன்றி வசதியாக கம்பியூட்டரில் வேலை செய்யலாம்.
சிலர் இது போன்ற பிரச்சினைகளுக்கு கண்ணில் சொட்டு மருந்தைப் போடவேண்டும் என்று நினைப்பார்கள். தேவையில்லை. இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை ஏற்கனவே கண்ணாடி அணிந்திருந்தால் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் மானிட்டரைப்பார்க்க வேண்டும். கம்பியூட்டரின் மானிட்டருக்கு முன்னால் Anti glare screen பொருத்துவது கூடுதல் பலனைத்தரும்.
கம்பியூட்டரில் வேலை செய்யும்போது பிரச்சினை ஏற்படுவதற்குரிய காரணம் இப்போது புரிந்திருக்கும். அதோடு அந்த விளம்பரம் குறித்த தெளிவும் பிறந்திருக்கும். புரிந்து கொண்டால் பிரச்சினையைத் தவிர்ப்பது மிக எளிதுதான்.
