ஞாயிறு, 10 மார்ச், 2024

கிளாக்கோமா

 

                       அதென்ன கிளாக்கோமா ?

                    உலக கிளாக்கோமா வாரம்

                          ( மார்ச்சு 10 – 16 )

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் ( வி.ஓ )

மதுரை

---

ரீடிங் கிளாசு 2 பவர்ல கொடுங்க.  கடைக்காரர் உடனே 2.25 பவர்ல எடுத்துக் கொடுத்தார். கூடுதலாக கால் பவர் உள்ள கண்ணாடி.

‘ஆங். நல்லாத் தெரியுது. இதைவிட. என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடைக்காரர் இடைமறித்து, ‘இதுல்லேயே நல்லாத் தெரியுமே என்றதும் நம்மாள்  ‘தெரியுது தெரியுது. போதும் என்றார்.

ஆஸ்பத்திரிக்கு போனா அரை நாள் ஆகிப்போய்விடுது. கண்ணுல மருந்து ஊத்தி தேவையில்லாம உட்கார வச்சுர்ராங்க. அன்னைக்கு நாள் முழுக்க கெட்டுப் போய்டுது. வேலை வெட்டி எதுவும் செய்யவும் முடியறது இல்லை. இப்ப பாருங்க கண்ணாடியை வாங்கினோமா. வந்தோமா வேலை முடிஞ்சுது அவ்வளவுதான். நாம பாட்டுக்க நம்ம வேலையைப் பார்த்துட்டு போய்ட்டே இருக்கலாம்.

இப்படி செய்வது கண்ணுக்கு பாதுகாப்பா?.

கண்மருத்துவமனையில் அவர்கள் ஏன் தேவையில்லாமல் உங்களை கஷ்டப்படுத்த வேண்டும்? பார்க்கலாம் வாருங்கள்.

 

கிளாக்கோமாவில் என்ன பிரச்சினை?

 

பி.பி. நமக்குத் தெரிந்ததுதான். இதைப் படிக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிப்பேருக்கு இருக்கவும் கூடும். இரத்த அழுத்தம் 120/80 என்றால் பிரச்சினை இல்லை. கூடினால் பிரஷர். பி.பி.கூடிருச்சு என்கிறார்கள்.  இதைப் போல் கண்ணிலும் ஒரு அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. 10-20 க்குள் இருந்தால் நல்லது.

உடம்பில் பிரஷர் அதிகமானோல் எப்படி பி.பி. என்கிறோமோ அதேபோல் கண்ணில் அழுத்தம் உயர்ந்தால் அதுதான் கிளாக்கோமா. கண்நீர் அழுத்த உயர்வு.

கிளாக்கோமா வருவதற்கு முன் வாட்சப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு வருவது கிடையாது. வருவதற்கு முன் எந்த விதமான அறிகுறிகளும் தெரியாது. அதுபாட்டுக்கு அமைதியா வந்து தாக்கும். வந்ததே தெரியாது. அமுக்குணித் திருடன் என்று சொல்லலாம். நன்றாக கால் ஊன்றிய பிறகு அதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டபிறகே கண்ணில் ஏதோ பிரச்சினையாக இருக்கிறது போலிருக்கிறதே என்று லேசாக உணரமுடியும். அதுவரையில் தெரியாது.

சரி அதனாலென்ன? என்றால் பிரச்சினயே அதுதான். அதை  விரிவாக தெரிந்து கொள்வதற்கு நாம் செடியைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கிறது. செடி நன்றாக வளர அதற்கு நீர் தேவை. நீர் ஊற்றாமல் விட்டுவிட்டால் செடி நாளடைவில் பட்டுப்போய்விடும் அல்லவா. அதன் பின் லிட்டர் லிட்டராக நீர் ஊற்றினாலும் பழையபடி துளிர்க்க வைக்க முடியுமா?

அதைப்போன்றுதான் கிளாக்கோமாவும். கண்ணில் அழுத்தம் அதிகரித்தது கண்டறியப்படாமல் தொடக்க நிலையில் சிகிச்சை செய்ய வில்லை என்றால் அழுத்த அதிகரிப்பினால் பார்வை நரம்புகள் பாதித்துவிடும். இதனால் பார்வையும் கடுமையாக பாதித்துவிடும். ஒருமுறை பாதித்தால் பாதித்ததுதான். ரிப்பேர் எல்லாம் செய்ய முடியாது. எப்படிப் பட்டுப்போன செடியை மீண்டும் துளிர்க்க வைக்க முடியாதோ அதைப் போன்று பாதித்த பார்வை நரம்புகளை சரி செய்ய முடியாது. மேற்கொண்டு சிகிச்சை செய்து அழுத்தத்தை கட்டுப்படுத்தி இருக்கின்ற பார்வையை காப்பாற்றலாம்.

 

அப்படியானால் என்னதான் தீர்வு:

 

மருத்துவமனையில் 40 வயதிற்கு மேல் எப்படி இரத்த அழுத்த சோதனை செய்கிறார்களோ அதைப்போன்று கண்மருத்துவமனையில் கண்ணில் அழுத்த சோதனையினையும் ( Eye Pressure Test ) பார்த்துக் கொள்ள வேண்டும். யாரும் வந்து பாருங்கள் என்று சொல்ல மாட்டார்கள். நாமாகத்தான் போய் பார்த்துக் கொள்ள வேண்டும். 40 வயதில் இதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஒரு வேளை இருந்தால் தொடக்க நிலையிலேயே சரியான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைக்கலாம்.


 

மருத்துவமனையில் கண்ணில் மருந்துபோட்டு சிலிட் லேம்ப் சோதனை, ஆப்தால்மாஸ்கோப் சோதனை செய்து கிளாக்கோமா பாதிப்புக்கான வெளிப்பாடுகள் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார்.

40 வயதில் ஒருவருக்கு பிரஸ்பயோபிக் கண்ணாடி - அதுதான் வெள்ளெழுத்துக் கண்ணாடியை மாற்ற வேண்டி இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால்தான் இந்த சோதனைகளை எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன மாதிரி நேரடியாக கண்ணாடிக் கடைக்குச் சென்று வாங்கினால் என்னவாகும் என்று சிந்தியுங்கள். ஒருவேளை கிளாக்கோமா இருந்தால் தொடக்க நிலையில் பார்க்க முடியாது போகும். பாதிப்புக்கு வழிவகுத்து துயரத்தில் முடியும்.

நாளாக நாளாக பக்கப்பார்வை வெகுவாக குறையும். பொதுவாக நாம் ஒரு பொருளைப்பார்க்கும்போது இரண்டு கண்ணின் இரு புறமும் ( சைடு பார்வை) இருக்கிற பொருட்களை ஒரு அளவு வரை நம்மால் பார்க்க முடியும். நடந்தோ இரு சக்கர வாகனத்திலோ  செல்கிறோம். பக்கத்தில் யார் வருகிறார்கள்-போகிறார்கள் என்பது ஓரளவுக்குத் தெரியும். இலையில் சாப்பிடுகிறோம். முழு இலையிலும் இருக்கும் உணவு பதார்த்தங்களை முழுமையாக பார்க்க முடியும். ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டால் பக்கப்பார்வை குறையும். பக்கத்தில் யார் வருகிறார்கள் என்பதோ இலையில் இருக்கும் பதார்த்தங்கள் முழுமையாகவோ தெரியாது. குழாய் வழியாக பார்ப்பதுபோல் கூட பார்வை அளவு வெகுவாக குறைந்து விடலாம்.

 

இப்போது புரிந்திருக்கும்.

 

யாரெல்லாம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளலாம்.

Ø  குடும்பத்தில் யாருக்கேனும் கிளாக்கோமா இருந்தால்

Ø  உடலில் இருக்கும் வேறு ஏதேனும் நோய்க்கு தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டிருந்தாலும்

Ø  வெள்ளெழுத்துக் கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டி இருந்தாலும்

Ø  விளக்கினைச் சுற்றி கலர் கலராய் தெரிந்தாலும்

Ø  அடிக்கடி ஏற்படும் நாள்பட்ட தலைவலி

Ø  பக்கப் பார்வையில் தடுமாற்றம் இருந்தாலும்

உடனே கண்மருத்துவரிடம் சென்று கண்ணில் அழுத்தம் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக மருத்துவமனைக்கு செல்லும்போதே பார்வை பாதிப்போடு செல்லும் நிலையில் தான் கிளாக்கோமா இருக்கிறது. பார்வையைக் காக்க கிளாக்கோமாவுக்கு தேவையெல்லாம் தொடக்க நிலை கண்டுபிடிப்பு.. நல்ல கண்சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் லேசர் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்வார்கள். தொடர் சிகிச்சையும் தொடர் கவனிப்பும் பார்வையை நிச்சயமாக பாதுகாக்கும்.

 

2 கருத்துகள்: