ஆதலினால் கண்ணில் கவனம் கொள்வீர்!
மஞ்சட்காமாலைக்கு சில இடங்களில் மூலிகை மருந்து கொடுப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மதுரைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் ஒன்றில் கண்நோய்களுக்கு கண்ணில் சொட்டு மருந்து போடுகிறார்களாம். கூட்டம் கூட்டமாய் மக்கள் வருகிறார்களாம்.
தொடர்புடைய காணொலிகளும் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகங்களிலும் செய்தி வந்தது.
15 ஆண்டுகளாக இந்த மூலிகைச்சாறு சொட்டுமருந்தை ஊற்றி வருவதாக அந்த வைத்தியர் காணொலியில் சொல்கிறார்.
காணொலியில், பேட்டி கண்டவர் மீண்டும் மீண்டும் கேட்கும்போதெல்லாம், அந்த வைத்தியரும் அழுத்தம் திருத்தமாக தெளிவாகவே சொல்கிறார். ‘இங்கு மூலிகை சொட்டுமருந்தினை கண்ணில்போடுவது விஷக்கடி, தோல்வியாதிக்காகத்தான். ஆனால் மக்களாகவே மஞ்சள்காமாலை, மூலம், சர்க்கரை போன்ற பல்வேறு நோய்கள் உட்பட கண்நோய்களும் சரியாவதாக சொல்லிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள்’. ஆனால் அதற்கு நான் பொறுப்பு இல்லை என்ற ரீதியில்தான் வைத்தியர் தெளிவாகவே சொல்கிறார்.
மொத்தத்தில் அவர்களாகத்தான் சர்வயோக நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள்.
ஆக, அவர்கள் கண்ணில் போடும் மூலிகைமருந்தும் கண் நோய்களுக்கானது அல்ல. ஆனால் வியப்பு என்னவென்றால் யாரோ சொன்னார்கள், கண் நோய்களுக்கானது என்று கூட்டம் கூட்டமாய் செல்வதுதான்.
பேட்டி கண்டவர், கண்ணில் மருந்துபோட்டுக் கொண்டவர்களையும் விடவில்லை. ‘விஷக்கடிக்கும், தோல்வியாதிக்குமானதுதானே இந்த மருந்து என்று வைத்தியர் சொல்கிறாரே, ஆனால் நீங்கள் கண்ணுக்காக போட்டுக் கொண்டதாக சொல்கிறீர்களே’, என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், ‘இல்லை.எல்லோரும் போட்டுக்கொள்கிறார்கள். கண்ணில் பிரச்சினை வராமல் நல்லா இருக்கு என்று, சொட்டுமருந்து போட்டுக்கொண்டு வந்தவர்கள் சொன்னதால்,நாங்களும் வந்தோம்’ என்கிறார்கள். ஆக என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இதை வந்தவர்களில் சிலரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
இப்போது அந்த இடத்தில் புதிது புதிதாக டீக்கடை ஹோட்டல்கள் எல்லாம் கூட வந்துவிட்டன. அந்த அளவுக்கு அலைமோதும் கூட்டம்.
மருத்துவ கவனம்?
ஒருமுறை எங்கள் கிராம சுகாதார நிலையத்துக்கு வந்த மருத்துவ பயனாளி ஒருவர், சொட்டு மருந்து பாட்டில் ஒன்றைக் காண்பித்து, ‘சார், இந்த மருந்தை நேத்து இங்க கிராமத்தில வித்தாங்க. டெல்லியில் இருந்து வந்திருந்தாங்க. நீங்க கண்புரைக்கு, ஆப்ரேசன் செய்யணும்னு சொன்னீங்க. ஆனால் இந்த சொட்டு மருந்தைப்போட்டா புரை சரியாகிடும். ஆப்ரேசன் வேண்டாம்னு சொன்னாங்க’ என்று பாட்டிலைக் காண்பித்தார்.
அதில் பெரும்பகுதி ஹிந்தியில்தான் எழுதியிருந்தது. படிக்காதவர்களும் எளிதில் தெரிந்து கொள்வதற்காக கண் படம் ஒன்று இருந்தது. நல்ல வேளை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆங்கிலத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்று இருந்தது.
தேசிய பார்வையிழப்புத் தடுப்புத்திட்டத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், அப்படி ஒரு மருந்து வர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகத் தெரியும். கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோடி கோடியாக செலவு செய்கிறது அரசு. இப்படி இருக்க, இப்படி ஒரு சொட்டு மருந்தா? அதுவும் அரசின் அங்கீகாரத்தின் பெயரில். வாய்ப்பே இல்லை.
மருந்தினை போடவேண்டாம் என்று அவரிடம் சொல்லிவிட்டு, அந்த மருந்து விற்பவர் மீண்டும், வந்தால், இங்கே மருத்துவமனையில் ‘தேசிய பார்வையிழப்புத் தடுப்புத் திட்டத்தின்’ ( National Programme for Control of Blindness ) கீழ் பணிசெய்துவரும் ஒருவர், அவரை உடனே பார்க்க விரும்புவதாக சொல்லச் சொன்னேன்.
அவ்வளவுதான், அதற்குப்பிறகு அந்த ஆசாமி இருப்பாரா என்ன!. கண்ணில் தட்டுப்படவேயில்லை.
தரவுகள் வேண்டுமே!
30 ஆண்டுகளுக்கு முன் பிரபல வார இதழ் ஒன்றில், சித்த மருத்துவர் ஒருவர் தொடர் எழுதி வந்தார். அதில் ஒருமுறை கண்மருத்துவம் பற்றி எழுதும்போது கண்ணில் ஏற்படும் ‘கிளாக்கோமா’ என்ற கண்நீர் அழுத்த உயர்வுக்கு அருகம்புல் சாறு குடித்தால், கிளாக்கோமா சரியாகிவிடும். மருந்தெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருந்தார். அதோடு மட்டுமல்லமால் பார்வைகுறைவுக்கு கண்ணாடி போட்டு கண்ணின் ஜீவனைப் போக்கிக்கொள்கிறார்கள் என்றும் கண்ணாடி போடுவதால், நாளடைவில் கண் ஒளி இழந்து, பார்வை இழந்துபோய்விடுகிறது என்றும் சொல்லி இருந்தார். மேலும் காரட் சாப்பிட்டு வந்தாலே போதும்,கண்ணில் ஒளி வந்துவிடும் என்பதும் கண்ணாடி போடுவது மூட நம்பிக்கை என்பதும் அவரது கருத்தாக இருந்தது.
கண்நீர் அழுத்த உயர்வினால் பார்வை நரம்புகள் நசிந்துவிடும். அதனால் பார்வையும் கடுமையாக பாதிக்கப்படும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான தொடர் சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமான பார்வையிழப்பு உறுதியாக ஏற்பட்டுவிடும். அழுத்தத்தை கட்டுப்படுத்த சொட்டு மருந்து, தேவைப்பட்டால் லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும். இதில் முக்கியமான செய்தி, இதனை தொடக்க நிலையில் கண்டறிய வேண்டியது முக்கியம் என்பதுதான்.
இதேபோல் பார்வைகுறைவுக்கு கண்ணாடி இன்றளவும் சிறந்த தீர்வு. எளிமையானதும் விலை குறைவானதும் கூட. காரட் கண்ணுக்கு நல்லதுதான். அதில் வைட்டமின் ‘ஏ’ சத்து இருக்கிறது. மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் இதற்கும் தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பார்வைகுறைபாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.
ஒருவேளை காரட் சாப்பிடுவதன் மூலம் கண்ணாடி போடத் தேவையில்லை என்றால், அது குறித்து யார் ஆராய்ச்சி செய்தார்கள் அதன் முழு விபரம் என்ன என்பதையும், அருகம்புல்லில் ஒருவேளை கண்நீர் அழுத்த உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குமேயானால் அதைக் கொண்டு எப்படி குணப்படுத்தினார், எத்துணைபேர் பயன் அடைந்தார்கள், கண்டுபிடிப்பதற்கு எந்த உத்தியை, உபகரணத்தைப் பயன்படுத்தினார், பயனாளிகளின் தரவுகள் அனைத்தையும் வெளியிடும்படி, கண்மருத்துவர்கள் விளக்கமாக கேட்டிருந்தார்கள்.
கண்மருத்துவர்கள் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கி எழுதிய கடிதங்கள்தான் வார இதழில் வெளியானது. ஆனால் உரியவரிடமிருந்து கடைசிவரை பதில் இல்லை. மெளனம்தான்.
சிக்குன்குன்யாவினையும், டெங்குவையும் கட்டுப்படுத்தியதில் நிலவேம்புவின் பங்கு அளப்பரியது. ஏன் கரோனா காலத்திலும்தான். நிலவேம்புவில் உள்ள மருத்துவக்கூறுகள், அதன் செயல்திறன் பற்றி ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர் கு.சிவராமனும் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம் மகத்தானது. ஆனால் அதே சமயம், தரவுகளின் அடிப்படையிலேயே, நாம் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சொட்டுமருந்து தயாரிப்பு
மருந்து தயாரிப்பு ஒன்றும் எளிதான செயல் அல்ல. மருந்தின் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டு எந்த பிரச்சினைக்கு அது கொடுக்கப்படுகிறது என்பதை பல கட்ட ஆய்வுகள் மூலம் உறுதி செய்து, அதன் பிறகு ஆய்விற்கு உரிய அங்கீகாரமும் பெற வேண்டும்.
பின் அது மருந்தாக தயாரிக்கப்படும்போது தரமான ஆய்வுக்கூடத்தில் அனைத்து தரக்கட்டுப்பாடுகளுடன் சுத்தமாக தயாரிக்கப்படுவதுபோலவே, சுத்தமாக பாட்டிலில் அடைக்கப்பட்டு உரிய அனுமதியுடன் விற்பனைக்கு வருகிறது.
அப்படி வரும் அந்த மருந்தினையும் மருந்துகுப்பியைத் திறந்த ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இல்லையேல் அதுவும் தகுதியற்று, காலாவதியாகிவிடும். இதேபோல் பாட்டிலின் நுனிப் பகுதியையும் கையால் தொடக்கூடாது என்பதும் குறிக்கப்பட்டிருக்கும்.
வாழ்நாள் முழுவதற்கும் பார்வை.
இப்படி அனைத்து பரிசோதனைகளையும், தரக்கட்டுப்பாடுகளையும் கடந்து வெளிவரும் மருந்துகளே சில சமயங்களில் பிரச்சினையாவதைப் பார்க்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்புகூட உலர் கண்ணுக்கு பயன்படுத்தப்படும் சொட்டுமருந்து ஒன்று, பார்வையை கடுமையாக பாதிப்பதாக சொல்லி வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டதை இங்கு நினைவுகூறுதல் நல்லது.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் மக்கள், கோழிரத்தம், நந்தியாவட்டைச்சாறு, விளக்கெண்ணெய் போன்றவற்றை கண்ணில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் போட்டு வந்தார்கள். அதனால் பலருக்கும் பார்வைபாதிப்பு, பார்வையிழப்பு ஏற்பட்டதெல்லாம் பழைய கதை. தேசிய பார்வையிழப்புத் தடுப்புத்திட்டத்தின் சீரிய பணியால் அந்த பழக்கமெல்லாம், நடைமுறையில் இல்லாத நிலை ஏற்பட்டு, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பு ( Avoidable Blindness) தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும்.
ஒரு தொலைக்காட்சிப்பெட்டியோ, ஒரு கைப்பேசியோ, துணிமணியோ பார்த்து பார்த்து, கேட்டு கேட்டுதான் வாங்குகிறோம். ஆனால் எதற்கென்றே தெரியாமல் இப்படி கண்ணில் சொட்டுமருந்தினை போட்டுக் கொள்வதை என்னவென்று சொல்வது? எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாதவரை பிரச்சினையில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானா?
கண் ஒரு நுட்பமான உறுப்பு. ஒரு சிறு பிரச்சினைகூட பார்வையிழப்புக்கு வகுத்துவிடும். அதன்பின் எந்தவித மருத்துவத்தாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையும் ஏற்படலாம். வாழ்நாள் முழுவதற்கும் பார்வை தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது.
நண்பர்களே, ‘ஆதலினால், கண்ணில் கவனம் கொள்வீர் !’.
---
மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )
மதுரை








