திங்கள், 29 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

                     அரைச் சர்க்கரை

                       குறுந்தொடர்

வாரம் 18

 

21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான நோயாக நீரிழிவு நோயைக் குறிப்பிடுகிறது லான்செட்டின் தலையங்கம் ஒன்று. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அதிகரிக்கும் உடல் பருமன், பணிச்சுமை, சுற்றுப்புற சூழல் ஆபத்து, புகையிலை மற்றும் மது பயன்பாடு, குறைந்த உடல் உழைப்பு போன்றவைகளை அது பட்டியலிடுகிறது.

இந்தியாவில் மக்கள்தொகையில் 11% பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 15.3 % பேர் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில்  ( Pre Diabetic )  நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவெ பார்த்தோம்.

அதன்படி பார்க்கையில் மக்கள் தொகையில் 101.3 மில்லியன் பேருக்கு சர்க்கரைநோய். சர்க்கரைக்கு முந்தைய நிலையில் ( Pre Diabetes stage ) இருப்பவர்கள் 136 மில்லியன்பேர்.

ஏற்கனவே சர்க்கரைநோய் உறுதி செய்யப்பட்டவர்களைப் பொறுத்த வரையில் அவர்களிடையே வாழ்க்கையைப் பாதிக்கும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுப்பது முக்கியம்.

இன்னொருபுறம் சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருக்கும் 136 மில்லியன்பேரையும் சர்க்கரைநோய் வராமல் தடுப்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும் முக்கியம். இது குறித்த விழிப்புணர்வு பணியை மேற்கொள்வது அவசியம் என்கிறார் சென்னை சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர்.V.மோகன். ஏனெனில் சர்க்கரைநோய் கள ஆய்வின்போதே சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களில் கணிசமானோர் 6 மாதத்துக்குள்ளாகவே சர்க்கரைநோய் நிலையை அடைந்துவிட்டதாக சொல்கிறார். எனவே தேவையெல்லாம் உடனடி விழிப்புணர்வுதான்.

சர்க்கரைநோய் பற்றி பேசும்போது கிளைசெமிக் குறியீடு ( Glycemic Index ) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்துவதை பார்க்கலாம்.  கிளைசெமிக் குறியீடுக்கும் சர்க்கரைக்கும் உள்ள முக்கியமான தொடர்பு குறித்து அண்மையில் ஆங்கில இந்து நாளிதழில் டாக்டர்.வி.மோகன் எழுதிய கட்டுரை நிறைய செய்திகளைத் தெரிவிக்கிறது. டாக்டர்.வி.மோகனின் ஆய்வு குறித்த விரிவான அலசலை ஆங்கில இந்து நாளிதழின் ரம்யா கண்ணனும் நாளிதழில் பதிவு செய்திருக்கிறார். 

 


கிளைசெமிக் குறியீடு என்பது வேறு ஒன்றும் இல்லை. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதற்கான உணவின் பண்புகளைக் குறிக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட்டின் தரத்தை அளவிடுகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த எந்த மாதிரி மாவுச் சத்து ( கார்போஹைட்ரேட்) உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய உதவும் ஒரு வழிகாட்டி  என்று சொல்லலாம்.

சர்க்கரை, வெள்ளை அரிசி, மைதா, உருளை, இனிப்பு பானங்கள், சோள அவல் போன்றவை அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டவை.

குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகள் என்று பார்த்தால் ப்ரெளன் அரிசி, ஓட்ஸ், தானியங்கள், பருப்புகள், ஆப்பிள், கொய்யா , கீரை, கத்திரி, ப்ரோகோலி போன்றவைகளைச் சொல்லலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகளை உண்ணுவதால் அவை மெதுவாக குளுக்கோஸாக மாறுகின்றன. நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன.

அதிக கிளைசெமிக் குறியீடு உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக அணமை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுப் பொருட்களை சாப்பிடுவது, போதுமான உடற்பயிற்சி செய்துகொள்வது என வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதன்  மூலம் அதிகரித்து வரும் இதய நோய்களை கட்டுப்படுத்தி பக்கவிளைவுகளைத் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் ஒருவரான டாக்டர்.வி.மோகன் தெரிவிக்கிறார்

2045 வாக்கில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து செலவில் உலகளாவிய நீரிழிவு தொடர்பான மருத்துவ செலவு 1045 டாலர் பில்லியனாக அதிகரிக்குமாம். இது வேண்டுமானால் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் செய்யலாம். ஆனால் மருத்துவர் ரூபா மரியாவும், அரசியல் பொருளாதார நிபுணர் ராஜ்படேலும்  சொல்வது போல், நலமற்ற சமுதாயத்திற்கு தீர்வு மாத்திரைகள் அல்ல, வாழ்வியல் முறைகளை மறுமதிப்பீடு செய்வதுதான்.

சர்க்கரைநோய் மருத்துவம் வளம் கொழிக்கும் மிகப்பெரிய மருத்துவ வர்த்தகம். இந்த நிலையில் உலக சுகாதார சமூகம் எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்துதான் வரும் நாட்களில் மக்களின் ஆரோக்கியமும் ஆயுட்காலமும் அமையும். இல்லையேல் அரைச் சர்க்கரையும் போய் சர்க்கரை இல்லாமல் கேட்கக்கூடிய நிலைதான் அனவருக்கும் ஏற்படும்.

 

                  அரைச் சர்க்கரை நிறைவடைந்தது

திங்கள், 22 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

வாரம் 17

சர்க்கரைநோய் பாதிப்பினை  குறைப்பது எப்படி?

சாப்பாடு தட்டில் அரைத்தட்டு காய்கறிகள்,கீரை.

தட்டில் கால்பகுதி - ராஜ்மா, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் ( புரதச்சத்து)

மீதி கால்பகுதி - கார்போஹைட்ரேட் – அரிசி/கோதுமை கவுனி அரிசி/ வரகு சாமை, குதிரை வாலி...இது உணவின் கிளைசெமிக் சுமையைக் குறைக்கிறது. தவிர வழக்கமான உடற்பயிற்சி, உடல் உழைப்பினை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பினை குறைக்க உதவும். அதிக உடல் பருமனானவர்கள் நீரிழிவினை தடுக்க கட்டாயம் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

சரியான நேரத்தில் படுத்து போதுமான நேரம் தூங்குவதும் மன உளைச்சலைக் குறைப்பதும் முக்கியம். கவனிக்கவும். இரவு நன்றாக போதுமான நேரம் தூங்குபவர்களுக்கு சர்க்கரைநோய் கட்டுப்படும். அப்படியானால் சரியாக தூங்கி எழாதவர்களுக்கு என்று ...நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் அவர்களுக்கு சர்க்கரைநோய் ஏற்படுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமே.

இந்தியாவில் மக்கள்தொகையில் 11% பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 15.3 % பேர் சர்க்கரைநோய்க்கு முந்தைய ( Pre Diabetic )  நிலையிலும் இருக்கிறார்கள்.

இது குறித்து இந்துவின் ரம்யா கண்ணன் என்ன சொல்கிறார். சர்க்கரைநோய் நிபுணர் டாக்டர்.மோகனின் கருத்து என்ன?

மருத்துவர் ரூபா மரியாவும், அரசியல் பொருளாதார நிபுணர் ராஜ்படேலும்  என்ன சொல்கிறார்கள்?

பார்க்கலாம் அசத்தலான அலசலுடன் வரும் வாரம்..

தொடரும்,

திங்கள், 15 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

                            அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

 

கடந்த 15 வாரமாக பார்த்தது சர்க்கரைநோய் பற்றிய வரலாற்று செய்திகள் .

இனி இன்று...

வாரம் 16

காய்ச்சலுக்கோ வயிற்றுப் போக்குக்கோ மாத்திரை சாப்பிட்டால் மூன்று, நான்கு நாட்களில் சரியாகி விடுவதுபோல் சர்க்கரைநோயும் சரியாக வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் போராட வேண்டி இருக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

அதைச் சாப்பிடாதே இதைச் சாப்பிடாதே என்றால் எதைத் தான் சாப்பிடுவது என்று மருத்துவர்கள்மேல் கோபம் கொள்கிறார்கள். வாழ்வதே சாப்பிடுவதற்காகத்தானே. வாய்க்கு ருசியாக இப்போது சாப்பிடாவிட்டால் எப்படி? பிறகு எப்போது சாப்பிடுவது?

ஆனால் வேறு வழியில்லை. கட்டுக்குள் வைத்துத்தான் ஆக வேண்டும். இன்றல்ல. ஆதியிலிருந்தே இதைத்தான் சொல்லி வருகிறார்கள்.

இன்சுலின். சர்க்கரைநோய்க்கான அருமருந்து. மந்திர மருந்து. கண்டுபிடித்திருக்காவிட்டால்...ஒரு நிமிடம் யோசிக்க வேண்டி இருக்கிறது. கண்டுபிடித்த பாண்டிங் ஒரு சர்க்கரை நிபுணரோ அல்லது அகச்சுரப்பியியல் நிபுணரோகூட கிடையாது. அட வியப்பாக இருக்கிறதா. ஆம். அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்.

இன்னொரு வியப்பு. இன்சுலின் கண்டுபிடிப்பதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான கனவு. இரவு பாதித்தூக்கத்தில் அவருக்கு கனவில் தோன்றியதை அரைத்தூக்கத்தில் நோட்டில் கிறுக்கி வைக்க மறுநாள் பார்த்தால் இன்சுலின் கண்டுபிடிப்பதற்கான வழிமுறையாக இருந்திருக்கிறது அது. அதை செயல்படுத்த அதுவே பின்னர் இன்சுலினானது வரலாறு. இப்படி வியப்புக்கள் கொண்டதாக இருக்கிறது சர்க்கரைநோயின் வரலாறு.

சரி. இன்றைய சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்  v.மோகன் சர்க்கரைநோயினை கட்டுக்குள் வைக்க வழி சொல்கிறார். நினைவில், எளிமையாக வைத்துக் கொள்ளும்படியாக. அந்த சூத்திரம் என்னவென்று பார்ப்போமா!

ஏ.பி.சி.டி ( ABCD )  என்ற பார்முலா. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஏ.பி.சி.டி என்ற தாரக மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வருவது உண்மை. அது என்ன ஏ.பி.சி.டி?

( A) ஏ. ஹெச்.பி.ஏ.1.சி. ( HbA1C)  பொதுவாக மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி அளவு 6 -க்கு கீழ் இருக்க வேண்டும் . சர்க்கரைநோய்க்கு மருத்துவம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 7க்கு கீழ் இருந்தால் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லலாம். 

( B )  பி. Blood Pressure .  இரத்த அழுத்தம் இயல்பான அளவில் கட்டுக்குள் இருக்க வேண்டும்.

( C )  சி. Cholesterol  கொழுப்பினை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.

( D ) டி. Discipline. அதாவது கட்டுப்பாடு. இதுதான் இருப்பதிலேயே மிகவும் முக்கியம். ஆனால் பலருக்கும் கடினமானதுங்கூட. அதாவது நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவம் இவற்றினை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாக சரியாக தவறாது  கடைப்பிடிப்பது. ஆனால் பலரும் இதை பின்பற்றுவதில்லை. அதிலும் மருத்துவர்கள் அதிகம் வலியுறுத்தி சொல்வது நடைப்பழக்கத்தைத்தான். வரலாற்றுக் காலத்தில் இருந்தே சொல்லிவருவதும் இதைத்தான். சோம்பேறித்தனம், அலட்சியம், நேரமின்மை போன்ற காரணங்களால் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. யாரிடமாவது சொல்லிப் பாருங்க.  ‘எங்க நேரங்கிடைக்குதுங்க. வேலை சரியாப் போய்டுது. அப்புறம் எங்குட்டு வாக்கிங்க்லாம் போறது.என்ற ரீதியில்தான் பதில் வரும் அவர்களிடமிருந்து.

தேவை இல்லாததுக்கு எல்லாம் நேரம் கிடைக்குமாம். உடல் நலத்துக்கென்று கொஞ்சம் நேரம் கிடைக்காதாம்.

பொதுவாக என்ன சாப்பிடவேண்டும்- என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்த தெளிவு பலரிடம் இல்லை.  அதை இப்படிச் சொல்லலாம். அவரவர்களுக்கு தேவையானதை நியாயப்படுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொள்வார்கள். இதையெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று அவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அந்த டாக்டருக்கு சரியாகத் தெரியவில்லை. யூ டியூப்பில் இப்படி சொன்னார்கள். வாட்சப்பில் சாப்பிடலாம் என்று வந்தது. ஒன்றும் செய்யாது என்று சமாளிப்பார்கள்.

தொடரும்,

 

 

திங்கள், 8 ஏப்ரல், 2024

அரைச் சர்க்கரை

 

அரைச் சர்க்கரை

குறுந்தொடர்

வாரம் 15

 மருத்துவர் நோயாளி.

அதென்ன மருத்துவர் நோயாளி.  முரணாக இருக்கிறதா?

ஆமாம் அவர் ஒரு டாக்டர். ஆனால் அவரும் ஒரு சர்க்கரை நோயாளிதான். வாழ்நாள் முழுவதும் கிராமப்புற மக்களுக்காக சேவை செயதவர். அரசுப் பணிக்கு வருவதற்கு முன்னும் சரி, வந்த பிறகும் சரி.

மருத்துவருக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர். அவருக்கு 50 வயதுக்கு மேல் நீரிழிவுசிதைவு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவம் செய்து கொண்டு வருகிறார். தற்போது 75 வயது.

எத்துணையோ நோயாளிகளுக்கு சர்க்கரைநோய்க்கு மருத்துவம் செய்தவர்தான். அவரிடம் ஒரு மருத்துவராகவும் நோயாளியாகவும் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். சர்க்கரை நோயாளிக்கு என்ன என்ன அறிகுறி இருக்குமோ அத்துணையும் இருந்ததாகவும் ஆனால் அன்றாடம் பணிச்சுமை காரணமாக அது குறித்து உடனடியாக கவனிக்க முடியவில்லை என்றும் சொன்னார். நாம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது என்ற நினைப்புதானே எல்லாரையும் பாழாய்படுத்துகிறது. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டதாம். வேலை, வேலை தான் எந்நேரமும்.

வேலையில் கடும் பிரச்சினை அதனால் மன உளைச்சல், சோர்வு. இதுதான் காரணம் என்கிறார். மன அழுத்தத்தால் சர்க்கரை உயருமா என்ன? சென்னை சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ.டாக்டர் மோகன் என்ன சொல்கிறார்?.

600 க்குமேல் இரத்த சர்க்கரையுடன் வந்த அந்த அம்மையாருக்கு சிகிச்சை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இன்சுலினாலும் பயனில்லை. சர்க்கரை குறையவே இல்லை. மருத்துவருக்கே ஒன்றும் பிடிபடவில்லை. ஒருவாரம் மருத்துவமனை சிகிச்சையில் பெரிய முன்னேற்றம் இல்லையாம். ஆறு மாதம் கழித்து அவர் மீண்டும் வந்தபோது இவருக்கா சர்க்கரை அதிகமாக இருந்தது? என்று வியக்கும் அளவுக்கு சர்க்கரை இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லையாம். இன்சுலின், மாத்திரைகள், தீவிர உணவுக்கட்டுப்பாடு, தீவிர மருத்துவமனை கண்காணிப்பு, சிகிச்சை என போராடிய அவரா இவர்? இந்த நிலையில் அந்த அம்மையார் சொன்னதுதான் டச்சிங்க். 

“மன அழுத்தம் அதிகமாக  ‘ஓவர் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும்போது சர்க்கரை கூடுது சார். வீட்டில் அப்போது வீட்டுக்காரருடன் ஒரே பிரச்சினை. இப்போ பிரச்சினை சரியாயிடுச்சு. பிரச்சினை தீர்ந்த பிறகு நிம்மதியாக இருக்கு சார். நாங்க சந்தோசமாக இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லை. அதுதான் சர்க்கரை நார்மலா இருக்கு”.

உண்மையிலேயே அவர் புத்திசாலிதான். தன்னுடைய சர்க்கரை அதிகரிப்புக்கு மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பது வியப்புக்குரிய செய்தி. இதை சென்னை பிரபல சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர். V. மோகன்  ‘Making Excellence – A Habit’  என்ற தன்னுடைய புத்தகத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறார். 


 

“கடுமையான மன அழுத்தம் உடலின் வளர்சிதை மாற்ற சமநிலையினை பாதித்து உயிர்வேதியியலை கட்டுப்பாடற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. கடுமையான மன அழுத்தத்தின்போது கார்டிசால், அட்ரீனலின் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகப்படியாக வெளியாகின்றன. ஒருவரது உடலில் போதிய அளவு இன்சுலின் சுரந்தாலும்கூட இன்சுலின் எதிர்ப்பு கொண்ட இந்த ஹார்மோன்களால் அவை பயனற்றதாகவே இருக்கும்.

மன அழுத்தம் குறையும்போது இந்த எதிர் ஒழுங்குமுறை ஹார்மோன்களின் தாக்கமும் குறைவதால் இன்சுலினின் செயல்பாடு மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டு பயன்பாடு சீராகி சர்க்கரை கட்டுக்குள் வருகிறது.

 

ஓவர் ஸ்ட்ரெஸ் ஓவர் ஸ்ட்ரெஸ் என்று சொல்பவர்கள் விடுபட எளிமையான வழி? அதான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பிரகாஸ்ராஜ் வழிகாட்டி இருக்கிறாரே.

தொடரும்

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்