திங்கள், 12 பிப்ரவரி, 2024

அரைச் சர்க்கரை

 

          சர்க்கரை நோய் பற்றிய வரலாற்று செய்திகள்

 

குறுந்தொடர்

வாரம் 07

 

     இனிப்பு இல்லா வாழ்வினை கசப்பாக நினைக்காதீர்கள்.

     சர்க்கரையைக் கட்டுப்படுத்தி நலமாக வாழ்வதே இனிமை.

                                                                                                           

மல்லிகை மணக்கும். சிறுநீர்? நமக்கு முன்னர் கழிப்பறையில் சிறுநீர் கழித்து சென்றவர் சரியாக நீர் ஊற்றாவிட்டாலே அடுத்து செல்பவரால் உள்ளே செல்ல முடியாது. மூக்கினைப் பொத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் தாமஸ் வில்லிஸ் செய்த செயலைப் பாருங்கள்.

17 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவராக போற்றப்பட்ட ஆக்ஸ்போர்டினைச் சார்ந்த இவர் சர்க்கரை நோயாளியின் சிறுநீர் இனிப்பாக இருக்கும் என்பதை தெரிவித்தார். எப்படி?

தன்னுடைய நோயாளியின் சிறுநீரை சுவைத்துப் பார்க்க துணிச்சல் வேண்டுமே? மனிதர் சுவைத்துப் பார்த்துதான் சொன்னார்.  சர்க்கரை, தேனைப் போன்று இனிப்பாக இருக்கிறது என்ற கமெண்ட்ஸ் வேறு. 

அவருக்கு எவ்வளவு ஆர்வம், ஈடுபாடு, ஆய்வுக் கண்ணோட்டம் இருந்திருந்தால் சுவைத்துப் பார்க்கத் துணிந்திருப்பார். அதுவரை எந்த மருத்துவரும் செய்யாத துணிகர செயல் அது.

1679 –ல் எழுதிய ‘மருந்துகள் பகுத்தறிவு என்ற நூலில் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே நம் சுஸ்ருதா சர்க்கரை நோயில் சிறுநீர் இனிப்பாக இருக்கும் சென்று சொல்லி இருப்பதை பார்த்தோம். ஆனால் அந்த செய்தியை தாமஸ் அறிந்திருக்கவில்லை.  இவர் மீண்டும் இனிப்பு என்கிறார். 

 

ஆனால் அவரால் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் ஏன் இனிப்பாக இருக்கிறது என்பதை சொல்ல முடியவில்லை. அதற்குரிய காரணத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகே சொன்னார்கள்.

சிறுநீரை சுவைத்துப் பார்த்து சொன்ன முதல் மருத்துவர் இவர்தான். Mellitus என்ற பதத்தை முதலில் உருவாக்கியவர் இவரே அதுவரை Diabetes   என்று மட்டுமே சொல்லி வந்ததை  Mellitus சேர்த்து   Diabetes   Mellitus என்று அழைத்தார். இனிப்பு என்ற பொருள்படும் இந்த Mellitus ஒரு லத்தீன் சொல்..

உணவு பழக்கத்தோடும் மனநிலையோடும் சர்க்கரை நோய்க்கு தொடர்ப்பு இருப்பதாக நினைத்தார். குறிப்பாக மனச்சோர்வினால் ஏற்படுவதாக கருதினார்.

மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பியல் குறித்தும் அவர் விரிவாக கூறி இருக்கிறார்.

நரம்பியல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர். நொதித்தல், இரத்தம் ஏற்றுதல், காய்ச்சல், சிறுநீர், தசை இயக்கம், மூளையின் உடற்கூறியல், நரம்புகளின் விளக்கம் மற்றும் பயன்பாடு, வலிப்பு, ஸ்கர்வி, உட்பட பல தலைப்புக்களில் விரிவான கருத்துக்களைத் தெரிவித்த பல்துறை வித்தகரான தாமஸ் இறுதியில் நிம்மோனியாவால் காலமானார்.

தொடரும்.

( குறிப்பு- இது சர்க்கரை நோய் பற்றிய வரலாற்றுச் செய்திகளை மட்டுமே சொல்லும் ஒரு தொடர். )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக