புதூர் உத்தமனூர். திருச்சிராப்பள்ளியில் சமயபுரத்துக்கும், லால்குடிக்கும் இடையில் உள்ள கிராமம். என்னுடைய முதல் பணி அந்த ஊர் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு குக்கிராமம்தான். மருத்துவமனை தவிர வேறு கடைகள் எதுவும் கிடையாது. ஆள் அரவமில்லாத காடு என்றுதான் சொல்லவேண்டும். 300 மீட்டர் தள்ளிதான் வீடுகளையேப் பார்க்க முடியும். தள்ளிதான் ஊரே. 200 க்குள் தான் வீடுகளே இருக்கும்.
ஆரோக்கியமான இயற்கை சூழல். மரங்கள் சுற்றி இருக்க மையமாய் மருத்துவமனை. சுற்றிலும் வயல்வெளி. மருத்துவமனை முன்பாக காவிரி ஆறு புள்ளம்பாடி வாய்க்காலாக. சூழல் பிடித்துப்போகாமல் இருக்குமா? காலியாக இருந்த மருத்துவமனை குடியிருப்பு ஒன்றிலேயே தங்கிவிட்டேன். மொத்தம் இருந்த 10 குடியிருப்புக்களில் ஆறில் பணியாளர்கள் இருந்தார்கள். இத்தனைக்கும் ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள்தான். காலை, மதியம் பிறகு இரவு. காலை 5 மணிக்குமேல்தான் ஊரிலிருந்து வெளியே போக முடியும். இரவு 9 மணிக்கு இறுதி பேருந்து, ஊருக்குள் வருவதற்கு. அதற்குப்பின் ஊரைவிட்டு வெளியே செல்ல முடியாது.
என்னை வளர்த்து எனக்கு ஒரு வடிவத்தைத் தந்தது அந்த ஊர்தான். சுறுசுறுப்பாய் அந்த காட்டுக்குள் இருந்து பயணப்பட வைத்ததும் அந்த காவிரித்தண்ணீர் தான்.
தங்கியிருந்த பெரும்பாலான பணியாளர்கள் தங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது.
அந்த நாட்களில், நான் லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அதற்கு எங்கள் சுகாதார மையத்தில் இருந்த அழகிய போட்டோபோன் தானியங்கி ஸ்லைடு புரொஜெக்டர் எனக்கு கைகொடுத்தது. அற்புதமான கருவி அது. சுகாதாரக் கல்வி நடவடிக்கைகளுக்காக நான் அந்தப் புரொஜெக்டரைப் பயன்படுத்திக் கொண்டேன். கணினி, பவர் பாயிண்ட் என்று பார்த்த இந்த தலைமுறையினருக்கு அதெல்லாம் வியப்பாகத்தான் இருக்கும்.
வார இறுதி நாட்களில், நான் அருகிலுள்ள கிராமங்களில் பேசுவதற்கு போகும்போதெல்லாம் குடியிருப்புகளில் இருந்த சிறுவர்களும் என்னுடன் வருவார்கள். அவர்களுடைய உதவி எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
வித்தியாசமாய் இருந்த இந்நிகழ்வுகள் அவர்களை வெகுவாக கவர்ந்தன. விரும்பி தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பின்னர் ஒரு நாள், இந்தக் குழந்தைகளுக்காக என்று பிரத்தியேகமாக ஒரு சுகாதாரக் கல்வி நிகழ்ச்சியை சுகாதாரக் குடியிருப்பு வளாகத்திலேயே நடத்தினேன்.
சமச்சீர் உணவின் முக்கியத்துவம், கீரை வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள், நாம் வழக்கமாக சாப்பாட்டிலிருந்து சக்கை எனத்தூக்கி எறியும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளின் முக்கியத்துவம், சாப்பிடுமுன் கை கழுவுவதன் அவசியம் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்கள் என்று படக்காட்சியுடன் அவர்களிடம் பேசியது அவர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்காக தேடித்தேடி வரவழைத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லைடுகளை பயன்படுத்தினேன். சில ஸ்லைடுகளை நானே வடிவமைத்தேன். அது அவர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
சில நாட்களுக்குப் பிறகு, நான் வியக்கும் வகையில், எனது சக பணியாளர்களில் சிலர் என்னிடம், 'நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏதேனும் மாயாஜாலம் செய்துவிட்டீர்களா என்ன?' என்று கேட்டு வியந்தார்கள். படக்காட்சிகள் அந்தக் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.
நான் குழந்தைகளிடம் சொன்ன செய்திகளை மனதில் நிறுத்தி, சாப்பிடும்போது அதிக காய்கறிகளையும் கீரைகளையும் கொடுக்குமாறு குழந்தைகள் வீட்டில் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்களாம். வீட்டில் மற்றவர்களிடமும் கருவேப்பிலையை தூக்கி எறிய வேண்டாம் என்று வேறு சொன்னார்களாம். அட!
புரியும்படி சொன்னால் கேட்கக் கூடியவர்கள்தானே நம் பிள்ளைகள்!!