திங்கள், 19 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

 

சர்க்கரைநோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லும்                     குறுந்தொடர்

    

     டாக்டர்: உங்களுக்கு சர்க்கரை இருக்கா

     நோயாளி: சர்க்கரை இல்லை டாக்டர். ஆனால் சுகர் இருக்குன்னு                     சொல்லி இருக்காங்க.

         ( அடிக்கடி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வு )

வாரம் 08

 

சர்க்கரைநோய்க்கு வயதென்ன?  அறிவியலில் வளர்ச்சி அடையவில்லை மருத்துவ முன்னேற்றமும் இல்லை. அந்தக் காலகட்டத்திலும் அப்போதைய அனுபவ அறிவில் இருக்கின்ற மூலிகைகளைக் கொண்டு சர்க்கரைநோய்க்கு  சிகிச்சை அளித்திருக்கிறார்கள். சர்க்கரைநோய் பற்றிய அவர்களுடைய அடிப்படை அனுமானங்கள் பலவற்றுடன் இன்றைய நவீன மருத்துவ உலகமும் ஒத்துப் போவது வியப்பானதுதான். சர்க்கரைநோயும் ஒரு தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரலாற்றுக் காலம் முடிந்து நவீன காலம் தொடங்கி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் கிடைத்த வரலாற்று ஆவணச் செய்திகள் சர்க்கரை குறித்த சுவையான தகவல்களைத் தெரிவிக்கிறது. கடந்த 200 ஆண்டு கால சர்க்கரைநோய் செய்திகள் அனைத்துமே சுவையானவை.  சர்க்கரைநோய்க்கு மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத காலம்.

கி.பி. 1800 கால கட்டத்தில்  இந்தியா முழுவதும் இருந்து மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கள் பார்த்த புது நோயாளியின் விபரம், அளித்த சிகிச்சை, அதன் அனுபவங்கள் மற்றும் மருத்துவச் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் களமாக இருந்திருக்கிறது இந்த இந்திய மருத்துவ இதழ்  ( Indian Medical Gazette ). போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது.

கல்கத்தாவை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்த இதழ். மருத்துவர்களின் அன்றைய சமூக வலைதளம். தொலைபேசி இல்லை. இணையம் இல்லை. எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வினை பிறர் அறிய பல நாட்கள் ஆகும் சூழல். அப்படிப்பட்ட சூழலில் மருத்துவர்களின் விடிவெள்ளியாக இருந்து ஒருங்கிணைத்திருக்கிறது இந்த இதழ். 

  

அதில் உள்ள பதிவுகள் அனைத்துமே வரலாற்று ஆவணங்கள். அந்த காலகட்டத்தில் இருந்த நோய்ச் சூழல், மருத்துவ பிரச்சினைகள், அதை மருத்துவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் அனைத்தும் விரிவாக இருக்கின்றன. அதில் உள்ள மருத்துவர்களின் பங்களிப்புக்கள் அனைத்தும் அற்புதமானவை. அதை முழுமையாக படித்து தனியாக எழுதும் எண்ணமும் உள்ளது. தற்போதைக்கு சர்க்கரை...ஏறக்குறைய ஒவ்வொரு இதழிலும் சர்க்கரை பற்றிய செய்திகள் பரவலாக தொடர்கின்றன. முக்கியமான செய்திகள் மட்டும் இங்கே.

1867 – ல் டாக்டர். கமக்ஸ் நாத் அச்செர்ஜீ, இந்திய மருத்துவ இதழில் அவர் சிகிச்சை அளித்த இரண்டு சர்க்கரைநோயாளிகள் பற்றிய செய்திகளை பதிவிட்டிருக்கிறார். அவர் பார்த்த அந்த ஒருவர் உடல் பருமனாக இருந்திருக்கிறார். இனிப்பு அதிகம் சாப்பிடுபவராம். வசதிபடைத்தவராம். சர்க்கரைநோயாளியான அவருக்கு உடலில் கொப்பளங்கள்.

இன்னொருவருக்கு உடலில் கட்டி. இருவருக்குமே பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த பிறகு அய்யம் ஏற்பட்ட பின்னரே சோதித்ததில் சர்க்கரை இருப்பது தெரியவந்தது என்று அவர் சொல்வதில் நமக்கு செய்தி இருக்கிறது.

இன்றும் இப்படித்தானே. வேறு ஏதாவது உடல்நலப் பிரச்சினைக்கு செல்லும்போதுதானே சர்க்கரை இருப்பது பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுகிறது. இப்படிக் கண்டுபிடிக்கப்படுவதுதானே  அதிகம். அதே போல் உடல்பருமனுக்கும் சர்க்கரைக்கும் உள்ள தொடர்பு பற்றி இன்று நாம் அதிகம் பேசி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1871 –ல் பதிவான செய்தி. அந்த காலகட்டம் முழுவதும் கல்கத்தாவில் மத்திய மற்றும் உயர்தர குடும்பங்களில், குடும்பத்தில் ஒருவரேனும் சர்க்கரை நோயால் இறந்து போனதாக  தெரிவிக்கின்றது.

தொடரும் செய்திகள் அனைத்துமே சுவையானவை. அதில் ஒன்று சர்க்கரைநோய்க்கு ஆடைநீக்கிய பால் சிகிச்சை. வியப்பைத் தரும் அந்த செய்தி? வரும் வாரம் பார்க்கலாம்.

 

 

நன்றியுடன் உதவியவை:  1. டாக்டர்.வி.மோகன் எழுதிய  ‘Making excellence a        ​​​​​Habit’&  ‘Banding, Bose And Beyond’  புத்தகங்கள்.

2. Indian Medical Gazette.

3. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையதளம்

 

 

.

 

2 கருத்துகள்: