‘சமையல் செய்து அன்பை பரிமாறு.’ இதைக் கேட்ட சமையல்கலையில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியை ஒருவர் ‘அபாரம்' என்றார்கள். ஒரு வகையில் அவர்கள் எனக்கு உறவு. அவர்களின் வீட்டில் சாப்பிட மிகவும் பிரியப்படுவேன். எந்த உணவை எடுத்தாலும் தனித்துவமான ருசி இருக்கும். எப்படி இந்த சுவை என்று வியப்பேன். அப்படிப்பட்ட கைதேர்ந்த அவர்கள் அந்த வரியைக் கேட்டதும் இதுவரையில் நான் இப்படி சிந்தித்தது இல்லை என்று வியந்தார்கள். வியப்பு என்னவென்றால் அவர்களும் அன்பைப் பரிமாறுபவர்கள்தான்.
அன்பைப் பரிமாறுதல் என்றால்?
பொதுவாக வீட்டில் பிள்ளைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்று பெண்கள் அங்கலாய்ப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்களாய் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவசர அவசரமாய் கிளம்பி பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து பள்ளிக்கும் டிபனில் கட்டிக் கொடுத்து தனக்கும் எடுத்துக் கொண்டு இயந்திரமாய் செயல்படுகிற காலம் இது.
அனைத்துமே இயந்திரகதிதான். காலையில் சமையலறை ஒரே களேபகரமாகத்தான் இருக்கும். கடுகு டப்பா எங்க? உப்பு எங்க காணோம்? இங்கதானே வச்சேன் எண்ணெய் பாட்டில். காணோமே. எங்க போச்சு. இருக்கிற எடத்தில் எதுவுமே இல்லை. அய்யோ நேரமாச்சே. பிள்ளைக்கு ஸ்கூல் பஸ் வந்துடுமே. அப்புறம் நான் எப்ப வேலைக்கு போறது. இந்த மாதிரி சத்தங்களிலும், அங்கலாய்ப்புக்களிலும் தயாராகும் உணவு எப்படி இருக்கும்? பிள்ளைகள் நன்றாக விரும்பி முழுமையாக சாப்பிடுவார்களா?
இதை இப்படி சொன்னால் எளிதில் புரியும்.
வீட்டிற்கு நமக்கு பிரியமான மாமாவோ, மச்சானோ அல்லது அம்மாவோ, அக்காவோ வந்தால் சமையலைப் பார்த்து பார்த்து செய்வோம் இல்லையா? நாம் அதிகம் நேசிக்கும் நமக்கு வேண்டப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூடுதல் கவனம் காட்டுவதில்லையா? ஒவ்வொன்றாக கவனமாக பிரியமுடன் பிரியமானவர்களுக்காக செய்யும்போது அவர்களும் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு ‘இன்றைக்கு சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று சொல்வதில்லையா?
நாம் காட்டினோமே அன்பு. பிரமாதம் என்று சொல்லவைத்ததற்கு காரணம் அதுதான். பார்த்து பார்த்து செய்தது அல்லவா அந்த சமையல்.
சமையல் என்பது வெறும் உணவு அல்ல. அது அன்பு.