செவ்வாய், 6 ஜனவரி, 2026

சிரிப்பையும் பகிரலாமே!

                                                     சிரிப்பையும் பகிரலாமே!

 

அலுவலகத்திலோ, குடும்பத்திலோ உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை. மனஅழுத்தத்தில் இருக்கும்போது வாட்சப்பில் வந்த காணொலி ஒன்றைப் பார்க்கிறீர்கள். அது கவுண்டமணி - செந்திலின் பிரபலமான வாழைப்பழ நகைச்சுவையாகக்கூட இருக்கலாம். ஒருநிமிட காணொலிதான். என்றாலும், பார்த்ததும் உங்களை அறியாமல் மனதுக்குள் லேசான சிரிப்பு வருகிறது. அத்துடன் உங்கள் துயரமும் குறைந்தது போல் உணர்கிறீர்கள். 




 

மனஅழுத்தம் அதிகமாக இருக்கும்போது, இது போன்ற  நகைச்சுவைகளால் நிச்சயமாக ஒரு மாற்றத்தை உணரமுடியும். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது தெரிந்ததுதான். 

 

சிரிப்பு பற்றியும்குறிப்பாக சிரிப்பினை பிறரோடு பகிரும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும்ஹைதராபாத்தின் மூத்த அறிவியல் அறிஞர். டி.பாலசுப்பிரமண்யனும் அண்மையில் இந்து ஆங்கில நாளிதழில் விரிவாக எழுதி இருக்கிறார். ( The biological magic of shared laughter- D.Balasubramanian, The Hindu ; dated- 16-11-22025 ) 

 

நகைச்சுவை செய்யும் அற்புதம்

 

பொதுவாக அறுவைசிகிச்சை என்றால் பெரியவர்களே பயப்படும்போது, குழந்தைகள் பற்றி சொல்லவா வேண்டும். பயமும் பதற்றமும் இருக்கத்தானே செய்யும். ஜெர்மனில்,  மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் குழந்தைகளிடம் அறுவைக்கு முன் கோமாளி மூலம் நகைச்சுவையாகச் சிரித்து பேச வைத்திருக்கிறார்கள். இதற்குப் பின் அந்தக் குழந்தைகளிடையே பதற்றம் வெகுவாக குறைந்து போயிருக்கிறது. அவர்களுடைய உமிழ்நீரை பகுப்பாய்வு செய்ததில் அவர்களுடைய ஆக்சிடாக்சின் அளவும் கணிசமாக உயர்ந்தது தெரியவந்தது. 

இந்த ஆக்சிடாக்சின் ஹார்மோன், ‘பிணைப்பு ஹார்மோன் என்று அழைக்கப்படுவதாகவும். ஒருவரைத் தொடுவதலின் மூலமோசமூக பிணைப்பின்போதோ (Social bonding) இது அதிகரிக்கிறது என்றும் டி.பாலா தெரிவிக்கிறார். நம்பிக்கை உணர்வு அதிகரித்து பாதுகாப்பான சூழலில் இருப்பதாகஒருவர் உணரும்போதும்கூட ஆக்சிடாக்சின் அதிகரிக்கிறதாம். துயரத்தில் இருக்கும் ஒருவருக்கு அரவணைப்பு மூலமும் கைகளைப் பிடித்து நேரில் ஆறுதல் தெரிவிக்கும்போதும்மனஅமைதி கிடைப்பது தெரிந்ததுதான்.

அட்ரீனலின் மற்றும் கார்டிசால் இரண்டுமே மன அழுத்த ஹார்மோன்கள். பதற்றமான சூழலில் இவை அதிகரித்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது கணிசமாகக் குறைவதாக வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பதற்றத்தைக் குறைத்து அமைதிப்படுத்துகிறது.

பின்லாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று சுவையான செய்தியைத் தெரிவிக்கிறது. நண்பர்கள் சிலர் குழுவாக சேர்ந்துநகைச்சுவை வீடியோவைப் பார்த்தவர்களை நேர்மின்னணு உமிழ் பரு வரைவு’ PET Scan ) படம் மூலம் ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள்பகிர்ந்து சிரிப்பதால் அவர்களுடைய மூளையில் உடலுற்பத்தி ஓபியாய்டுகள் (Endogenous opioids) வெளிப்படுவதை கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?

இந்த உடலுற்பத்தி ஓபியாய்டுகள் வலி உணர்வினைக் குறைத்துமன அமைதியுடன் மகிழ்ச்சியாக  இருக்க உதவுகிறது. சமூக உறவில் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது மனஅழுத்தமும் குறைகிறதாம்.

 

பேட்ச் ஆடம்ஸூம் சிரிப்பு மருத்துவமும்

 

1998 - ல் வெளிவந்த பேட்ச் ஆடம்ஸ்’ (Patch Admas), அமெரிக்க மருத்துவர்.ஹண்டர் பேட்ச் ஆடம்ஸ் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்தைக்காட்டிலும் அன்பும் சிரிப்பும்,மனிதநேயமும்தான் மிகப் பெரிய மருந்து என்பதை அழகாகவும் அற்புதமாகவும் இத்திரைப்படம் படம்பிடித்துக் காட்டுகிறது.



மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, சிவப்பு மூக்கினை வைத்துக்கொண்டு கோமாளிபோல ஒப்பனை செய்து, நகைச்சுவை மூலம் மருத்துவ பயனாளிகளை வேறு ஒரு உல்லாசமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார் பேட்ச் ஆடம்ஸ். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாருமின்றி, வார்டுகளில் படுத்திருக்கும் குழந்தைகளைப் பார்த்து இரக்கம் கொண்டு சட்டென தன்னை கோமாளியாக்கிக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் காட்சி அற்புதமானது.  அவர்களுடைய நாள்பட்ட வலிகளைக் குறைக்கச் செய்து மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறார்.

சாப்பிட அடம்பிடிக்கும் நோயாளி ஒருவரின் நூடுல்ஸில் மிதப்பதுபோன்ற’ அவருடைய நீண்டநாள் கனவினை உண்மையாக்க,அந்த வயதான பெண் நோயாளியை செவிலியர்கள்பணியாளர்கள், சக மருத்துவர்களுடன் மருத்துவமனையின் வெளியே பூங்காவில்மிகப்பெரி....ய பாத்திரத்தில் நூடுல்ஸை நிரப்பி அதில் அந்த நோயாளியை மிதக்கவைத்து மகிழும் காட்சி அற்புதம்.

மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரது எதிர்ப்பையும் சமாளித்து வெற்றி பெற்று மருத்துவராவது மட்டுமில்லாமல், தன் கனவான மருத்துவ நடைமுறைக்கு உட்படாத கோமாளி மருத்துவத்தை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினார்.

இந்தத் திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வசூல்ராஜா எம்.பி.பி,எஸ்-ல் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் செய்தி. 



இன்றுநாள்பட்ட உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவர பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மருத்துவக் கோமாளியாக செயல்படுகிறார்கள். மருத்துவமனைகளுக்குச் சென்று புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோயினால் துயரப்படும் குழந்தைகள்நோயாளிகளை குதூகலப்படுத்தி அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படுகிறார்கள். 

 

நலவாழ்வினை மேம்படுத்தும் நகைச்சுவை மன்றங்கள்: 

 

பிரபல பட்டிமன்ற நடுவரும் நண்பருமான பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன், மதுரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மன்றத்தினை தொடர்ந்து நடத்தி வருகிறார். எப்போதும் தன்னைச் சூழ்ந்துள்ள நண்பர்களை சிரிக்க வைப்பார்.

ஸ்டாண்ட் அப் காமெடி’ என்ற பெயர் அப்போது இல்லாவிட்டாலும் அதற்கான மேடைமொழிநடைநாகரீகமான நகைச்சுவை அனைத்துக்குமே அடித்தளமாக இந்த மன்றம் இருந்தது என்றும்விதை இங்கு போடப்பட்டது என்றும் கூட சொல்லலாம்.இன்றைய முன்னணி சின்னத்திரைதிரைக் கலைஞர்களில் சிலர் அங்கிருந்து உருவானவர்கள்தான்.

தொடர்ந்து மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டங்களை நடத்தியும் வருகிறார். குறைந்தது 500 க்கும் மேற்பட்டவர்களாவது கலந்து கொள்கிறார்கள். மாதந்தோறும் கூட்டம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மூன்று வயது குழந்தைகூட கூட்டத்தில் ஜோக் சொல்லி கைதட்டலையும் பரிசையும் பெறுகிறார்கள். கலந்துகொள்ளும் அனைவரும் புத்துணர்ச்சி பெறுவதால்தான் தொடர்ந்து வருகிறார்கள். மன்றமும் தொடர்கிறது. 

வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் நகைச்சுவை மன்றம் தொடங்கிய நாளிலிருந்து மாதந்தோறும் தொடர்ந்து நடைபெறுவது ஒரு மருத்துவமனையில்தான். இதுகூட ஒரு தற்செயலான நிகழ்வுதான்.  இதுபோன்ற நகைச்சுவை மன்றங்கள் பல்வேறு பெயர்களில் பல இடங்களில் இயங்கினாலும் நோக்கம் ஒன்றுதான்.. 

 

வாங்க! பிறரோடு சேர்ந்து சிரிக்க பழகுவோம்.

 

நீங்கள் தனிமையில் சிரிப்பதைக்காட்டிலும்  கூட்டத்தினரோடு சேர்ந்து சிரிக்கும்போது உறவு பலப்படுகிறது. சிம்பன்சியும் இதர குரங்கு இனங்களும் தங்களுக்குள்ளே உறவினை வலுப்படுத்துவதற்கு சிரிப்பையே கருவியாக பயன்படுத்துகின்றனவாம். 

சிரிப்பானது சமூக உறவில் பிறருடன் சேர்ந்து பகிரப்படும்போது - கூட்டாக சேர்ந்து சத்தமாக  சிரிக்கும்போது ஒருவருக்கொருவர் பெறும் ஒத்திசைவு சமூக பிணைப்பை வலுப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும் மனநிலையை மேம்படுத்தி அமைதியையும் ஏற்படுத்துகிறது.

இது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம். குழந்தைகள், பெரியவர்கள் கையில் செல்போனோடு தனிமையான இடங்களுக்கு சென்றுவிடுகிறார்கள். தனிமையில் அதற்கு செலவிடும் நேரமும் அதிகமாகிவிட்டது. கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல் உங்களுக்கு எவரிடமிருந்தாவது வரப்பெற்ற நகைச்சுவை வீடியோ கிளிப்பிங்கை பார்த்து சிரித்து நீங்கள் மகிழலாம். ஆனால் தனிமையில் சிரிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். உறவுகள் மேம்பட சிரிப்போம் நண்பர்கள்உறவினர்களுடன் சேர்ந்து கூட்டாக. வாங்க! பிறரோடு சேர்ந்து சிரிக்க பழகுவோம். 

 

 

 

 

 

 

 

 

 

  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக