வெள்ளி, 14 நவம்பர், 2025

உலக சர்க்கரைநோய் நாள் 2025

உலக சர்க்கரைநோய் நாள் 2025

சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா?’

 



சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா?’

பொதுமக்களுக்கான மருத்துவம் தொடர்பான அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் கேள்விதான் இது.

மருத்துவரிடம் இருந்து உடனே பதில் வந்தது. ஏன் முடியாது. முடியுமே!. வாயைக் கட்டுப்படுத்தினால் போதும்’.  தடுப்பூசிபோல ஏதாவது சொல்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த கேள்வி கேட்டவர், இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாயடைத்துப்போனார்.

இந்த உரையாடல்களைப் பாருங்கள்.

சர்க்கரைதான் 300க்கு மேல இருக்குதுல்ல. அப்புறம் எதுக்கு இனிப்பைத் தொடணும்கஷ்டப்படணும். வாயைக் கட்டுப்படுத்த சொன்னா கேட்கிறீங்களாகொஞ்சம்கூட அறிவே இல்லை’, 

இந்தப்பக்கம் திரும்பறதுக்குள்ள காபியில சர்க்கரையைப் போட்டாச்சா, அப்புறம் எப்படி சர்க்கரை குறையும்’, 

சர்க்கரை குறைஞ்சு நல்லா இருக்கணும்னு எப்பத்தான் நினைப்பீங்க?’, ‘டாக்டர்தான் காலையில் கட்டாயம் வாக்கிங் போகச் சொல்றார்ல. போகாட்டி எப்படித்தான் குறையும்?’ கொஞ்சமாவது அக்கறை இருக்கா

சர்க்கரைநோய் இருப்பவர்களின் வீடுகளில் நடைபெறும் காட்சிகள்தான் இவை. அதுவும் சர்க்கரை கடுமையாக உயர்ந்து பக்க விளைவுகளோடு துயரப்படும்போது வீட்டில் நிம்மதியே இருக்காது. தினம் தினம் சர்க்கரைப் போராட்டம்தான்.   

வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும்போது அவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். அவர்களால் இனிப்புக்களை சாப்பிட முடியாதபோது மற்றவர்களாலும்  சரியாக சாப்பிட முடியாது. வீட்டில் இருக்கும் மற்றவர்களின் பிரச்சினை இது. 

சர்க்கரைநோய் என்றாலே வீடுகளில் பிரச்சினைதான்.

உறவினர் வீடுகள்ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போது டீகாபியில் அரைச்சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் கொடுக்கச் சொல்லும்போது, வருமே அவர்களுக்கு கோபம். ஒருநாள் சாப்பிட்டாஒண்ணும் ஆகாது, சும்மா கொடுங்கவாழ்றதே சாப்பிடறதுக்குத்தானேஎப்ப பார்த்தாலும் சர்க்கரை சர்க்கரைன்னுட்டு’’ கோபமாக வார்த்தைகள் இப்படித்தான் வந்துவிழும். 

திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும் இனிப்புக்களை மனச்சாட்சி இல்லாமல் எடுத்து எடுத்து சாப்பிடும்போதும்ஒன்றுக்கு இரண்டாக ஐஸ்கிரீமை உள்ளே தள்ளும்போதும் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. ஒன்றும் செய்யாது. இப்ப என்ன ஆச்சுஒரு மாத்திரையை கூடுதலாக எடுத்துக் கொண்டால் போதும், அது சமநிலையாகிவிடும் என்பது அவர்களது நினைப்பு. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அவர்கள்தான்.  சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது கண்சிறுநீரகம்இதயம்பாதம் என உடல் உறுப்புக்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என்பதை  இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஏன் தேவையில்லாமல் துயரப்பட வேண்டும்?

 

சர்க்கரைநோய் வராமல் காக்க முடியுமா?

 

சர்க்கரையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.  இனிமேல் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறவர்களும் புதிதாக இதில் சேர இருக்கிறார்கள். அதாவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள். ( pre-diabetes நிலையில் இருப்பவர்கள் )இவர்களை சர்க்கரை நோய் வராமல் காக்க முடியும்.  

முன்னெச்சரிக்கையாக சரியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் சர்க்கரைநோயால் இவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படாது.

இவர்களுக்கான நல்ல செய்தியைத்தான் சென்னை சர்க்கரைநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.வி.மோகன் தற்போது தெரிவித்திருக்கிறார். அதுவும் நாம் சாப்பிடும் பிஸ்தாபருப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். பிஸ்தாவில் அப்படி என்ன இருக்கிறதுஇரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் எப்படி உதவுகிறது பார்க்கலாம். 

 

பழமையும் மதிப்பும் மிக்க பிஸ்தா




 

கி.மு. 6750 காலகட்டத்திலேயே பிஸ்தா’ உண்ணப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆய்வில் கண்டறிந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அத்தகைய பழமை வாய்ந்த பிஸ்தாவைப் பற்றிய முக்கியமான ஆய்வினை சென்னை சர்க்கரைநோய் ஆய்வு நிறுவனம்’, ‘அமெரிக்க பிஸ்தா உற்பத்தியாளர்களுடன்’ இணைந்து நடத்தி இருக்கிறது. இந்த ஆய்வில்தான் பிஸ்தாவை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் உடலின் வளர்சிதைமாற்றம் மேம்பட்டு சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு இது நல்ல செய்திதான். 

புரதம்நார்ச்சத்துஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA) ஆகியவை பிஸ்தாவில் அதிகமாக இருக்கின்றன. இதனால் பிஸ்தாவுக்கு பசியை அடங்கச் செய்யும் தன்மை அதிகம் என்று டாக்டர் மோகன் தெரிவிக்கிறார்.

30 கிராம் பிஸ்தாவினை உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்வதன் மூலம் வயிறு நிறைந்துவிடுகிறதாம். இது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளின் தேவையையும் குறைக்க உதவுகிறதாம்.

புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் வயிற்றினை நிரப்புவதன் மூலம் உணவுக்குப் பின்னர் தேவையில்லாமல் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.  இது கார்ப்போஹைட்ரேட் வாயிலாக பெறக்கூடிய அதிகப்படியான கலோரிகளை குறைக்கிறது. 

இந்த அணுகுமுறையால் இரத்த சர்க்கரை நன்றாக கட்டுப்படுவதாகவும்மூன்று மாதத்திற்கான சர்க்கரையின் சராசரி அளவு ( HbA1c ) கணிசமாக குறைவதாகவும் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

 

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை

 

சர்க்கரைக்கு முந்தைய நிலை சரிசெய்யக்கூடியது. ஆனால் சரியான நேரத்தில் செயல்படுவது அவசியம். இல்லையென்றால் சர்க்கரைநோய்க்கு முழுமையாக வழிவகுத்துவிடும். 

இளைஞர்கள் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். இவை உடல்பருமனுக்கும்சர்க்கரைநோய்க்கும் வழிவகுக்கும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தும் என்ன ஆகப்போகிறது என்று அது குறித்து கண்டுகொள்வதில்லை.

அவர்கள் விரும்பிச் சாப்பிடும் சக்கை உணவுகளில்  கொழுப்புக்கள்உப்புசர்க்கரை ஆகியவை அதிகம். ஊட்டச்சத்து குறைந்த, கலோரி மிகுந்து காணப்படும் இத்தகைய உணவுகளைத் தவிர்த்து பிஸ்தாபருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். 

அதிகம் பதப்படுத்தப்படாத பிஸ்தா பருப்பினை சாப்பிட்டுக் கொண்டு சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சர்க்கரை நோயினை பக்கத்தில் வரவிடாமல் நலமாக வாழலாம் என்று டாக்டர் மோகன் வலியுறுத்துகிறார்வாழ்நாள் முழுவதும் சர்க்கரைநோய் பற்றிய கவலையும் இனி தேவையில்லை.

சர்க்கரைநோயாளிகள், கட்டுப்பாட்டில் இருக்க விரும்பினாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. காபியில் சர்க்கரை போட்டாச்சேஒரு நாளைக்கு குடித்தால் ஒன்றும் செய்யாது. சும்மா குடிங்க என்று சொல்பவர்கள் இனிமேல் அவர்களின் சர்க்கரையின் மீது அக்கறை காட்டுங்கள்.

 

குழந்தைகள் நலத்திலும் அக்கறை காட்டுவோம்

 



குழந்தைகள் தினமான இன்று அவர்களின் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள். கண்ட கண்ட சக்கை உணவுகளாலும்நொறுக்குத்தீனியாலும்மின்னணு சாதனங்களில் மூழ்கியும்உடல் உழைப்பு இல்லாமலும் இந்த தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது. 

இதனால் இவர்களுக்கு இளவயதிலேயே சர்க்கரைநோய் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்லி வருவதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள். அவர்களை நம் பாரம்பரிய உணவுமுறைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வளர்ந்து கொண்டிருக்கிற இத்தலைமுறையினரை சர்க்கரைநோயின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பது நம் கையில்தான் இருக்கிறது.

வாழ்க்கைமுறை மாற்றம்உடற்பயிற்சிஉணவுக்கட்டுப்பாடுடன் சுற்றத்தாரின் அக்கறையும் சேரும்போது குடும்பங்களில் நிச்சயமாக ஆரோக்கியமான சூழல் ஏற்படும். இதன்மூலம் உலக சர்க்கரைநோய் நாளின் இந்த ஆண்டு கருப்பொருளான நீரிழிவு மற்றும் நலவாழ்வின்’ நோக்கம் நிறைவேறட்டும். 

மு.வீராசாமி

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை

 

திங்கள், 20 அக்டோபர், 2025

தீபாவளி

 
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு நம்மை இந்த 
தீபாவளி அழைத்துச் செல்லட்டும்

வெள்ளி, 17 அக்டோபர், 2025

பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு

பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு.



கண்ணன் ஐந்தாம் வகுப்பு. தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான். புத்தாடை, பட்டாசு என சிறுவர்களுக்கே உரிய கனவுகளோடு தீபாவளி நாளை எதிர்நோக்கி இருந்தான். 

பட்டாசு வாங்க வேண்டியதுதான் பாக்கி.  முதல்நாள் இரவு போகலாம் என்று அப்பா சொல்லி இருந்ததுபோல் வாங்கியும் கொடுத்தார்.

காலையில் குளித்துவிட்டு புத்தாடை போட்டுக்கொண்டு வெடி வெடிக்கத் தயாரானான். வீதியில் வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. அது என்ன எதிர்வீட்டு மணி, நேற்றிலிருந்தே வெடிபோட்டு பீத்திக் கொள்வது. நாமும் வெடி வெடித்து அவனை வெறுப்பேத்துவோம் என்று களத்தில் இறங்கினான். 

முதலில் எப்போதும் அவன் அப்பா, தீபாவளியை பூஞ்சட்டி - அதுதான் புஸ்வானம் வைத்து தொடங்கச் சொல்வார். புஸ்வானத்துக்கு நெருப்பு வைத்துவிட்டு விலகி வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் . ஆனால் எரியாமல் என்னவோ மக்கர் செய்தது. அய்யோ மணி பார்க்கிறானா? என்று நோட்டம் விட்டான். நல்ல வேளை அவன் அங்கு இல்லை.

என்னடா! தொடக்கமே சரியில்லையே! என்று நினைத்து அருகில் போய் நெருப்பு இருக்கிறதா என்று பார்த்தான். சரியாகத் தெரியவில்லை. அமைதியாக இருந்தது. மெல்ல குனிந்தான். அவ்வளவு நேரம் மெளனமாக இருந்த புஸ்வானம், கண்ணன் குனிந்த நேரம் பார்த்து சடாரென புகைத்து மேலெழுந்து கலர்கலராய் ஒளியைக் கக்கியது. அதே நேரம் கண்ணனின் கண் ஒளி பறிபோனது.

பாவம். அய்யோ குய்யோ என்று கண்ணன் கத்தி என்ன பயன்மருத்துவமனையில் சிகிச்சையால் கண்ணில் வலி குறைந்து காயம் சரியாக இருமாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் பார்வை முற்றிலும் போனது போனதுதான். 

 

தீபாவளி என்றாலே பட்டாசுதான்!

 

புத்தாடைபலகாரம் என இருந்தாலும் தீபாவளி என்றாலே பட்டாசுதானே உடனே நினைவுக்கு வரும். பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினால்தானே அது தீபாவளி. 

என்னதான் கம்ப்யூட்டர்செல்போன் என்று டிஜிட்டல் சாதனங்கள் வந்தாலும் பட்டாசுக்குரிய மதிப்பு என்றும் குறையாது. தீபாவளியிடமிருந்து பிரிக்கவும் முடியாது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது இது போன்று சிறுவர்கள் பட்டாசுவெடித்து கண்ணில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்வை பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும் உள்ளாகிறார்கள்.

இந்த தீபாவளி பாதுகாப்பான மகிழ்ச்சியான தீபாவளியாக குறிப்பாக கண்பார்வை பாதிக்காத தீபாவளியாக இருக்க என்ன செய்யலாம்?

பொதுவாக வெடிக்கு நெருப்பு வைத்து குறிப்பிட்ட சிறிது நேரத்திற்குள் வெடித்தால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நேரமாகியும் வெடிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த வெடிக்குப் போய்விட வேண்டியதுதான். 

ஏன் வெடிக்கவில்லைநெருப்பு இருக்கிறதாஎன்று பக்கத்தில் போய் பார்த்தால் பிரச்சினைதான். சில சமயங்களில் மிகவும் தாமதமாக நெருப்பு பிடித்து குனிந்து பார்க்கும்போது சரியாக முகத்தில் வெடித்து கண்ணைக் கடுமையாக பாதித்துவிடும் ஆபத்து உள்ளது. இது போன்ற பாதிப்புக்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் வெடி வெடிக்கவில்லை என்றால் வருத்தப்படாமல் போனால் போகிறது என்று நினைத்து அதன் மேல் மண்ணைப் போட்டுவிடவேண்டும். தள்ளிப்போய் அடுத்த வெடியை வெடிக்க போய்விட வேண்டும்.

புஸ்வானம் தானே! அதுதான் வெடிவகை இல்லையே! மத்தாப்பு வகைதானே  என்ற நினைப்பும் அலட்சியமும்  வேண்டாம். கவனம்


ஊதுபத்திகூட ஆபத்துதான்.


வெடிக்கு நெருப்பினை வைக்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பயன்படுத்துவார்கள். சிலர் சாதாரண தீப்பெட்டியினையும் இன்னும் சிலர் மத்தாப்பு பெட்டியினையும் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் கயிறு போன்ற நூல்திரியின் மூலம் வெடிகளுக்கு நெருப்பை வைப்பார்கள்.

இன்னும் சிலர் பெரிய தடிமனான ஊதுபத்தியின் மூலம் வெடிகளுக்கு நெருப்பு வைப்பார்கள். இது நீண்ட நேரம் நின்று எரியும். அதிக வெடிகளை வெடிக்கலாம் என்று சிறுவர்கள் இதைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஊதுபத்திதான் ஆபத்தானது. 

சிறுவர்கள் இந்த நெருப்புள்ள இந்த ஊதுபத்தியுடன் வெடிகளை வெடித்துக் கொண்டு இங்கும் அங்கும் மகிழ்ச்சியாக ஓடுவார்கள். அப்படி ஓடும்போது இந்த ஊதுபத்தியினை நெட்டுவாக்கில் பிடித்துக்கொண்டு கவனமாக செல்ல வேண்டும். அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்துச் செல்ல வேண்டும். ஆனால் பல நேரங்களில் வெடி வெடிக்கும் ஆர்வத்தில் அப்படி பிள்ளைகள் செய்வதில்லை.

நெட்டுவாக்கில் உயர்த்தி பிடிக்காமல் கிடைமட்டத்தில் குறுக்குவாட்டில் பிடித்துக் கொண்டு வேகவேகமாக ஓடுவார்கள். வெடிக்கு நெருப்பினை பற்ற வைத்துவிட்டு ஓடும்போது அந்த ஊதுபத்தியினை பிடித்திருக்கும் உயரத்தில் பிள்ளைகள் யாராவது குறுக்காக வந்தால் அந்த நெருப்புள்ள ஊதுபத்தி எதிரே வரும் சிறுவர்களின் கண்ணில்  வேகமாக குத்திக் கண்ணைக் கடுமையாக தாக்கி துளைத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது. சிறு பிள்ளைகள் இதுபோன்று பார்வை இழந்து போயிருக்கிறார்கள்.


பாதுகாப்பான தீபாவளிக்கு:

Ö      பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

Ö      சிறுவர்கள்பெரியவர்கள் மேற்பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

Ö      வெடிகளுக்கு நெருப்பு வைக்க நீண்ட எரிகுச்சிகளை பயன்படுத்த வேண்டும்.

Ö      வெடிகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு தள்ளி வந்து விட வேண்டும்.


Ö      வெடிகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது.

Ö      நெருப்பு வைத்தும் வெடிக்கவில்லை என்றால் ஏன் வெடிக்கவில்லை. நெருப்பு இருக்கிறதா இல்லையா என்று வெடிக்கு அருகில் போய் குனிந்து பார்க்க கூடாது.

 

Ö      காயம் ஏற்பட்டால் உடனே சுத்தமான தண்ணீரால் கண்ணை நன்றாக கழுவி அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தாமதம் வேண்டாம்.

பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு வெடிவகைகள். இதை நினைவில் கொண்டாலே போதும் அது பாதுகாப்பான பண்டிகையாக அமைந்துவிடும். 

மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு) &
முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தேசிய கண்மருத்துவ சங்கம்
மதுரை

வியாழன், 9 அக்டோபர், 2025

உலக பார்வை நாள் - World Sight Day - 2025

உலக பார்வை நாள்  - World Sight Day  - 2025

சூப்பர் பார்வைக்கு சூப்பர் 10



கண்களிடம் அன்பு செலுத்துவோம்

உலக பார்வை நாளின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள்தான் இது. வாழ்நாள் முழுவதும் பார்க்க உதவும் கண்களிடம் எப்படி அன்பு செலுத்துவது? அப்படி கேட்பவர்களுக்காக இதோ சூப்பர் 10:

 

01. செல்போன் பார்ப்பதில் நேரக்கட்டுப்பாடு. நீங்களே வைத்துக் கொள்ளலாம். செல்போனையோ கணிணியையோ தொடர்ந்து நீண்ட நேரம் பார்க்கும்போது 20:20:20 என்ற பார்முலாவை நினைவில் கொள்ள வேண்டும். 

அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை செல்போன் / கணிணி திரையில் இருந்து கண்களை விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை சுமார் 20 விநாடிகள் பார்க்க வேண்டும். அப்போது கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் தொடர்ந்து பார்க்கலாம். 

02. கணினியும் செல்போனும் நம்மை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டு  விட்டன. முடிந்த அளவு வீட்டுக்கு வெளியேயும் கொஞ்ச நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

03. சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்க வெயிலில் செல்லும்போது தரமான குளிர் கண்ணாடியை பயன்படுத்துவது நல்லது. கண்புரை ஏற்படுவதைத் தடுக்கவும் இது உதவலாம்.

04. பார்வைகுறைபாட்டிற்கு கண்ணாடி, தேவை இருந்தால் போட்டுக் கொள்ள வேண்டும். வாங்கினால் போதாது, தொடர்ந்து பயன்படுத்துங்கள்,

 40-க்கு மேல் ஏற்படுவது வெள்ளெழுத்து பிரச்சினை. கண்ணாடி போட வெட்கம் வேண்டாம். இல்லையென்றால் வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது வெட்கமில்லாமல், படிக்காதவர்கள் போல் ஏங்க இந்த படிவத்தில் பொடி எழுத்தில் என்ன எழுதி இருக்குன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க’  என்று பக்கத்தில் இருப்பவரிடம்  கேட்கும் நிலை ஏற்படும்.

05 கண்ணுக்கும் முக ஒப்பனைக்கும் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களின் தரம் மட்டும் அதன் காலாவதி நாட்களைப் பார்க்க வேண்டும். கண் மைக்கு பயன்படுத்தும் குச்சி சுத்தமாக இல்லை என்றால் மாற்றுங்கள். 

06. தினமும் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி நல்லது. இரத்த அழுத்தம்சர்க்கரையை வரவிடாமல் தடுக்க உதவலாம். இதன் மூலம் கண்களும் காக்கப்படுகின்றன.

07 குழந்தைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே சத்தான உணவு, காய்கறி, கீரைகளை கொடுத்துவர வேண்டும். கண்ட கண்ட சக்கை உணவு வேண்டாம்.

08. புகை பகை என்பது தெரிந்தே ஏன் கண்களுக்கு கெடுதலை ஏற்படுத்த வேண்டும்

09 வேண்டாம் கைவைத்தியம். எதற்கெடுத்தாலும் நாமாக சொட்டு மருந்து போடுவது கண்ணுக்கு நல்லதல்ல. 

10. 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை கண்களை சோதித்துக் கொள்வது நல்லது.

---           

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர்( ஓய்வு)

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை

 

 

 

வெள்ளி, 3 அக்டோபர், 2025

மெல்ல இனி சாகுமோ எழுதும் கலை?

மெல்ல இனி சாகுமோ எழுதும் கலை?  







 தேர்வு அறை. கையில் பேனா வைத்திருந்த அந்த இளைஞன் ஙே’ என்று விழித்துக் கொண்டிருந்தான். விடை தெரியாததால் அல்ல. எழுதத் தெரியாததால். சொல்லப்போனால் எழுதுவது எப்படி என்பதே மறந்துபோய்விட்டது அவனுக்கு. 

அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கீ போர்டும் தொடுதிரையும் தான். நேரங்காலமின்றி பொழுதுக்கும் செல்போனில் தானே அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களால் தொடர்ச்சியாக எழுத முடிவதில்லை.

இதை நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காலண்டன் போன்ற நாடுகளில்பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இக்கால இளைஞர்கள் சிந்திப்பதும் வெகுவாக குறைந்துபோய்விட்டது. எதற்கெடுத்தாலும் செல்போனில் பார்க்கும் நிலைமை. ஒரு சிறு செய்தியைக்கூட நம் நினைவில் இருந்து நம்மால் சொல்ல முடியும்தான். ஆனால் அதெற்கெல்லாம் கிஞ்சித்தும் இடம் கொடுப்பதே இல்லை.  எடு போனை. கூகுளைப் பாரு என்று தானே சொல்கிறோம்.

 

சட்டைப்பையில் பேனா இருக்கிறதா?

 

என் சட்டைப்பையில் இருக்கும் பேனாக்களைப் பார்த்து பலரும் வியப்படைவதுண்டு. கர்நாடகத்து ஆசாமியாஎதுக்கு பேனா வைத்திருக்கிறான் என்பது போல. அவர்களுடைய வியப்பிற்கு காரணம் இருக்கிறது. இப்போதெல்லாம் பேனாவை யார் பயன்படுத்துகிறார்கள். ஏதாவது குறித்துக் கொள்ள வேண்டும் என்றால்கூட செல்போனில்தானே பதிவு செய்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்த ஒரு மாணவன்  சிலேட்டின் ஓரங்களை கடித்து கடித்து சிலேட்டினை வட்டமாக்குவான். அது ஒருவகை அட்டை சிலேட்டு. வட்டமாக்கி வகுப்பின் சுவர் ஓரமாக உருட்டி விளையாடுவான். அப்போதெல்லாம் தரை தானே. பெஞ்ச் எல்லாம் இருக்காது.

குச்சி எனப்படும் பலப்ப குச்சி பிடித்துதான் எழுதுவோம். மூன்றாம் வகுப்பு வரை அப்படி. அதற்குப் பிறகு காகித பென்சில்.

ஆறாம் வகுப்பில் பதவி உயர்வு போல் பேனா கொடுத்து விடுவார்கள்.  பேனாவுடன் பள்ளிக்கு செல்லும் அழகும் கெத்தும் தனிதான். பொழுதுக்கும் நோட்டில் எழுதி எழுதி மகிழ்வோம். இந்த எழுத்துக்குத்தான் இப்போது பிரச்சினை .

 

எழுதுவது குறைந்தால்?



 

ஜென் ஸி என்று சொல்லப்படும் 2000 த்துக்குப் பிறகு பிறந்த கணினி-இணையத் தொழிற்நுட்பத்துறையில் தோய்ந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இது. இதனால் நமக்கு என்ன?

யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் நம்மை பண்படுத்தி நாகரீகமான சமூகமாக மாற காரணமான 5000 -ம் ஆண்டு பழமைவாய்ந்த திறமையை இழந்து வருவது அவர்களுக்குத் தெரியவில்லை.

இக்கால இளைஞர்கள் எழுதிப் பார்த்தீர்களா?  எல்லாமே செல்லில்தானே. நோட்ஸ் கூட அதில்தானே கட கட என டைப் செய்கிறார்கள். 

கல்வி கற்பதில் டிஜிட்டல் சாதனங்கள் ஆக்கிரமித்துவிட்டதால், எழுதும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதாம். இதைச் சொல்வது நார்வே ஸ்டாஞ்சர் பல்கலைகழகம். 40 விழுக்காடு மாணவர்களுக்கு எழுதுவது  கடினமாக இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள். இதுதான் கவலைதரக்கூடிய செய்தி.

எழுதுவதில் ஏற்படும் சிதைவு அல்லது தொய்வு இளம்பிள்ளைகளின் நினைவாற்றல்கவனம்கற்பதில் உள்ள உத்திகள்  ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் அவர்களின் அறிவாற்றலில் நீண்ட காலத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதைவிட கொடுமை இன்னும் ஒருபடி மேலே போய் வாய்ஸ் மெசேஜ் எனும் குரல் பதிவாக செய்தியை அனுப்புவது. யார், வேலை மெனக்கெட்டு டைப் செய்து கொண்டிருப்பது.

தலையெழுத்து மாதிரி இருக்கு உன் கையெழுத்து என்று இனி யாரும் சொல்லத் தேவையில்லை பாருங்கள்.

 

எழுதுவதால் என்ன பலன்?

 

எழுத்து என்பது வாழ்வோடும் சமூகத்தோடும் தொடர்புடையது. மின்னணு சாதனங்களின் வரவுக்கு முன் கடிதம் மூலமாகத்தான் தொடர்புகொள்ள முடியும். இக்கால பிள்ளைகளுக்கு அஞ்சல் அட்டையும் அது 15 பைசா என்பதும் தெரிய வாய்ப்பில்லை. கடிதம் கைக்குப்போய் சேர்ந்தபிறகுதான் தகவலைத் தெரிந்துகொள்ள முடியும். 

ஆனால் இன்று அது மின்னல்வேக குறுஞ்செய்தியாக  சுருங்கிப்போய் கைவிரல்களைப் பாடாய்ப்படுத்துகிறது.  கடிதம் எழுதுவதற்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. எழுத்துக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது.

தட்டச்சு செய்வதைக் காட்டிலும் எழுதுவதன் மூலம் மூளையின் பல்வேறு பகுதிகள் தூண்டப்படுவதுடன் நினைவில் திறம்பட சேமிக்கவும் உதவுகிறது.

தொடர்ந்து எழுதுவதன் மூலம் சொற்களை கருத்துக்களுடன் தொடர்பு படுத்த முடிகிறது. ஒருவரின் நினைவாற்றல் மேம்பட்டு எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது. 

கையால் எழுதுவதன் மூலம் கைகண் இவற்றின் ஒருங்கிணைப்பு நன்றாக செயல்பட முடிகிறது. 

சுமேரிய நாகரீகத்தின் கியூனிபார்ம் எழுத்து முறையே காலத்தால் முற்பட்டது. களிமண்ணில் எழுதப்பட்ட இந்த முறை தொடக்கத்தில் பொருளாதார பதிவுகளுக்கு பயன்படுத்தினாலும் நாளடைவில் இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

எகிப்துசீனநாகரீகம்சிந்துவெளிவெளி நாகரீகம் என்று பழங்கால நாகரீகம் தொடங்கி தொடர்ந்து பல்வேறு கால காட்டங்களில் வாழ்ந்தவர்கள் செப்பேடுகல்வெட்டு என வரலாறுகளை பதிவு செய்து வைத்திருந்ததாலேயே நம்மால் வரலாற்றினை அறிய முடிகிறது. 

எழுதும் கலை என்பது பல ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட சொத்து. எழுதப்பட்ட தகவல்கள் - அது ஓலைச்சுவடியாகட்டும்கல்லெழுத்தாகட்டும்செப்பேடாகட்டும்அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். இவற்றின் மூலமாகத்தானே நாம் பண்டைய வரலாற்றினை அறிந்து வருகிறோம். அவர்கள் எழுதி வைத்திருக்காவிட்டால் வரலாறு நமக்கு கிடைத்திருக்குமா?.

லாப்டாப்செல்போனைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும்   கையால் குறிப்பெடுக்கும் மாணவர்களால் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க முடிகிறது. அறிந்தவற்றை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படவும் முடிவதாக  உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

நம் நரம்புமண்டலத்தையும் நம்முடைய புலன்களையும் ஒருங்கிணைத்து எழுத்துக்களை கையால் எழுதும்போது பெறும் அனுபவ உணர்வினை தட்டச்சு செய்வதால் ஈடுகட்ட முடியாது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தட்டச்சு செய்பவர்களைப் பொறுத்த வரை அது வெறும் சொற்களே.

திரைநேரம் அதிகரிப்பதால் நம்முடைய எழுத்துக் கலையும்வரைவாற்றலும்கைவினைத்திறனும் பாதிக்கப்படுவதை நாம் உணரவேண்டிய நேரம் வந்துவிட்டது.

எழுத வேண்டிய தேவை குறைந்துபோன பிள்ளைகளை கொஞ்ச நேரம் தினமும் எழுதச் சொல்ல வேண்டும்.  நாமும் கொஞ்ச நேரம் பேனா பிடித்து எழுதுவோமே!

---

மு.வீராசாமி

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை