செவ்வாய், 6 ஜனவரி, 2026

சிரிப்பையும் பகிரலாமே!

                                                     சிரிப்பையும் பகிரலாமே!

 

அலுவலகத்திலோ, குடும்பத்திலோ உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை. மனஅழுத்தத்தில் இருக்கும்போது வாட்சப்பில் வந்த காணொலி ஒன்றைப் பார்க்கிறீர்கள். அது கவுண்டமணி - செந்திலின் பிரபலமான வாழைப்பழ நகைச்சுவையாகக்கூட இருக்கலாம். ஒருநிமிட காணொலிதான். என்றாலும், பார்த்ததும் உங்களை அறியாமல் மனதுக்குள் லேசான சிரிப்பு வருகிறது. அத்துடன் உங்கள் துயரமும் குறைந்தது போல் உணர்கிறீர்கள். 




 

மனஅழுத்தம் அதிகமாக இருக்கும்போது, இது போன்ற  நகைச்சுவைகளால் நிச்சயமாக ஒரு மாற்றத்தை உணரமுடியும். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது தெரிந்ததுதான். 

 

சிரிப்பு பற்றியும்குறிப்பாக சிரிப்பினை பிறரோடு பகிரும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும்ஹைதராபாத்தின் மூத்த அறிவியல் அறிஞர். டி.பாலசுப்பிரமண்யனும் அண்மையில் இந்து ஆங்கில நாளிதழில் விரிவாக எழுதி இருக்கிறார். ( The biological magic of shared laughter- D.Balasubramanian, The Hindu ; dated- 16-11-22025 ) 

 

நகைச்சுவை செய்யும் அற்புதம்

 

பொதுவாக அறுவைசிகிச்சை என்றால் பெரியவர்களே பயப்படும்போது, குழந்தைகள் பற்றி சொல்லவா வேண்டும். பயமும் பதற்றமும் இருக்கத்தானே செய்யும். ஜெர்மனில்,  மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் குழந்தைகளிடம் அறுவைக்கு முன் கோமாளி மூலம் நகைச்சுவையாகச் சிரித்து பேச வைத்திருக்கிறார்கள். இதற்குப் பின் அந்தக் குழந்தைகளிடையே பதற்றம் வெகுவாக குறைந்து போயிருக்கிறது. அவர்களுடைய உமிழ்நீரை பகுப்பாய்வு செய்ததில் அவர்களுடைய ஆக்சிடாக்சின் அளவும் கணிசமாக உயர்ந்தது தெரியவந்தது. 

இந்த ஆக்சிடாக்சின் ஹார்மோன், ‘பிணைப்பு ஹார்மோன் என்று அழைக்கப்படுவதாகவும். ஒருவரைத் தொடுவதலின் மூலமோசமூக பிணைப்பின்போதோ (Social bonding) இது அதிகரிக்கிறது என்றும் டி.பாலா தெரிவிக்கிறார். நம்பிக்கை உணர்வு அதிகரித்து பாதுகாப்பான சூழலில் இருப்பதாகஒருவர் உணரும்போதும்கூட ஆக்சிடாக்சின் அதிகரிக்கிறதாம். துயரத்தில் இருக்கும் ஒருவருக்கு அரவணைப்பு மூலமும் கைகளைப் பிடித்து நேரில் ஆறுதல் தெரிவிக்கும்போதும்மனஅமைதி கிடைப்பது தெரிந்ததுதான்.

அட்ரீனலின் மற்றும் கார்டிசால் இரண்டுமே மன அழுத்த ஹார்மோன்கள். பதற்றமான சூழலில் இவை அதிகரித்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது கணிசமாகக் குறைவதாக வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பதற்றத்தைக் குறைத்து அமைதிப்படுத்துகிறது.

பின்லாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று சுவையான செய்தியைத் தெரிவிக்கிறது. நண்பர்கள் சிலர் குழுவாக சேர்ந்துநகைச்சுவை வீடியோவைப் பார்த்தவர்களை நேர்மின்னணு உமிழ் பரு வரைவு’ PET Scan ) படம் மூலம் ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள்பகிர்ந்து சிரிப்பதால் அவர்களுடைய மூளையில் உடலுற்பத்தி ஓபியாய்டுகள் (Endogenous opioids) வெளிப்படுவதை கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?

இந்த உடலுற்பத்தி ஓபியாய்டுகள் வலி உணர்வினைக் குறைத்துமன அமைதியுடன் மகிழ்ச்சியாக  இருக்க உதவுகிறது. சமூக உறவில் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது மனஅழுத்தமும் குறைகிறதாம்.

 

பேட்ச் ஆடம்ஸூம் சிரிப்பு மருத்துவமும்

 

1998 - ல் வெளிவந்த பேட்ச் ஆடம்ஸ்’ (Patch Admas), அமெரிக்க மருத்துவர்.ஹண்டர் பேட்ச் ஆடம்ஸ் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்தைக்காட்டிலும் அன்பும் சிரிப்பும்,மனிதநேயமும்தான் மிகப் பெரிய மருந்து என்பதை அழகாகவும் அற்புதமாகவும் இத்திரைப்படம் படம்பிடித்துக் காட்டுகிறது.



மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, சிவப்பு மூக்கினை வைத்துக்கொண்டு கோமாளிபோல ஒப்பனை செய்து, நகைச்சுவை மூலம் மருத்துவ பயனாளிகளை வேறு ஒரு உல்லாசமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார் பேட்ச் ஆடம்ஸ். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாருமின்றி, வார்டுகளில் படுத்திருக்கும் குழந்தைகளைப் பார்த்து இரக்கம் கொண்டு சட்டென தன்னை கோமாளியாக்கிக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் காட்சி அற்புதமானது.  அவர்களுடைய நாள்பட்ட வலிகளைக் குறைக்கச் செய்து மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறார்.

சாப்பிட அடம்பிடிக்கும் நோயாளி ஒருவரின் நூடுல்ஸில் மிதப்பதுபோன்ற’ அவருடைய நீண்டநாள் கனவினை உண்மையாக்க,அந்த வயதான பெண் நோயாளியை செவிலியர்கள்பணியாளர்கள், சக மருத்துவர்களுடன் மருத்துவமனையின் வெளியே பூங்காவில்மிகப்பெரி....ய பாத்திரத்தில் நூடுல்ஸை நிரப்பி அதில் அந்த நோயாளியை மிதக்கவைத்து மகிழும் காட்சி அற்புதம்.

மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரது எதிர்ப்பையும் சமாளித்து வெற்றி பெற்று மருத்துவராவது மட்டுமில்லாமல், தன் கனவான மருத்துவ நடைமுறைக்கு உட்படாத கோமாளி மருத்துவத்தை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினார்.

இந்தத் திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வசூல்ராஜா எம்.பி.பி,எஸ்-ல் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் செய்தி. 



இன்றுநாள்பட்ட உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவர பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மருத்துவக் கோமாளியாக செயல்படுகிறார்கள். மருத்துவமனைகளுக்குச் சென்று புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோயினால் துயரப்படும் குழந்தைகள்நோயாளிகளை குதூகலப்படுத்தி அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படுகிறார்கள். 

 

நலவாழ்வினை மேம்படுத்தும் நகைச்சுவை மன்றங்கள்: 

 

பிரபல பட்டிமன்ற நடுவரும் நண்பருமான பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன், மதுரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மன்றத்தினை தொடர்ந்து நடத்தி வருகிறார். எப்போதும் தன்னைச் சூழ்ந்துள்ள நண்பர்களை சிரிக்க வைப்பார்.

ஸ்டாண்ட் அப் காமெடி’ என்ற பெயர் அப்போது இல்லாவிட்டாலும் அதற்கான மேடைமொழிநடைநாகரீகமான நகைச்சுவை அனைத்துக்குமே அடித்தளமாக இந்த மன்றம் இருந்தது என்றும்விதை இங்கு போடப்பட்டது என்றும் கூட சொல்லலாம்.இன்றைய முன்னணி சின்னத்திரைதிரைக் கலைஞர்களில் சிலர் அங்கிருந்து உருவானவர்கள்தான்.

தொடர்ந்து மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டங்களை நடத்தியும் வருகிறார். குறைந்தது 500 க்கும் மேற்பட்டவர்களாவது கலந்து கொள்கிறார்கள். மாதந்தோறும் கூட்டம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மூன்று வயது குழந்தைகூட கூட்டத்தில் ஜோக் சொல்லி கைதட்டலையும் பரிசையும் பெறுகிறார்கள். கலந்துகொள்ளும் அனைவரும் புத்துணர்ச்சி பெறுவதால்தான் தொடர்ந்து வருகிறார்கள். மன்றமும் தொடர்கிறது. 

வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் நகைச்சுவை மன்றம் தொடங்கிய நாளிலிருந்து மாதந்தோறும் தொடர்ந்து நடைபெறுவது ஒரு மருத்துவமனையில்தான். இதுகூட ஒரு தற்செயலான நிகழ்வுதான்.  இதுபோன்ற நகைச்சுவை மன்றங்கள் பல்வேறு பெயர்களில் பல இடங்களில் இயங்கினாலும் நோக்கம் ஒன்றுதான்.. 

 

வாங்க! பிறரோடு சேர்ந்து சிரிக்க பழகுவோம்.

 

நீங்கள் தனிமையில் சிரிப்பதைக்காட்டிலும்  கூட்டத்தினரோடு சேர்ந்து சிரிக்கும்போது உறவு பலப்படுகிறது. சிம்பன்சியும் இதர குரங்கு இனங்களும் தங்களுக்குள்ளே உறவினை வலுப்படுத்துவதற்கு சிரிப்பையே கருவியாக பயன்படுத்துகின்றனவாம். 

சிரிப்பானது சமூக உறவில் பிறருடன் சேர்ந்து பகிரப்படும்போது - கூட்டாக சேர்ந்து சத்தமாக  சிரிக்கும்போது ஒருவருக்கொருவர் பெறும் ஒத்திசைவு சமூக பிணைப்பை வலுப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும் மனநிலையை மேம்படுத்தி அமைதியையும் ஏற்படுத்துகிறது.

இது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம். குழந்தைகள், பெரியவர்கள் கையில் செல்போனோடு தனிமையான இடங்களுக்கு சென்றுவிடுகிறார்கள். தனிமையில் அதற்கு செலவிடும் நேரமும் அதிகமாகிவிட்டது. கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல் உங்களுக்கு எவரிடமிருந்தாவது வரப்பெற்ற நகைச்சுவை வீடியோ கிளிப்பிங்கை பார்த்து சிரித்து நீங்கள் மகிழலாம். ஆனால் தனிமையில் சிரிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். உறவுகள் மேம்பட சிரிப்போம் நண்பர்கள்உறவினர்களுடன் சேர்ந்து கூட்டாக. வாங்க! பிறரோடு சேர்ந்து சிரிக்க பழகுவோம். 

 

 

 

 

 

 

 

 

 

  

 

வியாழன், 1 ஜனவரி, 2026

2026

 புத்தாண்டு பிறந்துவிட்டது 



 

2026  ஐ மகிழ்வான செய்தியோடு தொடங்குவோம்.

 

சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சில நிகழ்வுகளில்முக்கியமானது என்றால், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டகுழந்தைகள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதுதான். நடைமுறைக்கும் வந்துவிட்டது.

பிறநாடுகளுக்கு முன்னுதாரணமான நிகழ்வு. அற்புதமான முடிவு.

இதைப் பார்த்த உடனேயே டென்மார்க்கும்மலேசியாவும்கூட தத்தம் நாடுகளில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்திருப்பது மேலும் வரவேற்கத்தக்க நிகழ்வாகத்தான் இருக்கிறது.

 

• செல்போன் பயன்பாட்டால்இளவயதில் சர்க்கரைநோய் பாதிப்பு - அதுவும் பள்ளி மாணவர்களிடையே.

 

• இளம்பருவத்தினரிடயே அதிகரிக்கும் கிட்டப்பார்வைகுறைபாடு- இதற்கும் செல்போனின் அதிகப்படியான பயன்பாடுதான் காரணம்

 

 

• கரோனாவுக்குப் பிறகு குழந்தைகளிடையே ஆட்டிசம் மாதிரியான குறைபாடுகள் அதிகரித்து வருகிறதாகற்றலில் பிரச்சினையாஎன்கிற அய்யம்.

இவை அனைத்துக்குமே செல்போன்தான் காரணம்.

 

செல்போன் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்துவது குறித்து பலரும் பேசிவருவதும் நல்ல மாற்றத்துக்கான வெளிப்பாடு.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவைப் போன்று, இங்கும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அறிவுறுத்தி இருக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக, முக்கியமான நிகழ்வாகத்தான் இதைப்பார்க்கவேண்டி இருக்கிறது..

 

ஏற்கனவே நாம் சொல்லியதுதான்ஓடியாடி விளையாடுதான் இதற்கு நல்ல தீர்வு. இது இயக்கமாக மாற வேண்டும்

2026- ன் தொடக்கத்தில் இருந்தே இதை செயல்படுத்த தீவிரமாக சிந்திப்போம்.

 

 

 

புதன், 17 டிசம்பர், 2025

கண்ணைக் காக்கும் சொட்டு

                    கண்ணைக் காக்கும் - சொட்டு 

 



இந்த கண்ணுக்கு போடற சொட்டு மருந்தை யாரையாவது கூப்பிட்டு என் பையனுக்கு இரண்டு சொட்டு போடச் சொல்லுங்க. முரட்டுத்தனமா சொட்டுமருந்து போட்டா கண்ணில் குப்பி பட்டு செப்டிக் ஆயிடும். இதில் ஓட்டை போடறதுக்கு பின்னை எடுத்து போடும்போது துரு பிடிச்சிருக்கான்னு பார்த்து போடச் சொல்லுங்க. இல்லைன்னா அதனால் வேற பிரச்சினை வந்துடும்குப்பியைத் திறந்து என் பையனுக்கு போட்டு விடுங்க.” ‘ஒத்த செருப்பு’ படத்தில் பார்த்திபன் காவல்நிலையத்தில் பேசும் காட்சிதான் இது. 

இது உண்மைதான். பல சமயங்களில் குப்பியைப் பிரித்த பிறகு மருந்து வெளியே வராது. அப்போதெல்லாம் குப்பியில் ஓட்டை போடுவதற்கு கையில் கிடைக்கும் ஊசி போன்ற ஏதாவது பொருளை எடுத்து குத்த வேண்டி இருக்கும். மருந்து சுத்தத்தை பற்றி தெரியாமல் பலரும் இப்படி கையில் கிடைத்ததை, எடுத்து குத்தி ஓட்டை போட்டுத் திறப்பார்கள். இதனால் மருந்தின் தரம் கேள்விக்குறியாகிறது.

மருந்துக்குப்பியைத் திறப்பதற்கு எளிய வழிகுப்பியின் மூடியைப் பிரித்தபிறகு மூடியை அழுத்தமாகத் திருகி அதன்பின் மூடியைத் திறந்து போட்டால் சொட்டுமருந்து எளிதாக வரும். சில வகை மருந்து - குறிப்பாக ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து பால்போன்று இருக்கும். அதுபோன்ற மருந்தினை, கண்ணில் போட்ட பிறகு அதன் எச்சங்கள் தயிர்திரிந்தது போன்று சிறிது கண்ணிமை ஓரத்தில் தங்கி இருக்கலாம். பார்ப்பதற்கு கண்பீளை மாதிரி தோன்றும். பயம் வேண்டாம்.

 

அடுத்தடுத்த சொட்டு மருந்து உடனுக்குடன் வேண்டாம்.

 

இரயில் புறப்படுவதற்குள் கண்ணில் சொட்டுமருந்து போட்டு விடவேண்டும் என்ற அவசரம் அந்த பெரியவருக்கு. அவசர அவசரமாக சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தார். சொட்டு மருந்து கண்ணுக்குள்ளேயே விழவில்லை. விழுந்தது என்னமோ கீழ் இமையோரத்தில். அடுத்து டபக்கென்று இன்னொரு சொட்டுமருந்தையும் போட்டார். அதுவும் அப்படித்தானே விழும். சொட்டுமருந்தை எப்படிப்போட்டால் என்னஅவரைப் பொறுத்த வரை கண்ணுக்கு சொட்டுமருந்து போட வேண்டும். அவ்வளவுதான்! 

அந்த சொட்டுமருந்து கிளாக்கோமாவுக்கானது. அதாவது கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்குரியது. மருந்து கண்ணுக்குள் செல்லவேயில்லை. பின் எப்படி அது வேலை செய்யும். மேலும் ஒரு மருந்தை போட்டவுடனேயே அடுத்த சொட்டு மருந்தினை போட்டால் அது எப்படி கண்ணுக்குள் செல்லும். சிறிது நேர இடைவெளியாவது வேண்டாமா.

ஒன்றுக்குமேல் சொட்டுமருந்து போட வேண்டியிருந்தால் ஒரு மருந்தைப் போட்டபிறகு இரண்டு - மூன்று நிமிடங்களுக்கு பிறகுதான் அடுத்த சொட்டுமருந்தினைப் போட வேண்டும். மருந்தைப் போட்டபிறகு கண்ணை சில விநாடிகள் மூடி இருப்பது நல்லது. மருந்தை கண்ணில் போடும்போது வேகமாக கண்ணிமைகளை இறுக்கி மூடக்கூடாது. அப்படி உடனே கண்ணிமைகளை இறுக்கி மூடினால் - கண்ணில் போட்ட மருந்தில் பெரும்பாலானவை வெளியேறிவிடும். மருந்துபோட்டும் பயனில்லை.

கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் ஏறக்குறைய ஒருமாதம்போல் கண்ணில் சொட்டு மருந்துபோட வேண்டி இருக்கும். மருத்துவமனையில் எத்தனை தடவை, எப்படி போட வேண்டும் என்று தெளிவாக சொல்லி அனுப்புவார்கள்.  

மறு பரிசோதனைக்கு வரும்போது அறுவைசிகிச்சை செய்த கண் தெளிவாக இருக்கும். எந்தவித தொற்றும் பெரும்பாலும் இருக்காது. இருக்கக்கூடாது. மறுசோதனைக்கு வரும்போது சிலருக்கு கண்ணில் சிகப்புடன் பீளை சேர்ந்து இருக்கலாம். அவர்களிடம் மருந்து நீங்களாகவே போட்டீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வார்கள். வீட்டில் மருந்து போட்டுவிட யாருமில்லை என்று சொல்வார்கள். இல்லையென்றால் நானாக போட்டுக்கொள்வதுதான் பழக்கம் என்று சொல்வார்கள், இப்படி அவர்களாகவே சொட்டு மருந்தினை போட்டுக் கொள்ளும்போது கண்ணுக்குள் சரியாக போகாததால் நலமாவதில் பிரச்சினை ஏற்படும். 

கண்நீர் அழுத்த உயர்வு (கிளாக்கோமா), உலர் கண் போன்ற சிலவகை கண் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்துபோட வேண்டியது சிலரது வாழ்வில் தவிர்க்க முடியாதது. அவர்கள் மருந்து போடும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குப்பியினுள் மருந்து எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க முடியாதது போல்தான் குப்பிகள் இருக்கின்றன. உள்ளே இருக்கும் மருந்தை வெளியில் இருந்து பார்த்தால், தெரிவதற்கு ஏற்ப குப்பி கண்ணாடிபோல் ஒளி ஊடுருவுந்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இதனால் என்ன பயன் என்றால் சில வகை சொட்டுமருந்துகளின் விலை அதிகமாக இருக்கின்றன. சொட்டு மருந்து போடும்போது வீணாகாமல் கவனமாக போட இது உதவும். சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சொட்டுமருந்து இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

 

சொட்டுமருந்து போடப்போகிறீர்களா...

  • கண்ணின் கீழ் இமையை லேசாக கீழே இழுத்து, கண்ணின் கருவிழியில்படாமல் அதற்கு கீழே உள்ள வெள்ளைப்பகுதியில் இரண்டு சொட்டு போட வேண்டும். 
  • மருந்தினை யார் போடப்போகிறார்களோ அவர்களுக்கு விளக்கமாக சொல்லிப் போடச் சொல்ல வேண்டும். படுத்துக்கொண்டோசாய்ந்து உட்கார்ந்துகொண்டோ மருந்து போட்டுக்கொள்ளலாம்.  
  • சொட்டு மருந்தின் துவாரப் பகுதியினை கையால் தொடக்கூடாது. சொட்டுமருந்தின் தரம் கெட்டுப்போய்விடலாம்.
  • சில சொட்டு மருந்துகள் பால் மாதிரி இருக்கும். அது போன்ற மருந்தினை போடுவதற்கு முன் குப்பியை ஒருமுறை குலுக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். 
  • கண்பிரச்சினை சரியான பிறகுசொட்டு மருந்து மீதம் இருந்தால் தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். காசுபோட்டு வாங்கியது எப்படி தூக்கி எறிவது என்ற நினைப்பு வேண்டாம். இல்லையென்றால் வீட்டில் வேறு ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும்போது அதை எடுத்து பயன்படுத்தத் தூண்டும்.
  • இன்னொருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்தினை எக்காரணம் கொண்டும் வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. அவசரத்துக்கு போட்டுக்கொண்டு அப்புறமாக மருத்துவரிடம் செல்லலாம் என்ற நினைப்பும் வேண்டாம். காரணம் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. பிரச்சினையை அறிந்து அதற்கேற்ற மருந்தினை பயன்படுத்துவதுதான் சரியான அணுகுமுறை. பார்வைக்கும் பாதுகாப்பு.
  • சொட்டுமருந்துக் குப்பியைத் திறந்த ஒருமாதத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த குப்பிமருந்தினை பயன்படுத்தக்கூடாது. அதன் பின் தேவையிருந்தால் புதிதாக ஒன்று வாங்கிக் கொள்ளலாம். 

 

கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீங்களாகவே மருந்துக்கடையில்போய் பிரச்சினையைச் சொல்லி மருந்து வாங்கிப் போடுதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. அப்போதும் மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்துக்கடையில் இருந்து, மருந்து வாங்கி இருக்கிறோமா என்று மருத்துவரிடம் சரிபார்த்த பிற்கு பயன்படுத்துவதுதான் கண்களுக்கு பாதுகாப்பானது.

---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை.