ஞாயிறு, 7 டிசம்பர், 2025

ஆதலினால் கண்ணில் கவனம் கொள்வீர்!

       ஆதலினால் கண்ணில் கவனம் கொள்வீர்!

 

மஞ்சட்காமாலைக்கு சில இடங்களில் மூலிகை மருந்து கொடுப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மதுரைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் ஒன்றில் கண்நோய்களுக்கு கண்ணில் சொட்டு மருந்து போடுகிறார்களாம். கூட்டம் கூட்டமாய் மக்கள் வருகிறார்களாம்.  

தொடர்புடைய காணொலிகளும் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகங்களிலும் செய்தி வந்தது. 

15 ஆண்டுகளாக இந்த மூலிகைச்சாறு சொட்டுமருந்தை ஊற்றி வருவதாக அந்த வைத்தியர் காணொலியில் சொல்கிறார். 

காணொலியில், பேட்டி கண்டவர் மீண்டும் மீண்டும் கேட்கும்போதெல்லாம், அந்த வைத்தியரும் அழுத்தம் திருத்தமாக தெளிவாகவே சொல்கிறார். இங்கு மூலிகை சொட்டுமருந்தினை கண்ணில்போடுவது விஷக்கடிதோல்வியாதிக்காகத்தான். ஆனால் மக்களாகவே மஞ்சள்காமாலைமூலம்சர்க்கரை போன்ற பல்வேறு நோய்கள் உட்பட கண்நோய்களும் சரியாவதாக சொல்லிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு நான் பொறுப்பு இல்லை என்ற ரீதியில்தான் வைத்தியர் தெளிவாகவே சொல்கிறார்.



மொத்தத்தில் அவர்களாகத்தான் சர்வயோக நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள்.

ஆக, அவர்கள் கண்ணில் போடும் மூலிகைமருந்தும் கண் நோய்களுக்கானது அல்ல. ஆனால் வியப்பு என்னவென்றால் யாரோ சொன்னார்கள், கண் நோய்களுக்கானது என்று கூட்டம் கூட்டமாய் செல்வதுதான்.

பேட்டி கண்டவர், கண்ணில் மருந்துபோட்டுக் கொண்டவர்களையும் விடவில்லை. விஷக்கடிக்கும்தோல்வியாதிக்குமானதுதானே இந்த மருந்து என்று வைத்தியர் சொல்கிறாரேஆனால் நீங்கள் கண்ணுக்காக போட்டுக் கொண்டதாக சொல்கிறீர்களே’, என்று கேட்கிறார். அதற்கு அவர்கள்இல்லை.எல்லோரும் போட்டுக்கொள்கிறார்கள். கண்ணில் பிரச்சினை வராமல் நல்லா இருக்கு என்று, சொட்டுமருந்து போட்டுக்கொண்டு வந்தவர்கள் சொன்னதால்,நாங்களும் வந்தோம் என்கிறார்கள். ஆக என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இதை வந்தவர்களில் சிலரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

இப்போது அந்த இடத்தில் புதிது புதிதாக டீக்கடை ஹோட்டல்கள் எல்லாம் கூட வந்துவிட்டன.  அந்த அளவுக்கு அலைமோதும் கூட்டம்.

 

மருத்துவ கவனம்?

 

ஒருமுறை எங்கள் கிராம சுகாதார நிலையத்துக்கு வந்த மருத்துவ பயனாளி ஒருவர், சொட்டு மருந்து பாட்டில் ஒன்றைக் காண்பித்துசார்இந்த மருந்தை நேத்து இங்க கிராமத்தில வித்தாங்க. டெல்லியில் இருந்து வந்திருந்தாங்க. நீங்க கண்புரைக்கு, ஆப்ரேசன் செய்யணும்னு சொன்னீங்க. ஆனால் இந்த சொட்டு மருந்தைப்போட்டா புரை சரியாகிடும். ஆப்ரேசன் வேண்டாம்னு சொன்னாங்க’ என்று பாட்டிலைக் காண்பித்தார். 

அதில் பெரும்பகுதி ஹிந்தியில்தான் எழுதியிருந்தது. படிக்காதவர்களும் எளிதில் தெரிந்து கொள்வதற்காக கண் படம் ஒன்று இருந்தது.  நல்ல வேளை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆங்கிலத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்று இருந்தது.

தேசிய பார்வையிழப்புத் தடுப்புத்திட்டத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால்அப்படி ஒரு மருந்து வர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகத் தெரியும். கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோடி கோடியாக செலவு செய்கிறது அரசு. இப்படி இருக்க, இப்படி ஒரு சொட்டு மருந்தாஅதுவும் அரசின் அங்கீகாரத்தின் பெயரில். வாய்ப்பே இல்லை.

மருந்தினை போடவேண்டாம் என்று அவரிடம் சொல்லிவிட்டுஅந்த மருந்து விற்பவர் மீண்டும்வந்தால், இங்கே மருத்துவமனையில் தேசிய பார்வையிழப்புத் தடுப்புத் திட்டத்தின்  ( National Programme for Control of Blindness ) கீழ் பணிசெய்துவரும் ஒருவர், அவரை உடனே பார்க்க விரும்புவதாக சொல்லச் சொன்னேன்.

அவ்வளவுதான்அதற்குப்பிறகு அந்த ஆசாமி இருப்பாரா என்ன!.  கண்ணில் தட்டுப்படவேயில்லை. 

 

தரவுகள் வேண்டுமே!



 

30 ஆண்டுகளுக்கு முன் பிரபல வார இதழ் ஒன்றில்சித்த மருத்துவர் ஒருவர் தொடர் எழுதி வந்தார். அதில் ஒருமுறை கண்மருத்துவம் பற்றி எழுதும்போது கண்ணில் ஏற்படும் கிளாக்கோமா என்ற கண்நீர் அழுத்த உயர்வுக்கு அருகம்புல் சாறு குடித்தால், கிளாக்கோமா சரியாகிவிடும். மருந்தெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருந்தார். அதோடு மட்டுமல்லமால் பார்வைகுறைவுக்கு கண்ணாடி போட்டு கண்ணின் ஜீவனைப் போக்கிக்கொள்கிறார்கள் என்றும் கண்ணாடி போடுவதால், நாளடைவில் கண் ஒளி இழந்து, பார்வை இழந்துபோய்விடுகிறது என்றும் சொல்லி இருந்தார். மேலும் காரட் சாப்பிட்டு வந்தாலே போதும்,கண்ணில் ஒளி வந்துவிடும் என்பதும் கண்ணாடி போடுவது மூட நம்பிக்கை என்பதும் அவரது கருத்தாக இருந்தது.

கண்நீர் அழுத்த உயர்வினால் பார்வை நரம்புகள் நசிந்துவிடும். அதனால் பார்வையும் கடுமையாக பாதிக்கப்படும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான தொடர் சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமான பார்வையிழப்பு உறுதியாக ஏற்பட்டுவிடும். அழுத்தத்தை கட்டுப்படுத்த சொட்டு மருந்துதேவைப்பட்டால் லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும். இதில் முக்கியமான செய்தி,  இதனை தொடக்க நிலையில் கண்டறிய வேண்டியது முக்கியம் என்பதுதான்.

இதேபோல் பார்வைகுறைவுக்கு கண்ணாடி இன்றளவும் சிறந்த தீர்வு. எளிமையானதும் விலை குறைவானதும் கூட. காரட் கண்ணுக்கு நல்லதுதான். அதில் வைட்டமின் ’ சத்து இருக்கிறது. மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் இதற்கும் தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பார்வைகுறைபாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. 

ஒருவேளை காரட் சாப்பிடுவதன் மூலம் கண்ணாடி போடத் தேவையில்லை என்றால், அது குறித்து யார் ஆராய்ச்சி செய்தார்கள் அதன் முழு விபரம் என்ன என்பதையும்அருகம்புல்லில் ஒருவேளை கண்நீர் அழுத்த உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குமேயானால் அதைக் கொண்டு எப்படி குணப்படுத்தினார்எத்துணைபேர் பயன் அடைந்தார்கள்கண்டுபிடிப்பதற்கு எந்த உத்தியை உபகரணத்தைப் பயன்படுத்தினார்பயனாளிகளின் தரவுகள் அனைத்தையும் வெளியிடும்படிகண்மருத்துவர்கள் விளக்கமாக கேட்டிருந்தார்கள். 

கண்மருத்துவர்கள் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்கி எழுதிய கடிதங்கள்தான் வார இதழில் வெளியானது. ஆனால் உரியவரிடமிருந்து கடைசிவரை பதில் இல்லை. மெளனம்தான்.

சிக்குன்குன்யாவினையும்டெங்குவையும் கட்டுப்படுத்தியதில் நிலவேம்புவின் பங்கு அளப்பரியது. ஏன் கரோனா காலத்திலும்தான். நிலவேம்புவில் உள்ள மருத்துவக்கூறுகள், அதன் செயல்திறன் பற்றி ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர் கு.சிவராமனும் தெரிவித்துள்ளார்.  சித்த மருத்துவம் மகத்தானது. ஆனால் அதே சமயம், தரவுகளின் அடிப்படையிலேயே, நாம் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

சொட்டுமருந்து தயாரிப்பு

 

மருந்து தயாரிப்பு ஒன்றும் எளிதான செயல் அல்ல. மருந்தின் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டு எந்த பிரச்சினைக்கு அது கொடுக்கப்படுகிறது என்பதை பல கட்ட ஆய்வுகள் மூலம் உறுதி செய்துஅதன் பிறகு ஆய்விற்கு உரிய அங்கீகாரமும் பெற வேண்டும்.



பின் அது மருந்தாக தயாரிக்கப்படும்போது தரமான ஆய்வுக்கூடத்தில் அனைத்து தரக்கட்டுப்பாடுகளுடன் சுத்தமாக தயாரிக்கப்படுவதுபோலவே, சுத்தமாக பாட்டிலில் அடைக்கப்பட்டு உரிய அனுமதியுடன் விற்பனைக்கு வருகிறது.

அப்படி வரும் அந்த மருந்தினையும் மருந்துகுப்பியைத் திறந்த ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இல்லையேல் அதுவும் தகுதியற்று, காலாவதியாகிவிடும். இதேபோல் பாட்டிலின் நுனிப் பகுதியையும் கையால் தொடக்கூடாது என்பதும் குறிக்கப்பட்டிருக்கும். 

 

வாழ்நாள் முழுவதற்கும் பார்வை. 

 

இப்படி அனைத்து பரிசோதனைகளையும், தரக்கட்டுப்பாடுகளையும் கடந்து வெளிவரும் மருந்துகளே சில சமயங்களில் பிரச்சினையாவதைப் பார்க்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்புகூட உலர் கண்ணுக்கு பயன்படுத்தப்படும் சொட்டுமருந்து ஒன்று, பார்வையை கடுமையாக பாதிப்பதாக சொல்லி வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டதை இங்கு நினைவுகூறுதல் நல்லது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் மக்கள், கோழிரத்தம்நந்தியாவட்டைச்சாறுவிளக்கெண்ணெய் போன்றவற்றை கண்ணில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் போட்டு வந்தார்கள். அதனால் பலருக்கும் பார்வைபாதிப்புபார்வையிழப்பு ஏற்பட்டதெல்லாம் பழைய கதை. தேசிய பார்வையிழப்புத் தடுப்புத்திட்டத்தின் சீரிய பணியால் அந்த பழக்கமெல்லாம்நடைமுறையில் இல்லாத நிலை ஏற்பட்டு, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பு ( Avoidable Blindness) தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

ஒரு தொலைக்காட்சிப்பெட்டியோஒரு கைப்பேசியோதுணிமணியோ பார்த்து பார்த்து, கேட்டு கேட்டுதான் வாங்குகிறோம். ஆனால் எதற்கென்றே தெரியாமல் இப்படி கண்ணில் சொட்டுமருந்தினை போட்டுக் கொள்வதை என்னவென்று சொல்வதுஎந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாதவரை பிரச்சினையில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானா?  

கண் ஒரு நுட்பமான உறுப்பு. ஒரு சிறு பிரச்சினைகூட பார்வையிழப்புக்கு வகுத்துவிடும். அதன்பின் எந்தவித மருத்துவத்தாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையும் ஏற்படலாம்.  வாழ்நாள் முழுவதற்கும் பார்வை தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது. 

நண்பர்களே, ‘ஆதலினால், கண்ணில் கவனம் கொள்வீர் !’.

---

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு )

மதுரை

 

வெள்ளி, 14 நவம்பர், 2025

உலக சர்க்கரைநோய் நாள் 2025

உலக சர்க்கரைநோய் நாள் 2025

சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா?’

 



சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா?’

பொதுமக்களுக்கான மருத்துவம் தொடர்பான அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் கேள்விதான் இது.

மருத்துவரிடம் இருந்து உடனே பதில் வந்தது. ஏன் முடியாது. முடியுமே!. வாயைக் கட்டுப்படுத்தினால் போதும்’.  தடுப்பூசிபோல ஏதாவது சொல்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த கேள்வி கேட்டவர், இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாயடைத்துப்போனார்.

இந்த உரையாடல்களைப் பாருங்கள்.

சர்க்கரைதான் 300க்கு மேல இருக்குதுல்ல. அப்புறம் எதுக்கு இனிப்பைத் தொடணும்கஷ்டப்படணும். வாயைக் கட்டுப்படுத்த சொன்னா கேட்கிறீங்களாகொஞ்சம்கூட அறிவே இல்லை’, 

இந்தப்பக்கம் திரும்பறதுக்குள்ள காபியில சர்க்கரையைப் போட்டாச்சா, அப்புறம் எப்படி சர்க்கரை குறையும்’, 

சர்க்கரை குறைஞ்சு நல்லா இருக்கணும்னு எப்பத்தான் நினைப்பீங்க?’, ‘டாக்டர்தான் காலையில் கட்டாயம் வாக்கிங் போகச் சொல்றார்ல. போகாட்டி எப்படித்தான் குறையும்?’ கொஞ்சமாவது அக்கறை இருக்கா

சர்க்கரைநோய் இருப்பவர்களின் வீடுகளில் நடைபெறும் காட்சிகள்தான் இவை. அதுவும் சர்க்கரை கடுமையாக உயர்ந்து பக்க விளைவுகளோடு துயரப்படும்போது வீட்டில் நிம்மதியே இருக்காது. தினம் தினம் சர்க்கரைப் போராட்டம்தான்.   

வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும்போது அவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். அவர்களால் இனிப்புக்களை சாப்பிட முடியாதபோது மற்றவர்களாலும்  சரியாக சாப்பிட முடியாது. வீட்டில் இருக்கும் மற்றவர்களின் பிரச்சினை இது. 

சர்க்கரைநோய் என்றாலே வீடுகளில் பிரச்சினைதான்.

உறவினர் வீடுகள்ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போது டீகாபியில் அரைச்சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் கொடுக்கச் சொல்லும்போது, வருமே அவர்களுக்கு கோபம். ஒருநாள் சாப்பிட்டாஒண்ணும் ஆகாது, சும்மா கொடுங்கவாழ்றதே சாப்பிடறதுக்குத்தானேஎப்ப பார்த்தாலும் சர்க்கரை சர்க்கரைன்னுட்டு’’ கோபமாக வார்த்தைகள் இப்படித்தான் வந்துவிழும். 

திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும் இனிப்புக்களை மனச்சாட்சி இல்லாமல் எடுத்து எடுத்து சாப்பிடும்போதும்ஒன்றுக்கு இரண்டாக ஐஸ்கிரீமை உள்ளே தள்ளும்போதும் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. ஒன்றும் செய்யாது. இப்ப என்ன ஆச்சுஒரு மாத்திரையை கூடுதலாக எடுத்துக் கொண்டால் போதும், அது சமநிலையாகிவிடும் என்பது அவர்களது நினைப்பு. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அவர்கள்தான்.  சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது கண்சிறுநீரகம்இதயம்பாதம் என உடல் உறுப்புக்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என்பதை  இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஏன் தேவையில்லாமல் துயரப்பட வேண்டும்?

 

சர்க்கரைநோய் வராமல் காக்க முடியுமா?

 

சர்க்கரையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.  இனிமேல் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறவர்களும் புதிதாக இதில் சேர இருக்கிறார்கள். அதாவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள். ( pre-diabetes நிலையில் இருப்பவர்கள் )இவர்களை சர்க்கரை நோய் வராமல் காக்க முடியும்.  

முன்னெச்சரிக்கையாக சரியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் சர்க்கரைநோயால் இவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படாது.

இவர்களுக்கான நல்ல செய்தியைத்தான் சென்னை சர்க்கரைநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.வி.மோகன் தற்போது தெரிவித்திருக்கிறார். அதுவும் நாம் சாப்பிடும் பிஸ்தாபருப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். பிஸ்தாவில் அப்படி என்ன இருக்கிறதுஇரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் எப்படி உதவுகிறது பார்க்கலாம். 

 

பழமையும் மதிப்பும் மிக்க பிஸ்தா




 

கி.மு. 6750 காலகட்டத்திலேயே பிஸ்தா’ உண்ணப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆய்வில் கண்டறிந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அத்தகைய பழமை வாய்ந்த பிஸ்தாவைப் பற்றிய முக்கியமான ஆய்வினை சென்னை சர்க்கரைநோய் ஆய்வு நிறுவனம்’, ‘அமெரிக்க பிஸ்தா உற்பத்தியாளர்களுடன்’ இணைந்து நடத்தி இருக்கிறது. இந்த ஆய்வில்தான் பிஸ்தாவை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் உடலின் வளர்சிதைமாற்றம் மேம்பட்டு சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு இது நல்ல செய்திதான். 

புரதம்நார்ச்சத்துஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA) ஆகியவை பிஸ்தாவில் அதிகமாக இருக்கின்றன. இதனால் பிஸ்தாவுக்கு பசியை அடங்கச் செய்யும் தன்மை அதிகம் என்று டாக்டர் மோகன் தெரிவிக்கிறார்.

30 கிராம் பிஸ்தாவினை உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்வதன் மூலம் வயிறு நிறைந்துவிடுகிறதாம். இது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளின் தேவையையும் குறைக்க உதவுகிறதாம்.

புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் வயிற்றினை நிரப்புவதன் மூலம் உணவுக்குப் பின்னர் தேவையில்லாமல் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.  இது கார்ப்போஹைட்ரேட் வாயிலாக பெறக்கூடிய அதிகப்படியான கலோரிகளை குறைக்கிறது. 

இந்த அணுகுமுறையால் இரத்த சர்க்கரை நன்றாக கட்டுப்படுவதாகவும்மூன்று மாதத்திற்கான சர்க்கரையின் சராசரி அளவு ( HbA1c ) கணிசமாக குறைவதாகவும் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

 

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை

 

சர்க்கரைக்கு முந்தைய நிலை சரிசெய்யக்கூடியது. ஆனால் சரியான நேரத்தில் செயல்படுவது அவசியம். இல்லையென்றால் சர்க்கரைநோய்க்கு முழுமையாக வழிவகுத்துவிடும். 

இளைஞர்கள் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். இவை உடல்பருமனுக்கும்சர்க்கரைநோய்க்கும் வழிவகுக்கும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தும் என்ன ஆகப்போகிறது என்று அது குறித்து கண்டுகொள்வதில்லை.

அவர்கள் விரும்பிச் சாப்பிடும் சக்கை உணவுகளில்  கொழுப்புக்கள்உப்புசர்க்கரை ஆகியவை அதிகம். ஊட்டச்சத்து குறைந்த, கலோரி மிகுந்து காணப்படும் இத்தகைய உணவுகளைத் தவிர்த்து பிஸ்தாபருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். 

அதிகம் பதப்படுத்தப்படாத பிஸ்தா பருப்பினை சாப்பிட்டுக் கொண்டு சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சர்க்கரை நோயினை பக்கத்தில் வரவிடாமல் நலமாக வாழலாம் என்று டாக்டர் மோகன் வலியுறுத்துகிறார்வாழ்நாள் முழுவதும் சர்க்கரைநோய் பற்றிய கவலையும் இனி தேவையில்லை.

சர்க்கரைநோயாளிகள், கட்டுப்பாட்டில் இருக்க விரும்பினாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. காபியில் சர்க்கரை போட்டாச்சேஒரு நாளைக்கு குடித்தால் ஒன்றும் செய்யாது. சும்மா குடிங்க என்று சொல்பவர்கள் இனிமேல் அவர்களின் சர்க்கரையின் மீது அக்கறை காட்டுங்கள்.

 

குழந்தைகள் நலத்திலும் அக்கறை காட்டுவோம்

 



குழந்தைகள் தினமான இன்று அவர்களின் உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள். கண்ட கண்ட சக்கை உணவுகளாலும்நொறுக்குத்தீனியாலும்மின்னணு சாதனங்களில் மூழ்கியும்உடல் உழைப்பு இல்லாமலும் இந்த தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது. 

இதனால் இவர்களுக்கு இளவயதிலேயே சர்க்கரைநோய் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்லி வருவதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள். அவர்களை நம் பாரம்பரிய உணவுமுறைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வளர்ந்து கொண்டிருக்கிற இத்தலைமுறையினரை சர்க்கரைநோயின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பது நம் கையில்தான் இருக்கிறது.

வாழ்க்கைமுறை மாற்றம்உடற்பயிற்சிஉணவுக்கட்டுப்பாடுடன் சுற்றத்தாரின் அக்கறையும் சேரும்போது குடும்பங்களில் நிச்சயமாக ஆரோக்கியமான சூழல் ஏற்படும். இதன்மூலம் உலக சர்க்கரைநோய் நாளின் இந்த ஆண்டு கருப்பொருளான நீரிழிவு மற்றும் நலவாழ்வின்’ நோக்கம் நிறைவேறட்டும். 

மு.வீராசாமி

மேனாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்

மதுரை

 

திங்கள், 20 அக்டோபர், 2025

தீபாவளி

 
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு நம்மை இந்த 
தீபாவளி அழைத்துச் செல்லட்டும்

வெள்ளி, 17 அக்டோபர், 2025

பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு

பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு.



கண்ணன் ஐந்தாம் வகுப்பு. தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான். புத்தாடை, பட்டாசு என சிறுவர்களுக்கே உரிய கனவுகளோடு தீபாவளி நாளை எதிர்நோக்கி இருந்தான். 

பட்டாசு வாங்க வேண்டியதுதான் பாக்கி.  முதல்நாள் இரவு போகலாம் என்று அப்பா சொல்லி இருந்ததுபோல் வாங்கியும் கொடுத்தார்.

காலையில் குளித்துவிட்டு புத்தாடை போட்டுக்கொண்டு வெடி வெடிக்கத் தயாரானான். வீதியில் வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. அது என்ன எதிர்வீட்டு மணி, நேற்றிலிருந்தே வெடிபோட்டு பீத்திக் கொள்வது. நாமும் வெடி வெடித்து அவனை வெறுப்பேத்துவோம் என்று களத்தில் இறங்கினான். 

முதலில் எப்போதும் அவன் அப்பா, தீபாவளியை பூஞ்சட்டி - அதுதான் புஸ்வானம் வைத்து தொடங்கச் சொல்வார். புஸ்வானத்துக்கு நெருப்பு வைத்துவிட்டு விலகி வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் . ஆனால் எரியாமல் என்னவோ மக்கர் செய்தது. அய்யோ மணி பார்க்கிறானா? என்று நோட்டம் விட்டான். நல்ல வேளை அவன் அங்கு இல்லை.

என்னடா! தொடக்கமே சரியில்லையே! என்று நினைத்து அருகில் போய் நெருப்பு இருக்கிறதா என்று பார்த்தான். சரியாகத் தெரியவில்லை. அமைதியாக இருந்தது. மெல்ல குனிந்தான். அவ்வளவு நேரம் மெளனமாக இருந்த புஸ்வானம், கண்ணன் குனிந்த நேரம் பார்த்து சடாரென புகைத்து மேலெழுந்து கலர்கலராய் ஒளியைக் கக்கியது. அதே நேரம் கண்ணனின் கண் ஒளி பறிபோனது.

பாவம். அய்யோ குய்யோ என்று கண்ணன் கத்தி என்ன பயன்மருத்துவமனையில் சிகிச்சையால் கண்ணில் வலி குறைந்து காயம் சரியாக இருமாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் பார்வை முற்றிலும் போனது போனதுதான். 

 

தீபாவளி என்றாலே பட்டாசுதான்!

 

புத்தாடைபலகாரம் என இருந்தாலும் தீபாவளி என்றாலே பட்டாசுதானே உடனே நினைவுக்கு வரும். பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினால்தானே அது தீபாவளி. 

என்னதான் கம்ப்யூட்டர்செல்போன் என்று டிஜிட்டல் சாதனங்கள் வந்தாலும் பட்டாசுக்குரிய மதிப்பு என்றும் குறையாது. தீபாவளியிடமிருந்து பிரிக்கவும் முடியாது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது இது போன்று சிறுவர்கள் பட்டாசுவெடித்து கண்ணில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்வை பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும் உள்ளாகிறார்கள்.

இந்த தீபாவளி பாதுகாப்பான மகிழ்ச்சியான தீபாவளியாக குறிப்பாக கண்பார்வை பாதிக்காத தீபாவளியாக இருக்க என்ன செய்யலாம்?

பொதுவாக வெடிக்கு நெருப்பு வைத்து குறிப்பிட்ட சிறிது நேரத்திற்குள் வெடித்தால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்ச நேரமாகியும் வெடிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த வெடிக்குப் போய்விட வேண்டியதுதான். 

ஏன் வெடிக்கவில்லைநெருப்பு இருக்கிறதாஎன்று பக்கத்தில் போய் பார்த்தால் பிரச்சினைதான். சில சமயங்களில் மிகவும் தாமதமாக நெருப்பு பிடித்து குனிந்து பார்க்கும்போது சரியாக முகத்தில் வெடித்து கண்ணைக் கடுமையாக பாதித்துவிடும் ஆபத்து உள்ளது. இது போன்ற பாதிப்புக்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் வெடி வெடிக்கவில்லை என்றால் வருத்தப்படாமல் போனால் போகிறது என்று நினைத்து அதன் மேல் மண்ணைப் போட்டுவிடவேண்டும். தள்ளிப்போய் அடுத்த வெடியை வெடிக்க போய்விட வேண்டும்.

புஸ்வானம் தானே! அதுதான் வெடிவகை இல்லையே! மத்தாப்பு வகைதானே  என்ற நினைப்பும் அலட்சியமும்  வேண்டாம். கவனம்


ஊதுபத்திகூட ஆபத்துதான்.


வெடிக்கு நெருப்பினை வைக்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பயன்படுத்துவார்கள். சிலர் சாதாரண தீப்பெட்டியினையும் இன்னும் சிலர் மத்தாப்பு பெட்டியினையும் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் கயிறு போன்ற நூல்திரியின் மூலம் வெடிகளுக்கு நெருப்பை வைப்பார்கள்.

இன்னும் சிலர் பெரிய தடிமனான ஊதுபத்தியின் மூலம் வெடிகளுக்கு நெருப்பு வைப்பார்கள். இது நீண்ட நேரம் நின்று எரியும். அதிக வெடிகளை வெடிக்கலாம் என்று சிறுவர்கள் இதைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஊதுபத்திதான் ஆபத்தானது. 

சிறுவர்கள் இந்த நெருப்புள்ள இந்த ஊதுபத்தியுடன் வெடிகளை வெடித்துக் கொண்டு இங்கும் அங்கும் மகிழ்ச்சியாக ஓடுவார்கள். அப்படி ஓடும்போது இந்த ஊதுபத்தியினை நெட்டுவாக்கில் பிடித்துக்கொண்டு கவனமாக செல்ல வேண்டும். அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்துச் செல்ல வேண்டும். ஆனால் பல நேரங்களில் வெடி வெடிக்கும் ஆர்வத்தில் அப்படி பிள்ளைகள் செய்வதில்லை.

நெட்டுவாக்கில் உயர்த்தி பிடிக்காமல் கிடைமட்டத்தில் குறுக்குவாட்டில் பிடித்துக் கொண்டு வேகவேகமாக ஓடுவார்கள். வெடிக்கு நெருப்பினை பற்ற வைத்துவிட்டு ஓடும்போது அந்த ஊதுபத்தியினை பிடித்திருக்கும் உயரத்தில் பிள்ளைகள் யாராவது குறுக்காக வந்தால் அந்த நெருப்புள்ள ஊதுபத்தி எதிரே வரும் சிறுவர்களின் கண்ணில்  வேகமாக குத்திக் கண்ணைக் கடுமையாக தாக்கி துளைத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது. சிறு பிள்ளைகள் இதுபோன்று பார்வை இழந்து போயிருக்கிறார்கள்.


பாதுகாப்பான தீபாவளிக்கு:

Ö      பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

Ö      சிறுவர்கள்பெரியவர்கள் மேற்பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

Ö      வெடிகளுக்கு நெருப்பு வைக்க நீண்ட எரிகுச்சிகளை பயன்படுத்த வேண்டும்.

Ö      வெடிகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு தள்ளி வந்து விட வேண்டும்.


Ö      வெடிகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது.

Ö      நெருப்பு வைத்தும் வெடிக்கவில்லை என்றால் ஏன் வெடிக்கவில்லை. நெருப்பு இருக்கிறதா இல்லையா என்று வெடிக்கு அருகில் போய் குனிந்து பார்க்க கூடாது.

 

Ö      காயம் ஏற்பட்டால் உடனே சுத்தமான தண்ணீரால் கண்ணை நன்றாக கழுவி அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தாமதம் வேண்டாம்.

பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் பட்டாசு வெடிவகைகள். இதை நினைவில் கொண்டாலே போதும் அது பாதுகாப்பான பண்டிகையாக அமைந்துவிடும். 

மு.வீராசாமி
கண்மருத்துவ உதவியாளர் ( ஓய்வு) &
முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தேசிய கண்மருத்துவ சங்கம்
மதுரை