திங்கள், 22 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

 

                 

குறுந்தொடர்

 

04

 

கரிகால்சோழனுக்கு திருப்புமுனையை தந்து உயர்வினைத் தந்த வெண்ணிப்பறந்தலைப்போர் நினைவிருக்கலாம்சேரனையும் பண்டியனையும் வேளிர்களையும் தூள்தூளாக்கி வெற்றி வாகை சூடிய தளம். தஞ்சைக்கு அருகில் திருவெண்ணியூர் என்ற அதன் இன்றைய பெயர் கோவில்வெண்ணிஇங்குள்ள வெண்ணிக்கரும்பேஸ்வரர் கோயிலில் இறைவன் கரும்புக்கட்டுகளைச் சேர்த்து வைத்து கட்டினாற் போல லிங்க அமைப்பில் இருப்பதாக கோயில் குருக்கள் தெரிவிக்கிறார்.

 

இறைவனை வெண்ணிக் கரும்பே’ என்று சம்பந்தர் பாடுகிறார். இந்தக் கோயிலில் வழிபட்டால் சர்க்கரைநோய் தீரும் என்பது நம்பிக்கை.  ஒரு நாளில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையா இது கோயிலோ பழமையானது. வழிவழியாகத்தானே இந்தக் கருத்து தொடர்ந்திருக்கும். கோயிலைப் பற்றிய கல்வெட்டுக்கள், பதிகங்கள் என்று சான்றுகள் இருக்கின்றன. சர்க்கரைநோய் அன்று ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம்அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் கரும்பினை மூலவரிடம் காண்பித்து கோயிலுக்கு சர்க்கரை நோயாளிகள்  வந்து போனால் தீரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. 


 

 

நடைப்பயிற்சி போ என்றால் யார் போகிறார்கள். நேரம் இல்லை. கால் வலிக்கிறது. நாளைக்கு போகலாம். இந்த நாளை என்பது எந்த ஆண்டில் என்பது அவர்களுக்கேத் தெரியாது. இப்படி போகாததற்குரிய காரணங்களைத் தேடித் தேடி சொல்வார்கள். அதனால்தான் இப்படி சொல்லி வைத்திருக்கிறரார்கள் போலும்.  நம்பிக்கையின் அடிப்படையிலாவது  வருவார்கள் அல்லவா.

 

உடற்பயிற்சி தானே மருத்துவர்கள் சொல்வதும். வந்துவிட்டு சும்மா செல்வார்களா. கோயிலையும் சுத்துவார்களே. நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது.

 

உண்மையிலேயே மருத்துவக் கடவுளாகப் போற்றப்பட்டவர் ஒருவர் இருக்கிறார். பண்டைய எகிப்தில் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்தவர் இம்கோதெப். நீரிழிவு குறித்து பேசியும் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த கட்டிடக் கலைஞர் மட்டுமல்ல மாயாஜாலக்காரரும்கூட. அதிலும் சிறந்த மருத்துவர். நீரிழிவு குறித்து ஈபர்ஸ் பாபிரஸ் சொல்லும் பாலியூரியாவுடன் இவர் ஒத்துப் போகிறார். 

 

அலெக்ஸாண்டிரியாவில் படித்து ரோமில் மருத்துவம் செய்த கிரேக்க மருத்துவர் கப்படோசியாவின் அரேடியஸ் என்பவர். மனிதர் அந்த நாட்களிலேயே  8 மருத்துவ புத்தகத்தை எழுதி இருக்கிறார். காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு. ஹிப்போகிரேட்டிசுக்கு அடுத்து போற்றப்படக்கூடியவராக இருந்திருக்கிறார்.

 


 

 

நீரிழிவு - Diabetes என்ற சொல்லினை முதலில் பயன்படுத்தியவர் இவரே. அரேடியஸுக்கு முன் கிரேக்க மருத்துவர்கள் சிலர் நீரிழிவு பற்றி கருத்துக்கள் தெரிவித்திருந்தாலும் நீரிழிவுக்கு தெளிவாய் விளக்கம்கொடுத்தவர் இவர்தான்அவர் எழுதிய Acute and Chronic Diseases என்ற புத்தகத்தில்தான் இதை குறிப்பிடுகிறார். Diabetes என்கிற இந்த கிரேக்க சொல்லுக்கு தசையினையும் எலும்பினையும் உருக்கி சிறுநீரில் வெளியேற்றுதல் என்று பொருள் சொல்கிறார்கள்.

 

காற்று, வெப்பம், குளிர்ச்சி, ஈரப்பதம், வறட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது  அவருடைய மருத்துவமுறை. கூடுதல் தகவல். தொழுநோய், ஆஸ்துமா, கை கால் வலிப்பு, கீல்வாதம், நிமோனியா, புற்றுநோய் குறித்தும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

 

நீரிழிவைப் பற்றி அவர் சொல்வதை அப்படியே பாருங்கள். ஒருபுறம் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் அதீத தாகத்தால் நீரினைக் குடித்துக் கொண்டே இருக்கும் நிலை. இரண்டையுமே நிறுத்த மாட்டார்கள். நாளடைவில் தளர்ந்து மெலிந்து போவார்கள். நோயினைக் கட்டுப்படுத்தாவிட்டில் மரணம் விரைவாக வரும் என்று சொல்லி இருக்கிறார்.

 

வசதி வாய்ப்பு அறிவியல் மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே எப்படி அவரால் இவ்வளவு தெளிவாக விளக்க முடிந்தது?   மருத்துவ உலகம் இன்றும் வியக்கத்தான் செய்கிறது.

 

இருக்கட்டும். பொதுவாக காபி, டீ அரைச் சர்க்கரையில் சாப்பிடுவதுதான் வழக்கம். அதுவும் வெளி இடங்களில். இல்லையென்றால் தூக்கலாக இருக்கவேண்டும் என்பதற்காக சீனியை அள்ளிப் போட்டுவிடுவார்கள்.

 

நேற்று இரவு சென்னையில் இருந்து பாண்டியனில் திரும்புமுன் எதிரில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் காபி அரை சர்க்கரை என்று கேட்டபோது சர்வர் கேட்டார். உங்களுக்கு சர்க்கரையா ?

 

தொடரும்.

 

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக