செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

வாத்தியாருக்கு மரியாதை

 

வாத்தியாருக்கு மரியாதை

 

நூலகத்தில்தான் முதன்முதலில் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது சுஜாதாவின்  நகரத்தினைப் பார்த்தேன். எடுக்கலாமா வேண்டாமா என்று பல முறை சிந்தித்து அதைப் படித்தேன். அந்த வயதில் அதில் அவர் பயன்படுத்திய பிரைமரி ஹெல்த் செண்டர், ஆப்தால்மாஸ்கோப், மெனின்ஜைட்டிஸ் போன்ற பல சொற்பிரயோகங்கள் புரியவில்லை. பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது நகரம் முழுமையாக தெரிந்தது.  

ஆப்தால்மாஸ்கோப் கண்ணை சோதிக்க பயன்படும் ஒரு கருவி. கண்ணுக்குள் இருக்கும் லென்சு, விழித்திரை, பார்வை நரம்புகள், மேக்குலா போன்றவை இயல்பாக இருக்கிறதா என்று பார்க்க உதவும் கருவி. வாத்தியார் இப்படி எழுதியிருப்பார்.  ‘மருத்துவமனையில் - சுற்றியிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தால்மாஸ்கோப் மூலம் அந்த பெண்ணின்( பாப்பாத்தி)  கண்ணுக்குள்ளேயே பார்த்தார்கள்என்று.

அப்பாவும் அக்காவும் அரசு இராஜாஜி மருத்துவமனையிலும், மதுரை மருத்துவக்கல்லூரியிலும் வேலை பார்த்ததால் நினைவுநாள் தெரிந்து அங்கு அடிக்கடி சென்றிருந்ததால் கதைக்களம் அனைத்துமே அத்துப்படி. தூக்கத்தில் கேட்டாலும் ஒப்பிக்க முடியும். அதனால் அரசு இராஜாஜி மருத்துவமனை குறித்த சுஜாதாவின் வர்ணாஜால வர்ணனைகளுடன்  ஏற்கனவே எனக்குத் தெரிந்த வார்டுகளுடனும் ஓ.பி டிப்பார்ட்மெண்ட்களுடனும் கூடவே ஓட முடிந்தது. இந்த அளவுக்கு ஒருவரால் வர்ணிக்க முடிகிறது என்றால் அவர் எந்த அளவுக்கு உள் வாங்கி இருப்பார்? இதுவே பின்னாளில் என்னை சுஜாதாவின் தீவிர அடிமையாக்கியது.  

அவருடைய எழுத்தின் தாக்கத்தால் சுமாரான எழுத்தில் மருத்துவக் கட்டுரைகளை எழுதவும் வைத்தது. இதுவரை 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள். சுஜாதாவின் ‘ஆதலினால் காதல் செய்வீரைஒட்டி  ‘ஆதலினால் கண்களைக் காப்போம்என்ற தலைப்பிலும் தினமணியில் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அனைத்துமே வாத்தியாரின் ஆசியினால்.

இன்று நான் அவருக்கு செலுத்தும் மரியாதை அவருடைய  ‘விருப்பமில்லாத் திருப்பங்கள் நாவலின் தலைப்பை ஒட்டி எழுதும் இன்னுமொரு மருத்துவக் கட்டுரை.

 


          கண்ணில் ஏற்படும் விருப்பமில்லாத் திருப்பங்கள்.

                     மு.வீராசாமி

 

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. நாம் ஒன்று நினைத்திருப்போம். நடப்பதென்னமோ வேறு ஒன்றாக இருக்கும். அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? முன் கூட்டியே தீர்மானிக்க நாம் என்ன முனிவர்களா?

காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்து மறுநாள் நேரத்தில் வேலைக்கு செல்ல நினைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு படுக்கச் சென்றவர்,

     ‘இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

     கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே   என்று திருமூலர் சொல்வதுபோல் நடந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை? இப்படி நேரும் என்று யாராவது கனவிலாவது நினைத்திருப்பார்களா? முன்கூட்டியே கணித்திருப்பார்களா? வாழ்க்கையில் இதுபோன்ற விருப்பமில்லாத் திருப்பங்களை சந்திக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?.

கண்ணிலும் இது போன்ற விருப்பமில்லாத் திருப்பங்கள்  ஏற்படலாம். ஆனால் இத்திருப்பங்கள் நாமாக வரவழைத்துக் கொண்டவை. தவிர்க்க முடிந்தவை.

 

அட தூசிதானே –அலட்சியம் வேண்டாம்

 

அன்றும் ஒரு சாதாரண நாள் போலவே அந்த ஆசிரியர் பள்ளிக்கு சென்றார். ஆனால் அந்த நாள் தன் வாழ்க்கையை புரட்டிப்போட வைக்கும் அசாதாரண நாள்  என்பது தெரியாமல்.

வழக்கம்போல் பாடத்தினை நடத்திக் கொண்டே கரும்பலகையில் சாக்பீஸால் எழுதிக் கொண்டிருந்தார். எழுதும்போது சாக்பீஸ் துகள் பறந்து காற்றில் நளினமாடத்தானே செய்யும். அதில் ஒன்றிரண்டு கண்ணிலும் விழலாம். ஆசிரியரின் கண்ணிலும் விழுந்த காரணத்தால் அனிச்சைச் செயலால் கண்ணை நன்றாகத் தேய்த்தார்.

கண்ணைத் தேய்த்துக்கொண்டே பாடங்களை நடத்தினார். கண்ணைக் கழுவி இருக்கலாம். அதைச் செய்யத் தவறிட்டார். கண்ணைத் தேய்க்காமலாவது இருந்திருக்கலாம். அதையும் செய்துவிட்டார். அதோடாவது நிறுத்தினாரா?

வீட்டிற்கு போய் வீட்டில் இருந்த பழைய கண்சொட்டு மருந்தினை எடுத்துப் போட்டார். கண்சிவந்து நீர் வடிந்து வலி ஏற்பட்டதால் மருந்தினைப் பார்த்ததும் போட்டால் தேவலாம், தூசி தானே சரியாகிவிடும் என்று நினைத்து மீண்டும் தவறு செய்தார்.

அவர் போட்ட மருந்து அவருடைய பாட்டிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தியது போக மீதம் இருந்த பழைய மருந்து. அதுவும் ஸ்டீராய்டு . மேலும் எந்த மருந்தினையும் பாட்டிலைத் திறந்த ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அதுவோ திறந்து நான்கு மாதங்களுக்கு மேல் காலாவதியான மருந்து. அவருடைய பிரச்சினைக்கு தேவையில்லாதது.

“சாக்பீஸ் துகள் விழுந்தவுடன் கண்ணைத் தொடர்ந்து தேய்த்ததால் கருவிழி புண்ணாகி ( CORNEAL ULCER ) விட்டது. இந்த கருவிழிப் புண்ணுக்கு ஸ்டீராய்டு மருந்தினையும் போடக் கூடாது. இதெல்லாம் சேர்ந்து கருவிழியினை முழுவதுமாக நாசம் செய்துவிட்டது. இனி பார்வை வராது. உங்களுக்கு கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலமே பார்வை கொடுக்க முடியும். நான்குநாள் கழித்து ஊற வைத்தபின் மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர் சொன்னதுதான் இது.

இதில் என்ன வருத்தமான செய்தி என்னவென்றால் கண்ணில் தூசி விழுந்தவுடன் எதுவுமே செய்யாமல் பேசாமல் இருந்தால்கூட போதும். தூசி விழுந்தவுடனேயே தானாக உற்பத்தியாகும் அதிகப்படியான கண்ணீரால் அதுவாகவே வெளியேறிவிடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.

                           நீதி: தூசி விழிந்தால் கண்ணைக் கசக்காதே

 

கிளாக்கோமாவுக்கு வழிவகுத்த தலைவலி

 

வயலும் வாழ்வும்போல இருந்தவர் ராமசாமி. வீடை விட்டால் வயல். வயலை விட்டால் வீடு. கடும் உழைப்பாளி .ஆனால் கூடவே தலைவலி. சில ஆண்டுகளாகவே இவருக்கு இது ஒரு தலைவலிதான். கிராமத்து செவிலியிடம் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இல்லையென்றால் பெட்டிக் கடையிலும்தான் கிடைக்கிறதே.

அடிக்கடி மாத்திரை வாங்க வந்ததால் மருத்துவமனைக்கு வந்து கண்களை சோதித்துக் கொள்ளுங்கள் என்று செவிலி சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

ஊரில் ஒரு முறை நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் கண்ணில் பிரசர் இருக்கிறது, மேல் சிகிச்சைக்காக நகரத்தில் இருக்கும் கண்மருத்துவமனைக்கு வரும்படி சொன்னார்கள்.

உடம்பில்தானே பிரசர் வரும். கண்ணில் வரும் என்கிறார்களே. பொய். மருத்துவமனைக்கு வரச் செய்து ஆப்ரேசன் செய்து பணம் பறிக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு அலட்சியப்படுத்தினார்.

தூரப்பார்வையும் பக்கப்பார்வையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பக்கத்தில் இருப்பவர் யாரென்றே தெரியவில்லை. சைடில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று தெரியாமல் அவர்கள் மீது தடுமாறினார். வேறு வழியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றபோதுதான் கண்ணில்  ‘கிளாக்கோமா என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். ஏற்கனவே கண்ணில், நீர்அழுத்த உயர்வால் (கிளாக்கோமா)  பார்வைநரம்புகள் பட்டுப் போய் பார்வை 70 விழுக்காடு பறிபோய்விட்டது என்றும் மீதம் இருக்கும் 30 விழுக்காடு பார்வையினை மட்டுமே தொடர் சிகிச்சையால்  காப்பாற்ற முடியும் என்று சொன்னதைக் கேட்டு ராமசாமிக்கு மீதம் இருந்த பார்வையும் இருண்டு, தலை சுற்றியது.

                  நீதி: தலைவலி என்றவுடன் பாராசிட்டமாலைத் தேடாதே

 

சர்க்கரைநோய் விழித்திரைபாதிப்பில் கசியும் ரத்தம்.

 

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக்கூடிய சிவகாமிக்கு கண்ணில் திடீரென சிகப்பு. இரத்தக்கசிவு. சர்க்கரையை கண்ட்ரோலில் வைக்கச் சொன்னால் யார் கேட்கிறார்கள்.

சும்மா பொழுதுக்கும் அதைச் சாப்பிடாதே இதைச் சாப்பிடாதேன்னு சொல்லிக்கிட்டு. அப்புறம் எதற்கு பிறக்கனும். எதைத்தான் சாப்பிடுவது என்ற தொடர் புலம்பல்கள். வாக்கிங் போ வாக்கிங் போ என்றாலும் கேட்பதில்லை. சர்க்கரை என்ன சர்க்கரை. இப்ப என்ன செய்யப்போகிறது என்று டாக்டர் என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொன்னாரோ அதை எல்லாம் ஒரு வெட்டு வெட்ட வேண்டியது. எதை செய்யச் சொன்னாரோ அதை சுத்தமாக செய்வது கிடையாது.

பொதுவாக சர்க்கரைக்கு முறையாக மருத்துவம் செய்து வந்தால் எந்த தொந்தரவும் இல்லை. ஒருவர் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் கண்ட்ரோல் செய்யவில்லை என்றால்தான் பிரச்சினையே.

இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஒரே நாளில் ஏற்படப்போவதில்லை. 5-லிருந்து 10 ஆண்டுகள் தொடர் சிகிச்சை செய்து கொள்ளாமல் கண்ட்ரோல் செய்யாமல் இருக்கும்போதுதான். சிவகாமிக்கு சர்க்கரை இருப்பது தெரிய வந்த நாளில் இருந்து கண்டுகொள்ளவே இல்லை. ஏம்மா சர்க்கரைக்கு மாத்திரை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டுதானே இருக்கிறீர்கள் என்று கேட்டால் அப்போதைக்கு தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் சர்க்கரை சும்மா இருக்குமா? தன் வேலையைக் காட்டத்தானே செய்யும். கடும்பாதிப்புக்குப் பின் அழுது புலம்பி என்ன செய்வது?

சர்க்கரைநோய் விழித்திரைப்பாதிப்பில் விழித்திரையில் இரத்தக் கசிவு என்றால் சிக்கல்தான். பாதிப்பினால் ஏற்பட்ட பார்வை இழப்பினை சரி செய்ய முடியாது. சர்க்கரையைக் கண்ட்ரோல் செய்து லேசர் சிகிச்சையினால் மீதம் இருக்கும் பார்வையை மட்டுமே காப்பாற்ற முடியும்.

               

                    நீதி: சர்க்கரையை மதித்தால் அது உன்னை மிதிக்காது

 

விருப்பமில்லாத் திருப்பங்களைத் தவிர்க்க ஆதலினால் கண்களைக் காப்பீர்.

4 கருத்துகள்:

  1. அருமையான வழி(விழி )காட்டல்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. கட்டுரை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.பொதுக்களுக்கு மிகவும் பயன் படும்.
      அன்புடன் தங்கராஜ்.

      நீக்கு