மருத்துவரான என் இளைய மகளின் உணவுப்பழக்கத்தை பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவர் அதைப்பற்றி சொல்லும்போதெல்லாம் அவ்வளவாக கவனிப்பதுமில்லை. அலட்சியமா என்றால் இல்லை. நாட்டம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அது குறித்த தகவல் முழுமையாக தெரியாததால் இருக்கலாம். ஆனாலும் அடிக்கடி அவர், இதெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.
சென்ற வாரம் ‘டைம்ஸ் ஆப் இந்தியாவில்’ கண்ணில்பட்ட ஒரு செய்தி முழுமையாகப் படிக்கத் தூண்டியது. அது உடலுக்கு அதிக பயன் தரக்கூடிய மக்னீசியம் பற்றியது.
மக்னீசியம் அதிகமுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் ஏற்கனவே என் மகள் சொன்னதுதான் என்பதை நினைத்தபோது, ரொம்பவும் அவரை அலட்சியப்படுத்திவிட்டோமோ என்று சிந்திக்க வைத்துவிட்டது. ஒருவேளை அவர் சாப்பிடச்சொல்லி பரிந்துரைக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் இதுவரை கேள்விப்பட்டிராததாகவே இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவர் சாப்பிடச் சொல்லி பரிந்துரைத்த ஒன்று சியா விதை. Chia seeds என்றால்தான் கடைக்காரர்களுக்குத் தெரிகிறது. இதில் மக்னீசியம் அதிகமாக இருக்கிறது.
சரி, இந்த மக்னீசியம் அப்படி என்ன உசத்தியாம்?
மத்திய நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி, மனதை அமைதிப்படுத்தி நன்றாகத் தூங்குவதற்கு இது பெரிதும் துணைபுரிகிறதாம். உடலின் மக்னீசியத்தில் சுமார் 60 விழுக்காடு உடலின் எலும்புக்கூட்டில் இருக்கிறது. எலும்பின் ஆரோக்கியத்திலும் மக்னீசியம் ஆதிக்கம் செலுத்துகிறது.
இரத்த சர்க்கரைஅளவைக் கட்டுப்படுத்துவதிலும்கூட முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடலில் மக்னீசியம் அளவு குறையும்போது, இதய பிரச்சினைகள், இன்சுலின் எதிர்ப்பு மற்றும், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.
சியாவிதையில், மக்னீசியத்துடன், புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலத்துடன் நார்ச்சத்தும் இருப்பது கூடுதல் செய்தி. செரிமானத்தை சீராக்குவதிலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன,
மக்னீசியம் சியா விதைத் தவிர, பூசணி விதை, பாதாம்பருப்பு, வேகவைத்த கீரை, வறுத்த முந்திரி, வறுத்த நிலக்கடலை, சமைத்த கறுப்பு காராமணி போன்றவற்றிலும் அதிக அளவில் இருப்பது கூடுதல் செய்தி.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக