திங்கள், 8 செப்டம்பர், 2025

தேசிய கண்தான இருவார விழா நிறைவு கட்டுரை

                                                தப்பா எழுதினாத்தானே அழிரப்பர் தேவை’  




 

தப்பா எழுதினாத்தானே அழிரப்பர் தேவை’  இது அந்தக்காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்திரைப்படத்தில் இடம் பெற்ற  நடிகர் சுருளிராஜனின் வசனம். நகைச்சுவையான வில்லுப்பாட்டின்போது இந்த வசனம் இடம்பெறும். இது எதற்கு இப்போது?

தப்பாக எழுதினால்தானே அழிரப்பர் தேவைப்படும். உண்மைதான். இல்லையென்றால் அதன் தேவை இருக்காது அல்லவா

கண்தானமும் அப்படியான ஒன்றுதான். கருவிழி பார்வையிழப்பு ஏற்பட்டால்தானே கண்தானம் குறித்த பேச்சே! 

அப்படியானால் கருவிழி பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுத்தால்முறையான  விழிப்புணர்வு மூலம் கருவிழி பார்வையிழப்பை கணிசமாக தடுக்க முடியுமா? முடியும். அதன் மூலம் இனிமேல் கண்தானத்தின் தேவையையும் குறைக்கலாம் அல்லவா.

கண்ணில் ஏற்படும் காயங்கள்தான் கருவிழி பார்வையிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கணிசமான அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது என்றாலும் இதில் குழந்தைகளுக்கு ஏற்படுவதை முதலில் கவனிப்போம்.





பெரியவர்கள் மேற்பார்வையில்லாமல் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே விளையாடும்போது ஏற்படும் காயங்களால்தான் கருவிழி பார்வையிழப்பு ஏற்படுவதாக சொல்கிறார்கள். விளையாடும்போது எப்படி பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதையும் இல்லாவிட்டால் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் அவர்களுக்கு புரியும்படி சொல்லித்தருவது நல்லது.  

தொடக்கக் கல்வியில் இருந்தே பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். மீண்டும் மீண்டும் இதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

பாடத்திட்டத்தில் கண்பாதுகாப்பு குறித்த செய்தி இடம்பெறுவதும் நல்லது. 

பெரியவர்கள் குறிப்பாக வயல்வெளியில் வேலை செய்பவர்கள் கண்ணில் தூசி விழாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தூசியோநெற்கதிரோ கண்ணில் விழும்போது கண்ணை உடனே தேய்க்காமல் குழாய் நீரால் கழுவ வேண்டும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னரும் உறுத்தல் இருக்குமேயானால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிரமம் பாராமல் செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்கு செல்லாமல்-சிகிச்சை செய்துகொள்ளாமல் இறுதியில் பார்வையில்லாமல் கஷ்டப்படுவதைக் காட்டிலும் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று நலமாக்கிக் கொள்வது அவ்வளவு கடினமல்ல. எளிதுதான் என்பதை உணர வேண்டும். வாழ்நாள் முழுவதும் பார்வை தேவை அல்லவா!

கண்தானம் பற்றிய சரியான புரிதல்கள்:

1.   இரத்ததானம் ஒருவர் உயிரோடு இருக்கும்போது கொடுப்பது. ஆனால் கண்தானம் என்பது ஒருவர் இறந்தபின் நடைபெறும் செயல். உயிருடன் இருக்கும்போது கொடுக்க முடியாது.

2.   கண்தானம் கொடுப்பதற்கு ஒருவர் உயிருடன் இருக்கும்போதே பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர் இறந்தபின் அவருடைய நெருங்கிய உறவினர்கள் சம்மதித்தாலே போதும்  கண்களை எடுக்கலாம்.

3.   ஒருவர் இறந்தபின் ஆறு மணிநேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும் என்பதால் இறப்பு நிகழ்ந்தவுடன் விரைவாக அருகில் உள்ள கண்வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

4.   இறந்த உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தால் போட்டுவிடலாம்.

5.   கண்வங்கியில் இருந்து மருத்துவர்குழு வரும் வரையிலும் இறந்தவர் உடலின் கண்களை மூடிவைத்து மூடிய இமையின்மேல் ஈரப்பஞ்சினை வைத்திருக்க வேண்டும்.




கண்தானத்தில் ஆர்வம் இருப்பவர்கள் என்ன செய்யலாம்: 

உங்கள் வீட்டின் வரவேற்பறை - முன் அறையில் அனைவரது பார்வைபடும்படியாக – எங்கள் குடும்பம் கண்தானம் செய்ய விருப்பமுள்ள குடும்பம்’ - என்று எழுதி வைக்கலாம்.

இதனால் என்ன பயன்?

அப்படி எழுதி வைத்திருப்பதை உறவினர்கள்நண்பர்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பார்ப்பார்கள். ஒருவேளை அந்த வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால்கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த செய்தி  ஒருவர் இறந்த நேரத்தில் உறவினர்களாலோநண்பர்களாலோ நினைவுகூறப்பட்டு கண்வங்கிக்கு தகவல் தெரிவித்து கண்களை உரிய நேரத்தில் எடுப்பதற்கு அது உதவியாக இருக்கும். 

இதுதான் உண்மையிலேயே ஒருவர் கண்தானத்துக்கு செய்யும் தொண்டு. அதைவிடுத்து உயிருடன் இருக்கும்போது நானும் கண்தானம் செய்திருக்கிறேன் என்று பதிவு செய்து சான்றிதழை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த வித நேரடி பயனும் கிடையாது.

ஏனெனில் அவ்வாறு பதிவு செய்பவர்கள் பலரும் வயது குறைவானவர்கள்-இளைஞர்கள். அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழப்போகிறவர்கள்.  உடனடியாக இறப்பு என்பது அவர்களிடையே நேரப்போவது கிடையாது.

தங்கள் பகுதியில் வயதானவர்கள் இறக்கும்போது அங்கு சென்று நெருங்கிய உறவினர்களிடம் பேசி கண்களை எடுக்கவும் உதவி செய்யலாம். 

                                                                                            ----


மு.வீராசாமி

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை


 

 

 

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

தேசிய கண்தான இருவார விழா

                       

 தேசிய கண்தான இருவார விழா

                      ஆகஸ்ட் 25 – செப்டம்பர் 8 

குழந்தைகளுக்கு பாதுகாப்பாக விளையாட வழிகாட்டுவோம்.

அந்த அலறல் சத்தம் மருத்துவமனை முழுவதும் கேட்டதுபையனின் அலறல் சத்தத்தைக்கேட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஒன்றும் புரியாமலேயே போய்க் கொண்டிருந்தார்கள்.

“ஏண்டா இப்படிப் பண்ணித் தொலைஞ்சு என் உசிரை வாங்குற. ஒரு மாசமாஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா உன்னைக்கூட்டிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். எப்ப கண்ணு கிடைக்கும்னு தெரியலையாம். கிடைச்சாத்தான் ஆப்ரேசன் பண்ண முடியும்னு டாக்டர் சொல்றாருஒரு மாசமா வேலைக்கும் சரியா போகலைகஞ்சிக்கு வேற நான் என்ன செய்வேன்னு தெரியலையே” என்று சொல்லி அந்த அம்மா தன் சிறு பிள்ளையை தலைகால் தெரியாமல் அடித்துக் கொண்டிருந்தார். 

பிரச்சினை இதுதான். நகரத்தின் மையப்பகுதி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மணிகண்டன் காலை இடைவேளையின்போது ஓரமாகத்தான் சென்று கொண்டிருந்தான். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பெருக்குமாறு குச்சியை எறிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக பிள்ளைகள் வேகமாக எறிந்த குச்சி அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த மணிகண்டனின் கண்ணில் பட்டு காயத்தை ஏற்படுத்திவிட்டது.

மருத்துவமனையில் டாக்டர் சோதித்துவிட்டு கருவிழி கடுமையாக பாதித்துவிட்டதாகவும் ( Corneal Blindness ) காயத்தை மட்டுமே நலப்படுத்தமுடியும் என்றும் பார்வை கிடைக்காது என்றும் சொல்லிவிட்டார். கருவிழி புண் நலமான பிறகு கருவிழி மாற்று அறுவைசிகிச்சை ( Corneal Transplantation ) செய்தால் பார்வை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று சொன்னது அந்த அம்மாவுக்கு சரியாக புரியவில்லை. 

கையில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டால்கூட வலிக்கும். கண்ணில் காயம் ஏற்பட்டபோது மணிகண்டனுக்கு ஏற்பட்ட வலியை நினைத்துப்பாருங்கள். விழிப்புணர்வும் வழிகாட்டலும் இருந்திருந்தால் இந்த காயமும் பார்வையிழப்பும் ஏற்பட்டிருக்காது அல்லவா!



கருவிழி பார்வையிழப்பைத் தடுக்கலாம்.

கருவிழி பார்வையிழப்பில் பெருமளவில் குழந்தைகளிடையே ஏற்படுவதாகத்தான் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் பெற்றோர் மேற்பார்வை இல்லாமல் வீட்டுக்கு வெளியே விளையாடும்போதுதான் ஏற்படுகிறது.

பள்ளி மாணவர்களிடையே சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் கருவிழி பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். 

பிள்ளைகள் பள்ளியில் குச்சி, பென்சில், பேனா போன்றவற்றை ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறிந்து விளையாடும்போது கண்ணில் காயம் ஏற்படுவதால்  பார்வை இழப்பின் ஆபத்தை அவர்களுக்கு புரியுமாறு சொல்லி அப்படி விளையாடுவதைத் தவிர்க்கச் செய்ய வேண்டும். 

இதேபோல் பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே மணலில் விளையாடும்போது மணலை ஒருவர் மீது ஒருவர் தூவும்போது கண்ணில் பட்டு காயம் ஏற்படலாம்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பிள்ளைகள் பட்டாசு மத்தாப்பு, வெடிகளை பெரியவர்கள் மேற்பார்வையிலேயே வெடிக்கச் செய்ய வேண்டும்.

கருவிழி பார்வையிழப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இனிமேல் கருவிழிபார்வையிழப்பு ஏற்படாமல் தடுத்து கண்தான தேவையைக் கணிசமாக குறைக்க முடியும். 

கண்ணில் தூசி விழுந்தால் பொதுவாக அனைவருமே உடனே கண்ணைத் தேய்க்கத்தான் செய்கிறார்கள். அப்படித் தூசி விழும்போது கண்களை நன்றாக தேய்ப்பதன் மூலம் கண்ணின் கருவிழி பாதித்து பார்வை பிரச்சினை ஏற்படுவதும் உண்டு. எனவே பிள்ளைகளிடம் கண்ணில் தூசி விழுந்தால் கண்ணைத் தேய்க்கக்கூடாது என்றும் குழாய் நீரால் கண்ணைக் கழுவ வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.

இதுபோன்ற கண்பாதுகாப்பு நலச் செய்திகளை தொடக்கத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு சொல்லி வருவதன் மூலம் கண்ணில் காயம் ஏற்படாமல் தடுத்து பார்வையைக் காக்க முடியும். கண்தானத்தின் தேவையையும் குறைக்க முடியும்.

 

மு.வீராசாமி                                                      

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு) &

முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்                                   

தேசிய கண்மருத்துவ சங்கம் மதுரை.

.

வெள்ளி, 27 ஜூன், 2025

கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

    கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

 

இன்று குழந்தைகளை வளர்ப்பதில் பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதை வளர்ப்புச் சிக்கல் என்றுகூட சொல்லலாம். செல்போன் கொடுக்காமல் வளர்ப்பதுதான் அது. பிள்ளைகள் சத்தம் போடாமல், தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று அவர்கள் கையில் கொடுக்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அது ஒரு விளையாட்டுப் பொருள் அவ்வளவுதான். அதாவது அவர்கள் மொழியில் அது ‘டாய்ஸ்’.

செல்போன் கொடுத்தால் என்ன? கையில் வைத்துக் கொள்ளட்டும். விளையாடிவிட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது. காரணம் பிறந்த மூன்று நான்கு மாதங்களில் செல்போனைக் கையில் எடுக்கும் குழந்தை தொடர்ந்து அதற்கு பழகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பெற்றோர் குழந்தையின் கண்ணுக்கு முன்பாகவே வெவ்வேறு காரணங்களுக்காக செல்போனைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அதை குழந்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். சொல்லித்தராமலேயே அதைக் கையாளவும் பிள்ளைகள் தெரிந்துகொள்கிறார்கள்.



கொஞ்ச நாளைக்கு பெற்றோரின் செல்போனைக் கையில் எடுக்கும் பிள்ளைகளுக்கு நாளடைவில் தனியாகவே ஒரு செல்போன் கிடைத்துவிடுகிறது. பெற்றோர் பிள்ளைகளை செல்போனுக்கு அடிமையாக்குவது இப்படித்தான். அடிமையாக்கிவிட்டு பின்னாளில் பிள்ளையின் கையில் இருந்து செல்போனை வாங்க முடியவில்லை என்று வருந்தவும் செய்வார்கள்.


 

செல்போனால் கண்ணுக்கு என்ன பாதிப்பு ?

 

அது மருத்துவமனை ஒன்றின் வரவேற்பறை. காத்திருந்தவர்களில் எழுவரில் மூவர் சிறுவயதினர். மூவரும் கண்ணாடி அணிந்திருந்தார்கள். மூவருமே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் கண்ணுக்கு மிக அருகில் வைத்து. கண்ணாடி பவர் கொஞ்சம் அதிகம்தான். -6, -7 இருக்கும். மூவரின் வயதுமே எட்டுக்குள்தான். தங்களுக்கு இருக்கும் கிட்டப்பார்வை குறித்தோ அதனால் பின்னாளில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தோ எந்தவித கவலையுமின்றி  அந்த குழந்தைகள் செல்போனே கதி என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரயிலில் பயணம் செய்யும்போது குறிப்பாக பகலில் பயணிகளை அதிகமான அளவில் ஒரு சேர பார்க்கலாம். பயணம் செய்யும் குழந்தைகளை கவனித்தால் பெரும்பாலோர் கண்ணில் கண்ணாடி இருக்கும். வழக்கம்போல் கையில் செல்போன் இருக்கும்.. 

பார்க்கும் குழந்தைகளின் கண்களில் எல்லாம் கண்ணாடியா என்றுகூட நினைக்கத் தோன்றும். முந்தைய தலைமுறையில் இப்படி இல்லையே. பின் ஏன் இந்த திடீர் அதிகரிப்பு?

செல்போன் இல்லாத முந்தைய தலைமுறைகளில் பிள்ளைகளின் வாழ்க்கை வீட்டில் விளையாட்டுவீட்டுக்கு வெளியேயும் ஓடியாடி விளையாட்டுபின் படிப்பு என்றிருந்தது. விடுமுறை நாட்களில் முழுவதும் விளையாட்டுதான். அன்றைய தலைமுறை இப்படியென்றால் இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கை டாப்லெட் பிசிசெல்போன் போன்ற மின்னணு சாதனங்களுடன் ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது. இன்று போல் அன்று குழந்தைகளிடையே கண்ணாடியை அதிகமாக பார்க்கவும் முடியாது. ஒன்றிரண்டு குழந்தைகள் போட்டிருப்பார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. கடுமையான கல்விச்சுமை அவர்களுக்கு. இந்த கடுமையான போட்டி சூழலில் பிள்ளைகள் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளிக்கு போய் வந்த பின்னரும் மாலையில் தனி டியூசன் வகுப்புகள். கூடவே இசை, நாட்டியம், வயலின் போன்ற பன்முகத்திறன்களுக்கான வகுப்புகள். 

சரி. இதையெல்லாம் முடித்து இரவு வீட்டுக்கு திரும்பிய பிறகாவது தூங்கப்போகலாமா என்றால் முடியாது. அதன்பின் பள்ளியில் தந்த வீட்டுப்பாடம், டியூசன் ஆசிரியர் தந்த வீட்டுப்பாடம், மறுநாள் தேர்வுக்கான தயாரிப்பு என்று பிள்ளைகள் எப்போதும் அறைக்குள்ளேயேதான்  இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் வெளிப்புறச்சூழலில் அவர்கள் நேரம் செலவிடுவதே இல்லாமல் போய்விட்டது.

 

வெளிப்புறச்சூழலால் என்ன பயன் ?

 

பிள்ளைகள் வெளிப்புறச்சூழலில் இருக்கும்போது சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணின் விழித்திரையில் டோபமைன் என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது விழிக்கோளம் நீட்சி அடைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் சூரிய ஒளிமூலம் வைட்டமின் ‘டி' யும் உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் கிட்டப்பார்வையைத் தடுப்பதில் உதவுகிறது.  

 

செல்போனால் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

 

செல்போனின் திரை மிகச் சிறியது. அதில் உள்ள எழுத்துருக்களின் அளவும் (font size) சிறியது. வழக்கமாக பேப்பர் அல்லது புத்தகத்தை ஒரு அடி தொலைவில் வைத்துதான் பார்ப்போம். ஆனால் செல்போனை கண்ணுக்கு அருகில் வைத்துதான் பார்க்கிறோம்.

கண்ணுக்கு மிக அருகில் வைத்து பார்க்கும்போது நம்முடைய இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து மூக்குப் பக்கம் திரும்புவதைப் பார்க்கலாம். தொடர்ந்து செல்போனைப் பார்க்கும்போது இரண்டு கண்களின் இணைந்த இயக்கமும் கண்ணின் ஈடுசெய்யும் திறனின் தேவையும் மேலும் அதிகரிக்கிறது. கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது. 

 

சரி, கிட்டப்பார்வையைத் தடுக்க முடியுமா?

 

பிள்ளைகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்கு வெளியே விளையாடச் சொல்ல வேண்டும். ஏற்கனவே கண்ணாடி போட்டிருப்பவர்களும் வெளிப்புறச்சூழலில் இருப்பதன் மூலம் கண்ணாடி லென்சு பவர் அதிகரிப்பது தடுக்கப்படும்.



செல்போன் பார்ப்பதில் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு தற்போது இந்தியாவில்  இல்லை. பிறந்த ஓராண்டு வரை பிள்ளைகளுக்கு செல்போனை கையில் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அழுகையில்லாமல் சமத்தாக சாப்பிடுகிறான், கையில் செல்போனைக் கொடுத்துவிட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கலாம் என்று செல்போனைக் கொடுத்து நாம்தான் பழக்கப்படுத்துகிறோம் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். நிலாவைக் காண்பித்து உணவினை மீண்டும் ஊட்ட ஆரம்பிக்கலாம்.



செல்போனை குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே பார்ப்பது - அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வளர்ந்த பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சற்று கடினமானதுதான். பெற்றோர் முதலில் முன்னுதாரணமாக இருப்பது அவசியம். தேவையில்லாமல் ஏதாவது வந்திருக்கிறதா என்று செல்போனை எடுத்து அடிக்கடி பார்ப்பதை பெற்றோர் தவிர்க்கலாம். பிள்ளைகள் நம்மைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்கிறார்கள். வாரம் ஒருநாள் வீட்டில் அனைவரும் செல்போனுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 

தொடர்ந்து செல்போனை நீண்ட நேரம் பார்க்கும்போது 20:20 என்ற சூத்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  இதன் நோக்கம் தொடர்ந்து செல்போனை நீண்டநேரம் பார்க்கும்போது கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது. அதாவது தூரத்தில் பார்ப்பதற்கும் கண்ணுக்கு அருகில் பார்ப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிப்பதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுப்பது.

எனவே 20:20 ஐ நினைவில் வைத்துக் கொண்டு 20 நிமிடத்துக்கு ஒரு முறை கண்களை செல்போனில் இருந்து விலக்கி தொலைவில் இருக்கும் பொருளை சில விநாடிகள் ( நினைவில் வைக்க ஏதுவாக 20 விநாடிகள்)- பார்த்து விட்டு – கண்களை தாமாக சில தடவைகள் இமைத்துவிட்டு பின் மீண்டும் செல்போனைப் பார்க்கலாம். 

வீட்டில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பிள்ளைகள் படிக்கும் அறையில். இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல் குறிப்பிட்ட நேரம் முறையாக தூங்குவதும் கிட்டப்பார்வை ஏற்படுவதைத் தடுக்கும்.

***

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு)

மதுரை.

 

 

புதன், 28 மே, 2025

சமையல்/அன்பு

‘சமையல் செய்து அன்பை பரிமாறு.’ இதைக் கேட்ட சமையல்கலையில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியை ஒருவர் ‘அபாரம்' என்றார்கள். ஒரு வகையில் அவர்கள் எனக்கு உறவு. அவர்களின் வீட்டில் சாப்பிட மிகவும் பிரியப்படுவேன். எந்த உணவை எடுத்தாலும் தனித்துவமான ருசி இருக்கும். எப்படி இந்த சுவை என்று வியப்பேன். அப்படிப்பட்ட கைதேர்ந்த அவர்கள் அந்த வரியைக் கேட்டதும் இதுவரையில் நான் இப்படி சிந்தித்தது இல்லை என்று வியந்தார்கள். வியப்பு என்னவென்றால் அவர்களும் அன்பைப் பரிமாறுபவர்கள்தான்.

அன்பைப் பரிமாறுதல் என்றால்?

பொதுவாக வீட்டில் பிள்ளைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்று பெண்கள் அங்கலாய்ப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்களாய் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவசர அவசரமாய் கிளம்பி பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து பள்ளிக்கும் டிபனில் கட்டிக் கொடுத்து தனக்கும் எடுத்துக் கொண்டு இயந்திரமாய் செயல்படுகிற காலம் இது.

அனைத்துமே இயந்திரகதிதான். காலையில் சமையலறை ஒரே களேபகரமாகத்தான் இருக்கும். கடுகு டப்பா எங்கஉப்பு எங்க காணோம்இங்கதானே வச்சேன் எண்ணெய் பாட்டில். காணோமே. எங்க போச்சு. இருக்கிற எடத்தில் எதுவுமே இல்லை. அய்யோ நேரமாச்சே. பிள்ளைக்கு ஸ்கூல் பஸ் வந்துடுமே. அப்புறம் நான் எப்ப வேலைக்கு போறது. இந்த மாதிரி சத்தங்களிலும்அங்கலாய்ப்புக்களிலும் தயாராகும் உணவு எப்படி இருக்கும்பிள்ளைகள் நன்றாக விரும்பி முழுமையாக சாப்பிடுவார்களா?

இதை இப்படி சொன்னால் எளிதில் புரியும்.

வீட்டிற்கு நமக்கு பிரியமான மாமாவோமச்சானோ அல்லது அம்மாவோஅக்காவோ வந்தால் சமையலைப் பார்த்து பார்த்து செய்வோம் இல்லையாநாம் அதிகம் நேசிக்கும் நமக்கு வேண்டப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூடுதல் கவனம் காட்டுவதில்லையாஒவ்வொன்றாக கவனமாக பிரியமுடன் பிரியமானவர்களுக்காக செய்யும்போது அவர்களும் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு இன்றைக்கு சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று சொல்வதில்லையா?

நாம் காட்டினோமே அன்பு. பிரமாதம் என்று சொல்லவைத்ததற்கு காரணம் அதுதான். பார்த்து பார்த்து செய்தது அல்லவா அந்த சமையல்.

சமையல் என்பது வெறும் உணவு அல்ல. அது அன்பு.

 

திங்கள், 5 மே, 2025

மேகமலை

 

மேகமலை. ஏற்றமும் இறக்கமும்





 

 

பெரிய மனதோடு வரவேற்கும் சின்னமனூர்.  மனைவியுடன் பணி செய்யும் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்காக ஆசிரியர்கள் 20 பேராய் வேனில் பயணம். திருமணம் முடிந்து குச்சனூர் சென்று வந்த பின் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருக்கும் மேகமலைக்கு செல்லலாமே என்று திடீர் திட்டம். கையில்தான் வேன் இருக்கிறதே.

அதுவரை மெளனமாய் இருந்த வானம் மெதுவாய் கலவரமானது.  சாரலாய், மிதமாய், வலுவாயும் பயம் காட்டியது மழை. இந்த மழையில் மேலே செல்வதா என்று கொஞ்சம் சிந்தனை. இந்த மேகமலைக்காக, திருமணத்துக்கு கணவருடன் காரில் வந்த ஆசிரியர் ஒருவர், கணவர் அவசர வேலை காரணமாக செல்ல வேண்டி இருந்ததால் திருமணம் முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டு வேனில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். மேகமலையை பார்க்காமல் எப்படி திரும்புவது? மேகமலை செல்ல முடிவானது.

முடிவானதும் வழக்கம்போல் அப்பகுதி நண்பர்களிடமும் வனத்துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்து முன்னேற்பாடுகளை செய்துகொண்டேன். ஒரு பாதுகாப்புக்காக. பொதுவான என் வழக்கம் இது.

மேகமலை அருமையான இடம். மலை ஏறும்போதே கீழே 6 மணிக்குள் இறங்கிவிட வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி அனுப்பினார்கள். நாங்கள் மேலே ஏறும்போதே 3 மணி ஆகிவிட்டது. மழை வேறு.

இந்த பயணத்தை ஒருங்கிணைத்தது தலைமை ஆசிரியரும் ஆசிரியர் ஒருவரும் தான். மணமகளின் தாயார் ஆசிரியர் நல்ல நண்பர். உடன் உப்புக்குச் சப்பாணியாய் தான் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு செல்கிறேன். வேறு எந்த பொறுப்பும் எனக்கில்லை.

ஆனால் அத்துணைபேரையும் பத்திரமாய் அழைத்து சென்று திரும்ப கீழே இறங்கி வீடு திரும்ப வேண்டும் என்ற பயங்கலந்த நினைப்போடுதான் பயணித்துக் கொண்டிருந்தேன். பயணங்கள்  தந்த  அனுபவங்களினால் எப்போதுமே அதீத கூடுதல் கவனம். வனத்துறை சொன்ன நேரத்துக்கு பிரச்சினை செய்யாமல் கீழே இறங்க வேண்டும் என்ற பொறுப்பும்.

மேகமலை. கண்ணுக்கு எட்டிய வரை பச்சைப்பட்டு தான். குளிர்ச்சி மனதுக்கும் தான். மேகமலை ஒரே ஒரு இடம் மட்டும் என்பதால் கொஞ்சம் நிதானம். கொஞ்சம் மகிழ்ச்சி. கொஞ்சம் ரசனை. அவ்வளவுதான் மற்றபடி வளைத்து வளைத்து ரம்யமான புகைப்படங்கள்  எடுக்க ஏற்ற அற்புதமான இடம். புகைப்படங்களைப் பார்த்தாலே நளினம் நடனமாடுவது தெரியும். அமைதியான சூழல். இந்தப் பயணத்தில் என் பங்களிப்பு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆசிரியர்கள் அனைவரும் அன்று மாணவர்களாய் மகிழ்ந்தார்கள்.

பொதுவாக இதுபோன்ற பயணங்களில் திரும்பும்போது கலந்துகொண்டவர்களிடம் பயணம் குறித்து பேசச் சொல்வது வழக்கம். அன்றும் ஆசிரியர்களிடம் மேகமலை அனுபவங்களை சொல்லச் சொன்னேன். நேரமும் போக வேண்டுமே. மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்கள் ஆசிரியர்கள். இது போன்ற சுற்றுலா இதுவரை சென்றதில்லை என்றார் ஒரு ஆசிரியர். இன்னொரு ஆசிரியர் அருமை என்று சிலாகித்தார்.

இந்த சுற்றுலா சிறப்புற என்னுடைய மூத்த அனுபவமும் ஒரு காரணம் என்பது தலைமை ஆசிரியரின் கருத்து.  

முழுமையாக நிதானமாய் ரசித்ததாயும். சரியாக திட்டமிட்டு ஒருங்கிணைத்தாகவும் பயணம் சிறப்புற  தலைமை ஆசிரியருடன் எனக்கும் சேர்த்து நன்றி தெரிவிக்க மறக்கவில்லை. வேகப்படுத்தாமல் முழுமையாக ரசிக்க உதவியதாய் இன்னுமொரு ஆசிரியர். பாராட்டும்போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது எல்லாம் நொடி நேரத்துக்குத்தான்.

அதுவரை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த என் தர்மபத்தினி,      ‘...க்கும். நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. பொதுவா அவரும் பொதுவா அப்படித்தான். விரட்டு விரட்டுன்னு விரட்டுவார். பார்த்தது போதும் வா. நேரமாச்சு நேரமாச்சு, கிளம்புங்க கிளம்புங்கன்னு விரட்டிக்கிட்டே தான் இருப்பார்.’ என்று பொறுக்கமாட்டாமல் மெதுவாக பொங்கினார்.

வேன் திரும்பிக் கொண்டிருந்தது. மேகமலையில் இருந்து முழுமையாக இன்னும் கீழே இறங்கவில்லை. ஆனால் என் தர்மபத்தினிதான் என்னை ஒரேயடியாக இறக்கிவிட்டுவிட்டாரே!.