வெள்ளி, 30 ஜனவரி, 2026

நலவாழ்வளிக்க வந்த காந்தி

நலவாழ்வளிக்க வந்த காந்தி

( இன்று காந்தி மறைந்த நாள். ஜனவரி-30 )

 

            சுத்தம் என்பது இறைவனுக்கு அடுத்த நிலை

          A black and white drawing of a person carrying a pot

AI-generated content may be incorrect.

 

நாகரீக உடை உடைத்தி, உயர்தர குளிர்கண்ணாடி அணிந்துகொண்டு கையில் நீண்ட துடைப்பத்தை, முதன் முதலாக கையில் பிடித்துக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ்’ கொடுக்கும் அரசியல்வாதியை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நேற்று இன்று நாளை’ யிலும் அது போன்ற காட்சி உண்டு.

ஆனால் அதைப்போலவே மேற்கத்திய உடையில்கோட்-சூட்டுடன் கையில் துடைப்பத்தைப் பிடித்து அங்கிருந்த அசுத்தங்களையும் கழிவுகளையும் அகற்றிக் கொண்டிருந்தார் அவர். 

1901-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான், கழிவுகளால் துர்நாற்றமாய் இருந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த மனிதர். தொண்டர்களும் பிரதிநிதிகளுமாய் நிரம்பியிருந்த மாநாட்டில்வந்திருந்த பிரதிநிதிகள் தங்கியிருந்த பகுதிகளில், சிலர் கழிப்பறைகளை சரியாக பயன்படுத்தாமல் திறந்தவெளிகளில் அசுத்தம் செய்ததால்தான் அந்த மோசமான சூழல். துர்நாற்றம்.

அதைப்பார்த்துக் கொண்டு அந்த மனிதரால் சும்மா இருக்க முடியவில்லை. அங்கிருந்த தன்னார்வலர்களிடம் சுத்தம் செய்யச் சொன்னபோது , ‘இது எங்கள் வேலை இல்லைதுப்புரவுத்தொழிலாளிகளின் வேலை அது’ என்று மறுத்துவிட்டார்கள். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? நமக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு 100 அடித்தள்ளி சுற்றிப் போயிருப்போம். 

ஆனால் அந்த துர்நாற்றம் வீசும் சூழலைப்பார்த்து, துளியும் தயங்காமல் துடைப்பத்தைத் தேடி எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார் அந்த அரை ஆடை மனிதர். ஆம்! தேசத்தந்தை மகாத்மா காந்தியேதான்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி, பிரதிநிதியாக கலந்து கொண்ட முதல் மாநாடு அது. நமக்குத் தெரியும் காந்தி அப்போது மேற்கத்திய உடைகளை அணிந்திருந்த காலம். கோட்சூட்டுடன் அவர் துடைப்பத்துடன் சுத்தம் செய்வதை ஒரு நிமிடம் கண்ணை மூடி அந்த காட்சியை நினைத்துப் பாருங்கள். கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல் இது ஒன்றும் சில திரைப்படங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற காட்சி அல்ல.

பலரும் அன்று அவரை ஏளனமாகத்தான் பார்த்தார்கள்.  உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. பின்னாளில் காந்தி செய்த தூய்மை பணிக்கு அதுவே தொடக்கம்

 

தூய்மை குறித்த சிந்தனை

 

வியப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கு ஏன் வந்தது? அவருக்கு துப்புரவு தூய்மை குறித்த சிந்தனை ஈடுபாடு எங்கிருந்து கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்வினைப் பார்க்க வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து அன்று நிலவியது. ஆங்கிலேயர்கள் அவர்களை பாகுபடுத்தவே அது காந்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் காந்தி, இந்தியர்களிடம் அவர்களுடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். அவரவர் சுத்தத்தை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதானே உண்மை! காந்தி அந்தக் கருத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். பிற நாடுகளில் அப்படித்தானே இருக்கிறது. 

ஒருமுறை ஜோகன்னஸ்பெர்க்கில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் பிளேக் நோய் கடுமையாக பரவி சிலர் இறந்தபோது நகராட்சி, அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் காந்தி உடனே களத்தில் இறங்கி இருக்கிறார். நிவாரணப்பணியோடு மருத்துவ உதவிகளையும் செய்திருக்கிறார். இதன்மூலம் அவருக்கு ஆழமான அடிப்படைச் செய்திகள் கிடைத்திருக்க வேண்டும். இதை ‘கறுப்பு பிளேக்’ என்றே தன் சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த அனுபவம் பின்னாளில் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது. அது தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா வந்த சமயம். பம்பாயில் ‘பிளேக் நோய்’ தீவிரமாக இருந்தபோது காந்தியடிகள், தானே வலியப்போய் சுகாதாரக் குழுவினருடன் சேர்ந்து சுற்றுப்புறத்தை சுத்தமாக்க கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். வீடு வீடாக சென்று கழிப்பறையை ஆய்வு செய்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தைக் கூறி அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியதாக, தம் சுயசரிதையில் கூறுகிறார். 

‘இந்தியர்கள் சுத்தத்தைக் குறித்து கவலைப்படமாட்டார்கள், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க மாட்டார்கள்’ என்று இந்திய சமூகத்தின் மீது அந்தக்காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை, பொய் என்று நிரூபிக்க அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் ராஜ்கோட்டில் பிளேக் நோய் வராமல் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதிலும் தீவிரம் காட்டி இருக்கிறார்.

தூய்மையின் அவசியத்தை உணர்ந்த காந்தி, பின்னாளில் இந்திய தேசிய காங்கிரஸில் ஐக்கியமாகியபோது துப்புரவு பணிகளுக்கென்றே குழுக்களையும் உருவாக்கினார்.

 

பொது இடங்களில் சுகாதாரம்?

      

தூய்மை என்பது தனிநபர் ஒழுக்கம் மட்டுமல்லஅது சமூகக் கடமை

 

கரோனாவைக்கூட சமாளித்து எழுந்துவிட்டோம். ஆனால் இன்னும் நம்மால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கமுடியவில்லை. தொடர்ந்து போராட்டம்தான். பொது இடங்களில் இருமும்போது வாயை மூடிக்கொள்ளும்படிசுகாதாரத்துறையினர் கத்தி’,கத்தி சொல்லி வருகிறார்கள். 

ஆனால் வியப்பான செய்தி, ஒரு மருத்துவராக இல்லாத போதும் காந்தி இது குறித்து 1919-லேயே பேசி இருப்பதுதான்.

நவஜீவனில் அவர் எழுதுகிறார்:

தெருக்களில் யாரும் எச்சில் துப்பவோ, சளியை சீந்தவோ கூடாது என்கிறார். அப்படி செய்வதன் மூலம் காசநோய் போன்ற கிருமித்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக சொல்கிறார்.

அப்படி துப்பினால் சளியை மண்கொண்டு மூடச் சொல்கிறார். வெற்றிலை, புகையிலை மென்று கண்ட கண்ட இடங்களில் துப்புவது குறித்து வருத்தப்படுகிறார். அருகில் இருப்பவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லையே என்று.

இன்று டெங்கு மலேரியா, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. வியப்பு என்னவென்றால் அன்றே அதை அவர் செய்திருப்பதுதான். நவஜீவனில் அவர் மேலும் சொல்கிறார்: 

மலேரியா ஒரு பிரச்சினையாக இருந்தபோது, பள்ளம் இருந்தால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் என்பதால் பள்ளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். மேலும் பிளேக் போன்ற நோய்கள் பரவுவதற்கு சுற்றுப்புற சுகாதாரமின்மையும் தன்சுத்தம் இல்லாமையும் தான் காரணம் என்று சொல்லி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படித்தவர்களை அழைக்கிறார்.

 

இரயில்வண்டிகளில் சுத்தம்

 

இரயில்வண்டிகளிலும், பொதுஇடங்களில் உள்ள பொது கழிப்பறைகளையும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டித்தார். அன்றையகாலத்தில்தான் அப்படி இருந்ததுபோலும் என்று இருந்துவிட முடியவில்லை. 

அதிநவீன வந்தேபாரத்தில் அண்மையில் சென்றபோதும் அதே நிலைமைதான். ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்து வருபவர்கள் பயன்படுத்துவார்களே என்ற நினைப்பு சிறிதும் கிடையாது. 

பல்துலக்குவது, குளிப்பது போன்று பொதுசுகாதாரத்திலும் கவனம் செலுத்தச் சொல்கிறார். சுத்தத்திற்கும் உடல்நலத்துக்கும் உள்ள தொடர்பை தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளார். 

படித்தது சட்டம், என்றாலும் சுகாதாரத்தின் மீதும் உடல்நலத்தின் மீதும் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்த காந்தி- சுயாட்சி அடைவதற்கான 18 அம்ச ஆக்கபூர்வமான திட்டத்தில் கிராமப்புற சுகாதாரம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை முன்னிலைப்படுத்திய காந்தி-சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்த காந்தி - மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களை விமர்சித்திருந்தாலும் அங்கிருந்தே சுகாதாரத்தை கற்றுக்கொண்டதாக அவர் சொல்லத் தயங்கியதேயில்லை. 

சுதந்திரத்தைவிட சுகாதாரமே முக்கியம் என்றும், ஒவ்வொருவரும் தமது அழுக்கினை தாமே சுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்ன காந்தி சொல்கிறார், ‘நான் யாரையும் அழுக்கு கால்களால் என் மனதின் வழியே நடக்க அனுமதிக்க மாட்டேன்’ என்று.

 

அன்றைய காந்திய சிந்தனையும் இன்றைய தூய்மையும்

         

தங்கத்தைக் காட்டிலும் ஆரோக்கியமே உண்மையான செல்வம்.

 

                         A silhouette of a person walking with a cane

AI-generated content may be incorrect.

 

சிந்துவெளி, மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கு உடல்தூய்மையில் இருந்த கவனம்சுகாதாரத்தில் இருந்த அறிவு, நமக்கு இல்லாமல் போய்விட்டதா அங்கு நடைபெற்ற அகழாய்வுச் செய்திகள் கிடைத்த கட்டிடங்கள் - குறிப்பாக கழிவுநீர்க்கால்வாய்கள் முழுவதும் செங்கல் தகடுகளால் மூடப்பட்டிருந்தது என்றும் தனியாக குளியலறை இருந்ததாகவும்மக்கள் உடல்தூய்மையில் அதிக கவனம் செலுத்தி இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிப்பதை அறியும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. 

அது மட்டுமல்ல. பொதுகுளியல் தொட்டியும் இருந்திருக்கிறது.  அதில் இருந்து நீர் வெளியேற வடிகால் அமைப்பு இருந்ததும், ஒவ்வொருவீட்டில் இருந்தும் வெளியேறும் வடிகால், குழாய் மூலம் தெருவில் இருந்த மூடிய வடிகால்களுடனும் இணைக்கப்பட்டிருந்ததும் எப்போற்பட்ட பொதுசுகாதார சிந்தனை?.

‘உடல் ஆரோக்கியம், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்து துவங்குகிறது, என்று காந்தி சொன்ன செய்திகள்  இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது வருத்தமான செய்திதான்.  அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாகவே அவரால் 1905 காலகாட்டத்தில் ‘இந்தியன் ஒப்பினியனில்’ ஆரோக்கியம் குறித்து  ‘ஆரோக்கிய வழி என்ற தலைப்பில்  கட்டுரைகளை எழுத முடிந்தது. பின்னர் அதுவே ‘ஆரோக்கியத் திறவுகோல் என்ற பெயரில் நூல் வடிவமும் பெற்றது. 

அந்த அரை ஆடை மனிதர் தூய்மைபொதுசுகாதாரத்தின் மீது காட்டிய அளப்பரிய ஈடுபாட்டின் காரணமாக இந்திய அரசு 2014-ல் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 2-ல் நாடுதழுவிய திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தியது எத்தனைபேருக்குத் தெரியும்?

சரிஇந்தத் திட்டம் தொடங்கியபிறகு தூய்மையின் இன்றைய நிலைமைதான் முன்னேறி இருக்கிறதாஅதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கிறதா?

சாலைகள்தெருக்கள் வீட்டுப்பகுதிகள் என்று எங்குபார்த்தாலும் குப்பைகள். பலரும் குப்பைத் தொட்டிக்கு அருகில் வரை வந்துவிட்டு எட்ட நின்று அங்கிருந்தே குப்பைகளை வீசி எறியத்தானே செய்கிறார்கள். 

நீர் நிலைகளையும் விட்டு வைக்கவில்லை. பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்பாட்டில்களையும்உடுத்திய ஆடைகளையும், இதர குப்பைகளையும் குளங்கள்ஆறுகளில் தூக்கி வீசி மாசுபடுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

பொதுசுகாதாரத்தின் அடிப்படையே வருமுன்காப்போம்’ என்பது தான். அதில் உறுதியாக இருந்திருக்கிறார் காந்தி.  கழிப்பறை சுத்தமே ஆரோக்கியத்தின் அடிப்படை என்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும்படியும், காந்தி வலியுறுத்திய கருத்துக்களை முழுமையாக நிறைவேற்றும்போதுதான் தூய்மை இந்தியாவும் முழுமையாக நிறைவேறும். 

                                                                 A black and white silhouette of a person's face

AI-generated content may be incorrect.

 

 

செவ்வாய், 13 ஜனவரி, 2026

அடுப்பங்கரையில் அம்மிக்கு என்ன வேலை?

அடுப்பங்கரையில் அம்மிக்கு என்ன வேலை?

 

கட்டுரையின் தலைப்பை அறிவித்ததும் உடனே வந்த கமெண்ட்ஸ், ‘அடுப்பங்கரையில் அம்மையாருக்கே வேலை இல்லையே? பின் அம்மிக்கு அங்கு என்ன வேலை?’ என்பதுதான்.  அதுவும் சரிதான். 

“ஆசாரியாரே எங்க வீட்டுலேயும் ஆறுமாசத்துக்கு முன்ன அடுக்கள வேலை நடந்து, அம்மி ஆட்டுரல தூக்கி வெளிய போட்டாச்சு. காலம் மாறுதுல்ல...இப்பல்லாம் யாரு ...”. வெளிநாட்டில் இருக்கும் பிள்ளை அனுப்பிய பணத்தில், வீட்டை மறுசீரமைப்பு செய்யும்போதுதான் இந்தப்பேச்சு வரும். தினமணிகதிரில் படித்த கதை இது. எழுதியவர் பெயர் நினைவில்லை.

 

                                                    

கதை அல்ல. இது உண்மைதான். வீடுகளில் அம்மிக்கு இன்று இடமில்லை. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்று பேசுகிற மொழிகளில்தான் அம்மி’ இருந்து கொண்டிருக்கிறது. பழையவீட்டில் அம்மி இருந்தாலும், புதுவீடு கட்டிப்போகும்போது,தேவையில்லாத பொருளாக கழித்துவிட்டுத்தானே செல்கின்றனர்.

குழம்புக்கும், கூட்டுக்கும் மசாலா பொருட்கள் அரைக்க, துவையல் அரைக்க அம்மிதான் சிறந்தது.

காலையில் இட்லி - தோசைக்கு சட்னிமிளகாய்சட்னி தேவை என்றால் அதற்கும் தனியாக அரைக்க வேண்டும். மதியம் குழம்புகூட்டு பொரியல்ரசத்துக்கும் அரைப்பு உண்டு. எத்தனை தடவை அரைப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். அன்று யாரும் சுணங்கியதே கிடையாது. நிமிடத்தில் அரைத்து எடுப்பார்கள்.

இப்படி அரைப்பது தனி சுகம் தான். தேங்காய் சில்லைவைத்து தட்டி அரைப்பதும்ரசத்துக்கு மிளகு சீரகம் வைத்து நுணுக்குவதும் கலைநயமிக்க வேலை. சிதறாமல் சீராக அரைக்க வேண்டும். தேங்காயோ - மிளகு சீரகமோ, அரைக்கும்போது முதல் அடி தட்டிக்கொடுக்கும் மெல்லிய அடியாக இருக்கும். பக்குவமான அடி. இரண்டு மூன்று தட்டலுக்குப்பிறகே குழவி வேகம் பிடிக்கும், வண்டியைப்போல. எடுத்தவுடன் வேகத்தைக் காட்டினால் சிதறிவிடும்.

ஒவ்வொருமுறை குழவிக்கல்லை முன்னும் பின்னும் உருட்டி அரைக்கும்போதும் அரைபடும் பொருட்கள் வெளியே சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மிக்கு ஏற்ற அளவிலேயே பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, சேர்த்து சேர்த்து அரைக்க வேண்டும். 

வேகமாக அரைத்தால், அம்மியை விட்டு குழவி வெளியே கீழே விழுந்துவிடும். ஆனால் நம் வீட்டுப் பெண்மணிகள் அரைக்கும்போது ஒருபோதும் அப்படி நிகழ்ந்ததில்லை. குழவி சீராக முன்னும் பின்னும் சென்று வரும். அதே மாதிரி அரைபடும் பொருட்களும் தேவையில்லாமல் சிந்தாமல்தான் அரைப்பார்கள். 

                                                              A person using a black cylinder to grind food

AI-generated content may be incorrect.

அரைத்து முடித்ததும் குழவியை நிமிர்த்தி, அரைத்த பொருட்களை வழித்து எடுத்து கழுவுவதும் அற்புதமாக இருக்கும். கழுவி எடுக்கும், முதல் தன்ணீரை மசாலாவுக்கோ சட்னிக்கோ தேவை என்றால் பக்குவமாக எடுத்து பாத்திரத்தில் சேகரித்து வைத்துக்கொண்டு அதற்குப் பின் அம்மியை கழுவிவிடுவார்கள்.

அரைத்து முடிப்பது ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, அதுவும் ஒருவகை மெடிட்டேசன்தான். மனம் ஒருமுகப்படும். அரைப்பதில் வல்லமை வந்துவிட்டால் நிதானமும் பக்குவமும் கூடவே வந்துவிடும். மன அழுத்தம் இருந்தாலும் போயே போய்விடும்.  

இப்போதுபோல் மின்சாரம் தடைபட்டு குழம்புக்கு மிக்ஸி அரைக்க முடியாமல் போய்விட்டால் தலையில் கைவத்து உட்கார வேண்டியதில்லை. ஆன்லைனில் ஆர்டர் போட்டு சமாளிக்கலாம் என்ற தேவையும் அன்றைய அம்மியில் கிடையாது. கைவலிஉடம்புவலி என்றாலும் அரைப்பார்கள் பெண்கள். இன்று அம்மிக்கு லீவு என்று, ஒருநாளும் நடந்தது கிடையாது. ஒருவேளை அம்மாவுக்கு முடியவில்லை என்றால் பிள்ளைகள் அரைப்பார்கள். போம்மா எனக்கு வேலை இருக்கிறதுபடிக்க வேண்டும்பழக்கமில்லை என்றெல்லாம் சொன்னதில்லை. யாரும் கையைப்பிடித்து அரைக்க சொல்லிக் கொடுத்ததுமில்லை. பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம் ஒன்றுதான்.

அம்மிக்கல் வழுவழுப்பாகிவிட்டால் அதைக் கொத்த வேண்டும். அம்மி கொத்தலையோஅம்மி கொத்தலையோ என்று அம்மி குத்துபவர் அன்று தெருவீதிகளில் வருவார்கள். அம்மிக்கல்லைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நாளடைவில் அம்மி தேய்ந்து வழுவழுப்பாகி அரைப்பதற்கு ஏதுவாக இல்லாமல் போய்விடும். மீண்டும் அதை சொரசொரப்பாக்குவதே இந்த அம்மிக்குத்தல். 

கல்தச்சர் ஒரு உளியைக் கொண்டு சீராக அம்மிக்கல் முழுவதும் குத்துவார். இதன் மூலம் கல்சொரசொரப்பாகி நன்றாக அரைபடும்.

அம்மியில் அரைத்து செய்யும் சமையலின் ருசியே தனிதான். எப்படி தேங்காய் எண்ணெய் சமையலுக்கென்று தனி மணமும்ருசியும் இருக்கிறதோ அதுபோன்று அம்மி சமையலுக்கும் தனி ருசி இருக்கிறது.

அண்மைக்காலமாக சில ஹோட்டல்களில் ‘இங்கு அம்மியில் அரைத்த மசாலாபொருட்களால் ஆன சமையல் என்று எழுதிப்போட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கையடக்கமான சிறு கருங்கல் அம்மிகள் தற்போது கிடைக்கின்றன. பைபாஸ் சாலைகளில் கடைகளின் வெளியே விற்பனைக்கு வைத்திருப்பதைப் பார்க்கலாம். 

எல்லாம் சரிதான். மாறிவிட்ட இந்த இயந்திர உலகில், பெரிய அம்மிக்கல்லில் அரைப்பது என்பதெல்லாம் தேவையா? நினைத்தே பார்க்க முடியாது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இந்த நிலையில் சிறு அம்மிக்கல்லை வாங்கிக் கொள்ளலாம். எடைகுறைவுதான். எடுத்துப் பயன்படுத்த மிக எளிதுதான். குறைந்த அளவில் சட்னி போன்றவைகளுக்காகவது பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. 

அம்மி. அந்தக்காலத்து பாரம்பரிய மிக்‌ஸி. பல நூற்றாண்டுகளாக நம் வீட்டு அம்மா- பாட்டிமார்களின் கைகளில் தாண்டவமாடிய உயிர்ப்பான கல். அதோடு அம்மி என்பது நம் தமிழர் வாழ்வோடு தொடர்புடையது. அம்மி இருந்தால்தான் அது, வீடு. 

 

வியாழன், 1 ஜனவரி, 2026

2026

 புத்தாண்டு பிறந்துவிட்டது 



 

2026  ஐ மகிழ்வான செய்தியோடு தொடங்குவோம்.

 

சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சில நிகழ்வுகளில்முக்கியமானது என்றால், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டகுழந்தைகள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதுதான். நடைமுறைக்கும் வந்துவிட்டது.

பிறநாடுகளுக்கு முன்னுதாரணமான நிகழ்வு. அற்புதமான முடிவு.

இதைப் பார்த்த உடனேயே டென்மார்க்கும்மலேசியாவும்கூட தத்தம் நாடுகளில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்திருப்பது மேலும் வரவேற்கத்தக்க நிகழ்வாகத்தான் இருக்கிறது.

 

• செல்போன் பயன்பாட்டால்இளவயதில் சர்க்கரைநோய் பாதிப்பு - அதுவும் பள்ளி மாணவர்களிடையே.

 

• இளம்பருவத்தினரிடயே அதிகரிக்கும் கிட்டப்பார்வைகுறைபாடு- இதற்கும் செல்போனின் அதிகப்படியான பயன்பாடுதான் காரணம்

 

 

• கரோனாவுக்குப் பிறகு குழந்தைகளிடையே ஆட்டிசம் மாதிரியான குறைபாடுகள் அதிகரித்து வருகிறதாகற்றலில் பிரச்சினையாஎன்கிற அய்யம்.

இவை அனைத்துக்குமே செல்போன்தான் காரணம்.

 

செல்போன் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்துவது குறித்து பலரும் பேசிவருவதும் நல்ல மாற்றத்துக்கான வெளிப்பாடு.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவைப் போன்று, இங்கும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அறிவுறுத்தி இருக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக, முக்கியமான நிகழ்வாகத்தான் இதைப்பார்க்கவேண்டி இருக்கிறது..

 

ஏற்கனவே நாம் சொல்லியதுதான்ஓடியாடி விளையாடுதான் இதற்கு நல்ல தீர்வு. இது இயக்கமாக மாற வேண்டும்

2026- ன் தொடக்கத்தில் இருந்தே இதை செயல்படுத்த தீவிரமாக சிந்திப்போம்.

 

 

 

புதன், 17 டிசம்பர், 2025

கண்ணைக் காக்கும் சொட்டு

                    கண்ணைக் காக்கும் - சொட்டு 

 



இந்த கண்ணுக்கு போடற சொட்டு மருந்தை யாரையாவது கூப்பிட்டு என் பையனுக்கு இரண்டு சொட்டு போடச் சொல்லுங்க. முரட்டுத்தனமா சொட்டுமருந்து போட்டா கண்ணில் குப்பி பட்டு செப்டிக் ஆயிடும். இதில் ஓட்டை போடறதுக்கு பின்னை எடுத்து போடும்போது துரு பிடிச்சிருக்கான்னு பார்த்து போடச் சொல்லுங்க. இல்லைன்னா அதனால் வேற பிரச்சினை வந்துடும்குப்பியைத் திறந்து என் பையனுக்கு போட்டு விடுங்க.” ‘ஒத்த செருப்பு’ படத்தில் பார்த்திபன் காவல்நிலையத்தில் பேசும் காட்சிதான் இது. 

இது உண்மைதான். பல சமயங்களில் குப்பியைப் பிரித்த பிறகு மருந்து வெளியே வராது. அப்போதெல்லாம் குப்பியில் ஓட்டை போடுவதற்கு கையில் கிடைக்கும் ஊசி போன்ற ஏதாவது பொருளை எடுத்து குத்த வேண்டி இருக்கும். மருந்து சுத்தத்தை பற்றி தெரியாமல் பலரும் இப்படி கையில் கிடைத்ததை, எடுத்து குத்தி ஓட்டை போட்டுத் திறப்பார்கள். இதனால் மருந்தின் தரம் கேள்விக்குறியாகிறது.

மருந்துக்குப்பியைத் திறப்பதற்கு எளிய வழிகுப்பியின் மூடியைப் பிரித்தபிறகு மூடியை அழுத்தமாகத் திருகி அதன்பின் மூடியைத் திறந்து போட்டால் சொட்டுமருந்து எளிதாக வரும். சில வகை மருந்து - குறிப்பாக ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து பால்போன்று இருக்கும். அதுபோன்ற மருந்தினை, கண்ணில் போட்ட பிறகு அதன் எச்சங்கள் தயிர்திரிந்தது போன்று சிறிது கண்ணிமை ஓரத்தில் தங்கி இருக்கலாம். பார்ப்பதற்கு கண்பீளை மாதிரி தோன்றும். பயம் வேண்டாம்.

 

அடுத்தடுத்த சொட்டு மருந்து உடனுக்குடன் வேண்டாம்.

 

இரயில் புறப்படுவதற்குள் கண்ணில் சொட்டுமருந்து போட்டு விடவேண்டும் என்ற அவசரம் அந்த பெரியவருக்கு. அவசர அவசரமாக சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தார். சொட்டு மருந்து கண்ணுக்குள்ளேயே விழவில்லை. விழுந்தது என்னமோ கீழ் இமையோரத்தில். அடுத்து டபக்கென்று இன்னொரு சொட்டுமருந்தையும் போட்டார். அதுவும் அப்படித்தானே விழும். சொட்டுமருந்தை எப்படிப்போட்டால் என்னஅவரைப் பொறுத்த வரை கண்ணுக்கு சொட்டுமருந்து போட வேண்டும். அவ்வளவுதான்! 

அந்த சொட்டுமருந்து கிளாக்கோமாவுக்கானது. அதாவது கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்குரியது. மருந்து கண்ணுக்குள் செல்லவேயில்லை. பின் எப்படி அது வேலை செய்யும். மேலும் ஒரு மருந்தை போட்டவுடனேயே அடுத்த சொட்டு மருந்தினை போட்டால் அது எப்படி கண்ணுக்குள் செல்லும். சிறிது நேர இடைவெளியாவது வேண்டாமா.

ஒன்றுக்குமேல் சொட்டுமருந்து போட வேண்டியிருந்தால் ஒரு மருந்தைப் போட்டபிறகு இரண்டு - மூன்று நிமிடங்களுக்கு பிறகுதான் அடுத்த சொட்டுமருந்தினைப் போட வேண்டும். மருந்தைப் போட்டபிறகு கண்ணை சில விநாடிகள் மூடி இருப்பது நல்லது. மருந்தை கண்ணில் போடும்போது வேகமாக கண்ணிமைகளை இறுக்கி மூடக்கூடாது. அப்படி உடனே கண்ணிமைகளை இறுக்கி மூடினால் - கண்ணில் போட்ட மருந்தில் பெரும்பாலானவை வெளியேறிவிடும். மருந்துபோட்டும் பயனில்லை.

கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பின் ஏறக்குறைய ஒருமாதம்போல் கண்ணில் சொட்டு மருந்துபோட வேண்டி இருக்கும். மருத்துவமனையில் எத்தனை தடவை, எப்படி போட வேண்டும் என்று தெளிவாக சொல்லி அனுப்புவார்கள்.  

மறு பரிசோதனைக்கு வரும்போது அறுவைசிகிச்சை செய்த கண் தெளிவாக இருக்கும். எந்தவித தொற்றும் பெரும்பாலும் இருக்காது. இருக்கக்கூடாது. மறுசோதனைக்கு வரும்போது சிலருக்கு கண்ணில் சிகப்புடன் பீளை சேர்ந்து இருக்கலாம். அவர்களிடம் மருந்து நீங்களாகவே போட்டீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வார்கள். வீட்டில் மருந்து போட்டுவிட யாருமில்லை என்று சொல்வார்கள். இல்லையென்றால் நானாக போட்டுக்கொள்வதுதான் பழக்கம் என்று சொல்வார்கள், இப்படி அவர்களாகவே சொட்டு மருந்தினை போட்டுக் கொள்ளும்போது கண்ணுக்குள் சரியாக போகாததால் நலமாவதில் பிரச்சினை ஏற்படும். 

கண்நீர் அழுத்த உயர்வு (கிளாக்கோமா), உலர் கண் போன்ற சிலவகை கண் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்துபோட வேண்டியது சிலரது வாழ்வில் தவிர்க்க முடியாதது. அவர்கள் மருந்து போடும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குப்பியினுள் மருந்து எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க முடியாதது போல்தான் குப்பிகள் இருக்கின்றன. உள்ளே இருக்கும் மருந்தை வெளியில் இருந்து பார்த்தால், தெரிவதற்கு ஏற்ப குப்பி கண்ணாடிபோல் ஒளி ஊடுருவுந்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இதனால் என்ன பயன் என்றால் சில வகை சொட்டுமருந்துகளின் விலை அதிகமாக இருக்கின்றன. சொட்டு மருந்து போடும்போது வீணாகாமல் கவனமாக போட இது உதவும். சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சொட்டுமருந்து இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

 

சொட்டுமருந்து போடப்போகிறீர்களா...

  • கண்ணின் கீழ் இமையை லேசாக கீழே இழுத்து, கண்ணின் கருவிழியில்படாமல் அதற்கு கீழே உள்ள வெள்ளைப்பகுதியில் இரண்டு சொட்டு போட வேண்டும். 
  • மருந்தினை யார் போடப்போகிறார்களோ அவர்களுக்கு விளக்கமாக சொல்லிப் போடச் சொல்ல வேண்டும். படுத்துக்கொண்டோசாய்ந்து உட்கார்ந்துகொண்டோ மருந்து போட்டுக்கொள்ளலாம்.  
  • சொட்டு மருந்தின் துவாரப் பகுதியினை கையால் தொடக்கூடாது. சொட்டுமருந்தின் தரம் கெட்டுப்போய்விடலாம்.
  • சில சொட்டு மருந்துகள் பால் மாதிரி இருக்கும். அது போன்ற மருந்தினை போடுவதற்கு முன் குப்பியை ஒருமுறை குலுக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். 
  • கண்பிரச்சினை சரியான பிறகுசொட்டு மருந்து மீதம் இருந்தால் தூக்கி வெளியே எறிந்துவிட வேண்டும். காசுபோட்டு வாங்கியது எப்படி தூக்கி எறிவது என்ற நினைப்பு வேண்டாம். இல்லையென்றால் வீட்டில் வேறு ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும்போது அதை எடுத்து பயன்படுத்தத் தூண்டும்.
  • இன்னொருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்தினை எக்காரணம் கொண்டும் வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. அவசரத்துக்கு போட்டுக்கொண்டு அப்புறமாக மருத்துவரிடம் செல்லலாம் என்ற நினைப்பும் வேண்டாம். காரணம் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. பிரச்சினையை அறிந்து அதற்கேற்ற மருந்தினை பயன்படுத்துவதுதான் சரியான அணுகுமுறை. பார்வைக்கும் பாதுகாப்பு.
  • சொட்டுமருந்துக் குப்பியைத் திறந்த ஒருமாதத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த குப்பிமருந்தினை பயன்படுத்தக்கூடாது. அதன் பின் தேவையிருந்தால் புதிதாக ஒன்று வாங்கிக் கொள்ளலாம். 

 

கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீங்களாகவே மருந்துக்கடையில்போய் பிரச்சினையைச் சொல்லி மருந்து வாங்கிப் போடுதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. அப்போதும் மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்துக்கடையில் இருந்து, மருந்து வாங்கி இருக்கிறோமா என்று மருத்துவரிடம் சரிபார்த்த பிற்கு பயன்படுத்துவதுதான் கண்களுக்கு பாதுகாப்பானது.

---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை.