வியாழன், 3 செப்டம்பர், 2026

காபி, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறதா?

காபி, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறதா ?

---

 

 

 

மு.வீராசாமி DOA

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை

 

சென்ற தலைமுறையினருக்கு காபி என்றதும் நினைவுக்கு வருவது ‘பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லா இருக்கு’ என்ற உசிலை மணியின் விளம்பரம்தான். 

காபி பிரியர்கள் சந்தித்துக் கொண்டால் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். எங்கு நல்ல பில்டர் காபி கிடைக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக சொல்வார்கள். அதுவும் வெவ்வேறு ஊர்களில்கூட தெரிந்து வைத்திருப்பார்கள்.

காபியை குடிக்கக்கூட வேண்டாம். சூடான பில்டர் காபியில், அந்த ஆவியோடு வரும் நறுமணத்தை நுகர்ந்தாலே போதும், புத்துணர்ச்சி பீறிட்டு வரும். அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்! 

காபி சுவையாக இருந்தால்தான் அது காபி. அவசரத்துக்கு கலக்கித்தருவது எல்லாம் காபியாகவே இருக்காது. பில்டரில் டிகாசன் இறக்கி தயார் செய்யும்போதுதான் காபி, மணமாகவும் சுவையாகவும் இருக்கும். நாக்கில் சுவை அப்படியே தித்திப்புடன் இருந்து கொண்டே இருக்கும்.  கும்பகோணம் டிகிரி காபி பற்றி சிலாகித்து சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய எழுத்துக்களில் போகிறபோக்கில் காபி பற்றி சொல்லி சென்றிருக்கிறார். டிகிரி காபி பிரியர் அவர். ஜென் ஸிதலைமுறையினரைப் பற்றி குறிப்பிடும்போதுமால்களிலும் காபிடே போன்ற இடங்களிலும் பெரிய கோப்பைகளில் லாட்டே’, ‘கப்புசினோகாபிகளை நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிக் குடித்தாலும், அதன் சுவை என்னமோஅங்கே நாம் அழைத்துச் செல்லும் நபரைப் பொறுத்தது, என்று எழுதியிருந்ததாக படித்த நினைவு.

காலையில் காபி குடித்தால்தான் சிலருக்கு காலைக்கடன் எளிதாக இருக்கும்.  தலைவலிக்கு சூடா ஒரு காபி சாப்பிட்டால் தலைவலி போயே போயிந்தே! என்பவர்கள் அதிகம்.

 

 

சரி விஷயத்துக்கு வருவோம். இந்து ஆங்கில நாளிதழில் ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று – ‘அறிவியல் பேசும்' பகுதியில் காபி பற்றிய புத்தம்புது கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.    ( New studies pursue perfect blend for coffee and health – The Hindu நாள் – 23-08-2026 ) மதுரைக்கு சொந்தக்காரர் -  போற்றுதலுக்குரிய பிரபல விஞ்ஞானிமுதுபெரும் தகைசால் பேராசிரியர், தற்போது ஹைதராபாத் LVPEIமருத்துவமனையின், கண் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் டி.பாலா என்று அன்புடன் அழைக்கப்படும் மதிப்புமிகு பத்மஶ்ரீ டாக்டர்.டி.பாலசுப்பிரமணியன் அவர்கள் தான் கட்டுரையை எழுதியவர்கள். 

எனக்குத் தெரிந்து, தொடர்ந்து நீண்ட நாட்களாக ஒரு நாளிதழில் ‘அறிவியல் பேசும்’ – Speaking of Science  என்ற பகுதிக்கு எழுதிவருவது அவர்களாகத்தான் இருக்கும். அதுவும் தொடர்ந்து 45 ஆண்டுகளாக.   ஒவ்வொன்றும் புத்தம்புது ஆய்வுகட்டுரைகளின் அடிப்படையில். 45 ஆண்டுகளாக நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் என்பதை இப்போது நினைக்கும்போது வியப்பாகவே இருக்கிறது.

கட்டுரைக்குள் வருவோம். சில சமயம் காபி சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என்பார்கள். திடீரென நல்லது இல்லை என்று ஏதாவது ஒரு ஆய்வின் மேல் பழியைப்போடுவார்கள். அதிகமாக குடிக்காதே என்று எச்சரிக்கவும் செய்வார்கள். 

இந்த நிலையில்தான் ‘இந்து’ நாளிதழின் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. காபி பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்வையும் தருகிறது. 

‘காபின்’ ( Caffeine ) என்பது காபியில் உள்ள முக்கியக்கூறு என்பது தெரியும். இந்த ‘காபின்’ பற்றி ஆய்வு செய்த அமெரிக்க இதய சங்கம், இந்த காபின் மூலக்கூறு, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி அதிக ஆற்றலை உற்பத்தி செய்து பயன்படுத்த உடலை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். நாம்கூட சொல்வோமே. ‘அப்பாடா, ஒரு காபி குடித்த பிறகுதான் சுறுசுறுப்பே வந்தது என்று'. பலருக்கு காபி உள்ளே போய்க்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் ஒன்றும் ஓடாது.

அதுமட்டுமல்லாமல் மேலும் சில நன்மைகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது சர்க்கரைநோய், பக்கவாதம், இதய செயலிழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்களின் ஆபத்துக்களைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளார்கள்.

ஹார்வார்ட் மருத்துவப் பள்ளி, ஹார்ட்வார்ட் பொதுசுகாதாரப் பள்ளி, பிரிட்டன் மற்றும் கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், காபி அருந்துவதன் மூலம் புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய்கள் ஏற்படும் தாக்கம் குறைவதாக கண்டறிந்துள்ளார்கள்.

காபிக்கு எப்போதும் மரியாதையும் மவுசும் கொஞ்சம் அதிகம்தான். விலையும் அதிகம்தானே. ஒரு சாதாரண குடும்பத்தில் காபி எல்லாம் குடித்தால் கட்டுப்படியாகுமா? இதை சமாளிக்க ‘சிக்கரி’ உதவுகிறது. விலை காபியுடன் ஒப்பிடும்போது சல்லிசுதான்.

 

.

 

அது என்ன சிக்கரி? ‘சிகோரிஸ் இண்டிபஸ்’ என்ற ஒருவகை மூலிகைச்செடியின் வேரை வறுத்து பொடியாக்கும்போது கிடைப்பதுதான் சிக்கரி. காபியுடன் சிக்கரி கலக்கும்போது மணமும் அடர்த்தியும் கூடுதலான சுவையும் கிடைக்கும். 

சிக்கரியில் ‘இனுலின்’ என்ற பாலிசாக்கரைடு இருக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுவதாக கண்டறிந்துள்ளார்கள். 

சிக்கரி கலக்காமல் தூய காபி (  Pure 100% coffee ) குடிப்பதை விரும்புவர்களும் இருக்கிறார்கள். சிக்கரி அவர்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை அல்லது அது தேவையில்லை என்று சொல்வார்கள். 

சிக்கரி கலப்பதால், காபிக்கு கூடுதல் நறுமணத்தையும் சுவையையும் தந்தாலும், இந்த சிக்கரியால் வேறு சில நன்மைகளும் கிடைப்பதாக, மைசூர் மத்திய உணவு தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அண்மை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.  

கல்லீரலை அழற்சியில் இருந்து பாதுகாக்கவும், வயிற்றைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுவதுடன், புற்றுநோய்க்கு எதிராக போராடவும் சிக்கரி உதவுகிறது. 

சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துவதில் காபிக்கு கணிசமான பங்கு இருப்பதை தற்போதைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சிக்கரியும் சேரும்போது இன்னும் சிறப்புதான்.

ஏற்கனவே சர்க்கரைநோய் இருப்பவர்கள் காபி சாப்பிடலாமா என்றால், சாப்பிடலாம். ஆனால் இந்த நிலையில், காபி சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவு குறையுமா? என்பது குறித்த தற்போதைய சாதகமான ஆய்வுகள் எதுவும் இல்லை.

 

 

புதன், 22 ஜூலை, 2026

தடை யாருக்கு?

தடை யாருக்கு?


 

பிரான்சில், ஏற்கனவே பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை இருக்கும் நிலையில் தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி இன்றைய நாளிதழ்களில் சத்தமில்லாமல் இடம்பெற்றிருந்ததை ஒருசிலர் பார்த்திருக்கலாம். 

ஸ்வீடன், ஆஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து போன்றநாடுகளின் வரிசையில் இப்போது பிரான்சும் சேர்ந்திருக்கிறது. 

மனநலம், உடல்நலம், கல்வியில் கவனம் சிதறாமல் இருக்கவேண்டி, சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடுகளும், இதுபோன்ற தடைகளும் தேவைப்படுகின்றன. 

பிரான்சில் விதித்துள்ள தடையினை பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். மதுப்பழக்கத்தில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டி இருக்கிறதோ அதுபோன்று குழந்தைகளை காக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனராம். 

இந்த செய்தியினை படித்தபோது அண்மையில் சென்னையில் இருந்து மதுரைக்கு பகல்நேர ரயிலில் வந்தபோது பார்த்த காட்சிகள்தான் நினைவிற்கு வந்துபோயின.

முன் இருக்கையில் இருந்த குழந்தைக்கு மூன்று வயதுதான். அம்மாவிடம் என்னமோ கேட்டது. அம்மாவின் மடியில் இன்னொரு கைக்குழந்தையும் தூக்கத்தில் இருந்தது. ஒரு குழந்தையையே இப்போதெல்லாம் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இரண்டு குழந்தைகளைப் பொறுத்தவரையில் திண்டாட்டம்தான். அதுவும் ஓடும் ரயிலில்,  நீண்ட தூரப் பயணத்தில்.

அம்மா கையிலோ செல்போன். ஏதோ வாழ்க்கை, இன்றைக்கே முடிந்துவிடுவதுபோல் அந்த காணொலியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கேள்வி கேட்ட குழந்தையை கோபமாக முறைத்துவிட்டு செல்லில் மீண்டும் கவனம் செலுத்தினார். 

அம்மா சொல்லும்மா’ . மீண்டும் கேட்டதற்கு, ‘சும்மா கொஞ்ச நேரம் இருக்கிறாயா’ என்று சத்தமாக அதட்டினார்.  கொஞ்ச நேரம் நிம்மதியா செல்லைப் பார்க்க விடுதுகளா?’ என்ற முனுமுனுப்பு வேறு. 

கொஞ்சநேரம் கூட ஆகவில்லை. பின்னால் இருந்து ‘வீல்’, ‘வீல்’ என்ற அழுகை சத்தம். என்னவென்று மெதுவாக கவனிக்கத் தொடங்கினேன்.

செல்லெல்லாம் தரமுடியாது. வேடிக்கை பார். இந்தா புத்தகம். பேசாம படம் பாரு. எல்லாரும் அமைதியா உட்கார்ந்திருக்காங்க. அழுது  ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த குழந்தையிடம்கோபமாக கத்திவிட்டு அம்மா, செல்லில் முழ்க ஆரம்பித்துவிட்டார். சரிதான்.

இதே அம்மாக்கள்தான் பிள்ளைகளின் அழுகையை நிறுத்த, சாப்பிட வைக்க என்று பிள்ளைகளிடம் செல்போனைக் காண்பிக்கிறார்கள். முதலில் செல்போனைக் கேட்டது குழந்தைகளா 

பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்?

அதுசரி. கட்டுப்பாடு முதலில் தேவை யாருக்கு?  

 

 

திங்கள், 11 மே, 2026

மக்னீசியம்

                                                          

 

 

மருத்துவரான என் இளைய மகளின் உணவுப்பழக்கத்தை பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவர் அதைப்பற்றி சொல்லும்போதெல்லாம் அவ்வளவாக கவனிப்பதுமில்லை. அலட்சியமா என்றால் இல்லை. நாட்டம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.  அது குறித்த தகவல் முழுமையாக தெரியாததால் இருக்கலாம். ஆனாலும் அடிக்கடி அவர், இதெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.

சென்ற வாரம் ‘டைம்ஸ் ஆப் இந்தியாவில்’ கண்ணில்பட்ட ஒரு செய்தி முழுமையாகப் படிக்கத் தூண்டியது. அது உடலுக்கு அதிக பயன் தரக்கூடிய மக்னீசியம் பற்றியது. 

மக்னீசியம் அதிகமுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் ஏற்கனவே என் மகள் சொன்னதுதான் என்பதை நினைத்தபோது, ரொம்பவும் அவரை அலட்சியப்படுத்திவிட்டோமோ என்று சிந்திக்க வைத்துவிட்டது. ஒருவேளை அவர் சாப்பிடச்சொல்லி பரிந்துரைக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் இதுவரை கேள்விப்பட்டிராததாகவே  இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

அவர் சாப்பிடச் சொல்லி பரிந்துரைத்த ஒன்று சியா விதை. Chia seeds என்றால்தான் கடைக்காரர்களுக்குத் தெரிகிறது. இதில் மக்னீசியம் அதிகமாக இருக்கிறது. 

சரி, இந்த மக்னீசியம் அப்படி என்ன உசத்தியாம்?

மத்திய நரம்பு மண்டலத்தை சீர்படுத்திமனதை அமைதிப்படுத்தி நன்றாகத் தூங்குவதற்கு இது பெரிதும் துணைபுரிகிறதாம். உடலின் மக்னீசியத்தில் சுமார் 60 விழுக்காடு உடலின் எலும்புக்கூட்டில் இருக்கிறது. எலும்பின் ஆரோக்கியத்திலும் மக்னீசியம் ஆதிக்கம் செலுத்துகிறது.

இரத்த சர்க்கரைஅளவைக் கட்டுப்படுத்துவதிலும்கூட முக்கியப்பங்கு வகிக்கிறது.

உடலில் மக்னீசியம் அளவு குறையும்போதுஇதய பிரச்சினைகள்இன்சுலின் எதிர்ப்பு மற்றும்உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

சியாவிதையில்மக்னீசியத்துடன்புரதம்ஒமேகா-3 கொழுப்பு அமிலத்துடன் நார்ச்சத்தும் இருப்பது கூடுதல் செய்தி. செரிமானத்தை சீராக்குவதிலும்இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன,

மக்னீசியம் சியா விதைத் தவிரபூசணி விதைபாதாம்பருப்புவேகவைத்த கீரைவறுத்த முந்திரிவறுத்த நிலக்கடலைசமைத்த கறுப்பு காராமணி போன்றவற்றிலும் அதிக அளவில் இருப்பது கூடுதல் செய்தி.

 

 

.

 

 

சனி, 25 ஏப்ரல், 2026

நம் குழந்தைகள்

                         

 

புதூர் உத்தமனூர். திருச்சிராப்பள்ளியில் சமயபுரத்துக்கும், லால்குடிக்கும் இடையில் உள்ள கிராமம். என்னுடைய முதல் பணி அந்த ஊர் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு குக்கிராமம்தான். மருத்துவமனை தவிர வேறு கடைகள் எதுவும் கிடையாது.  ஆள் அரவமில்லாத காடு என்றுதான் சொல்லவேண்டும். 300 மீட்டர் தள்ளிதான் வீடுகளையேப் பார்க்க முடியும். தள்ளிதான் ஊரே. 200 க்குள் தான் வீடுகளே இருக்கும்.

 

ஆரோக்கியமான இயற்கை சூழல். மரங்கள் சுற்றி இருக்க மையமாய் மருத்துவமனை. சுற்றிலும் வயல்வெளி. மருத்துவமனை முன்பாக காவிரி ஆறு புள்ளம்பாடி வாய்க்காலாக. ​​சூழல் பிடித்துப்போகாமல் இருக்குமா? காலியாக இருந்த மருத்துவமனை குடியிருப்பு ஒன்றிலேயே தங்கிவிட்டேன். மொத்தம் இருந்த 10 குடியிருப்புக்களில் ஆறில் பணியாளர்கள் இருந்தார்கள். இத்தனைக்கும் ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள்தான். காலை, மதியம் பிறகு இரவு. காலை 5 மணிக்குமேல்தான் ஊரிலிருந்து வெளியே போக முடியும். இரவு 9 மணிக்கு இறுதி பேருந்து, ஊருக்குள் வருவதற்கு. அதற்குப்பின் ஊரைவிட்டு வெளியே செல்ல முடியாது.

 

என்னை வளர்த்து எனக்கு ஒரு வடிவத்தைத் தந்தது அந்த ஊர்தான். சுறுசுறுப்பாய் அந்த காட்டுக்குள் இருந்து பயணப்பட வைத்ததும் அந்த காவிரித்தண்ணீர் தான்.

 

தங்கியிருந்த பெரும்பாலான பணியாளர்கள் தங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது.  

 

அந்த நாட்களில்நான் லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அதற்கு எங்கள் சுகாதார மையத்தில் இருந்த அழகிய போட்டோபோன் தானியங்கி ஸ்லைடு புரொஜெக்டர் எனக்கு கைகொடுத்தது. அற்புதமான கருவி அது. சுகாதாரக் கல்வி நடவடிக்கைகளுக்காக நான் அந்தப் புரொஜெக்டரைப் பயன்படுத்திக் கொண்டேன். கணினிபவர் பாயிண்ட் என்று பார்த்த இந்த தலைமுறையினருக்கு அதெல்லாம் வியப்பாகத்தான் இருக்கும்.

 

வார இறுதி நாட்களில் நான் அருகிலுள்ள கிராமங்களில் பேசுவதற்கு போகும்போதெல்லாம் குடியிருப்புகளில் இருந்த சிறுவர்களும் என்னுடன் வருவார்கள். அவர்களுடைய உதவி எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

                            

 

வித்தியாசமாய் இருந்த இந்நிகழ்வுகள் அவர்களை வெகுவாக கவர்ந்தன. விரும்பி தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பின்னர் ஒரு நாள் இந்தக் குழந்தைகளுக்காக என்று பிரத்தியேகமாக ஒரு சுகாதாரக் கல்வி நிகழ்ச்சியை சுகாதாரக் குடியிருப்பு வளாகத்திலேயே நடத்தினேன். 

 

சமச்சீர் உணவின் முக்கியத்துவம் கீரை வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் நாம் வழக்கமாக சாப்பாட்டிலிருந்து சக்கை எனத்தூக்கி எறியும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளின் முக்கியத்துவம் சாப்பிடுமுன் கை கழுவுவதன் அவசியம் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்கள் என்று  படக்காட்சியுடன் அவர்களிடம் பேசியது அவர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்காக தேடித்தேடி வரவழைத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லைடுகளை பயன்படுத்தினேன். சில ஸ்லைடுகளை நானே வடிவமைத்தேன். அது அவர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

 

சில நாட்களுக்குப் பிறகுநான் வியக்கும் வகையில்எனது சக பணியாளர்களில் சிலர் என்னிடம்,  'நீங்கள் என்ன செய்தீர்கள்ஏதேனும் மாயாஜாலம் செய்துவிட்டீர்களா என்ன?' என்று கேட்டு வியந்தார்கள். படக்காட்சிகள் அந்தக் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார்கள். 

 

நான் குழந்தைகளிடம் சொன்ன செய்திகளை மனதில் நிறுத்தி, சாப்பிடும்போது அதிக காய்கறிகளையும் கீரைகளையும் கொடுக்குமாறு குழந்தைகள் வீட்டில் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்களாம். வீட்டில் மற்றவர்களிடமும் கருவேப்பிலையை தூக்கி எறிய வேண்டாம் என்று வேறு சொன்னார்களாம். அட!

 

புரியும்படி சொன்னால் கேட்கக் கூடியவர்கள்தானே நம் பிள்ளைகள்!!

 

புதன், 25 மார்ச், 2026

கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

      கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

          

                

 

முதல்நாள் இரவு வரை இராசேந்திரனுக்கு, பார்வை நன்றாகத்தான் இருந்தது. மறுநாள் காலை குளித்துவிட்டு பால்கனிக்கு வந்து வானத்தைப் பார்த்தபோது, கண் அதிக ஒளியுடன் கூசுவதுபோல் இருந்தது. பிரகாசமாகவும் தெரிந்தது. அத்துடன் கண்ணுக்கு முன்னால் பூச்சி பறப்பதுபோல் ( Floaters )  இருந்தது. கண்ணை அசைத்தால் அதுவும் வேகவேகமாக அசைவதுபோல் தெரிந்தது. உண்மையிலேயே பூச்சிதானா என்று பார்த்தார். ஆனால் பூச்சியைக் காணவில்லை. கண்ணைத் தேய்த்துப்பார்த்தும் பார்த்தார். பயனில்லை. அப்படியேதான் இருந்தது.

கண்ணாடி போட்டிருந்ததால் கண்ணாடிபோட்டும் பார்த்தார். கண்ணாடியில்லாமலும் பார்த்தார். பூச்சி பறப்பது அப்படியேதான் இருந்தது.

இத்தனைக்கும் குடிப்பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோகூட கிடையாது. முந்தினநாள் இரவு நன்றாகத்தான் தூங்கி எழுந்தார். கண்ணை நன்றாக கழுவி விட்டும் பார்த்தார். பூச்சி பறப்பதில் மாற்றம் இல்லை.

சென்ற மாதம் பார்த்த இரத்த அழுத்தம்சர்க்கரைநோய்க்கான சோதனை எல்லாம் இயல்புக்குள்தான் இருந்தன. உடலில் வேறு எந்த பிரச்சினையும் கிடையாது. கொஞ்சம் பயந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மருத்துவமனையில்கண்மருத்துவர் விரிவாக சோதித்துவிட்டு பயப்படத்தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். வயதாகும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைதான் என்றாலும், அது ஏன் ஏற்படுகிறது? பயப்படத் தேவையில்லையாஎப்போது கவனம் தேவைஎன்பது பற்றி பார்க்கலாம்.

 

அது என்ன பூச்சி பறப்பது?

 

கண்ணில் இரண்டு வகையான திரவங்கள் இருப்பதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். கண்ணில்விழிலென்சுக்கு முன்புறம் இருக்கும் முன்கண்திரவம் ( Aqueous humour) மற்றும் பின்புறம் இருக்கும் பின்கண்திரவம் ( Vitreous humour )இதில் முன்கண்திரவம் திரவ வடிவில் இருக்கும். 

இந்த பின்கண்திரவம் (விட்ரியெஸ்)மூக்குச் சளி போல ஜெல்லி வடிவில் இருக்கும். கண்ணின் விழிக்கோளத்தை நிரப்பி கண்ணைக் கோளவடிவில் நிலைநிறுத்த உதவுகிறது. நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு, தன் வழியே செல்லும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு செல்வதை உறுதி செய்கிறது. அதோடு கண்ணில் அடிபடும்போது அதிர்ச்சி தாங்கியாகவும் ( Shock Absorber ) செயல்படுகிறது.

ஜெல்லி மாதிரி இருக்கும் இந்த விட்ரியெஸ் கண்ணாடி போன்று தெளிவானது. இது 99 விழுக்காடு நீராலும் மீதி கொலாஜன் நார்களாலும் ஆனது. இளவயதில் அடர்த்தியாக இருக்கும் இந்த விட்ரியெஸ் ஜெல்லிவயதாகும்போது நீர்த்துப்போய் கொலாஜன் நார்கள் ஒன்று சேர்ந்து சுருங்கி மெல்லிய இழைகளாகவோ, சிறு துகள்களாகவோ மாறலாம். இவைதான் விழித்திரையில் நிழல்களாக விழும். வெளியில் நாம் பார்க்கும்போது பார்வையில் பூச்சி மிதப்பதுபோல் தெரியும்.

                                        

 

                     

கண்ணுக்கு முன்னால் வெளிறிய சாம்பல் அல்லது கருப்பு நிறப்புள்ளிகளாகவோ வெளிப்படையான (Transparent) இழைகள் போன்றோ தெரியலாம். சதுரங்கள் போன்றோவளையங்களாகவோ உருவமற்ற மேகங்கள் போன்றோ பார்ப்பதற்கு இருக்கும். பொதுவாக வெளிச்சமான பரப்பில் வானவெளியில் பார்க்கும்போது இந்த மிதவைகள் தெளிவாகத் தெரியும். கண்ணை அசைத்தால் மிதவைகளும் வேகமாக அசையும். 

 

யாருக்கு ஏற்படலாம்?

·       வயதாவதால்

·       உயர் கிட்டப்பார்வைகுறைபாடு ( High Myopia ) உள்ளவர்களுக்கு

·       கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு

·       சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு

·       கண்ணில் காயம் ஏற்படும்போது

 

எப்போது கவனம் தேவை?:

 

பொதுவாக வயதாகும்போது ஏற்படக்கூடியதுதான். பயப்படத் தேவையில்லை. ஆனால் பூச்சி பறப்பதில் புள்ளிகள் திடீரென ஒரேயடியாக அதிகரித்தால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிலசமயங்களில் விட்ரியெஸ் ஜெல்லி சுருங்கும்போது பின்புறத்தில் விட்ரியெஸ் விழித்திரையில் இருந்து, பிரிந்து விடுபடலாம். (Post Vitreous Detachment) பல சமயங்களில் இதனால் பிரச்சினை எதுவும் இருக்காது. 

இந்த மிதவையுடன் கண்ணில் மின்னல் போன்று ஒளி தெரிந்தால் அதிக கவனமாக இருக்க வேண்டும். விட்ரியெஸ் பின்புறத்தில் இருந்து பிரியும்போது விழித்திரையினை இழுத்து அதனால்  விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரியலாம்  (Retinal Detachment) இதுபோன்ற நிலை சற்று சிக்கலானது. பார்வையை கடுமையாக பாதிக்கக்கூடியது. அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். இது ஒரு சிக்கலான சிகிச்சையும்கூட. 

பக்கப்பார்வையில் நிழல்போன்று தெரிந்தாலும்பார்வையில் திரைபோன்று பார்வை மறைத்தாலும்பூச்சி பறப்பது அதிகரித்தாலும்மின்னல் போன்று வெளிச்சம் தெரிந்தாலும் உடனே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாக கண்ணில் ஏற்படும் எந்த ஒரு சிறு மாற்றத்தினையும் அலட்சியம் செய்யாமல் அறிகுறிகள் தெரிந்தவுடன் தொடக்க நிலையிலேயே கண்மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பார்வைபிரச்சினை அதிகமாகாமல் தடுத்து பார்வையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

                                  ---X---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை