திங்கள், 10 மார்ச், 2025

கண்ணில் பிரசர் வருமா?

                     கண்ணில் பிரசர் வருமா?                     

                உலக கண்நீர் அழுத்த உயர்வு வாரம்

                          ( மார்ச்சு 10 – 16 )

மு.வீராசாமி

மதுரை

---

கருப்பையாவுக்கு அடிக்கடி தலைவலி.  கிராமத்து சுகாதார நிலையத்தில்  அடிக்கடி போய் மாத்திரை வாங்கி சாப்பிட்டும் பயனில்லை.  ‘மருத்துவமனைக்கு வந்து கண்ணைப்  சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்ற நர்ஸம்மாவின் அறிவுரையை காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை.  

கொஞ்ச நாளாக பார்வையில் லேசாக தடுமாற்றம் வேறு. இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்கையில் பக்கத்தில் வருபவர்களும் சரியாகத் தெரியவில்லை. நர்ஸம்மாவிடம் சொன்னதில் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டார்.

மருத்துவமனையில் சோதித்துவிட்டு கண்ணில் பிரசர் அதிகரித்துவிட்டதாக  சொல்லிவிட்டார்கள். ( கிளாக்கோமா ) கண் பிரசரால் கண்ணில் 40 விழுக்காடு பார்வை இழப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது என்றும் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் இருக்கிற பார்வையைத்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கண்மருத்துவர் சொன்னதைக் கேட்டு கருப்பையா பயந்து போய்விட்டார்.

 

கிளாக்கோமாவில் என்ன பிரச்சினை?

 

பி.பி. நமக்குத் தெரிந்ததுதான். இதைப் படிக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிப்பேருக்கு இருக்கவும் கூடும். இரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அழுத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கூடினால் பிரஷர். பி.பி.கூடிருச்சு என்கிறார்கள்.  இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10-20 க்குள் இருந்தால் நல்லது.


 

உடம்பில் பிரஷர் அதிகமானால் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கிளாக்கோமா. கண்நீர் அழுத்த உயர்வு.

கிளாக்கோமா வருவதற்கு முன், தகவல் சொல்லிவிட்டு  வருவது கிடையாது. பொதுவாக எந்த விதமான அறிகுறிகளும் தெரியாது. அதுபாட்டுக்கு அமைதியா வந்து தாக்கும். வந்ததே தெரியாது. அமுக்குணித் திருடன் என்று சொல்லலாம். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டபிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது.

சரி அதனாலென்ன? என்றால் பிரச்சினயே அதுதான். அதை  விரிவாக தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால் செடி நாளடைவில் பட்டுப்போய்விடும் அல்லவா. பட்டுப் போன பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியுமா?

கிளாக்கோமாவிலும் அப்படித்தான். கண்ணில் அழுத்தம் அதிகரித்தது கண்டறியப்படாமல் தொடக்க நிலையில் சிகிச்சை செய்ய வில்லை என்றால் அழுத்த அதிகரிப்பினால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். ரிப்பேர் எல்லாம் செய்ய முடியாது.

பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியுமா? அதைப் போன்றுதான் பாதித்த பார்வை நரம்புகளை மீண்டும் சரி செய்ய முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தை கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை காப்பாற்றலாம்.

 

பார்வையை பாதுகாப்பது எளிதா?

 

மருத்துவமனையில் 40 வயதிற்கு மேல் எப்படி இரத்த அழுத்த சோதனை செய்து கொள்கிறோமா அதைப்போன்று கண்மருத்துவமனையில் கண்ணில் அழுத்த சோதனையினையும் ( Eye Pressure Test ) பார்த்துக் கொள்ள வேண்டும். யாரும் வந்து பாருங்கள் என்று சொல்ல மாட்டார்கள். நாமாகத்தான் போய் பார்த்துக் கொள்ள வேண்டும். 40 வயதில் இதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஒரு வேளை இருந்தால் தொடக்க நிலையிலேயே சரியான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைக்கலாம்.


 

மருத்துவமனையில் கண்ணில் மருந்துபோட்டு சிலிட் லேம்ப் சோதனை, ஆப்தால்மாஸ்கோப் சோதனை செய்து கண்ணை உள்நோக்கி சோதித்து கிளாக்கோமா பாதிப்புக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார்.

40 வயதில் ஒருவருக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடியை மாற்ற வேண்டி இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். நேரடியாக கண்ணாடிக் கடைக்குச் சென்று வாங்கினால் இந்த சோதனைகளை எல்லாம் பார்க்க முடியாது. ஒருவேளை கிளாக்கோமா இருந்தால் தொடக்க நிலையில் கண்டறியும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

கிளாக்கோமாவை தொடக்கநிலையில் கண்டறியாமல் போனால் நாளாக நாளாக பக்கப்பார்வை வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப்பார்க்கும்போது இரண்டு கண்ணின் இரு புறமும் (சைடு பார்வை) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும்.

நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பதார்த்தங்களை முழுமையாக பார்க்க முடியும்.

ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டால் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் என்பதோ இலையில் இருக்கும் பதார்த்தங்கள் முழுமையாகவோ தெரியாது. குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை அளவு வெகுவாக குறைந்து விடலாம்.

 

இப்போது புரிந்திருக்கும்.

 

யாரெல்லாம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளலாம்.

Ø  குடும்பத்தில் யாருக்கேனும் கிளாக்கோமா இருந்தால்

Ø  உடலில் இருக்கும் வேறு ஏதேனும் நோய்க்கு தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டிருந்தாலும்

Ø  வெள்ளெழுத்துக் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டி இருந்தாலும்

Ø  விளக்கினைச் சுற்றி கலர் கலராய் தெரிந்தாலும்

Ø  அடிக்கடி ஏற்படும் நாள்பட்ட தலைவலி

Ø  பக்கப் பார்வையில் தடுமாற்றம் இருந்தாலும்

உடனே கண்மருத்துவரிடம் சென்று கண்ணில் அழுத்தம் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கிளாக்கோமா இருக்கிறது. பார்வையைக் காக்க கிளாக்கோமாவுக்கு தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு. நல்ல கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள்.

தொடக்கநிலை – கண்டுபிடிப்பு-சிகிச்சை-கவனிப்பு பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும்.

 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

குழந்தையின் பார்வை - ஒரு பயணம் போவோமா!

 

             குழந்தையின் பார்வை - ஒரு பயணம் போவோமா!

 

குழந்தையின் பார்வை - ஒரு பயணம்

 

நீ சிரித்தால் சிரிப்பழகு.  சிரிக்க வேண்டாம். குழந்தையைப் பார்த்தாலே அழகுதானே. சிரித்தால் கேட்க வேண்டுமா! குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அதன் செய்கைகளால் மனம் இலகுவாகிவிடும். தன்னுடைய சிரிப்பால் தன்னைச் சுற்றியுள்ள உலகையே மகிழ்விக்கிறதாம் குழந்தை என்கிறார் பாரதிதாசன்.  

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே சில பெற்றோர் சொல்வார்கள். பிள்ளை என்னைப் பார்த்து சிரிக்குதுங்க. நல்லா பார்க்குதுங்க. கரெக்டா அடையாளம் கண்டுகொள்கிறது என்று. அப்படியெல்லாம் இல்லை. குழந்தைகள் பிறக்கும்போதே முழுமையான பார்வைத்திறனுடன் பிறப்பதில்லை. பிறந்தவுடன் பெரியவர்களைப் போன்றோ வளர்ச்சியடைந்த குழந்தையைப் போன்றோ குழந்தையால் பார்க்க முடியாவிட்டாலும் ஓராண்டிலேயே அதன் பார்வை பல மாற்றங்களைப் பெறுகிறது. அதே சமயம் ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பிறந்தவுடன்  சில வாரங்களுக்கு கண்ணின் பாப்பா ( Pupil ) சுருங்கி  இருக்கும். பிறந்தவுடன்  வெளிப்புறத்தில் காணப்படும் பிரகாசமான ஒளியை எதிர்கொள்வதைத்தடுக்க இது உதவும்.

பிறந்த குழந்தையால் அடுத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை ஓரளவு பார்க்க முடியும். அவர்களது கவனம் 8 முதல் 10 அங்குலங்கள் அல்லது பெற்றோரின் முகத்துக்கான தூரம் வரை இருக்கும். மையப் பார்வையைப் பொறுத்தவரையில் வளர்ச்சி நிலையில் இருக்கும். ஓரிருவாரங்களில் விழித்திரை வளர்ச்சி அடையும். அதன் பின் கண்ணின் பாப்பா சற்று விரிவடையும். இப்போது குழந்தைக்கு ஒளி, இருட்டு, வடிவங்கள் ஓரளவு தெரியும்.

ஒரு மாதத்தில் குழந்தை பெற்றோர் மீது கவனம் செலுத்த முயற்சிக்கலாம். மூன்று அடி வரை பிரகாசமான நிறமுள்ள பொருட்களால் கவரப்படலாம்.

 

மாறுகண் தோற்றமா?

 

முதல் இரண்டு மாதங்களில் குழந்தையின் கண்கள் இரண்டிலும் ஒருங்கிணைப்பு இல்லாத மாதிரி தோன்றலாம். அதாவது பார்ப்பதற்கு மாறுகண் ( Squint ) போன்று காட்சியளிக்கலாம். இது சாதாரண ஒன்றுதான். நாளாக நாளாக சரியாகிவிடும். இதைப் பார்த்து சில சமயங்களில் பெற்றோர் கண் ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று பயப்படுவார்கள்.  பயம் எல்லாம தேவையில்லை. இருந்தாலும் ஒருவேளை தொடர்ந்து அப்படி இருந்தால் அதாவது கண் மூக்குபக்கமாகவோ காதுபக்கமாகவோ திரும்பி மாறுகண் மாதிரி இருந்தால் மருத்துவரிடம் சென்று காண்பித்து அய்யத்தைப் போக்கிக் கொள்வது நல்லது.

இரண்டு மாதத்தில் குழந்தையின் கண்களில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படுவதால் நகரும் பொருட்களின் மீது குழந்தையின் கவனம் ஈர்க்கும். மூன்று மாதத்தில் நகரும் பொருட்களின் மீது பார்வையைத் தொடரவும் முடியும்.

 

அடையாளம் காண்பது எப்போது?

 

ஐந்தாவது மாதத்தில், ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குழந்தையால் அடையாளம் காண முடியும். மேலும் முப்பரிமாணத்திலும் ( 3 D ) பார்க்க முடியும். இதனால் அருகிலும் தொலைவிலும் இருப்பதை தெளிவாக பார்ப்பதில் நல்ல முன்னேற்றம் தெரியும். வளர்ந்தவர்களைப் போல் இல்லாவிட்டாலும் நிறங்களும் ஓரளவு நன்றாக தெரியும்.

அறைக்குள் இருக்கும்போது பெற்றோரின் முகத்தை அடையாளங்கண்டு சிரிக்கலாம். ஒரு பொருளின் ஒரு பகுதியைப் பார்த்தாலும் நினைவில் வைத்திருக்கலாம். பொதுவாக எட்டாவது மாதத்தில் குழந்தை தவழத்தொடங்கும். இது அவர்களின் கை, கண் ஒருங்கிணைப்பால் மேலும் மேம்படுகிறது.

ஒன்பதாவது மாதத்தில் பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குழந்தையால் நன்றாகத் தீர்மானிக்க முடியும். எழுந்து நிற்க முயற்சிப்பதும் இம்மாதத்தில்தான். 10 மாதக் குழந்தை கட்டைவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையில் ஒருபொருளைப் பற்றிக் கொள்ள முயற்சிக்கும்.

பன்னிரண்டாவது மாதத்தில் குழந்தைகள் பெரும்பாலும் தவழவும் நடக்கவும் முயற்சிப்பார்கள். இந்த மாதத்தில் குழந்தைகளின் ஆரம்ப நடைப்பழக்கத்தைவிட தவழ்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிறந்த கண் - கை ஒருங்கிணப்பை வளர்க்க  இது உதவும். குழந்தைகளால் இப்போது தூரங்களை துல்லியமாகத் தீர்மானிக்க முடியும். ஓரளவுக்கு தெளிவாக பொருட்களைத் தூக்கி எறியவும் முடியும்.

 

குழந்தைக்கு கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளங்காண்பது எப்படி?

 

பெரும்பாலும் குழந்தைகளுக்கு கண்ணில் பிரச்சினை ஏற்படுவதில்லை என்றாலும் சிலநேரங்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தையின் கண்ணில் அசாதாரணமாக  கண்ணீர் வடியலாம். கண்சிவந்து இமை வீங்கியும்கூட காணப்படலாம். அப்படியிருந்தால் அது விழிவெண்படல அழற்சி - Conjunctivitis ). இதற்கு சொட்டு மருந்து போட வேண்டி இருக்கும்.

சில சமயங்களில் கண்ணில் நீர் மட்டும் தொடர்ந்து வடியலாம். அது ஒருவேளை நீர்ப்பை அடைப்பாகவும் இருக்கலாம். பொதுவாக கண்ணில் சொட்டு மருந்து போட்டுவிட்டு கண்ணும் மூக்கும் சந்திக்கும் இடத்தில் லேசாக மசாஜ் செய்யச் சொல்வார்கள். இப்படிச் செய்தால் நாளடைவில் சரியாகிவிடும் கருவிழி பெரிதாக இருந்தால் பிறவி கண்நீர் அழுத்த உயர்வாக ( Congenital Glaucoma  ) இருக்க வாய்ப்புண்டு. பெரிய கண். அழகாக இருக்கிறது என்று நினைக்காமல் மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.

நகரும் பொருட்களை கண்காணிப்பதில் குழந்தையிடம் தாமதம் இருப்பதாக தெரிந்தாலும் கவனிக்க வேண்டும். கண்ணின் நடுவில் பாப்பா இயல்பான நிறத்திற்கு மாறாக வெள்ளையாக இருந்தால் ( White reflex ) உடனே காண்பிக்க வேண்டும். அது கண் புற்றுநோயாக (Eye Cancer ) இருக்கலாம்.

பிறந்த குழந்தையின் அறையில் மங்கலான இரவு விளக்கு இருக்கலாம். 8- லிருந்து 10 அங்குலத்திற்குள் குழந்தையை கவரும்படி பொம்மையை வைக்கலாம். அறைக்குள் இருக்கும்போது பெற்றோர் குழந்தையுடன் பேசலாம். 


 

குழந்தை பிடித்து இழுத்து விளையாட பொம்மைகளை தொட்டிலின் குறுக்காக மாட்டி வைக்கலாம். தரையில் அதிக நேரம் விளையாடலாம். பிளாஸ்டிக், மரத்தொகுதி விளையாட்டுக்களை குழந்தையின் கையில் கொடுத்து விளையாடச் செய்யலாம். அப்படி விளையாடும்போது சத்தமாக பேசி குழந்தையுடன் விளையாடவும்.

குழந்தையின் காட்சி நினைவகத்தை ( Visual Memory ) மேம்படுத்த பொம்மைகளை வைத்தோ உங்கள் முகத்தினை வைத்தோ ஒளிந்து விளையாடலாம். குழந்தையின் சொல் உச்சரிப்பு திறன் வளர்வதற்கு குழந்தையுடன் பேசும்போது பொருட்களின் பெயரினை சொல்லி பேசலாம். தவழவும் ஊர்ந்து செல்லவும் உற்சாகப்படுத்தலாம்.

குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மு.வீராசாமி

மதுரை

 

 

புதன், 1 ஜனவரி, 2025

வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.

 

    வினோத்துக்கு சர்க்கரைப் பிடிக்கும். ஆனால் விழித்திரைக்குப் பிடிக்காதே.

 

மருத்துவத்துறையைச் சார்ந்த நண்பர். அறிவார்ந்தவர்தான். அதுவும் மருந்தைக் கையாளுபவர்தான். சர்க்கரை மெல்ல எட்டிப்பார்க்கும்போதே அவரை எச்சரித்தேன். அவருக்கு இன்னொருவர் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும் நட்புகருதி என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சிகிச்சையின் அவசியம், குறிப்பாக பார்வையிழந்துபோதலின் ஆபத்து குறித்தெல்லாம் சொல்லி இருந்தேன்.

இருந்தாலும் அவர் அலட்சியமாகவேத்தான் அப்போது கேட்டார்.

அண்மையில் அவரைப் பார்த்தபோது கண்கலங்கினார். ‘நீங்கள் சொன்னபோதே கேட்டிருக்க வேண்டும். இப்போது கண்ணில் இரத்தம் கசிந்து ஏகப்பட்ட பிரச்சினையாகிவிட்டது. பார்வை கடுமையாகப் பாதித்துவிட்டது. கண்ணில் ஊசிபோட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்’’’’.’கேட்பதற்கு பரிதாபமாக இருந்தது.

 

என்ன சவால்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இந்த ‘சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு என்ற ( Diabetic Retinopathy ) பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் தொடர் சிகிச்சை செய்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே.

இன்றைய நாளில்  ‘சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பினால் ஏற்படும் பார்வை பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. கண்மருத்துவமனையின் விழித்திரைப்பிரிவிற்கு சென்று அங்குள்ள கூட்டத்தைப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று.

 

பெரும்பாலும் இந்நோய் தாக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், நோய் தமக்கு இருப்பது தெரியாமல், முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் விழித்திரையில் பாதிப்புக்குள்ளானவர்கள்தாம். இன்னொரு பகுதியினரோ நோய் இருப்பது தெரிந்தும் முறையாக சிகிச்சை செய்துகொள்ளாமல் பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். 

 

சர்க்கரைநோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்:

சர்க்கரைக்கு முறையாக சிகிச்சை செய்துகொள்ளாதபோது கால்கள், நரம்புமண்டலம், மூளை, சிறுநீரகம், இதயம் இவற்றுடன் கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

 

சர்க்கரைநோயினால் கண்களில் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது:

ஒரு பொருளைத் தெளிவாக பார்க்க வேண்டும் என்றால், நம்கண்ணில் உள்ள கருவிழி ( Cornea ), லென்சு,  விழித்திரை, பார்வை நரம்பு அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பில் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் பார்வை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

சில சமயங்களில் விழித்திரையில் புதிய ரத்தக்குழாய்கள் தோன்றலாம். இந்த புதிய ரத்தக்குழாய்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு அதனால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிவதன்மூலமும் ( Retinal Detachment ) பார்வையிழப்பு ஏற்படலாம்.

 

பாதிப்பை சரிசெய்ய முடியுமா?

 

விழித்திரைப் பாதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியாது.

சிலருக்கு Anti vascular endothelial growth factor எனப்படும் இரத்தநாள உள் அடுக்கு வளர்ச்சி காரணியைத் தடுக்கும் மருந்துகள் கண்ணுக்குள் ஊசி மூலம் செலுத்த வேண்டி வரும். இந்த மருந்து கண்ணுக்குள் ஏற்படும் வீக்கத்தையும், புதிய இரத்தநுண்குழாய் வளர்ச்சியையும் தடுக்க உதவும்.

பாதிப்பைப் பொறுத்து லேசர் சிகிச்சையும் செய்ய வேண்டி வரும். இதன் மூலமும் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். விழித்திரை ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட கசிவு, லேசர் சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படும். சிலருக்கு பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ‘விட்ரெக்டமிஎன்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். விழித்திரைப் பிரிந்திருந்தால் அதற்கும் அறுவை சிகிச்சைத் தேவைப்படும்.

 

சர்க்கரைநோய் உள்ள எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுமா?

 

சர்க்கரைநோய் உள்ளவர்கள் அனைவருக்குமே ‘சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்புஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சர்க்கரைநோய்க்கு முறையாக சிகிச்சை செய்துகொண்டு, கண்களையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்துகொண்டு வருவதன்மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.  


  கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் வேண்டாம்

 

சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பைப் பொருத்தவரையில் வருமுன் காப்பதே சிறந்தது. நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, முறையான சிகிச்சை மூன்றும் அவசியம். விழித்திரைப் பாதிப்பின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் வெளிப்படாது என்பதால் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கண்களை கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் விழித்திரைப் பாதிப்பை பொருத்தவரையில் தொடக்கநிலையிலேயே கண்டறியவேண்டியதும், அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்ய வேண்டியதும் மிக மிக அவசியம்.

சர்க்கரைநோயுடன் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் சர்க்கரைநோய் விழித்திரைப் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புண்டு. எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதுடன், புகையினையும், மதுவினையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கான புத்தாண்டு செய்தி என்னவென்றால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்தால் தேவையில்லாமல் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இந்த ஆண்டு மட்டுமல்ல வரும் ஆண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருக்கும்! 

 

மு.வீராசாமி 

முதல்நாள் 2025

மதுரை