திங்கள், 1 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

                                                அரைச் சர்க்கரை 

சர்க்கரை நோய் பற்றிய வியப்பூட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய 

                                            வரலாற்றுச் செய்திகள்


 ”நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

 நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்

 நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் 

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ” 

நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு 100 அண்டா வெண்ணெய், 100 அண்டா அக்கார அடிசில் படைப்பதாக ஆண்டாள் வேண்டிக் கொள்கிறாள். ஆனால் ஆண்டாளுடைய இந்த நேர்த்திக்கடனை 300 ஆண்டுகள் கழித்து மகான் ஸ்ரீஇராமானுஜர்தான் நிறைவேற்றிருக்கிறார். இந்த அக்கார அடிசிலை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவை தெரியும். சாப்பிடச் சாப்பிட இன்னும் வேண்டும் என்று தோன்றும். எங்கள் பக்கம் மதுரை அழகர்கோயிலிலும் திருச்சிராப்பள்ளி திருவரங்கத்திலும் பிரசித்தம். அண்மையில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில்கூட நயன்தாரா, அக்கார அடிசிலின் சிறப்பினை புகழ்ந்து பேசுவதைப் பார்க்கலாம். 

சர்க்கரைநோய் தொடர் தொடக்கமே தித்திப்பாய் இருக்கிறது. புத்தாண்டு பிறந்திருக்கிறது அல்லவா. ‘ஸ்வீட்டான’ தொடக்கமாக இருக்கட்டுமே. மேலும் இது மார்கழி மாதம். அதுதான் இனிப்புடன் பாசுரமும் சேர்த்து. இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு பலருக்கு கசப்பான செய்தி. மருந்து கசப்பாக இருந்தால் தேனுடன் கலந்து கொடுப்பதில்லையா! 

நீரிழிவு ஏனோ இன்றைய நவீன காலத்தில் ஏற்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆச்சரியமான விசயம் என்ன்வென்றால் பல நூற்றாண்டு பாரம்பரியமிக்கது இந்த நீரிழிவு. ஆம். ஆதி காலத்தில் இருந்தே இருக்கிறது. 

இத்தொடரின் நோக்கம் தொடக்க காலத்தில் இருந்து சர்க்கரைநோய் பற்றி என்ன பேசி வருகிறார்கள், என்ன செய்தார்கள் என்பதை பகிர்வதே. அனைத்துமே வரலாற்று ஆவணங்கள் சொல்பவை.

 இது ஒரு பரஸ்பர புரிதல்- மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் நோய். வீட்டின் நுழைவாயிலின் நிலை தாழ்வாக இருந்தால் குனிந்து நுழைந்தால்தான் தலை தப்பிக்கும். இல்லையேல் தலையை ‘டங்கென்று’ பதம் பார்க்கும். அப்படித்தான் நீரிழிவும். நீரிழிவு நோயினை மதித்து மருத்துவர் சொல்கிற வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் சர்க்கரையும் அடக்கமாக சமத்தாக இருக்கும். இல்லையென்றால் அது வதைக்கும். பாடாய்ப்படுத்தும். அதாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும் (Micro vascular complications). இது தெரிந்த செய்திதான். 

‘கையில காசு இருக்கா?’ என்று மருத்துவர் கேட்பதில்லை. எந்த பிரச்சினைக்கு சென்றாலும் மருத்துவர் முதலில் கேட்பது, ‘சுகர் இருக்கிறதா என்று தானே’. 

நீரிழிவு பற்றி வரலாற்று ஆவணங்களைப் புரட்டினால் வியப்புக்கு மேல் வியப்பாகத்தான் இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இதனுடன் போராட்டம்தான். அதைப் பற்றித்தான் இத்தொடர் பேசப்போகிறது. தமிழில் வெளியாகும் முதல் தொடர். இது குறித்து தமிழில் இதுவரையில் விரிவாய் யாரும் பேசியதாகத் தெரியவில்லை. அதாவது தமிழில்.. 

இத்தொடரினை எழுதத் தூண்டியது சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர்.V.மோகன் அண்மையில் எழுதிய ‘Making excellence a Habit’ புத்தகமும், அவருடைய இன்னொரு புத்தகமான ‘Banding, Bose And Beyond’ புத்தகமும் கூடவே பழைய ‘Indian Medical Gazette’ ஆவணங்களைப் பார்க்க உதவிய அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணைய தளமும்தான். டாக்டர்.வி.மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. திங்கள்தோறும் இனி குறுந்தொடரில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக