சனி, 14 மார்ச், 2026

உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்

                                  மறைந்திருந்து தாக்கும் மர்மம்.

                  உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம் ( மார்ச்சு 8 - 14 )  

நிறைவுநாள் கட்டுரை    

                        A person using a pair of scissors to trim an old person's head

AI-generated content may be incorrect.          

 

விலை உயர்ந்த கண்ணாடி அவருடையது. கண்ணாடிக்கடையில் நவீன கணினித் தொழிற்நுட்பத்தில் முகத்திற்கேற்ற பிரேமை வாங்கியதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. 

வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கான கண்ணாடி அது. அவருடைய நண்பரின் கண்ணாடியை வாங்கி போட்டு பார்த்ததில் நன்றாக தெரிந்ததால் அவருடைய ஆலோசனையின்பேரில் நேரடியாகக் கண்ணாடிக்கடையில் வாங்கினார். நண்பர் கைதேர்ந்த கண்மருத்துவர்போல் அவருடைய வயதுக்குரிய லென்சுபவரைச் சொல்லி வாங்கச் சொன்னார். 

கண் மருத்துவமனைக்கு சென்றால் கண்ணில் மருந்துபோட்டு உட்காரவைத்துவிடுவார்கள். தேவையில்லாத சோதனைகள் செய்து அலைக்கழிப்பார்கள். ஒருமுழுநாள் முழுவதும் வீணாகிவிடும் என்ற கவலை இருந்தது. ஆனால் இப்போது பிரச்சினையே இல்லை. மருத்துவமனைக்கே போகாமல் எளிதில் கண்ணாடியை வாங்கியதில் திருப்தி அவருக்கு

ஒருமுறை அவர் வேலை பார்த்த ஐ.டி. நிறுவனத்தில், பணியாளர்களுக்காக நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் வழக்கமான சோதனையின்போது அவருடைய கண்நீர் அழுத்தம், இயல்பான அளவைவிட சற்று அதிகரித்திருந்தது தெரிந்தது.

மேற்கொண்டு விரிவான சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். மருத்துவமனையில் அவருடைய கண்ணில்,அழுத்தம் உயர்ந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதோடு கண்ணில் பார்வை நரம்புகளில் ( Optic Nerve ) கணிசமான பாதிப்பும் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதன் காரணமாக பார்வையும் சிறிதளவு பாதிக்கப்படிருந்தது. 

இதற்கு முன்பு, கண்ணாடி சோதனை செய்த மருத்துவமனையில் உங்களுக்கு அழுத்தம் இருப்பது பற்றி சொல்லவில்லையா? என்று மருத்துவர் கேட்டார்.  மருத்துவமனைக்கு சென்று சோதித்து கண்ணாடி போட்டிருந்தால்தானே அவரால் பதில் சொல்ல முடியும்?

 

அதென்ன கண்நீர் அழுத்தம் ?

 

நம் உடம்பில் இருக்கும் இரத்த அழுத்தம் ( Blood Pressure நமக்குத் தெரிந்ததுதான்.   இரத்த அழுத்தம் 120/80 மி,மீ / பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால்  பி.பி.கூடிருச்சு என்கிறார்கள். அதாவது உயர் இரத்த அழுத்தம் . இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10 - 20 க்குள் இருந்தால் அது இயல்பான அழுத்தம்.

உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கண்நீர் அழுத்த உயர்வு ( கிளாக்கோமா ). 

இந்தக் கண்நீர் அழுத்த உயர்வில், மற்ற நோய்களைப் போல் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுவது கிடையாது. அதனால் தொடக்க நிலையில் கண்டறிவதற்கான வாய்ப்பு குறைவுதான். நோய்த்தாக்கி அழுத்த உயர்வால் பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை உணரத் தொடங்குவார். அதற்குள் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டிருக்கும். 

உடம்பில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதே தெரியாமல் இன்னும் சிலர் இருக்கும்போது கண்ணில் இருக்கும் அழுத்தம் பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.

 

வருமுன் காப்போம்

 

வழக்கமாக எப்படி 40 வயதை நெருங்கும்போது உடலில் இரத்த அழுத்தம்சர்க்கரை அளவினை சோதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோமோ அதைப்போன்று இந்த வயதில் கண்ணில் பிரச்சினை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்மருத்துவமனைக்குச் சென்று பார்வையினையும்அழுத்தத்தினையும் கட்டாயம் சோதித்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் பார்வைபரிசோதனைகண்நீர் அழுத்த சோதனையுடன் கண்ணில் மருந்து போட்டு பார்வை நரம்பு பரிசோதனையையும் செய்து கண்நீர் அழுத்த உயர்வுக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று கண்மருத்துவர் பார்ப்பார். 

இதன் மூலம் ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால், தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

கண்நீர் அழுத்தம் உயரும் முன் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் கண்ணுக்குள் கண்ணாமூச்சிக் காட்டும். இதனால்தான் இதை சத்தமில்லாமல் பார்வையைப் பறிக்கும் திருடன் என்று சொல்கிறார்கள். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது. 

அதை  விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால், செடி நாளடைவில் பட்டுப்போய்விடும். அதன் பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியாதல்லவா!

அதைப்போன்றுதான் கண்நீர் அழுத்த உயர்வும் கண்ணில் அழுத்தம் அதிகரித்தது, கண்டறியப்படாமல் - தொடக்கநிலையில் சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்றால் அழுத்த உயர்வால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். இது ஒரு நிரந்தரமான பார்வையிழப்பு. மீண்டும் அதை சரி செய்ய முடியாது. எப்படிப் பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியாதோ, அதைப் போன்று பாதித்த பார்வைநரம்புகளை சரிசெய்யவும் முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை மட்டுமே காப்பாற்றலாம்.

அந்த ஐ.டி பணியாளர் போல கண்ணாடிக்கடைக்கு நேரிடையாகச் சென்று கண்ணாடி வாங்கினால் கண்ணில் அழுத்த சோதனை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால் தொடக்க நிலையில் கண்டுபிடித்து பார்வையைக் காக்க வாய்ப்பு கிடைக்கும்.

 

விழித்துக்கொள்வோம்

 

உரிய நேரத்தில் சிகிச்சை செய்துகொள்ளாதபோது அழுத்தம் உயர்ந்து, நாளடைவில் பார்வை பாதித்து, பக்கப்பார்வையும் வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணின் இரு புறமும் ( சைடு பார்வை ) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும். நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ  செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பொருட்களைப் முழுமையாகப் பார்க்க முடியும். 

ஆனால் கடுமையான பாதிப்பில் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதோ, இலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் முழுமையாகவோ தெரியாது. சில சமயங்களில் குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை வெகுவாக குறைந்து விடலாம்.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கண்நீர் அழுத்த உயர்வு இருக்கிறது. பார்வையைக் காக்க தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள். தொடர் சிகிச்சையும், தொடர் கவனிப்பும் பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும். பயப்படத்தேவையில்லை.

கண்நீர் அழுத்த உயர்வினைப் பொறுத்தவரையில் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சொட்டுமருந்தினை வாழ்நாள் முழுவதும்  கண்ணில் போட வேண்டி இருக்கும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை என்பதால் பலரும் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பாதிப்பு அதிகமாகி கடுமையான பார்வை பாதிப்பிற்கு வழிவகுத்து விடுகிறது. 

எனவே எக்காரணம் கொண்டும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது. கண்நீர் அழுத்த உயர்வினால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்பது, ஈடு செய்ய முடியாத நிரந்தர பாதிப்பு என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சையை, மருத்துவர் அறிவுரைப்படி தொடர வேண்டும்.

                                  -------

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு) 

மதுரை

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

கம்பியூட்டரோடு தலைவலியா

                         கம்பியூட்டரோடு தலைவலியா?

    

அது ஒரு மோசமான வானொலி விளம்பரம். ‘காலையில் இருந்து கம்பியூட்டரைப் பார்த்து பார்த்து ஒரே தலைவலி’ என்று ஒருவர் சொல்ல அதற்கு அவருடைய நண்பர் குறிப்பிட்ட ஒரு கண்மருத்துவமனைக்குப் போய் கண்ணை சோதித்து  கண்ணாடி போட்டுக்கொள்ளச் சொல்கிறார். அப்படிச் செய்தால் தலைவலி சரியாகிவிடுமாம். இதைவிட மோசமான விளம்பரம் எதுவும் இருக்க முடியாது. 

கண்மருத்துவமனைக்கு கூட்டம் சேர்ப்பதற்கான விளம்பரம் அது. அப்படி அந்த விளம்பரத்தில் என்ன பிரச்சினை? பார்க்கலாம்.

அவரவர் செய்யும், வேலையின் தன்மைக்கு ஏற்ப சிலவகை பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. நின்று கொண்டே வேலை செய்பவர்கள், வெப்பமான சூழலில் வேலை செய்பவர்கள், பட்டாசு தயாரிப்பு போன்று வேதிப்பொருட்களை கையாள்பவர்கள்பஞ்சாலையில் வேலை செய்பவர்கள்  என்று ஒவ்வொருவருக்கும் அவரவர்  பணிசார்ந்து  தனிப்பட்ட பிரச்சினைகள் உண்டு.  கம்பியூட்டரில் வேலை செய்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களுக்கும் பல விதமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

கம்பியூட்டரில் வேலை செய்பவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி என்னவென்றால், இப்பிரச்சினைகளை புரிந்துகொண்டால் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதுதான். பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். 

 

கம்பியூட்டரால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்

 

கழுத்துவலி

 

அருணாவுக்கு எந்நேரமும் கம்பியூட்டரில்தான் வேலை. வேலை என்றால் கடுமையான வேலை. எந்நேரமும் லாப்டாப்பும் கையுமாகத்தான் இருப்பார். அவருடைய பணிப்பொறுப்பு அப்படி. எந்நேரம் சாப்பிடுகிறார், தூங்கி எழுந்திருக்கிறார் என்பதே தெரியாது. சில நாட்களாகவே கழுத்தில் கடுமையான வலி. திடீரென இரண்டு நாட்களாக லேசான தலைசுற்றல். மருத்துவர் பார்த்துவிட்டு, ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் ஓய்வின்றி தொடர்ந்து கம்பியூட்டரில் வேலை செய்வதால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துவிட்டார்.

 

கண்ணில் பிரச்சினை

 

சுந்தருக்கு, வரவர பார்வை மங்கலாகத் தெரிவதுபோல் இருந்தது. சிலசமயம் கண்எரிச்சல், கண்கூச்சம், சிகப்பு வேறு. வேலையில் ஈடுபாடே இல்லை. அதோடு தலைவலி வேறு. பாராசிட்டமால் போட்டும் பார்த்துவிட்டார். சரியாகவில்லை. லாப்டாப்பைத் திறந்தவுடனேயே மூடிவைத்துவிட வேண்டும் என்ற நினைப்புதான் வந்தது. 

இதேபோல வங்கியில் பணிபுரியும் அந்த அதிகாரிக்கும் சில நாட்களாகவே கம்பியூட்டரைப் பார்க்க முடியவில்லை. மானிட்டர் மங்கலாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. கண்ணில் ஒருவித அசெளகரியம் வேறு. விடுப்பு போட்டு வீட்டில் நன்றாக தூங்கியும் பார்த்துவிட்டார். தூங்கி எழுந்த பிறகும் பார்வை மங்கலாகத்தான் இருந்தது. ஒன்றும் சரியாகவில்லை. இவையெல்லாமே ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்தான். கம்பியூட்டரில் வேலைசெய்யும் பலரும் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தாம் இவை. மணிக்கணக்கில் தொடர்ந்து கம்பியூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வதால்தான்  இதுபோன்ற பிரச்சினைகள்.

 

கம்பியூட்டர் பார்வை சிக்கல்

 

சிந்தித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் வேலை பார்ப்பவர்கள், நாள் முழுவதும் அதனுடன் மல்லுக்கட்டித்தான் ஆக வேண்டும். அவர்களுடைய வேலை, அந்த கம்பியூட்டருடன் சுருங்கிவிட்டது.  

பிற வேலை செய்பவர்களுக்கும் கம்பியூட்டரில் வேலை செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. பிற வேலை செய்பவர்கள் வேலை செய்யும்போது position- ஐ மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கம்பியூட்டரில் வேலை செய்பவர்கள் நிலை அப்படி கிடையாது. கம்பியூட்டரை ஒருஅடி தொலைவிலேயே தொடர்ந்து பார்க்கவேண்டிய கட்டாயம்.

பொதுவாக நாம் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 16 முதல் 20 தடவை கண்களை சிமிட்டுகிறோம். அதாவது இமைக்கிறோம். கண்கள் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு இந்த கண் இமைத்தல் மிக அவசியமாகிறது. ஆனால் நாம் கம்பியூட்டரில் வேலை செய்யும்போது - வேலையில் ஒன்றிப்போய் மானிட்டரையே வைத்த கண் வாங்காமல் பார்த்து வேலை செய்யும்போது இந்த கண் இமைத்தல்- சிமிட்டல் 4 ஆக குறைந்துபோய்விடுகிறது. இதனால் கண் விரைவில் உலர்ந்துபோய்விடுகிறது.

கம்பியூட்டரை தொடர்ந்து பார்க்கும்போது நம் கண்ணின்- விழிக்கோளங்களின் இயக்கங்களும், குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிப் போய்விடுகிறது. மானிட்டரை பக்கத்திலேயே எந்தவித மாற்றமின்றி தொடர்ந்து பார்ப்பதால், கண் விரைவில் களைத்தும் போய்விடுகிறது. இதனால் கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், கண் சிகப்பு, கண்ணில் வலி, அசௌகரியம், பார்வை மங்கல், தலைவலி, வேலையில் ஆர்வமின்மை போன்ற பல துயரங்கள் ஏற்படுகின்றன. 

 

அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சமாளிப்பது?

 

முன்னரே சொன்னதுபோல் இந்தப் பிரச்சினைகளுக்கு மருத்துவமே தேவையில்லை. பிரச்சினையை புரிந்துகொண்டாலே போதும். பணிபுரியும் இடத்தில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்வதன் மூலம் பாதிப்பினைத் தவிர்க்கலாம். உட்காரும் நாற்காலியிலிருந்து கம்பியூட்டர் மேஜை அமைப்பு, விளக்கு உட்பட ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்காராதபோது கழுத்துவலி ஏற்படலாம். நாற்காலியின் பின்புறம் முதுகுக்கு வளைந்துகொடுக்கும் வசதி கொண்டதாக இருந்தால் நல்லது. மேஜையில் மவுசும், கீ போர்டும் கைக்கு வசதியாக, வேலை செய்வதற்கு  ஏற்றார்போல இருக்கவேண்டும். காலை நீட்டி வசதியாக உட்கார்ந்தால் கால்வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். காலில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க மேஜைக்கு அடியில் கால் வைப்பதற்கென்று சாய்வான பலகை வைக்கலாம். 

 

மானிட்டர் எப்படி இருக்க வேண்டும் ?

 

பேப்பர் அல்லது புத்தகம் வாசிப்பதை நினைத்துக்கொள்ளுங்கள். மார்புக்கு நேராக சமமாகவோ அல்லது சற்று தாழ்த்திதானே பிடித்துப் படிப்போம். மானிட்டரையும் அப்படித்தான், கண்ணின் கிடைமட்டத்தைவிட சற்றே கீழே சாய்வாக பார்ப்பதற்கு ஏற்றாற்போல அமைக்கவேண்டும். இப்படி சாய்வாக இருப்பதுதான் பலருக்கும் வசதியாக இருக்கிறது. அண்ணாந்து பார்ப்பதுபோல் இருக்கவேண்டாம். 

அறையில் உள்ள மின்விளக்கு உட்கார்ந்திருப்பவரின் பின்புறமோ அல்லது பக்கவாட்டிலோ இருக்கலாம். முன்புறம் கண்ணில் நேரடியாக விழுவதுபோல் வேண்டாம். கம்பியூட்டரில் எப்போது என்டரைத் தட்டுகிறோமோ அப்போதெல்லாம் நாமாக கண்களை சில விநாடிகள் இமைத்துவிட்டு பின் கண்களை மானிட்டரில் இருந்து விலக்கி அறையின் கதவு அல்லது சன்னல் வழியாக சில விநாடிகள் தூரத்தில் உள்ள பொருளை சில விநாடிகள் பார்த்துவிட்டு பின் மீண்டும் வேலையைத் தொடரலாம். இதை இன்னும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள 20:20:20 என்ற பார்முலாவை நினைத்துக் கொள்ளலாம்.

 

அது என்ன 20 :20: 20  பார்முலா

 

                                          A poster with cartoon characters

AI-generated content may be incorrect.

 

அதாவது 20 நிமிடத்துக்கு ஒரு முறை, கண்களுக்கு 20 விநாடிகள் ஒய்வு கொடுத்துவிட்டு 20 அடி தொலைவில் உள்ள பொருளை சில விநாடிகள் பார்த்துவிட்டு - கண்களை ஐந்தாறு முறை இமைத்துவிட்டு பின் மீண்டும் வேலையைத் தொடர்வது. இது பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் இதை தொடர்ந்து ஒருவர் பின்பற்றினால், எந்தப் பிரச்சினையும் இன்றி வசதியாக கம்பியூட்டரில் வேலை செய்யலாம். 

சிலர் இது போன்ற பிரச்சினைகளுக்கு கண்ணில் சொட்டு மருந்தைப் போடவேண்டும் என்று நினைப்பார்கள். தேவையில்லை. இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை ஏற்கனவே கண்ணாடி அணிந்திருந்தால் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் மானிட்டரைப்பார்க்க வேண்டும். கம்பியூட்டரின் மானிட்டருக்கு முன்னால் Anti glare screen பொருத்துவது கூடுதல் பலனைத்தரும்.

கம்பியூட்டரில் வேலை செய்யும்போது பிரச்சினை ஏற்படுவதற்குரிய காரணம் இப்போது புரிந்திருக்கும். அதோடு அந்த விளம்பரம் குறித்த தெளிவும் பிறந்திருக்கும். புரிந்து கொண்டால் பிரச்சினையைத் தவிர்ப்பது மிக எளிதுதான்.   

 

 

 

வெள்ளி, 30 ஜனவரி, 2026

நலவாழ்வளிக்க வந்த காந்தி

நலவாழ்வளிக்க வந்த காந்தி

( இன்று காந்தி மறைந்த நாள். ஜனவரி-30 )

 

            சுத்தம் என்பது இறைவனுக்கு அடுத்த நிலை

          A black and white drawing of a person carrying a pot

AI-generated content may be incorrect.

 

நாகரீக உடை உடைத்தி, உயர்தர குளிர்கண்ணாடி அணிந்துகொண்டு கையில் நீண்ட துடைப்பத்தை, முதன் முதலாக கையில் பிடித்துக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ்’ கொடுக்கும் அரசியல்வாதியை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நேற்று இன்று நாளை’ யிலும் அது போன்ற காட்சி உண்டு.

ஆனால் அதைப்போலவே மேற்கத்திய உடையில்கோட்-சூட்டுடன் கையில் துடைப்பத்தைப் பிடித்து அங்கிருந்த அசுத்தங்களையும் கழிவுகளையும் அகற்றிக் கொண்டிருந்தார் அவர். 

1901-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான், கழிவுகளால் துர்நாற்றமாய் இருந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த மனிதர். தொண்டர்களும் பிரதிநிதிகளுமாய் நிரம்பியிருந்த மாநாட்டில்வந்திருந்த பிரதிநிதிகள் தங்கியிருந்த பகுதிகளில், சிலர் கழிப்பறைகளை சரியாக பயன்படுத்தாமல் திறந்தவெளிகளில் அசுத்தம் செய்ததால்தான் அந்த மோசமான சூழல். துர்நாற்றம்.

அதைப்பார்த்துக் கொண்டு அந்த மனிதரால் சும்மா இருக்க முடியவில்லை. அங்கிருந்த தன்னார்வலர்களிடம் சுத்தம் செய்யச் சொன்னபோது , ‘இது எங்கள் வேலை இல்லைதுப்புரவுத்தொழிலாளிகளின் வேலை அது’ என்று மறுத்துவிட்டார்கள். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? நமக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு 100 அடித்தள்ளி சுற்றிப் போயிருப்போம். 

ஆனால் அந்த துர்நாற்றம் வீசும் சூழலைப்பார்த்து, துளியும் தயங்காமல் துடைப்பத்தைத் தேடி எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார் அந்த அரை ஆடை மனிதர். ஆம்! தேசத்தந்தை மகாத்மா காந்தியேதான்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி, பிரதிநிதியாக கலந்து கொண்ட முதல் மாநாடு அது. நமக்குத் தெரியும் காந்தி அப்போது மேற்கத்திய உடைகளை அணிந்திருந்த காலம். கோட்சூட்டுடன் அவர் துடைப்பத்துடன் சுத்தம் செய்வதை ஒரு நிமிடம் கண்ணை மூடி அந்த காட்சியை நினைத்துப் பாருங்கள். கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல் இது ஒன்றும் சில திரைப்படங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற காட்சி அல்ல.

பலரும் அன்று அவரை ஏளனமாகத்தான் பார்த்தார்கள்.  உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. பின்னாளில் காந்தி செய்த தூய்மை பணிக்கு அதுவே தொடக்கம்

 

தூய்மை குறித்த சிந்தனை

 

வியப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கு ஏன் வந்தது? அவருக்கு துப்புரவு தூய்மை குறித்த சிந்தனை ஈடுபாடு எங்கிருந்து கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்வினைப் பார்க்க வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து அன்று நிலவியது. ஆங்கிலேயர்கள் அவர்களை பாகுபடுத்தவே அது காந்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் காந்தி, இந்தியர்களிடம் அவர்களுடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். அவரவர் சுத்தத்தை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதானே உண்மை! காந்தி அந்தக் கருத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். பிற நாடுகளில் அப்படித்தானே இருக்கிறது. 

ஒருமுறை ஜோகன்னஸ்பெர்க்கில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் பிளேக் நோய் கடுமையாக பரவி சிலர் இறந்தபோது நகராட்சி, அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் காந்தி உடனே களத்தில் இறங்கி இருக்கிறார். நிவாரணப்பணியோடு மருத்துவ உதவிகளையும் செய்திருக்கிறார். இதன்மூலம் அவருக்கு ஆழமான அடிப்படைச் செய்திகள் கிடைத்திருக்க வேண்டும். இதை ‘கறுப்பு பிளேக்’ என்றே தன் சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த அனுபவம் பின்னாளில் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது. அது தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா வந்த சமயம். பம்பாயில் ‘பிளேக் நோய்’ தீவிரமாக இருந்தபோது காந்தியடிகள், தானே வலியப்போய் சுகாதாரக் குழுவினருடன் சேர்ந்து சுற்றுப்புறத்தை சுத்தமாக்க கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். வீடு வீடாக சென்று கழிப்பறையை ஆய்வு செய்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தைக் கூறி அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியதாக, தம் சுயசரிதையில் கூறுகிறார். 

‘இந்தியர்கள் சுத்தத்தைக் குறித்து கவலைப்படமாட்டார்கள், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க மாட்டார்கள்’ என்று இந்திய சமூகத்தின் மீது அந்தக்காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை, பொய் என்று நிரூபிக்க அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் ராஜ்கோட்டில் பிளேக் நோய் வராமல் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதிலும் தீவிரம் காட்டி இருக்கிறார்.

தூய்மையின் அவசியத்தை உணர்ந்த காந்தி, பின்னாளில் இந்திய தேசிய காங்கிரஸில் ஐக்கியமாகியபோது துப்புரவு பணிகளுக்கென்றே குழுக்களையும் உருவாக்கினார்.

 

பொது இடங்களில் சுகாதாரம்?

      

தூய்மை என்பது தனிநபர் ஒழுக்கம் மட்டுமல்லஅது சமூகக் கடமை

 

கரோனாவைக்கூட சமாளித்து எழுந்துவிட்டோம். ஆனால் இன்னும் நம்மால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கமுடியவில்லை. தொடர்ந்து போராட்டம்தான். பொது இடங்களில் இருமும்போது வாயை மூடிக்கொள்ளும்படிசுகாதாரத்துறையினர் கத்தி’,கத்தி சொல்லி வருகிறார்கள். 

ஆனால் வியப்பான செய்தி, ஒரு மருத்துவராக இல்லாத போதும் காந்தி இது குறித்து 1919-லேயே பேசி இருப்பதுதான்.

நவஜீவனில் அவர் எழுதுகிறார்:

தெருக்களில் யாரும் எச்சில் துப்பவோ, சளியை சீந்தவோ கூடாது என்கிறார். அப்படி செய்வதன் மூலம் காசநோய் போன்ற கிருமித்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக சொல்கிறார்.

அப்படி துப்பினால் சளியை மண்கொண்டு மூடச் சொல்கிறார். வெற்றிலை, புகையிலை மென்று கண்ட கண்ட இடங்களில் துப்புவது குறித்து வருத்தப்படுகிறார். அருகில் இருப்பவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லையே என்று.

இன்று டெங்கு மலேரியா, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. வியப்பு என்னவென்றால் அன்றே அதை அவர் செய்திருப்பதுதான். நவஜீவனில் அவர் மேலும் சொல்கிறார்: 

மலேரியா ஒரு பிரச்சினையாக இருந்தபோது, பள்ளம் இருந்தால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் என்பதால் பள்ளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். மேலும் பிளேக் போன்ற நோய்கள் பரவுவதற்கு சுற்றுப்புற சுகாதாரமின்மையும் தன்சுத்தம் இல்லாமையும் தான் காரணம் என்று சொல்லி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படித்தவர்களை அழைக்கிறார்.

 

இரயில்வண்டிகளில் சுத்தம்

 

இரயில்வண்டிகளிலும், பொதுஇடங்களில் உள்ள பொது கழிப்பறைகளையும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டித்தார். அன்றையகாலத்தில்தான் அப்படி இருந்ததுபோலும் என்று இருந்துவிட முடியவில்லை. 

அதிநவீன வந்தேபாரத்தில் அண்மையில் சென்றபோதும் அதே நிலைமைதான். ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்து வருபவர்கள் பயன்படுத்துவார்களே என்ற நினைப்பு சிறிதும் கிடையாது. 

பல்துலக்குவது, குளிப்பது போன்று பொதுசுகாதாரத்திலும் கவனம் செலுத்தச் சொல்கிறார். சுத்தத்திற்கும் உடல்நலத்துக்கும் உள்ள தொடர்பை தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளார். 

படித்தது சட்டம், என்றாலும் சுகாதாரத்தின் மீதும் உடல்நலத்தின் மீதும் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்த காந்தி- சுயாட்சி அடைவதற்கான 18 அம்ச ஆக்கபூர்வமான திட்டத்தில் கிராமப்புற சுகாதாரம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை முன்னிலைப்படுத்திய காந்தி-சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்த காந்தி - மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களை விமர்சித்திருந்தாலும் அங்கிருந்தே சுகாதாரத்தை கற்றுக்கொண்டதாக அவர் சொல்லத் தயங்கியதேயில்லை. 

சுதந்திரத்தைவிட சுகாதாரமே முக்கியம் என்றும், ஒவ்வொருவரும் தமது அழுக்கினை தாமே சுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்ன காந்தி சொல்கிறார், ‘நான் யாரையும் அழுக்கு கால்களால் என் மனதின் வழியே நடக்க அனுமதிக்க மாட்டேன்’ என்று.

 

அன்றைய காந்திய சிந்தனையும் இன்றைய தூய்மையும்

         

தங்கத்தைக் காட்டிலும் ஆரோக்கியமே உண்மையான செல்வம்.

 

                         A silhouette of a person walking with a cane

AI-generated content may be incorrect.

 

சிந்துவெளி, மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கு உடல்தூய்மையில் இருந்த கவனம்சுகாதாரத்தில் இருந்த அறிவு, நமக்கு இல்லாமல் போய்விட்டதா அங்கு நடைபெற்ற அகழாய்வுச் செய்திகள் கிடைத்த கட்டிடங்கள் - குறிப்பாக கழிவுநீர்க்கால்வாய்கள் முழுவதும் செங்கல் தகடுகளால் மூடப்பட்டிருந்தது என்றும் தனியாக குளியலறை இருந்ததாகவும்மக்கள் உடல்தூய்மையில் அதிக கவனம் செலுத்தி இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிப்பதை அறியும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. 

அது மட்டுமல்ல. பொதுகுளியல் தொட்டியும் இருந்திருக்கிறது.  அதில் இருந்து நீர் வெளியேற வடிகால் அமைப்பு இருந்ததும், ஒவ்வொருவீட்டில் இருந்தும் வெளியேறும் வடிகால், குழாய் மூலம் தெருவில் இருந்த மூடிய வடிகால்களுடனும் இணைக்கப்பட்டிருந்ததும் எப்போற்பட்ட பொதுசுகாதார சிந்தனை?.

‘உடல் ஆரோக்கியம், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்து துவங்குகிறது, என்று காந்தி சொன்ன செய்திகள்  இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது வருத்தமான செய்திதான்.  அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாகவே அவரால் 1905 காலகாட்டத்தில் ‘இந்தியன் ஒப்பினியனில்’ ஆரோக்கியம் குறித்து  ‘ஆரோக்கிய வழி என்ற தலைப்பில்  கட்டுரைகளை எழுத முடிந்தது. பின்னர் அதுவே ‘ஆரோக்கியத் திறவுகோல் என்ற பெயரில் நூல் வடிவமும் பெற்றது. 

அந்த அரை ஆடை மனிதர் தூய்மைபொதுசுகாதாரத்தின் மீது காட்டிய அளப்பரிய ஈடுபாட்டின் காரணமாக இந்திய அரசு 2014-ல் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 2-ல் நாடுதழுவிய திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தியது எத்தனைபேருக்குத் தெரியும்?

சரிஇந்தத் திட்டம் தொடங்கியபிறகு தூய்மையின் இன்றைய நிலைமைதான் முன்னேறி இருக்கிறதாஅதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கிறதா?

சாலைகள்தெருக்கள் வீட்டுப்பகுதிகள் என்று எங்குபார்த்தாலும் குப்பைகள். பலரும் குப்பைத் தொட்டிக்கு அருகில் வரை வந்துவிட்டு எட்ட நின்று அங்கிருந்தே குப்பைகளை வீசி எறியத்தானே செய்கிறார்கள். 

நீர் நிலைகளையும் விட்டு வைக்கவில்லை. பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்பாட்டில்களையும்உடுத்திய ஆடைகளையும், இதர குப்பைகளையும் குளங்கள்ஆறுகளில் தூக்கி வீசி மாசுபடுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

பொதுசுகாதாரத்தின் அடிப்படையே வருமுன்காப்போம்’ என்பது தான். அதில் உறுதியாக இருந்திருக்கிறார் காந்தி.  கழிப்பறை சுத்தமே ஆரோக்கியத்தின் அடிப்படை என்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும்படியும், காந்தி வலியுறுத்திய கருத்துக்களை முழுமையாக நிறைவேற்றும்போதுதான் தூய்மை இந்தியாவும் முழுமையாக நிறைவேறும். 

                                                                 A black and white silhouette of a person's face

AI-generated content may be incorrect.