புதன், 21 பிப்ரவரி, 2024

கிட்டப்பார்வை 01

 

        கிட்டப்பார்வையால் கிட்டக்கப் போய் பார்க்கும் பிள்ளை

 

கிட்டப்பார்வை பிரச்சினை குறித்து நிறைய பேசியாயிற்று. ஆனாலும் பிள்ளைகளின் பார்வைக்கு பெற்றோர் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

நேற்று வீட்டுக்கு குழாய் பிரச்சினையை சரிசெய்ய வந்தவர் பேச்சுவாக்கில் ஏழாவது படிக்கும் தன் மூத்தப் பிள்ளைக்கு இரண்டு மாதமாக கண்ணில் பிரச்சினை என்றார். பள்ளியில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கரும்பலகைக்கு கிட்டக்க கிட்டக்கப் போய் பார்த்து எழுத வேண்டி இருப்பதாகவும் பிள்ளை சொன்னதாக சொன்னார். ( கிட்டக்க-பக்கத்தில்; மதுரைப் பேச்சு)      

பிள்ளை சொல்லி இரண்டுமாதமாச்சு. பிள்ளையை டாக்டரிடம் அழைத்துச் சென்றீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார். எங்க சார், வீட்டு வேலையே சரியாகப் போய்விடுகிறது. நேரமே இல்லை என்றார். என்னத்தைச் சொல்ல!

தனக்கு இருக்கும் பிரச்சினையை பொதுவாக பிள்ளைகளால் சொல்லத் தெரியாது. அவர்களே நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்ளவும் முடியாது. பெற்றோர் கவனிக்காமல் வேறு யார் செய்வார்கள்?


 

பிள்ளைக்கு கண்பார்வை சரியாகத் தெரியாவிடில் பாடங்களை சரியாக படிக்க முடியாது. கற்பதில் பெரும்பகுதி பார்ப்பதன் மூலம்தான் நடைபெறுகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. பார்வை தெளிவாக இல்லாவிட்டால் பிள்ளையால் தெளிவான பார்வை-காட்சியை உணர முடியாது. கல்வியில் பின் தங்க நேரிடும். அறிவுசார் குறைபாட்டிற்கும் வழிவகுத்துவிடலாம்.

மூளையின் சரியான வளர்ச்சியைப் பொறுத்து நலமான பார்வை அமையும். சில சமயங்களில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு கண்ணின் வளர்ச்சியைப் பாதித்து பார்வையும் பாதிக்கலாம். மூளையில் ஏற்படும் குறைபாடு காரணமாக மூளைக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்து பார்வை புரணியைப் பாதித்து பார்வை நரம்பினையும் பாதிக்கலாம். இத்தகைய வளர்ச்சிக் குறைபாடுகள் நேரடியாக பார்வைகுறைபாட்டிற்கு வழிவகுக்கலாம்.

வீட்டுகுத் தேவையானதை எல்லாம் உடனே வாங்குகிறோம். கண்ட கண்ட பொருட்களை அமேசானில் தேவை இல்லாவிட்டாலும் வாங்கிக் குவிக்கிறோம். செல்போனில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே கதறிக் கொண்டு அந்த பிரச்சினையை சரி செய்பவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்துத் தேடிக் கண்டுபிடித்து சரி செய்து கொள்கிறோம். ஆனால் பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறோமா? பிள்ளை தனக்கு இருக்கும் பிரச்சினையை சொன்னதற்கு பாராட்டக்கூட வேண்டாம். அதற்குரிய தீர்வினை தரவேண்டியது பெற்றோர் கடமை அல்லவா. அவர்கள் பிறகு வேறு யாரிடம் போய் சொல்வார்கள்?

 

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர்( வி.ஓ)

நலவாழ்வு எழுத்தாளர்

மதுரை

2 கருத்துகள்: