சனி, 18 மே, 2024

உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு சிறப்புக் கட்டுரை

 

உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு சிறப்புக் கட்டுரை ( மே 13 – 19 )

கிட்டப்பார்வையினை கட்டுப்படுத்தும் புதிய வகை கண்ணாடி

 

தலைமுறை இடைவெளியால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினை கிட்டப்பார்வை ( Myopia ). ஆமாம். முந்தைய தலைமுறையினர் செல்பேசியை பார்த்திராத காலம் அல்லவா! அன்று ஓடியாடி விளையாடி அல்லவா மகிழ்ந்தார்கள்!  சிந்தித்துப் பாருங்கள். இன்றைய குழந்தைகள் அளவு அன்றைய பிள்ளைகளுக்கு பார்வைபிரச்சினை இல்லை. கண்ணாடியும் இந்த அளவுக்குப் போடவில்லை.

ஆனால் இப்போது? எந்நேரமும் செல்லும் கையுமாக அறைக்குள்ளேயேத்தானே முடங்கிக் கிடக்கிறார்கள். நேருக்கு நேராய் பார்த்து பேசுவது என்பதே இல்லையே. டிஜிட்டலில் சமூக வலைதளங்கள் மூலமாகத்தானே செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள்.

80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக செல்போனில் செலவிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறுபிள்ளைகளும் அப்படித்தான். செல்போனில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் வாழ்வியல் பிரச்சினைகளில் ஒன்று கண்ணில் ஏற்படும் கிட்டப்பார்வை (Myopia) பிரச்சினை.

கிட்டப்பார்வையைப் பொறுத்தவரையில் குழந்தைப்பருவத்திலேயே கண்டறிய வேண்டியது முக்கியம். கண்பார்வை சரியாகத் தெரியாவிடில் பாடங்களை சரியாகப் படிக்க முடியாது. கற்பதில் பெரும்பகுதி பார்ப்பதன் மூலம்தான் நடைபெறுகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. பார்வை தொடர்ந்து தெளிவாக இல்லாவிட்டால் பிள்ளையால் தெளிவான பார்வை-காட்சியை உணர முடியாது. கல்வியில் பின் தங்க நேரிடும். அறிவுசார் குறைபாட்டிற்கும் வழிவகுத்துவிடலாம்.

மூளையின் சரியான வளர்ச்சியைப் பொறுத்து நலமான பார்வை அமையும். சில சமயங்களில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு கண்ணின் வளர்ச்சியைப் பாதித்து பார்வையும் பாதிக்கலாம்.

நம்முடைய நவீன வாழ்க்கை அனைத்துமே செயற்கை ஒளியில்தான். படிப்பதாகட்டும், செல்போன், ஐபேட், கிண்டில் போன்ற டிஜிட்டல் சாதனங்களாகட்டும் எல்லாம் செயற்கை ஒளியில்தான். அதுவும் அதிக ஒளி அடர்வில். அதாவது அதிக contrast-ல்.

செயற்கைத் திரைகளைப் பார்க்கும்போது அதிக பிரகாசமான ஒளியில் பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த பிரகாசமான ஒளியில் நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்பது கிட்டப்பார்வையைத் தூண்டுகிறது.

 

ஒளி அடர்வும் கிட்டப்பார்வையும்

 

எந்த ஒரு படமும் தெளிவாக இருந்தால்தான் நம்மால் பார்க்க முடியும். இல்லாவிடில் பார்க்க விருப்பப்பட மாட்டோம். அதிக பிரகாசமான ஒளி எனும்போது contrast – அதாவது ஒளி அடர்வும் அதிகமாக இருக்கும்.  இந்த  ஒளி அடர்வு (contrast)  நமக்கு தெரிந்த ஒன்றுதான். தெளிவான பார்வைக்கு முக்கியமானதுங்கூட. நாம்கூட சொல்வோமே. இந்தப் படத்தில் contrast குறைவாக இருக்கிறது. இன்னும் contrast ஐக்கூட்ட வேண்டும் என்று.

இந்த ஒளி அடர்வுக்கும் (contrast) கிட்டப்பார்வைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கிட்டப்பார்வை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிக ஒளி அடர்வினை விழித்திரை உணரும்போது விழிக்கோளம் நீட்சிக்கு வழிவகுக்கிறது. எனவே இந்த ஒளி அடர்வினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுக்க முடியும். கட்டுப்படுத்தவும் முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

கிட்டப்பார்வையினைக் கட்டுப்படுத்த பல்வேறு அணுகுமுறைகள் ஆய்வில் இருக்கின்றன. அதில் ஒன்றான டாட்-DOT ( Diffusion Optics Technology ) வகை கண்ணாடி என்ற புதிய தொழிற்நுட்பம் 4 ஆண்டுகால ஆய்வுக்குப்பின் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

 


டாட் கண்ணாடி-எப்படி வேலை செய்கிறது?

 

சூழலியல் காரணமும், செயற்கைத்திரைகளைத் ( டிஜிட்டல் திரைகள் ) தொடர்ந்து நீண்ட நேரம் பார்ப்பதுமே கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான காரணமாக  ஆய்வுகள் தொடர்ந்து புலப்படுத்தி வருகின்றன. அதிக ஒளி அடர்வு விழிக்கோளத்தை நீட்டிக்கச் செய்வதாக கருதப்படுகிறது. எனவே கண்விழித்திரை ஏற்பிகளுக்கிடையே contrast – ஒளி அடர்வைனை குறைக்கச் செய்வதே இந்த டாட் - DOT லென்சின் முக்கிய வேலை.


 

பரவல் ஒளியியல் தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளி அடர்வினை மாறுபடுத்தும் தனித்துவமான முறையில் செயல்படுகிறது.  கண்ணுக்குள் நுழையும் ஒளிக்கதிர்களை சிதறடிக்கச் செய்து விழித்திரையில் விழுவதற்கு முன் ஒளி அடர்வினைக் குறைக்கச் செய்கிறது. குறைந்த ஒளி அடர்வு பார்வை அமைப்பினை பலகீனமாகவே தூண்டுகிறது.

அதற்கேற்ப இந்த டாட் லென்சு வடிவமைக்கப்பட்டுள்ளது. மையப்பகுதி தெளிவான ஒளி ஊடுருவும் பகுதியினைக் கொண்டுள்ளது. இதன் வழியாக குழந்தையால் தெளிவாகப் பார்க்க முடியும். சுற்றிலும் உள்ள சிகிச்சை மண்டலபகுதியில் ஒளி விலகல் அடைய முடியாத ஆயிரக்கணக்கான நுண்புள்ளிகள் கொண்ட சிதறடிக்கும் பகுதி இருக்கிறது. இதன் வழியாக செல்லும் எந்த ஒளியையும் மென்மையாக சிதறடித்து அதன் மூலம் ஒளி அடர்வினை மாற்றியமைக்கிறது. இந்த நுண் ஒளிச்சிதற்றிகளின் அகலம் ஒரு மில்லிமீட்டரில் பத்தில் ஒரு பங்குதான். விழித்திரைக்குள் செல்லும் ஒளிக்கதிரின் ஒளி அடர்வினைக் குறைப்பதே அதன் வேலை. இந்த நுண் ஒளிச்சிதற்றி வழியாகவும் குழந்தையால் நன்றாக பார்க்க முடியும். கண்ணாடியின் எந்த பகுதியின் வழியாகவும் குழந்தையால் நன்றாக பார்க்க முடியும் என்பது முக்கியமான செய்தி.  இந்த சிகிச்சை மண்டலபகுதி பார்வையைப் பாதிக்காது. 


 

விழித்திரையின் புறப்பகுதியில் ( Peripheral ) விழும் பார்வை சமிக்ஞைகள்தான் விழிக்கோளத்தை அதிக அளவில் தூண்டச் செய்கின்றன. இயல்பான கண்ணைப்பொறுத்த வரையில் இயற்கை வெளிச்சூழலில் தொலைதூரக் காட்சிகள் பெரும்பாலும் விழித்திரையின் புறப்பகுதியில்தான் விழுகின்றன. அதற்கேற்ப இந்த டாட் லென்சின் புறப்பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாதாரணவகை கண்ணாடிகள், காண்டக்ட் லென்சுகள் கிட்டப்பார்வைக்கு தெளிவான பார்வை கொடுக்கின்றன. என்றாலும் கிட்டப்பார்வை ஏற்படுவதற்குரிய காரணத்தை சரி செய்யும் உத்திகள் அவற்றில் இல்லை.

நம்முடைய நோக்கம் கிட்டப்பார்வைக்குத் தீர்வு. அதே சமயத்தில் உயர்கிட்டப்பார்வைக்கு ( Myopia ) செல்லவிடாமல் அதன்மூலம் கடுமையான பக்கவிளைவுகளைத் தடுத்து குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை பேணிக்காப்பது.

தற்போதைக்கு குழந்தைகள் செல்போன் பார்ப்பதையோ, எழுதுவதையோ, படிப்பதையோ குறைத்துக் கொள்ள முடியாது. கல்விக்காக டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதற்குரிய தேவை அதிகமாக இருப்பதால் உடனே அதைக் குறைப்பது சாத்தியமில்லை.

இந்தநிலையில்தான் இந்த புதிய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பயன்கள்.  கிட்டப்பார்வைக்கு லென்சு பவர் மூலம் தெளிவான பார்வை. அதே சமயம் கிட்டப்பார்வை லென்சு பவர் மேலும் உயர்வதையும் தடுக்கிறது.

குழந்தையின் கண்ணாடி பவர் படிப்படியாக உயர்ந்து நாளடைவில் -6 க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். கிட்டப்பார்வை கட்டுப்படுத்தும் சிகிச்சை மூலம் இந்த பவரை பாதிக்கும் கீழாக குறைக்க முடியும்.

இந்த டாட் கண்ணாடியினை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தும்போது விழிக்கோளம் நீட்சி அடைவது நன்றாக மட்டுப்படுவதகாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. டாட் கண்ணாடி தற்போது 6 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நல்ல பலனைத் தருவதாக சொல்கிறார்கள். சீனா, இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற சில வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் இந்த டாட் கண்ணாடி விரைவில் இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வரலாம். நம் பிள்ளைகளும் பயன்பெறட்டும்.

மு.வீராசாமி

மதுரை

 

திங்கள், 29 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

                     அரைச் சர்க்கரை

                       குறுந்தொடர்

வாரம் 18

 

21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான நோயாக நீரிழிவு நோயைக் குறிப்பிடுகிறது லான்செட்டின் தலையங்கம் ஒன்று. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அதிகரிக்கும் உடல் பருமன், பணிச்சுமை, சுற்றுப்புற சூழல் ஆபத்து, புகையிலை மற்றும் மது பயன்பாடு, குறைந்த உடல் உழைப்பு போன்றவைகளை அது பட்டியலிடுகிறது.

இந்தியாவில் மக்கள்தொகையில் 11% பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 15.3 % பேர் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில்  ( Pre Diabetic )  நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவெ பார்த்தோம்.

அதன்படி பார்க்கையில் மக்கள் தொகையில் 101.3 மில்லியன் பேருக்கு சர்க்கரைநோய். சர்க்கரைக்கு முந்தைய நிலையில் ( Pre Diabetes stage ) இருப்பவர்கள் 136 மில்லியன்பேர்.

ஏற்கனவே சர்க்கரைநோய் உறுதி செய்யப்பட்டவர்களைப் பொறுத்த வரையில் அவர்களிடையே வாழ்க்கையைப் பாதிக்கும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுப்பது முக்கியம்.

இன்னொருபுறம் சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருக்கும் 136 மில்லியன்பேரையும் சர்க்கரைநோய் வராமல் தடுப்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும் முக்கியம். இது குறித்த விழிப்புணர்வு பணியை மேற்கொள்வது அவசியம் என்கிறார் சென்னை சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர்.V.மோகன். ஏனெனில் சர்க்கரைநோய் கள ஆய்வின்போதே சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களில் கணிசமானோர் 6 மாதத்துக்குள்ளாகவே சர்க்கரைநோய் நிலையை அடைந்துவிட்டதாக சொல்கிறார். எனவே தேவையெல்லாம் உடனடி விழிப்புணர்வுதான்.

சர்க்கரைநோய் பற்றி பேசும்போது கிளைசெமிக் குறியீடு ( Glycemic Index ) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்துவதை பார்க்கலாம்.  கிளைசெமிக் குறியீடுக்கும் சர்க்கரைக்கும் உள்ள முக்கியமான தொடர்பு குறித்து அண்மையில் ஆங்கில இந்து நாளிதழில் டாக்டர்.வி.மோகன் எழுதிய கட்டுரை நிறைய செய்திகளைத் தெரிவிக்கிறது. டாக்டர்.வி.மோகனின் ஆய்வு குறித்த விரிவான அலசலை ஆங்கில இந்து நாளிதழின் ரம்யா கண்ணனும் நாளிதழில் பதிவு செய்திருக்கிறார். 

 


கிளைசெமிக் குறியீடு என்பது வேறு ஒன்றும் இல்லை. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதற்கான உணவின் பண்புகளைக் குறிக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட்டின் தரத்தை அளவிடுகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த எந்த மாதிரி மாவுச் சத்து ( கார்போஹைட்ரேட்) உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய உதவும் ஒரு வழிகாட்டி  என்று சொல்லலாம்.

சர்க்கரை, வெள்ளை அரிசி, மைதா, உருளை, இனிப்பு பானங்கள், சோள அவல் போன்றவை அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டவை.

குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகள் என்று பார்த்தால் ப்ரெளன் அரிசி, ஓட்ஸ், தானியங்கள், பருப்புகள், ஆப்பிள், கொய்யா , கீரை, கத்திரி, ப்ரோகோலி போன்றவைகளைச் சொல்லலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகளை உண்ணுவதால் அவை மெதுவாக குளுக்கோஸாக மாறுகின்றன. நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன.

அதிக கிளைசெமிக் குறியீடு உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக அணமை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுப் பொருட்களை சாப்பிடுவது, போதுமான உடற்பயிற்சி செய்துகொள்வது என வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதன்  மூலம் அதிகரித்து வரும் இதய நோய்களை கட்டுப்படுத்தி பக்கவிளைவுகளைத் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் ஒருவரான டாக்டர்.வி.மோகன் தெரிவிக்கிறார்

2045 வாக்கில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து செலவில் உலகளாவிய நீரிழிவு தொடர்பான மருத்துவ செலவு 1045 டாலர் பில்லியனாக அதிகரிக்குமாம். இது வேண்டுமானால் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் செய்யலாம். ஆனால் மருத்துவர் ரூபா மரியாவும், அரசியல் பொருளாதார நிபுணர் ராஜ்படேலும்  சொல்வது போல், நலமற்ற சமுதாயத்திற்கு தீர்வு மாத்திரைகள் அல்ல, வாழ்வியல் முறைகளை மறுமதிப்பீடு செய்வதுதான்.

சர்க்கரைநோய் மருத்துவம் வளம் கொழிக்கும் மிகப்பெரிய மருத்துவ வர்த்தகம். இந்த நிலையில் உலக சுகாதார சமூகம் எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்துதான் வரும் நாட்களில் மக்களின் ஆரோக்கியமும் ஆயுட்காலமும் அமையும். இல்லையேல் அரைச் சர்க்கரையும் போய் சர்க்கரை இல்லாமல் கேட்கக்கூடிய நிலைதான் அனவருக்கும் ஏற்படும்.

 

                  அரைச் சர்க்கரை நிறைவடைந்தது

திங்கள், 22 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

வாரம் 17

சர்க்கரைநோய் பாதிப்பினை  குறைப்பது எப்படி?

சாப்பாடு தட்டில் அரைத்தட்டு காய்கறிகள்,கீரை.

தட்டில் கால்பகுதி - ராஜ்மா, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் ( புரதச்சத்து)

மீதி கால்பகுதி - கார்போஹைட்ரேட் – அரிசி/கோதுமை கவுனி அரிசி/ வரகு சாமை, குதிரை வாலி...இது உணவின் கிளைசெமிக் சுமையைக் குறைக்கிறது. தவிர வழக்கமான உடற்பயிற்சி, உடல் உழைப்பினை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பினை குறைக்க உதவும். அதிக உடல் பருமனானவர்கள் நீரிழிவினை தடுக்க கட்டாயம் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

சரியான நேரத்தில் படுத்து போதுமான நேரம் தூங்குவதும் மன உளைச்சலைக் குறைப்பதும் முக்கியம். கவனிக்கவும். இரவு நன்றாக போதுமான நேரம் தூங்குபவர்களுக்கு சர்க்கரைநோய் கட்டுப்படும். அப்படியானால் சரியாக தூங்கி எழாதவர்களுக்கு என்று ...நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் அவர்களுக்கு சர்க்கரைநோய் ஏற்படுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமே.

இந்தியாவில் மக்கள்தொகையில் 11% பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 15.3 % பேர் சர்க்கரைநோய்க்கு முந்தைய ( Pre Diabetic )  நிலையிலும் இருக்கிறார்கள்.

இது குறித்து இந்துவின் ரம்யா கண்ணன் என்ன சொல்கிறார். சர்க்கரைநோய் நிபுணர் டாக்டர்.மோகனின் கருத்து என்ன?

மருத்துவர் ரூபா மரியாவும், அரசியல் பொருளாதார நிபுணர் ராஜ்படேலும்  என்ன சொல்கிறார்கள்?

பார்க்கலாம் அசத்தலான அலசலுடன் வரும் வாரம்..

தொடரும்,

திங்கள், 15 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

                            அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

 

கடந்த 15 வாரமாக பார்த்தது சர்க்கரைநோய் பற்றிய வரலாற்று செய்திகள் .

இனி இன்று...

வாரம் 16

காய்ச்சலுக்கோ வயிற்றுப் போக்குக்கோ மாத்திரை சாப்பிட்டால் மூன்று, நான்கு நாட்களில் சரியாகி விடுவதுபோல் சர்க்கரைநோயும் சரியாக வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் போராட வேண்டி இருக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

அதைச் சாப்பிடாதே இதைச் சாப்பிடாதே என்றால் எதைத் தான் சாப்பிடுவது என்று மருத்துவர்கள்மேல் கோபம் கொள்கிறார்கள். வாழ்வதே சாப்பிடுவதற்காகத்தானே. வாய்க்கு ருசியாக இப்போது சாப்பிடாவிட்டால் எப்படி? பிறகு எப்போது சாப்பிடுவது?

ஆனால் வேறு வழியில்லை. கட்டுக்குள் வைத்துத்தான் ஆக வேண்டும். இன்றல்ல. ஆதியிலிருந்தே இதைத்தான் சொல்லி வருகிறார்கள்.

இன்சுலின். சர்க்கரைநோய்க்கான அருமருந்து. மந்திர மருந்து. கண்டுபிடித்திருக்காவிட்டால்...ஒரு நிமிடம் யோசிக்க வேண்டி இருக்கிறது. கண்டுபிடித்த பாண்டிங் ஒரு சர்க்கரை நிபுணரோ அல்லது அகச்சுரப்பியியல் நிபுணரோகூட கிடையாது. அட வியப்பாக இருக்கிறதா. ஆம். அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்.

இன்னொரு வியப்பு. இன்சுலின் கண்டுபிடிப்பதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான கனவு. இரவு பாதித்தூக்கத்தில் அவருக்கு கனவில் தோன்றியதை அரைத்தூக்கத்தில் நோட்டில் கிறுக்கி வைக்க மறுநாள் பார்த்தால் இன்சுலின் கண்டுபிடிப்பதற்கான வழிமுறையாக இருந்திருக்கிறது அது. அதை செயல்படுத்த அதுவே பின்னர் இன்சுலினானது வரலாறு. இப்படி வியப்புக்கள் கொண்டதாக இருக்கிறது சர்க்கரைநோயின் வரலாறு.

சரி. இன்றைய சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்  v.மோகன் சர்க்கரைநோயினை கட்டுக்குள் வைக்க வழி சொல்கிறார். நினைவில், எளிமையாக வைத்துக் கொள்ளும்படியாக. அந்த சூத்திரம் என்னவென்று பார்ப்போமா!

ஏ.பி.சி.டி ( ABCD )  என்ற பார்முலா. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஏ.பி.சி.டி என்ற தாரக மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வருவது உண்மை. அது என்ன ஏ.பி.சி.டி?

( A) ஏ. ஹெச்.பி.ஏ.1.சி. ( HbA1C)  பொதுவாக மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி அளவு 6 -க்கு கீழ் இருக்க வேண்டும் . சர்க்கரைநோய்க்கு மருத்துவம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 7க்கு கீழ் இருந்தால் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லலாம். 

( B )  பி. Blood Pressure .  இரத்த அழுத்தம் இயல்பான அளவில் கட்டுக்குள் இருக்க வேண்டும்.

( C )  சி. Cholesterol  கொழுப்பினை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.

( D ) டி. Discipline. அதாவது கட்டுப்பாடு. இதுதான் இருப்பதிலேயே மிகவும் முக்கியம். ஆனால் பலருக்கும் கடினமானதுங்கூட. அதாவது நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவம் இவற்றினை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாக சரியாக தவறாது  கடைப்பிடிப்பது. ஆனால் பலரும் இதை பின்பற்றுவதில்லை. அதிலும் மருத்துவர்கள் அதிகம் வலியுறுத்தி சொல்வது நடைப்பழக்கத்தைத்தான். வரலாற்றுக் காலத்தில் இருந்தே சொல்லிவருவதும் இதைத்தான். சோம்பேறித்தனம், அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. யாரிடமாவது சொல்லிப் பாருங்க.  ‘எங்க நேரங்கிடைக்குதுங்க. வேலை சரியாப் போய்டுது. அப்புறம் எங்குட்டு வாக்கிங்க்லாம் போறது.என்ற ரீதியில்தான் பதில் வரும் அவர்களிடமிருந்து.

தேவை இல்லாததுக்கு எல்லாம் நேரம் கிடைக்குமாம். உடல் நலத்துக்கென்று கொஞ்சம் நேரம் கிடைக்காதாம்.

பொதுவாக என்ன சாப்பிடவேண்டும்- என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்த தெளிவு பலரிடம் இல்லை.  அதை இப்படிச் சொல்லலாம். அவரவர்களுக்கு தேவையானதை நியாயப்படுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொள்வார்கள். இதையெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று அவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அந்த டாக்டருக்கு சரியாகத் தெரியவில்லை. யூ டியூப்பில் இப்படி சொன்னார்கள். வாட்சப்பில் சாப்பிடலாம் என்று வந்தது. ஒன்றும் செய்யாது என்று சமாளிப்பார்கள்.

தொடரும்,