சனி, 25 ஏப்ரல், 2026

நம் குழந்தைகள்

                         

 

புதூர் உத்தமனூர். திருச்சிராப்பள்ளியில் சமயபுரத்துக்கும், லால்குடிக்கும் இடையில் உள்ள கிராமம். என்னுடைய முதல் பணி அந்த ஊர் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு குக்கிராமம்தான். மருத்துவமனை தவிர வேறு கடைகள் எதுவும் கிடையாது.  ஆள் அரவமில்லாத காடு என்றுதான் சொல்லவேண்டும். 300 மீட்டர் தள்ளிதான் வீடுகளையேப் பார்க்க முடியும். தள்ளிதான் ஊரே. 200 க்குள் தான் வீடுகளே இருக்கும்.

 

ஆரோக்கியமான இயற்கை சூழல். மரங்கள் சுற்றி இருக்க மையமாய் மருத்துவமனை. சுற்றிலும் வயல்வெளி. மருத்துவமனை முன்பாக காவிரி ஆறு புள்ளம்பாடி வாய்க்காலாக. ​​சூழல் பிடித்துப்போகாமல் இருக்குமா? காலியாக இருந்த மருத்துவமனை குடியிருப்பு ஒன்றிலேயே தங்கிவிட்டேன். மொத்தம் இருந்த 10 குடியிருப்புக்களில் ஆறில் பணியாளர்கள் இருந்தார்கள். இத்தனைக்கும் ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள்தான். காலை, மதியம் பிறகு இரவு. காலை 5 மணிக்குமேல்தான் ஊரிலிருந்து வெளியே போக முடியும். இரவு 9 மணிக்கு இறுதி பேருந்து, ஊருக்குள் வருவதற்கு. அதற்குப்பின் ஊரைவிட்டு வெளியே செல்ல முடியாது.

 

என்னை வளர்த்து எனக்கு ஒரு வடிவத்தைத் தந்தது அந்த ஊர்தான். சுறுசுறுப்பாய் அந்த காட்டுக்குள் இருந்து பயணப்பட வைத்ததும் அந்த காவிரித்தண்ணீர் தான்.

 

தங்கியிருந்த பெரும்பாலான பணியாளர்கள் தங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது.  

 

அந்த நாட்களில்நான் லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அதற்கு எங்கள் சுகாதார மையத்தில் இருந்த அழகிய போட்டோபோன் தானியங்கி ஸ்லைடு புரொஜெக்டர் எனக்கு கைகொடுத்தது. அற்புதமான கருவி அது. சுகாதாரக் கல்வி நடவடிக்கைகளுக்காக நான் அந்தப் புரொஜெக்டரைப் பயன்படுத்திக் கொண்டேன். கணினிபவர் பாயிண்ட் என்று பார்த்த இந்த தலைமுறையினருக்கு அதெல்லாம் வியப்பாகத்தான் இருக்கும்.

 

வார இறுதி நாட்களில் நான் அருகிலுள்ள கிராமங்களில் பேசுவதற்கு போகும்போதெல்லாம் குடியிருப்புகளில் இருந்த சிறுவர்களும் என்னுடன் வருவார்கள். அவர்களுடைய உதவி எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

                            

 

வித்தியாசமாய் இருந்த இந்நிகழ்வுகள் அவர்களை வெகுவாக கவர்ந்தன. விரும்பி தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பின்னர் ஒரு நாள் இந்தக் குழந்தைகளுக்காக என்று பிரத்தியேகமாக ஒரு சுகாதாரக் கல்வி நிகழ்ச்சியை சுகாதாரக் குடியிருப்பு வளாகத்திலேயே நடத்தினேன். 

 

சமச்சீர் உணவின் முக்கியத்துவம் கீரை வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் நாம் வழக்கமாக சாப்பாட்டிலிருந்து சக்கை எனத்தூக்கி எறியும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளின் முக்கியத்துவம் சாப்பிடுமுன் கை கழுவுவதன் அவசியம் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்கள் என்று  படக்காட்சியுடன் அவர்களிடம் பேசியது அவர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்காக தேடித்தேடி வரவழைத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லைடுகளை பயன்படுத்தினேன். சில ஸ்லைடுகளை நானே வடிவமைத்தேன். அது அவர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

 

சில நாட்களுக்குப் பிறகுநான் வியக்கும் வகையில்எனது சக பணியாளர்களில் சிலர் என்னிடம்,  'நீங்கள் என்ன செய்தீர்கள்ஏதேனும் மாயாஜாலம் செய்துவிட்டீர்களா என்ன?' என்று கேட்டு வியந்தார்கள். படக்காட்சிகள் அந்தக் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார்கள். 

 

நான் குழந்தைகளிடம் சொன்ன செய்திகளை மனதில் நிறுத்தி, சாப்பிடும்போது அதிக காய்கறிகளையும் கீரைகளையும் கொடுக்குமாறு குழந்தைகள் வீட்டில் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்களாம். வீட்டில் மற்றவர்களிடமும் கருவேப்பிலையை தூக்கி எறிய வேண்டாம் என்று வேறு சொன்னார்களாம். அட!

 

புரியும்படி சொன்னால் கேட்கக் கூடியவர்கள்தானே நம் பிள்ளைகள்!!

 

புதன், 25 மார்ச், 2026

கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

      கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

          

                

 

முதல்நாள் இரவு வரை இராசேந்திரனுக்கு, பார்வை நன்றாகத்தான் இருந்தது. மறுநாள் காலை குளித்துவிட்டு பால்கனிக்கு வந்து வானத்தைப் பார்த்தபோது, கண் அதிக ஒளியுடன் கூசுவதுபோல் இருந்தது. பிரகாசமாகவும் தெரிந்தது. அத்துடன் கண்ணுக்கு முன்னால் பூச்சி பறப்பதுபோல் ( Floaters )  இருந்தது. கண்ணை அசைத்தால் அதுவும் வேகவேகமாக அசைவதுபோல் தெரிந்தது. உண்மையிலேயே பூச்சிதானா என்று பார்த்தார். ஆனால் பூச்சியைக் காணவில்லை. கண்ணைத் தேய்த்துப்பார்த்தும் பார்த்தார். பயனில்லை. அப்படியேதான் இருந்தது.

கண்ணாடி போட்டிருந்ததால் கண்ணாடிபோட்டும் பார்த்தார். கண்ணாடியில்லாமலும் பார்த்தார். பூச்சி பறப்பது அப்படியேதான் இருந்தது.

இத்தனைக்கும் குடிப்பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோகூட கிடையாது. முந்தினநாள் இரவு நன்றாகத்தான் தூங்கி எழுந்தார். கண்ணை நன்றாக கழுவி விட்டும் பார்த்தார். பூச்சி பறப்பதில் மாற்றம் இல்லை.

சென்ற மாதம் பார்த்த இரத்த அழுத்தம்சர்க்கரைநோய்க்கான சோதனை எல்லாம் இயல்புக்குள்தான் இருந்தன. உடலில் வேறு எந்த பிரச்சினையும் கிடையாது. கொஞ்சம் பயந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மருத்துவமனையில்கண்மருத்துவர் விரிவாக சோதித்துவிட்டு பயப்படத்தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். வயதாகும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைதான் என்றாலும், அது ஏன் ஏற்படுகிறது? பயப்படத் தேவையில்லையாஎப்போது கவனம் தேவைஎன்பது பற்றி பார்க்கலாம்.

 

அது என்ன பூச்சி பறப்பது?

 

கண்ணில் இரண்டு வகையான திரவங்கள் இருப்பதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். கண்ணில்விழிலென்சுக்கு முன்புறம் இருக்கும் முன்கண்திரவம் ( Aqueous humour) மற்றும் பின்புறம் இருக்கும் பின்கண்திரவம் ( Vitreous humour )இதில் முன்கண்திரவம் திரவ வடிவில் இருக்கும். 

இந்த பின்கண்திரவம் (விட்ரியெஸ்)மூக்குச் சளி போல ஜெல்லி வடிவில் இருக்கும். கண்ணின் விழிக்கோளத்தை நிரப்பி கண்ணைக் கோளவடிவில் நிலைநிறுத்த உதவுகிறது. நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு, தன் வழியே செல்லும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு செல்வதை உறுதி செய்கிறது. அதோடு கண்ணில் அடிபடும்போது அதிர்ச்சி தாங்கியாகவும் ( Shock Absorber ) செயல்படுகிறது.

ஜெல்லி மாதிரி இருக்கும் இந்த விட்ரியெஸ் கண்ணாடி போன்று தெளிவானது. இது 99 விழுக்காடு நீராலும் மீதி கொலாஜன் நார்களாலும் ஆனது. இளவயதில் அடர்த்தியாக இருக்கும் இந்த விட்ரியெஸ் ஜெல்லிவயதாகும்போது நீர்த்துப்போய் கொலாஜன் நார்கள் ஒன்று சேர்ந்து சுருங்கி மெல்லிய இழைகளாகவோ, சிறு துகள்களாகவோ மாறலாம். இவைதான் விழித்திரையில் நிழல்களாக விழும். வெளியில் நாம் பார்க்கும்போது பார்வையில் பூச்சி மிதப்பதுபோல் தெரியும்.

                                        

 

                     

கண்ணுக்கு முன்னால் வெளிறிய சாம்பல் அல்லது கருப்பு நிறப்புள்ளிகளாகவோ வெளிப்படையான (Transparent) இழைகள் போன்றோ தெரியலாம். சதுரங்கள் போன்றோவளையங்களாகவோ உருவமற்ற மேகங்கள் போன்றோ பார்ப்பதற்கு இருக்கும். பொதுவாக வெளிச்சமான பரப்பில் வானவெளியில் பார்க்கும்போது இந்த மிதவைகள் தெளிவாகத் தெரியும். கண்ணை அசைத்தால் மிதவைகளும் வேகமாக அசையும். 

 

யாருக்கு ஏற்படலாம்?

·       வயதாவதால்

·       உயர் கிட்டப்பார்வைகுறைபாடு ( High Myopia ) உள்ளவர்களுக்கு

·       கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு

·       சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு

·       கண்ணில் காயம் ஏற்படும்போது

 

எப்போது கவனம் தேவை?:

 

பொதுவாக வயதாகும்போது ஏற்படக்கூடியதுதான். பயப்படத் தேவையில்லை. ஆனால் பூச்சி பறப்பதில் புள்ளிகள் திடீரென ஒரேயடியாக அதிகரித்தால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிலசமயங்களில் விட்ரியெஸ் ஜெல்லி சுருங்கும்போது பின்புறத்தில் விட்ரியெஸ் விழித்திரையில் இருந்து, பிரிந்து விடுபடலாம். (Post Vitreous Detachment) பல சமயங்களில் இதனால் பிரச்சினை எதுவும் இருக்காது. 

இந்த மிதவையுடன் கண்ணில் மின்னல் போன்று ஒளி தெரிந்தால் அதிக கவனமாக இருக்க வேண்டும். விட்ரியெஸ் பின்புறத்தில் இருந்து பிரியும்போது விழித்திரையினை இழுத்து அதனால்  விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரியலாம்  (Retinal Detachment) இதுபோன்ற நிலை சற்று சிக்கலானது. பார்வையை கடுமையாக பாதிக்கக்கூடியது. அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். இது ஒரு சிக்கலான சிகிச்சையும்கூட. 

பக்கப்பார்வையில் நிழல்போன்று தெரிந்தாலும்பார்வையில் திரைபோன்று பார்வை மறைத்தாலும்பூச்சி பறப்பது அதிகரித்தாலும்மின்னல் போன்று வெளிச்சம் தெரிந்தாலும் உடனே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாக கண்ணில் ஏற்படும் எந்த ஒரு சிறு மாற்றத்தினையும் அலட்சியம் செய்யாமல் அறிகுறிகள் தெரிந்தவுடன் தொடக்க நிலையிலேயே கண்மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பார்வைபிரச்சினை அதிகமாகாமல் தடுத்து பார்வையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

                                  ---X---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை

சனி, 14 மார்ச், 2026

உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்

                                  மறைந்திருந்து தாக்கும் மர்மம்.

                  உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம் ( மார்ச்சு 8 - 14 )  

நிறைவுநாள் கட்டுரை    

                        A person using a pair of scissors to trim an old person's head

AI-generated content may be incorrect.          

 

விலை உயர்ந்த கண்ணாடி அவருடையது. கண்ணாடிக்கடையில் நவீன கணினித் தொழிற்நுட்பத்தில் முகத்திற்கேற்ற பிரேமை வாங்கியதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. 

வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கான கண்ணாடி அது. அவருடைய நண்பரின் கண்ணாடியை வாங்கி போட்டு பார்த்ததில் நன்றாக தெரிந்ததால் அவருடைய ஆலோசனையின்பேரில் நேரடியாகக் கண்ணாடிக்கடையில் வாங்கினார். நண்பர் கைதேர்ந்த கண்மருத்துவர்போல் அவருடைய வயதுக்குரிய லென்சுபவரைச் சொல்லி வாங்கச் சொன்னார். 

கண் மருத்துவமனைக்கு சென்றால் கண்ணில் மருந்துபோட்டு உட்காரவைத்துவிடுவார்கள். தேவையில்லாத சோதனைகள் செய்து அலைக்கழிப்பார்கள். ஒருமுழுநாள் முழுவதும் வீணாகிவிடும் என்ற கவலை இருந்தது. ஆனால் இப்போது பிரச்சினையே இல்லை. மருத்துவமனைக்கே போகாமல் எளிதில் கண்ணாடியை வாங்கியதில் திருப்தி அவருக்கு

ஒருமுறை அவர் வேலை பார்த்த ஐ.டி. நிறுவனத்தில், பணியாளர்களுக்காக நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் வழக்கமான சோதனையின்போது அவருடைய கண்நீர் அழுத்தம், இயல்பான அளவைவிட சற்று அதிகரித்திருந்தது தெரிந்தது.

மேற்கொண்டு விரிவான சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். மருத்துவமனையில் அவருடைய கண்ணில்,அழுத்தம் உயர்ந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதோடு கண்ணில் பார்வை நரம்புகளில் ( Optic Nerve ) கணிசமான பாதிப்பும் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதன் காரணமாக பார்வையும் சிறிதளவு பாதிக்கப்படிருந்தது. 

இதற்கு முன்பு, கண்ணாடி சோதனை செய்த மருத்துவமனையில் உங்களுக்கு அழுத்தம் இருப்பது பற்றி சொல்லவில்லையா? என்று மருத்துவர் கேட்டார்.  மருத்துவமனைக்கு சென்று சோதித்து கண்ணாடி போட்டிருந்தால்தானே அவரால் பதில் சொல்ல முடியும்?

 

அதென்ன கண்நீர் அழுத்தம் ?

 

நம் உடம்பில் இருக்கும் இரத்த அழுத்தம் ( Blood Pressure நமக்குத் தெரிந்ததுதான்.   இரத்த அழுத்தம் 120/80 மி,மீ / பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால்  பி.பி.கூடிருச்சு என்கிறார்கள். அதாவது உயர் இரத்த அழுத்தம் . இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10 - 20 க்குள் இருந்தால் அது இயல்பான அழுத்தம்.

உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கண்நீர் அழுத்த உயர்வு ( கிளாக்கோமா ). 

இந்தக் கண்நீர் அழுத்த உயர்வில், மற்ற நோய்களைப் போல் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுவது கிடையாது. அதனால் தொடக்க நிலையில் கண்டறிவதற்கான வாய்ப்பு குறைவுதான். நோய்த்தாக்கி அழுத்த உயர்வால் பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை உணரத் தொடங்குவார். அதற்குள் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டிருக்கும். 

உடம்பில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதே தெரியாமல் இன்னும் சிலர் இருக்கும்போது கண்ணில் இருக்கும் அழுத்தம் பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.

 

வருமுன் காப்போம்

 

வழக்கமாக எப்படி 40 வயதை நெருங்கும்போது உடலில் இரத்த அழுத்தம்சர்க்கரை அளவினை சோதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோமோ அதைப்போன்று இந்த வயதில் கண்ணில் பிரச்சினை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்மருத்துவமனைக்குச் சென்று பார்வையினையும்அழுத்தத்தினையும் கட்டாயம் சோதித்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் பார்வைபரிசோதனைகண்நீர் அழுத்த சோதனையுடன் கண்ணில் மருந்து போட்டு பார்வை நரம்பு பரிசோதனையையும் செய்து கண்நீர் அழுத்த உயர்வுக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று கண்மருத்துவர் பார்ப்பார். 

இதன் மூலம் ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால், தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

கண்நீர் அழுத்தம் உயரும் முன் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் கண்ணுக்குள் கண்ணாமூச்சிக் காட்டும். இதனால்தான் இதை சத்தமில்லாமல் பார்வையைப் பறிக்கும் திருடன் என்று சொல்கிறார்கள். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது. 

அதை  விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால், செடி நாளடைவில் பட்டுப்போய்விடும். அதன் பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியாதல்லவா!

அதைப்போன்றுதான் கண்நீர் அழுத்த உயர்வும் கண்ணில் அழுத்தம் அதிகரித்தது, கண்டறியப்படாமல் - தொடக்கநிலையில் சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்றால் அழுத்த உயர்வால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். இது ஒரு நிரந்தரமான பார்வையிழப்பு. மீண்டும் அதை சரி செய்ய முடியாது. எப்படிப் பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியாதோ, அதைப் போன்று பாதித்த பார்வைநரம்புகளை சரிசெய்யவும் முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை மட்டுமே காப்பாற்றலாம்.

அந்த ஐ.டி பணியாளர் போல கண்ணாடிக்கடைக்கு நேரிடையாகச் சென்று கண்ணாடி வாங்கினால் கண்ணில் அழுத்த சோதனை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால் தொடக்க நிலையில் கண்டுபிடித்து பார்வையைக் காக்க வாய்ப்பு கிடைக்கும்.

 

விழித்துக்கொள்வோம்

 

உரிய நேரத்தில் சிகிச்சை செய்துகொள்ளாதபோது அழுத்தம் உயர்ந்து, நாளடைவில் பார்வை பாதித்து, பக்கப்பார்வையும் வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணின் இரு புறமும் ( சைடு பார்வை ) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும். நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ  செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பொருட்களைப் முழுமையாகப் பார்க்க முடியும். 

ஆனால் கடுமையான பாதிப்பில் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதோ, இலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் முழுமையாகவோ தெரியாது. சில சமயங்களில் குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை வெகுவாக குறைந்து விடலாம்.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கண்நீர் அழுத்த உயர்வு இருக்கிறது. பார்வையைக் காக்க தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள். தொடர் சிகிச்சையும், தொடர் கவனிப்பும் பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும். பயப்படத்தேவையில்லை.

கண்நீர் அழுத்த உயர்வினைப் பொறுத்தவரையில் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சொட்டுமருந்தினை வாழ்நாள் முழுவதும்  கண்ணில் போட வேண்டி இருக்கும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை என்பதால் பலரும் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பாதிப்பு அதிகமாகி கடுமையான பார்வை பாதிப்பிற்கு வழிவகுத்து விடுகிறது. 

எனவே எக்காரணம் கொண்டும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது. கண்நீர் அழுத்த உயர்வினால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்பது, ஈடு செய்ய முடியாத நிரந்தர பாதிப்பு என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சையை, மருத்துவர் அறிவுரைப்படி தொடர வேண்டும்.

                                  -------

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு) 

மதுரை