திங்கள், 29 ஜனவரி, 2024

அரைச் சர்க்கரை

 

குறுந்தொடர்

வாரம் 05

            சர்க்கரைநோய் உங்களை கவனிக்கு முன் நீங்கள் அதனை             கவனித்துவிடுங்கள். (எப்போதோ கேட்டது)

 

பலூடா ஐஸ்கிரீமும் பிரியாணியும். நினைக்கும்போதே சாப்பிடத்தூண்டும். கடைசியாக சாப்பிட்டதும் நினைவுக்கு வரலாம். இரண்டுமே அட்டகாசமானவை. ஆனால் நம்மூர் சரக்கல்ல. வந்தது பாரசீகத்தில் இருந்து. அதாவது இன்றைய ஈரான். எதற்கு இப்போது பாரசீகம்?



 

அந்த பாரசீகத்தில் 8 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில்  மருத்துவர்களான ரேசஸ், அவிசென்னா போன்றோர் பிரபலம். சீனா, எகிப்து, கிரேக்கம், இந்தியா போன்ற நாடுகளில் வழக்கத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவமுறைகளை தெரிந்து கொண்டும் தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும்  சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

இதில் அபு அலி அல்-ஹூசெய்ன் இபின் அல்லா இபின் சீனா- பெயர் நீள்கிறதா. சுருக்கமாக அவிசென்னா. இவர் பாரசீகத்தைச் சார்ந்த புகழ்பெற்ற மருத்துவர் மட்டுமல்ல மெய்யிலாளரும்கூட. பல்துறை வல்லுனராக இருந்ததுடன் போர்வீரராகவும் இருந்திருக்கிறார்.

அவருடைய காலத்தில் மருத்துவ பிரச்சினைகள் அதிகமாக இருந்திருக்கும்போலும். ஏனெனில் அவர் எழுதிய 450 நூல்களில் கிடைக்கப்பெற்றவைகளில் நாற்பதும் மருத்துவம் சார்ந்தவை எனும்போது அப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. சர்க்கரைநோயும் அதில் விதிவிலக்கல்ல. அதைப்பற்றி நிறைய பேசி இருக்கிறார். பதிவு செய்திருக்கிறார். 


 

தொற்றுநோய்களை கண்டறிந்து வகைப்படுத்தி கட்டுப்படுத்தும் முறைகளையும் சொல்லி அன்றைய மருத்துவத்துறைக்கு பெரிய பங்களிப்பும் செய்திருக்கிறார்.

அவர் எழுதிய மருத்துவ நூல்களுள் ‘மருத்துவ நெறிமுறைகள்முக்கியமானதாக பேசப்படுகிறது. அரபு மொழியில் எழுதப்பட்ட இந்நூல் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிறகே பலரையும் இது சென்றடைந்துள்ளது. நீரிழிவுக்கு அவர் 84 வகையான மருந்துகளை பயன்படுத்தி இருக்கிறார். கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

  

இந்தக் கட்டுரையினை எழுதிக் கொண்டிருக்கும்போது வானொலியில் ஆத்திசூடியில் திரு.ஜெயராமன் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. நெருப்பை நெருப்பால் அணைப்பது பற்றி பேசினார். பசி என்ற நெருப்பினை உணவு என்ற நெருப்பினால் தானே அணைக்கிறோம். வள்ளலாருடன் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருந்தார். ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்பது ஹோமியோபதியின் அடிப்படை. 

ஆனால் அவிசென்னாவின் மருத்துவம் இதற்கு மாறானது. எதிர்-எதிர் என்ற கொள்கையின்படி நீரிழிவுக்கு சிகிச்சையை பரிந்துரைத்தார்.  சிகிச்சையுடன் உணவையும் முறைப்படுத்தி இருக்கிறார். நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சையில் உணவு சிகிச்சையின் பங்கை அவிசென்னா வலியுறுத்தியுள்ளார்.

யாரிடமாவது நல்ல சத்தான உணவு சாப்பிடுங்கள் என்று சொன்னால் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப்போல மேலும் கீழ்தானே பார்க்கிறார்கள்.வறுத்த உணவு, அவசரகதி உணவு (fast food ) குப்பை உணவு ( Junk food ) தானே அவர்களின் விருப்பமான உணவுகளாக இருக்கிறது. வீடுகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் குறிப்பாக கீரைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துபோய்விட்டது.

அவிசென்னாவின் மருத்துவம் ஒருவரின் சுபாவத்தை ( இயல்பு ) அடிப்படையாகக் கொண்டது. நீரிழிவினைக் கட்டுப்படுத்த நலமான வாழ்க்கைமுறை ( healthy lifestyle) , ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். இன்றைய மருத்துவர்கள் சொல்வதும் அதைத்தானே.

அவிசென்னாவின் மருத்துவமுறைகள், பரிந்துரைகள் மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் யுனானி மருத்துவமுறைக்கு அடித்தளமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். நீரிழிவு சிகிச்சைக்கு அவர் பரிந்துரைத்த மருந்துகள் பற்றிய ஆய்வு இன்றும் ஆய்வாளர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டும் வருகிறது.

மூலிகை மருத்துவத்தின் செயல்பாடுகள் அவிசென்னாவால் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் நவீன மருத்துவம் அதை புறந்தள்ளிவிட்டதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சர்க்கரைநோயில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் அன்று எப்படி இருந்தது? அது என்ன தாயோயின் சிகிச்சை.? பார்க்கலாம் அடுத்தவாரம்

தொடரும்.,

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

4. ஹோமியோபதி பற்றி ரத்தினச்சுருக்கமாக தமிழில் தந்துதவிய மதுரையின் மூத்த மருத்துவர். என் அண்ணன் டாக்டர்.எஸ்.கேசவலு

5. சென்ற வாரம் கோவில்வெண்ணிக்கு சென்று தரவுகளைத் திரட்டித் தந்தமைக்கு நன்றி சொல்ல மறந்த தம்பி திரு. எஸ்.காதர்பாபுக்கு .

 

(கட்டுரைத் தலைப்புடன் தொடர்பில் இருக்க சர்க்கரைநோயும்-நீரிழிவு நோயும் இரண்டுமே தேவை கருதி பயன்படுத்தப்படுகிறது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக