புதன், 25 மார்ச், 2026

கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

      கண்ணுக்கு முன்னால் பூச்சி பறக்கிறதா?

          

                

 

முதல்நாள் இரவு வரை இராசேந்திரனுக்கு, பார்வை நன்றாகத்தான் இருந்தது. மறுநாள் காலை குளித்துவிட்டு பால்கனிக்கு வந்து வானத்தைப் பார்த்தபோது, கண் அதிக ஒளியுடன் கூசுவதுபோல் இருந்தது. பிரகாசமாகவும் தெரிந்தது. அத்துடன் கண்ணுக்கு முன்னால் பூச்சி பறப்பதுபோல் ( Floaters )  இருந்தது. கண்ணை அசைத்தால் அதுவும் வேகவேகமாக அசைவதுபோல் தெரிந்தது. உண்மையிலேயே பூச்சிதானா என்று பார்த்தார். ஆனால் பூச்சியைக் காணவில்லை. கண்ணைத் தேய்த்துப்பார்த்தும் பார்த்தார். பயனில்லை. அப்படியேதான் இருந்தது.

கண்ணாடி போட்டிருந்ததால் கண்ணாடிபோட்டும் பார்த்தார். கண்ணாடியில்லாமலும் பார்த்தார். பூச்சி பறப்பது அப்படியேதான் இருந்தது.

இத்தனைக்கும் குடிப்பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோகூட கிடையாது. முந்தினநாள் இரவு நன்றாகத்தான் தூங்கி எழுந்தார். கண்ணை நன்றாக கழுவி விட்டும் பார்த்தார். பூச்சி பறப்பதில் மாற்றம் இல்லை.

சென்ற மாதம் பார்த்த இரத்த அழுத்தம்சர்க்கரைநோய்க்கான சோதனை எல்லாம் இயல்புக்குள்தான் இருந்தன. உடலில் வேறு எந்த பிரச்சினையும் கிடையாது. கொஞ்சம் பயந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மருத்துவமனையில்கண்மருத்துவர் விரிவாக சோதித்துவிட்டு பயப்படத்தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். வயதாகும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைதான் என்றாலும், அது ஏன் ஏற்படுகிறது? பயப்படத் தேவையில்லையாஎப்போது கவனம் தேவைஎன்பது பற்றி பார்க்கலாம்.

 

அது என்ன பூச்சி பறப்பது?

 

கண்ணில் இரண்டு வகையான திரவங்கள் இருப்பதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். கண்ணில்விழிலென்சுக்கு முன்புறம் இருக்கும் முன்கண்திரவம் ( Aqueous humour) மற்றும் பின்புறம் இருக்கும் பின்கண்திரவம் ( Vitreous humour )இதில் முன்கண்திரவம் திரவ வடிவில் இருக்கும். 

இந்த பின்கண்திரவம் (விட்ரியெஸ்)மூக்குச் சளி போல ஜெல்லி வடிவில் இருக்கும். கண்ணின் விழிக்கோளத்தை நிரப்பி கண்ணைக் கோளவடிவில் நிலைநிறுத்த உதவுகிறது. நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு, தன் வழியே செல்லும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு செல்வதை உறுதி செய்கிறது. அதோடு கண்ணில் அடிபடும்போது அதிர்ச்சி தாங்கியாகவும் ( Shock Absorber ) செயல்படுகிறது.

ஜெல்லி மாதிரி இருக்கும் இந்த விட்ரியெஸ் கண்ணாடி போன்று தெளிவானது. இது 99 விழுக்காடு நீராலும் மீதி கொலாஜன் நார்களாலும் ஆனது. இளவயதில் அடர்த்தியாக இருக்கும் இந்த விட்ரியெஸ் ஜெல்லிவயதாகும்போது நீர்த்துப்போய் கொலாஜன் நார்கள் ஒன்று சேர்ந்து சுருங்கி மெல்லிய இழைகளாகவோ, சிறு துகள்களாகவோ மாறலாம். இவைதான் விழித்திரையில் நிழல்களாக விழும். வெளியில் நாம் பார்க்கும்போது பார்வையில் பூச்சி மிதப்பதுபோல் தெரியும்.

                                        

 

                     

கண்ணுக்கு முன்னால் வெளிறிய சாம்பல் அல்லது கருப்பு நிறப்புள்ளிகளாகவோ வெளிப்படையான (Transparent) இழைகள் போன்றோ தெரியலாம். சதுரங்கள் போன்றோவளையங்களாகவோ உருவமற்ற மேகங்கள் போன்றோ பார்ப்பதற்கு இருக்கும். பொதுவாக வெளிச்சமான பரப்பில் வானவெளியில் பார்க்கும்போது இந்த மிதவைகள் தெளிவாகத் தெரியும். கண்ணை அசைத்தால் மிதவைகளும் வேகமாக அசையும். 

 

யாருக்கு ஏற்படலாம்?

·       வயதாவதால்

·       உயர் கிட்டப்பார்வைகுறைபாடு ( High Myopia ) உள்ளவர்களுக்கு

·       கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு

·       சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு

·       கண்ணில் காயம் ஏற்படும்போது

 

எப்போது கவனம் தேவை?:

 

பொதுவாக வயதாகும்போது ஏற்படக்கூடியதுதான். பயப்படத் தேவையில்லை. ஆனால் பூச்சி பறப்பதில் புள்ளிகள் திடீரென ஒரேயடியாக அதிகரித்தால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிலசமயங்களில் விட்ரியெஸ் ஜெல்லி சுருங்கும்போது பின்புறத்தில் விட்ரியெஸ் விழித்திரையில் இருந்து, பிரிந்து விடுபடலாம். (Post Vitreous Detachment) பல சமயங்களில் இதனால் பிரச்சினை எதுவும் இருக்காது. 

இந்த மிதவையுடன் கண்ணில் மின்னல் போன்று ஒளி தெரிந்தால் அதிக கவனமாக இருக்க வேண்டும். விட்ரியெஸ் பின்புறத்தில் இருந்து பிரியும்போது விழித்திரையினை இழுத்து அதனால்  விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரியலாம்  (Retinal Detachment) இதுபோன்ற நிலை சற்று சிக்கலானது. பார்வையை கடுமையாக பாதிக்கக்கூடியது. அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். இது ஒரு சிக்கலான சிகிச்சையும்கூட. 

பக்கப்பார்வையில் நிழல்போன்று தெரிந்தாலும்பார்வையில் திரைபோன்று பார்வை மறைத்தாலும்பூச்சி பறப்பது அதிகரித்தாலும்மின்னல் போன்று வெளிச்சம் தெரிந்தாலும் உடனே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாக கண்ணில் ஏற்படும் எந்த ஒரு சிறு மாற்றத்தினையும் அலட்சியம் செய்யாமல் அறிகுறிகள் தெரிந்தவுடன் தொடக்க நிலையிலேயே கண்மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பார்வைபிரச்சினை அதிகமாகாமல் தடுத்து பார்வையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

                                  ---X---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை

சனி, 14 மார்ச், 2026

உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்

                                  மறைந்திருந்து தாக்கும் மர்மம்.

                  உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம் ( மார்ச்சு 8 - 14 )  

நிறைவுநாள் கட்டுரை    

                        A person using a pair of scissors to trim an old person's head

AI-generated content may be incorrect.          

 

விலை உயர்ந்த கண்ணாடி அவருடையது. கண்ணாடிக்கடையில் நவீன கணினித் தொழிற்நுட்பத்தில் முகத்திற்கேற்ற பிரேமை வாங்கியதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. 

வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கான கண்ணாடி அது. அவருடைய நண்பரின் கண்ணாடியை வாங்கி போட்டு பார்த்ததில் நன்றாக தெரிந்ததால் அவருடைய ஆலோசனையின்பேரில் நேரடியாகக் கண்ணாடிக்கடையில் வாங்கினார். நண்பர் கைதேர்ந்த கண்மருத்துவர்போல் அவருடைய வயதுக்குரிய லென்சுபவரைச் சொல்லி வாங்கச் சொன்னார். 

கண் மருத்துவமனைக்கு சென்றால் கண்ணில் மருந்துபோட்டு உட்காரவைத்துவிடுவார்கள். தேவையில்லாத சோதனைகள் செய்து அலைக்கழிப்பார்கள். ஒருமுழுநாள் முழுவதும் வீணாகிவிடும் என்ற கவலை இருந்தது. ஆனால் இப்போது பிரச்சினையே இல்லை. மருத்துவமனைக்கே போகாமல் எளிதில் கண்ணாடியை வாங்கியதில் திருப்தி அவருக்கு

ஒருமுறை அவர் வேலை பார்த்த ஐ.டி. நிறுவனத்தில், பணியாளர்களுக்காக நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் வழக்கமான சோதனையின்போது அவருடைய கண்நீர் அழுத்தம், இயல்பான அளவைவிட சற்று அதிகரித்திருந்தது தெரிந்தது.

மேற்கொண்டு விரிவான சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். மருத்துவமனையில் அவருடைய கண்ணில்,அழுத்தம் உயர்ந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதோடு கண்ணில் பார்வை நரம்புகளில் ( Optic Nerve ) கணிசமான பாதிப்பும் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதன் காரணமாக பார்வையும் சிறிதளவு பாதிக்கப்படிருந்தது. 

இதற்கு முன்பு, கண்ணாடி சோதனை செய்த மருத்துவமனையில் உங்களுக்கு அழுத்தம் இருப்பது பற்றி சொல்லவில்லையா? என்று மருத்துவர் கேட்டார்.  மருத்துவமனைக்கு சென்று சோதித்து கண்ணாடி போட்டிருந்தால்தானே அவரால் பதில் சொல்ல முடியும்?

 

அதென்ன கண்நீர் அழுத்தம் ?

 

நம் உடம்பில் இருக்கும் இரத்த அழுத்தம் ( Blood Pressure நமக்குத் தெரிந்ததுதான்.   இரத்த அழுத்தம் 120/80 மி,மீ / பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால்  பி.பி.கூடிருச்சு என்கிறார்கள். அதாவது உயர் இரத்த அழுத்தம் . இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10 - 20 க்குள் இருந்தால் அது இயல்பான அழுத்தம்.

உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கண்நீர் அழுத்த உயர்வு ( கிளாக்கோமா ). 

இந்தக் கண்நீர் அழுத்த உயர்வில், மற்ற நோய்களைப் போல் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படுவது கிடையாது. அதனால் தொடக்க நிலையில் கண்டறிவதற்கான வாய்ப்பு குறைவுதான். நோய்த்தாக்கி அழுத்த உயர்வால் பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை உணரத் தொடங்குவார். அதற்குள் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டிருக்கும். 

உடம்பில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதே தெரியாமல் இன்னும் சிலர் இருக்கும்போது கண்ணில் இருக்கும் அழுத்தம் பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.

 

வருமுன் காப்போம்

 

வழக்கமாக எப்படி 40 வயதை நெருங்கும்போது உடலில் இரத்த அழுத்தம்சர்க்கரை அளவினை சோதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோமோ அதைப்போன்று இந்த வயதில் கண்ணில் பிரச்சினை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்மருத்துவமனைக்குச் சென்று பார்வையினையும்அழுத்தத்தினையும் கட்டாயம் சோதித்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் பார்வைபரிசோதனைகண்நீர் அழுத்த சோதனையுடன் கண்ணில் மருந்து போட்டு பார்வை நரம்பு பரிசோதனையையும் செய்து கண்நீர் அழுத்த உயர்வுக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று கண்மருத்துவர் பார்ப்பார். 

இதன் மூலம் ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால், தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

கண்நீர் அழுத்தம் உயரும் முன் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் கண்ணுக்குள் கண்ணாமூச்சிக் காட்டும். இதனால்தான் இதை சத்தமில்லாமல் பார்வையைப் பறிக்கும் திருடன் என்று சொல்கிறார்கள். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்ட பிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது. 

அதை  விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால், செடி நாளடைவில் பட்டுப்போய்விடும். அதன் பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியாதல்லவா!

அதைப்போன்றுதான் கண்நீர் அழுத்த உயர்வும் கண்ணில் அழுத்தம் அதிகரித்தது, கண்டறியப்படாமல் - தொடக்கநிலையில் சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்றால் அழுத்த உயர்வால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். இது ஒரு நிரந்தரமான பார்வையிழப்பு. மீண்டும் அதை சரி செய்ய முடியாது. எப்படிப் பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியாதோ, அதைப் போன்று பாதித்த பார்வைநரம்புகளை சரிசெய்யவும் முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை மட்டுமே காப்பாற்றலாம்.

அந்த ஐ.டி பணியாளர் போல கண்ணாடிக்கடைக்கு நேரிடையாகச் சென்று கண்ணாடி வாங்கினால் கண்ணில் அழுத்த சோதனை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். ஒருவேளை அழுத்த உயர்வு இருந்தால் தொடக்க நிலையில் கண்டுபிடித்து பார்வையைக் காக்க வாய்ப்பு கிடைக்கும்.

 

விழித்துக்கொள்வோம்

 

உரிய நேரத்தில் சிகிச்சை செய்துகொள்ளாதபோது அழுத்தம் உயர்ந்து, நாளடைவில் பார்வை பாதித்து, பக்கப்பார்வையும் வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணின் இரு புறமும் ( சைடு பார்வை ) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும். நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ  செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பொருட்களைப் முழுமையாகப் பார்க்க முடியும். 

ஆனால் கடுமையான பாதிப்பில் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதோ, இலையில் இருக்கும் உணவுப்பொருட்கள் முழுமையாகவோ தெரியாது. சில சமயங்களில் குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை வெகுவாக குறைந்து விடலாம்.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கண்நீர் அழுத்த உயர்வு இருக்கிறது. பார்வையைக் காக்க தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள். தொடர் சிகிச்சையும், தொடர் கவனிப்பும் பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும். பயப்படத்தேவையில்லை.

கண்நீர் அழுத்த உயர்வினைப் பொறுத்தவரையில் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சொட்டுமருந்தினை வாழ்நாள் முழுவதும்  கண்ணில் போட வேண்டி இருக்கும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை என்பதால் பலரும் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பாதிப்பு அதிகமாகி கடுமையான பார்வை பாதிப்பிற்கு வழிவகுத்து விடுகிறது. 

எனவே எக்காரணம் கொண்டும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது. கண்நீர் அழுத்த உயர்வினால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்பது, ஈடு செய்ய முடியாத நிரந்தர பாதிப்பு என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சையை, மருத்துவர் அறிவுரைப்படி தொடர வேண்டும்.

                                  -------

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு) 

மதுரை

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

கம்பியூட்டரோடு தலைவலியா

                         கம்பியூட்டரோடு தலைவலியா?

    

அது ஒரு மோசமான வானொலி விளம்பரம். ‘காலையில் இருந்து கம்பியூட்டரைப் பார்த்து பார்த்து ஒரே தலைவலி’ என்று ஒருவர் சொல்ல அதற்கு அவருடைய நண்பர் குறிப்பிட்ட ஒரு கண்மருத்துவமனைக்குப் போய் கண்ணை சோதித்து  கண்ணாடி போட்டுக்கொள்ளச் சொல்கிறார். அப்படிச் செய்தால் தலைவலி சரியாகிவிடுமாம். இதைவிட மோசமான விளம்பரம் எதுவும் இருக்க முடியாது. 

கண்மருத்துவமனைக்கு கூட்டம் சேர்ப்பதற்கான விளம்பரம் அது. அப்படி அந்த விளம்பரத்தில் என்ன பிரச்சினை? பார்க்கலாம்.

அவரவர் செய்யும், வேலையின் தன்மைக்கு ஏற்ப சிலவகை பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. நின்று கொண்டே வேலை செய்பவர்கள், வெப்பமான சூழலில் வேலை செய்பவர்கள், பட்டாசு தயாரிப்பு போன்று வேதிப்பொருட்களை கையாள்பவர்கள்பஞ்சாலையில் வேலை செய்பவர்கள்  என்று ஒவ்வொருவருக்கும் அவரவர்  பணிசார்ந்து  தனிப்பட்ட பிரச்சினைகள் உண்டு.  கம்பியூட்டரில் வேலை செய்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களுக்கும் பல விதமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

கம்பியூட்டரில் வேலை செய்பவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி என்னவென்றால், இப்பிரச்சினைகளை புரிந்துகொண்டால் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதுதான். பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். 

 

கம்பியூட்டரால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்

 

கழுத்துவலி

 

அருணாவுக்கு எந்நேரமும் கம்பியூட்டரில்தான் வேலை. வேலை என்றால் கடுமையான வேலை. எந்நேரமும் லாப்டாப்பும் கையுமாகத்தான் இருப்பார். அவருடைய பணிப்பொறுப்பு அப்படி. எந்நேரம் சாப்பிடுகிறார், தூங்கி எழுந்திருக்கிறார் என்பதே தெரியாது. சில நாட்களாகவே கழுத்தில் கடுமையான வலி. திடீரென இரண்டு நாட்களாக லேசான தலைசுற்றல். மருத்துவர் பார்த்துவிட்டு, ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் ஓய்வின்றி தொடர்ந்து கம்பியூட்டரில் வேலை செய்வதால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துவிட்டார்.

 

கண்ணில் பிரச்சினை

 

சுந்தருக்கு, வரவர பார்வை மங்கலாகத் தெரிவதுபோல் இருந்தது. சிலசமயம் கண்எரிச்சல், கண்கூச்சம், சிகப்பு வேறு. வேலையில் ஈடுபாடே இல்லை. அதோடு தலைவலி வேறு. பாராசிட்டமால் போட்டும் பார்த்துவிட்டார். சரியாகவில்லை. லாப்டாப்பைத் திறந்தவுடனேயே மூடிவைத்துவிட வேண்டும் என்ற நினைப்புதான் வந்தது. 

இதேபோல வங்கியில் பணிபுரியும் அந்த அதிகாரிக்கும் சில நாட்களாகவே கம்பியூட்டரைப் பார்க்க முடியவில்லை. மானிட்டர் மங்கலாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. கண்ணில் ஒருவித அசெளகரியம் வேறு. விடுப்பு போட்டு வீட்டில் நன்றாக தூங்கியும் பார்த்துவிட்டார். தூங்கி எழுந்த பிறகும் பார்வை மங்கலாகத்தான் இருந்தது. ஒன்றும் சரியாகவில்லை. இவையெல்லாமே ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்தான். கம்பியூட்டரில் வேலைசெய்யும் பலரும் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தாம் இவை. மணிக்கணக்கில் தொடர்ந்து கம்பியூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வதால்தான்  இதுபோன்ற பிரச்சினைகள்.

 

கம்பியூட்டர் பார்வை சிக்கல்

 

சிந்தித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் வேலை பார்ப்பவர்கள், நாள் முழுவதும் அதனுடன் மல்லுக்கட்டித்தான் ஆக வேண்டும். அவர்களுடைய வேலை, அந்த கம்பியூட்டருடன் சுருங்கிவிட்டது.  

பிற வேலை செய்பவர்களுக்கும் கம்பியூட்டரில் வேலை செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. பிற வேலை செய்பவர்கள் வேலை செய்யும்போது position- ஐ மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கம்பியூட்டரில் வேலை செய்பவர்கள் நிலை அப்படி கிடையாது. கம்பியூட்டரை ஒருஅடி தொலைவிலேயே தொடர்ந்து பார்க்கவேண்டிய கட்டாயம்.

பொதுவாக நாம் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 16 முதல் 20 தடவை கண்களை சிமிட்டுகிறோம். அதாவது இமைக்கிறோம். கண்கள் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு இந்த கண் இமைத்தல் மிக அவசியமாகிறது. ஆனால் நாம் கம்பியூட்டரில் வேலை செய்யும்போது - வேலையில் ஒன்றிப்போய் மானிட்டரையே வைத்த கண் வாங்காமல் பார்த்து வேலை செய்யும்போது இந்த கண் இமைத்தல்- சிமிட்டல் 4 ஆக குறைந்துபோய்விடுகிறது. இதனால் கண் விரைவில் உலர்ந்துபோய்விடுகிறது.

கம்பியூட்டரை தொடர்ந்து பார்க்கும்போது நம் கண்ணின்- விழிக்கோளங்களின் இயக்கங்களும், குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிப் போய்விடுகிறது. மானிட்டரை பக்கத்திலேயே எந்தவித மாற்றமின்றி தொடர்ந்து பார்ப்பதால், கண் விரைவில் களைத்தும் போய்விடுகிறது. இதனால் கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், கண் சிகப்பு, கண்ணில் வலி, அசௌகரியம், பார்வை மங்கல், தலைவலி, வேலையில் ஆர்வமின்மை போன்ற பல துயரங்கள் ஏற்படுகின்றன. 

 

அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சமாளிப்பது?

 

முன்னரே சொன்னதுபோல் இந்தப் பிரச்சினைகளுக்கு மருத்துவமே தேவையில்லை. பிரச்சினையை புரிந்துகொண்டாலே போதும். பணிபுரியும் இடத்தில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்வதன் மூலம் பாதிப்பினைத் தவிர்க்கலாம். உட்காரும் நாற்காலியிலிருந்து கம்பியூட்டர் மேஜை அமைப்பு, விளக்கு உட்பட ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்காராதபோது கழுத்துவலி ஏற்படலாம். நாற்காலியின் பின்புறம் முதுகுக்கு வளைந்துகொடுக்கும் வசதி கொண்டதாக இருந்தால் நல்லது. மேஜையில் மவுசும், கீ போர்டும் கைக்கு வசதியாக, வேலை செய்வதற்கு  ஏற்றார்போல இருக்கவேண்டும். காலை நீட்டி வசதியாக உட்கார்ந்தால் கால்வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். காலில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க மேஜைக்கு அடியில் கால் வைப்பதற்கென்று சாய்வான பலகை வைக்கலாம். 

 

மானிட்டர் எப்படி இருக்க வேண்டும் ?

 

பேப்பர் அல்லது புத்தகம் வாசிப்பதை நினைத்துக்கொள்ளுங்கள். மார்புக்கு நேராக சமமாகவோ அல்லது சற்று தாழ்த்திதானே பிடித்துப் படிப்போம். மானிட்டரையும் அப்படித்தான், கண்ணின் கிடைமட்டத்தைவிட சற்றே கீழே சாய்வாக பார்ப்பதற்கு ஏற்றாற்போல அமைக்கவேண்டும். இப்படி சாய்வாக இருப்பதுதான் பலருக்கும் வசதியாக இருக்கிறது. அண்ணாந்து பார்ப்பதுபோல் இருக்கவேண்டாம். 

அறையில் உள்ள மின்விளக்கு உட்கார்ந்திருப்பவரின் பின்புறமோ அல்லது பக்கவாட்டிலோ இருக்கலாம். முன்புறம் கண்ணில் நேரடியாக விழுவதுபோல் வேண்டாம். கம்பியூட்டரில் எப்போது என்டரைத் தட்டுகிறோமோ அப்போதெல்லாம் நாமாக கண்களை சில விநாடிகள் இமைத்துவிட்டு பின் கண்களை மானிட்டரில் இருந்து விலக்கி அறையின் கதவு அல்லது சன்னல் வழியாக சில விநாடிகள் தூரத்தில் உள்ள பொருளை சில விநாடிகள் பார்த்துவிட்டு பின் மீண்டும் வேலையைத் தொடரலாம். இதை இன்னும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள 20:20:20 என்ற பார்முலாவை நினைத்துக் கொள்ளலாம்.

 

அது என்ன 20 :20: 20  பார்முலா

 

                                          A poster with cartoon characters

AI-generated content may be incorrect.

 

அதாவது 20 நிமிடத்துக்கு ஒரு முறை, கண்களுக்கு 20 விநாடிகள் ஒய்வு கொடுத்துவிட்டு 20 அடி தொலைவில் உள்ள பொருளை சில விநாடிகள் பார்த்துவிட்டு - கண்களை ஐந்தாறு முறை இமைத்துவிட்டு பின் மீண்டும் வேலையைத் தொடர்வது. இது பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் இதை தொடர்ந்து ஒருவர் பின்பற்றினால், எந்தப் பிரச்சினையும் இன்றி வசதியாக கம்பியூட்டரில் வேலை செய்யலாம். 

சிலர் இது போன்ற பிரச்சினைகளுக்கு கண்ணில் சொட்டு மருந்தைப் போடவேண்டும் என்று நினைப்பார்கள். தேவையில்லை. இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். ஒருவேளை ஏற்கனவே கண்ணாடி அணிந்திருந்தால் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் மானிட்டரைப்பார்க்க வேண்டும். கம்பியூட்டரின் மானிட்டருக்கு முன்னால் Anti glare screen பொருத்துவது கூடுதல் பலனைத்தரும்.

கம்பியூட்டரில் வேலை செய்யும்போது பிரச்சினை ஏற்படுவதற்குரிய காரணம் இப்போது புரிந்திருக்கும். அதோடு அந்த விளம்பரம் குறித்த தெளிவும் பிறந்திருக்கும். புரிந்து கொண்டால் பிரச்சினையைத் தவிர்ப்பது மிக எளிதுதான்.