புதன், 1 ஜனவரி, 2025

வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.

 

    வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.

 

மருத்துவத்துறையைச் சார்ந்த நண்பர். அறிவார்ந்தவர்தான். அதுவும் மருந்தைக் கையாளுபவர்தான். சர்க்கரை மெல்ல எட்டிப்பார்க்கும்போதே அவரை எச்சரித்தேன். அவருக்கு இன்னொருவர் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும் நட்புகருதி என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சிகிச்சையின் அவசியம், குறிப்பாக பார்வையிழந்துபோதலின் ஆபத்து குறித்தெல்லாம் சொல்லி இருந்தேன்.

இருந்தாலும் அவர் அலட்சியமாகவேத்தான் அப்போது கேட்டார்.

அண்மையில் அவரைப் பார்த்தபோது கண்கலங்கினார். ‘நீங்கள் சொன்னபோதே கேட்டிருக்க வேண்டும். இப்போது கண்ணில் இரத்தம் கசிந்து ஏகப்பட்ட பிரச்சினையாகிவிட்டது. பார்வை கடுமையாகப் பாதித்துவிட்டது. கண்ணில் ஊசிபோட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்’’’’.’கேட்பதற்கு பரிதாபமாக இருந்தது.

 

என்ன சவால்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இந்த ‘சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு என்ற ( Diabetic Retinopathy ) பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் தொடர் சிகிச்சை செய்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே.

இன்றைய நாளில்  ‘சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பினால் ஏற்படும் பார்வை பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. கண்மருத்துவமனையின் விழித்திரைப்பிரிவிற்கு சென்று அங்குள்ள கூட்டத்தைப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று.

 

பெரும்பாலும் இந்நோய் தாக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், நோய் தமக்கு இருப்பது தெரியாமல், முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் விழித்திரையில் பாதிப்புக்குள்ளானவர்கள்தாம். இன்னொரு பகுதியினரோ நோய் இருப்பது தெரிந்தும் முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். 

 

சர்க்கரைநோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்:

சர்க்கரைக்கு முறையாக சிகிச்சை செய்துகொள்ளாதபோது கால்கள், நரம்புமண்டலம், மூளை, சிறுநீரகம், இதயம் இவற்றுடன் கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

 

சர்க்கரைநோயினால் கண்களில் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது:

ஒரு பொருளைத் தெளிவாக பார்க்க வேண்டும் என்றால், நம்கண்ணில் உள்ள கருவிழி ( Cornea ), லென்சு,  விழித்திரை, பார்வை நரம்பு அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பில் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் பார்வை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

சில சமயங்களில் விழித்திரையில் புதிய ரத்தக்குழாய்கள் தோன்றலாம். இந்த புதிய ரத்தக்குழாய்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு அதனால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிவதன்மூலமும் ( Retinal Detachment ) பார்வையிழப்பு ஏற்படலாம்.

 

பாதிப்பை சரிசெய்ய முடியுமா?

 

விழித்திரைப் பாதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியாது.

சிலருக்கு Anti vascular endothelial growth factor எனப்படும் இரத்தநாள உள் அடுக்கு வளர்ச்சி காரணியைத் தடுக்கும் மருந்துகள் கண்ணுக்குள் ஊசி மூலம் செலுத்த வேண்டி வரும். இந்த மருந்து கண்ணுக்குள் ஏற்படும் வீக்கத்தையும், புதிய இரத்தநுண்குழாய் வளர்ச்சியையும் தடுக்க உதவும்.

பாதிப்பைப் பொறுத்து லேசர் சிகிச்சையும் செய்ய வேண்டி வரும். இதன் மூலமும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். விழித்திரை ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட கசிவு, லேசர் சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படும். சிலருக்கு பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ‘விட்ரெக்டமிஎன்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். விழித்திரைப் பிரிந்திருந்தால் அதற்கும் அறுவை சிகிச்சைத் தேவைப்படும்.

 

சர்க்கரைநோய் உள்ள எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுமா?

 

சர்க்கரைநோய் உள்ளவர்கள் அனைவருக்குமே ‘சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்புஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சர்க்கரைநோய்க்கு முறையாக சிகிச்சை செய்துகொண்டு, கண்களையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்துகொண்டு வருவதன்மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.  


  கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் வேண்டாம்

 

சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பைப் பொருத்தவரையில் வருமுன் காப்பதே சிறந்தது. நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, முறையான சிகிச்சை மூன்றும் அவசியம். விழித்திரைப் பாதிப்பின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படாது என்பதால் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கண்களை கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் விழித்திரைப் பாதிப்பை பொருத்தவரையில் தொடக்கநிலையிலேயே கண்டறியவேண்டியதும், அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்ய வேண்டியதும் மிக மிக அவசியம்.

சர்க்கரைநோயுடன் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புண்டு. எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதுடன், புகையினையும், மதுவினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கான புத்தாண்டு செய்தி என்னவென்றால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்தால் தேவையில்லாமல் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இந்த ஆண்டு மட்டுமல்ல வரும் ஆண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருக்கும்! 

 

மு.வீராசாமி 

முதல்நாள் 2025

மதுரை

 

 

 

வெள்ளி, 13 டிசம்பர், 2024

நீங்கள் சாப்பிடும் உணவு அதிக AGE உள்ள உணவா?

 

நீங்கள் சாப்பிடும் உணவு அதிக AGE உள்ள உணவா?

 

அதிக கிளைகேசன் முடிவு பொருட்கள்  ( Advanced Glycation end products - AGE )  உள்ள உணவுகள் குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் சர்க்கரைநோயினை ஏற்படுத்துவதாக அண்மைக்கால ஆய்வு தெரிவிக்கிறது. அது என்ன அதிக AGE  உள்ள உணவு?

நம்முடைய உணவு பெரும்பாலும் ஆவியில் வேகவைத்தல், அவித்தல் முறையில்  செய்யப்படுபவை ஆகும். இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை இந்த தலைமுறையினரிடம் சொல்லிப்பாருங்கள். ஏதோ கேட்கக்கூடாததை கேட்ட மாதிரி ஓட்டம் பிடிப்பார்கள்.

கலர் கலராய் கண்டதை தூவி கண்ட எண்ணெயில் தூக்கிப் போட்டு வறுத்து எடுக்கும் வாயில் நுழையாத பெயர் கொண்ட உணவுகளை சப்பு கொட்டி அல்லவா சாப்பிடுகிறார்கள். சுவைக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் நாவின் நரம்புகளைத் தூண்டச் செய்கின்றன. தொடர்ந்து சாப்பிட அழைக்கின்றன.

இப்படி அதிக வெப்பநிலையில் சமைக்கும்போதோ நீண்ட நேரம் வறுக்கும்போதோ சர்க்கரை மூலக்கூறுகள் கொழுப்பு அல்லது புரத மூலக்கூறுகளுடன் சேரும்போது உருவாகும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை கிளைகேசன் முடிவு பொருட்கள் ( Advanced Glycation End products AGEs ) என்கிறார்கள். அது நீரிழிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அண்மை ஆய்வுகள் மூலம் தெரிய வருவதாக சென்னை நீரிழிவுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர்.வி.மோகன் தெரிவிக்கிறார்.  ( தி இந்து ஆங்கிலபதிப்பு ; 09-10-2024)


 

அதிக கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுகள் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கிளைகேசன் பொருட்கள் உள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் இவற்றினை எடுத்துக்கொள்வதன் மூலம் அதிக எடை மற்றும் பருமனான நபர்கள் தங்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் செல்கள், திசுக்கள் சேதமடைவதை தவிர்க்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதையும் தடுக்க முடியும்.

அண்மைக்காலங்களில் கிரீன் டீ உடலுக்கு நல்லது என்று  சொல்லி பலர் சாப்பிடுகிறார்கள். உண்மையிலேயே நல்லதுதான். கிரீன் டீ அதிக கிளைகேசன் பொருள் ( AGEs)  உருவாவதைத் தடுக்கிறது.

நீண்ட நேரம் சமைப்பதையும், அதிக வெப்பநிலையில் சமைப்பதையும் தவிர்த்து மிதமான வெப்பநிலையில் சமைப்பதன்மூலம் அதிக AGEs உருவாவதைத் தடுக்கமுடியும். வறுப்பதை குறைத்து மாறாக வேகவைத்து சாப்பிடலாம். உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வோம். நன்றாக வறுத்து சாப்பிடுவதைக் காட்டிலும் வேகவைத்து தாளித்து சாப்பிடலாம்.

அதிக கொழுப்பு, சிகப்பு இறைச்சி, துரித உணவு உட்பட அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கோழி, மீன்களுக்கு மாறுவது ஆரோக்கியத்துக்கு திரும்புவதற்கு சமம் .

கோழி, மீன் சாப்பிடும்போது அதில் வினிகர், எலுமிச்சை சாறு சேர்ப்பதைப் பார்த்திருக்கிறோம். ஹோட்டல்களில் தட்டில் அதனுடன் எலுமிச்சை சேர்த்தே தான் தருவார்கள். பலரும் அப்படி சாப்பிடுகிறார்கள் என்று நாமும் அப்படி சாப்பிடுகிறோம். காரணம் எல்லாம் தெரியாது. எல்லோரும் சாப்பிடுகிறார்கள். நாமும் சாப்பிடுகிறோம்.  எலுமிச்சை வினிகர் சேர்ப்பதன் மூலம் அதிக கிளைகேசன் பொருள் உருவாகாமல் தடுக்கப்படுக்கிறது.

இனிப்பான உணவுகளையும், பேக்கரி உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்த்து குறைந்த கிளைகேசன் பொருள் உள்ள  பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

சாக்லேட்களையும், கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களையும் பர்கர் போன்ற துரித சக்கை உணவுகளையும் பின்னால் ஏற்படும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் எதுவும் தெரியாமலேயே நம் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சாப்பிடுவதை அந்தஸ்து அல்லது அதுதான் இந்தக் கால வழக்கம். அதாவது நாகரீகம் என்று  இந்த தலைமுறையினர் நினைக்கிறார்கள். யார் அவர்களுக்கு சொல்லி புரியவைப்பது. குடும்ப சூழல், வேலை நிமித்தம், வீக்கெண்ட் ட்ரீட் என்று பல காரணங்களால் வீட்டில் சமைப்பது வெகுவாக குறைந்து கொண்டுதான் வருகிறது. போதாதற்கு குழம்பு, ரசம், காய், கூட்டு பொரியல் வகைகளை 20, 30 ரூபாய்க்கு பார்சல் போட்டு தருவதும் வசதியாக போய்விட்டது.

‘அப்பாதிரைப்படத்தில் சமுத்திரக்கனி சொல்வார். நல்ல உணவைச் சாப்பிட்டால் ஆஸ்பத்திரிக்கு போகத் தேவையில்லை என்று. ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் நோயை விலை கொடுத்து வாங்காமல் இருக்கலாமே. உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. சர்க்கரைநோய் வந்தபின் மெனக்கெடுவதைக் காட்டிலும் வருமுன் தடுப்பது எளிதுதான் என்பது புரிய வேண்டுமென்றால் மீண்டும் இந்தக் கட்டுரையினை தொடக்கத்தில் இருந்து படியுங்கள்.

 

 

 

 

 

புதன், 30 அக்டோபர், 2024

கொட்டுக்காளியின் தவறு?

 

                       கொட்டுக்காளியின் தவறு?

 

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு) &

முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேசிய கண்மருத்துவ சங்கம்.

மதுரை.

                

                             -----


 

கொட்டுக்காளி பாத்தாச்சா! கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கீங்க என்று வழக்கம்போல் நண்பர்கள் கேட்டார்கள். பார்த்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டேன். அப்படி என்ன இருக்கிறது? ஆவலைத் தூண்டியது.  

கொட்டுக்காளி அருமையான படம்தான். நடிகர் சூரிக்கு விடுதலைக்கு அடுத்து உயர்வைத் தந்த படம். எடுத்துக் கொண்ட கருத்து பரவலாக பலராலும் பேசப்பட்டது. எங்கள் ஊர்காரர் என்பதால் அவர் மீது எப்போதும் பிரியம்தான். அம்மன்உணவகத்தால் மதுரைக்காரர்களை கட்டிப்போட்டல்லவா வைத்திருக்கிறார்.

சரி விசயத்துக்கு வருவோம். கொட்டுக்காளியில் ஒரு காட்சியில் சூரி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார் தன் உறவினர்களுடன். பின்னால் ஆட்டோவில் தங்கை உட்பட இன்னும் சில உறவினர்களும் தொடர்ந்து வருகிறார்கள். திடீரென்று சூரியின் வண்டி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த தங்கையும் மற்றவர்களும் ஒரே நேரத்தில் என்னாச்சு? என்னாச்சு? ஏன் வண்டி நிற்கிறது என்று கேட்டுக்கொண்டே ஆட்டோவை அவருக்கு அருகில் போய் நிறுத்துகிறார்கள்.

பூச்சி அடிச்சிருச்சு! பூச்சி அடிச்சிருச்சு! என்கிறார்கள் அங்கிருப்பவர்கள். கண்ணில் பூச்சி அடிச்சிருச்சாம் வேறு ஒன்றுமில்லை என்கிறார்கள். அங்கே சூரி கண்ணைத் தேய்த்துக் கொண்டு நிற்கிறார்..

ஆட்டோவில் இருந்து இறங்கிய சூரியின் தங்கை வேகமாக போய் சூரிக்கு அருகில் நின்றுகொண்டு சூரியின் கண்ணை நன்றாக திறக்கச் செய்து தூசியை தன் நாக்கால் எடுக்கிறார். குளோசப் காட்சியாக வேறு காண்பிக்கிறார்கள். இந்தக் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  


 


 

 


அதெல்லாம் பழைய கதை

அதெல்லாம் ஒரு காலம். கண்ணில் தூசிவிழுந்தால் நாக்கைப்போட்டு எடுப்பது, வளையம் போட்டு எடுப்பது, தாய்ப்பால் ஊற்றுவது, விளக்கெண்ணெய் ஊற்றுவது, கோழிக்கால் இரத்தம், பச்சிலைச் சாறு விடுவது என்பதெல்லாம் போயே போச்சு. எப்போது இந்தியாவில் ‘தேசிய பார்வை இழப்புத் தடுப்புத்திட்டம்தொடங்கி தீவிரமாக செயல்படுத்தப்பட்டதோ அப்போதே இவையெல்லாம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டது.  தடுக்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதற்கு போராட வேண்டி இருந்தது.  இவை மருத்துவ வசதி கிடைக்காத நிலையில் முன்னேறாத காலகட்டத்தில் இருந்த வழக்கங்கள் என்பதையும் தற்போது அவை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன என்பதையும் கவனிக்க வேண்டும்.

மருத்துவ வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில்கூட இம்முறைகள் தற்போது வழக்கத்தில் இல்லை என்று சொல்லலாம். இப்படி தூசி எடுத்து பார்வை இழந்துபோனவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். கருவிழி பாதிக்கப்பட்டு, நாக்கால் எடுப்பவர் மூலம் தொற்று ஏற்பட்டு, தூசி முறையாக முழுமையாக எடுக்கப்படாமல் போன்ற காரணங்களால்.

தற்போது பார்வை இழப்பத் தடுப்புத் திட்டம் எவ்வளவோ முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சூரி சார்ந்த மதுரையே கண்பாதுகாப்புக்கும் நவீன சிகிச்சைக்கும் பேர் பெற்ற ஊர் என்பது அவருக்கேத் தெரியும்.

பார்வை பாதுகாப்பில் பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் இந்த காட்சி தேவையா என்று தோன்றுகிறது.

 

கண்ணில் தூசி - பூச்சி விழுந்தால் என்ன பிரச்சினை?

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கண்ணாடியோ அல்லது ஹெல்மெட்டோ அணிந்து செல்லாமல் பலரும் செல்வதைப் பார்க்கிறோம். இதுபோன்ற சமயங்களில் கண்ணில் அடிக்கடி தூசியோ பூச்சியோ விழலாம். இதில் பொதுவாக தூசி விழுந்தவுடன் கண்களைக் கசக்கக் கூடாது. இதனால் அழுத்தமாக படியாமல் மேலோட்டமாகவே தூசி இருந்துவிட்டு  தானாகவே வெளியேறிவிட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் சில சமயங்களில் நாம் வண்டியில் வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது வேகமாக பறந்து வரும் பூச்சி கண்ணில் விழும்போது கொசுவோ அல்லது வேறு பூச்சிகளின் கொடுக்கோ பறந்துவந்த வேகத்தில் - நாம் வண்டியில் செல்லும் வேகத்தில் கண்ணின் கருவிழியைத் துளைத்துக் கொண்டு கண்ணுக்குள்ளேயே சென்று விடுவதுண்டு.

இதுமாதிரியான விசயங்களில் கண்ணின் கருவிழிக்குள் சென்ற கொடுக்கினை மருத்துவமனையில், அறுவை சிகிச்சைமூலம்தான் எடுக்கமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  எனவே கண்ணில் இது போன்று பூச்சிகள் விழுந்தால் கவனமாய் இருப்பது நல்லது. அட கொசுதானே! பொடி பூச்சிதானே என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

நாக்குபோட்டு எடுப்பது நல்லதல்ல என்பதோடு பார்வைக்கும் கேடு. பார்வைஇழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

 

தூசி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக தூசி விழுந்தால் குழாய் நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். பெரும்பாலும் தூசி போய்விடும். கண்ணில் தூசியோ அல்லது பூச்சி போன்ற இதர பொருட்கள் விழும்போது கண்ணைத் தேய்க்கக்கூடாது.  தேய்த்தால் கழுவிழியில் சிராய்ப்பு ஏற்பட்டு புண் ஏற்படலாம். அத்துடன் தூசி ஆழமாக பதிந்துவிடும்.

ஆனால் படத்தில் சூரி கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார். இதுவும் தவறான செயல்.

அந்த சூழலில் வேறு என்ன செய்வது என்று கேட்கலாம். அதுதான் சூரி உறவினர்கள் பாட்டிலில் தண்ணீர் வைத்திருக்கிறார்களே. தண்ணீர் கொண்டு கண்ணை நன்றாக கழுவுவதுபோல் காட்சியை அமைத்திருக்கலாம்.

திரைப்படம்தானே. லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது என்று ஒதுக்கிவிட்டு போக முடியாது. வியப்பாக இருக்கிறது. இந்தக் காட்சியை எடுக்க ஒருவர்கூட எதிர்ப்போ அல்லது குறைந்தது விமர்சிக்கவோ இல்லையா என்று.

கதை கிராமிய சூழலில் நடைபெறுவதால் கிராம வாழ்வியலை காண்பித்திருக்கிறேன் என்று இயக்குநர் சொல்லி சமாளிக்க முடியாது. திரைப்படம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதால் காட்சி அமைப்பில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை.

                                ---